::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஒபாமாவின் திட்டத்துக்கு போப் ஆண்டவர் கண்டனம்

pope_benedict.jpgஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .இதன் ஒரு பகுதியாக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கருக்கலைப்பு, செய்து கொள்ள ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

புஷ் ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு செய்ய உதவும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் இந்த முடிவுக்கு போப் ஆண்டவர் பெனடிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் சார்பில் வாடிகன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது வாழ்வு பிரச்சினை. உயிர் பிரச்சினை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். இத் திட்டம் கத்தோலிக்க மத ஈடுபாடு உள்ளவர்களின் முதுகில் குத்துவதாகும். படைக்கப்படும் உயிர்களை முளையிலேயே கிள்ளி எறியும் இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனை தரும் விஷயம். இவ்வாறு வாடிகன் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் பொஸ்பரஸ் குண்டு பற்றி விசாரணைக்கு உத்தரவு

gaa-sa.jpgயுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து  தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.  நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.

பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது.  சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஐ. நா. சபைக்கான தூதராக ரைஸ் நியமனம்: செனட் ஒப்புதல்

ஐ. நா. சபைக்கான அமெரிக்க தூதராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் அமெரிக்க கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறையில் அமெரிக்க விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இருந்தவர் சூசன் ரைஸ். இவரை ஐ.நா.வுக்கான தூதராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். போக்குவரத்து அமைச் சராக ரே லாகுத் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஷான் டோனோவன் ஆகியோரது நியமனத்திற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பைபாஸ் ஆபரேஷன் வெற்றி – நலமாக இருக்கிறார் இந்திய பிரதமர்

pm-india.jpgஇதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.