தேர்தல் தொடர்பாக இதுவரை 16 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளதுடன் மத்தியமாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் சகலரையும் கருத்தரங்கென்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் நடத்தியமை தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்றும் சாடியுள்ளது. இது தொடர்பாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;
வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை கலைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி டிசம்பர் 11 இல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெருமளவானவை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடும் மலையகமக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் போது தேர்தல் சூடுபிடிக்கும் போது வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேவேளை, அட்டனில் ஜனநாயக மக்கள் முன்னணி மீதும் கண்டியில் ஐ.தே.கட்சி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலேயே வன்முறைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதாகும். இது இவ்வாறிருக்க அரச சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கண்டிமற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளை மூடி சகல அதிபர், ஆசிரியர்களை கருத்தரங்கு என்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானதாகும் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென கோரியுள்ளார்.