நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி.பி) பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஆறாவது பாராளுமன்றத்தில் 39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஏழாவது பாராளுமன்றத்திற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐந்து ஆசனங்களையே வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதேநேரம், 1994ம் ஆண்டு முதல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற ஆசனமொன்றை தமதாக்கிக் கொண்டிருந்த இக்கட்சி இத் தேர்தலில் அந்த ஆசனத்தையும் இழந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், தென் பகுதியில் ஜே.விபி.யின் ஆதரவு தளம் இத்தேர்தலில் பாரிய சரிவுக்கு முகம் கொடுத்துள்ளது. இத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, மொனறாகலை, குருணாகல அநுராதபுரம், பொலன்னறுவை, நுவரெலியா, மாத்தளை போன்ற மாவட்டங்களில் ஜே. வி.பி. உறுப்பினர் எவரும் எம்.பியாகத் தெரிவு செய்யப்படவில்லை.
கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி முக்கியஸ்தர்களான இராமலிங்கம் சந்திரசேகர், கே.டி.லால காந்த, ஜினதாச கித்துலேகொடை, நிஹால் கலப்பதி, பிமால் ரட்நாயக்கா, எஸ். கே. சுபசிங்க, காமினி ரட்நாயக்கா போன்ற முக்கியஸ்தர்கள் எவரும் இத்தேர்தலில் எம்.பியாகத் தெரிவு செய்யப்படவில்லை. 1994ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி பெற்ற ஜே. வி.பி, 2000ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பத்து ஆசனங்களையும், 2001ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களையும் வெற்றிபெற்றது.
என்றாலும் 2004ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 39 ஆசனங்களை ஜே. வி.பி. தனதாக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் ஏழாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணி தலைமையில் போட்டியிட்ட ஜே. வி.பியால் ஐந்து ஆசனங்களையே வெற்றிபெற முடிந்திருக்கின்றது. இதன்படி இத்தேர்தலில் ஜே. வி.பி. பாரிய பின்னடைவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.