இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்வானி வாழ்த்திப் பேச்சு:
உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.
பின்னர் வைகோ பேசுகையில்,
பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.
1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.
வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு
முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.
இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.
ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.
இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.