ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *