::முஸ்லீம் விடயங்கள்

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிரிட்டனின் ஷரியா நீதிமன்றங்கள்

பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1996 இல் கொண்டுவந்த சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.

ஒரு பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண விளையும் இரு தரப்பினரும் விரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பிரச்சினையில் முடிவு சொல்ல தீர்ப்பாயங்களை அந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சில முஸ்லிம் விசாரணை மன்றங்கள் அதற்கும் மேலாக அதிக தூரம் போய்விடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் இயங்கும் இத்தகைய ஷரியா நீதிமன்றங்கள், பிரிட்டிஷ் நீதி முறைமைகளுக்கு முரணாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்குள்ளும் தமது அதிகாரத்தை செலுத்த விளைவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலதார மணம், மனைவியிடம் பலவந்தமாக பாலியல் உறவு கோருவதற்கான கணவனின் உரிமை மற்றும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தும், பிரிட்டிஷ் சட்டங்களுக்கு பொருந்தாத தீர்ப்புக்களை இந்த நீதிமன்றங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில்!

காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன ஏற்பாட்டில் இன்று மாலை 4.00 மணிக்கு பொரளை, நகரோதய மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வைபவத்தில் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் முன்னாள் துணை அதிபர் வண. திவ்யகஹ யஸஸ்ஸி தேரர் சமாதான சகவாழ்வுக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி.. எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். பதியுதீன் மஹ்மூத் நினைவாக இன்றைய வைபத்தில் உயர்கல்விப் புலமைப் பரிசில் ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தளத்தில் வசிக்கும் வட மாகாண முஸ்லிம்கள் படையினருக்கு கௌரவம் -அமைச்சர் றிஷாத் பிரதம அதிதி

rizad_baduradeen1.jpgவட மாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது புத்தளம் பிரதேசத்தில் வசித்து வரும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பாதுகாப்புப் படையினரைப் பாராட்டிக் கௌரவித்தனர். இது தொடர்பான வைபவம் அண்மையில் புத்தளம், வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாக  மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதோடு முன்னாள் சமூக சேவைகள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.எம். அபூபக்கர்,  மன்னார் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினரை சிங்கள மக்களைப் போலவே முஸ்லிம்களும் பாராட்டிää கௌரவித்து வருகின்றனர். வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விரைவில் அங்கு சென்று சுதந்திரமாகக் குடியேற முடியும் எனக் கூறினார்.

இவ்வைபத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் நாடு வெற்றிகொள்ளப்பட்டதையும் படையினரையும் வாழ்த்தும்  சுலோகங்களை ஏந்தியிருந்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கிளையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.இப்றாஹிம் விடுத்துள்ள அறிக்கையில்;

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடவுள்ளார். அதனால் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சரியான விபரங்கள் தேவைப்படுவதனால் அதன் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கண்டி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பத் தலைவர்கள், அரச ஊழியர்கள், உலமாக்கல் அதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்புமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 0718232462, 0714494040, 0312226710 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர் மௌலவி எம்.ஐ.கைசர்கான் ஹிஜ்ராமாவத்த, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் விழா

மள்வானை காந்தி வளவ்வ ஸஹீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள அல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று பி.ப. 4.00 மணிக்கு மத்ரஸா முற்றவெளியில் நடைபெறவுள்ளது. மத்ரஸாவின் உஸ்தாத் தக்கியாவின் பேஷ் இமாமுமான அல் ஹாபிழ் அல் ஆலிம் மொகமட் றில்வான் தலைமையில் இது நடைபெறும். நான்கு வருட பயிற்சியை பூர்த்தி செய்த எட்டு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவு ள்ளனர்.

கம்பஹா மாவட்ட உயர் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் பிரதம அதிதியாகவும், பேருவளை அல்முஸ்தபவிய்யா பேஷ் இமாம் மெளலவி அல்ஹாஜ் ஏ. சீ. எம். முபாரக் பிரதம பேச்சாளராகவும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். எச். ஏ. ஸஹீத், சமாதான நீதவானும் ஆங்கில ஆசிரியருமான ஹனபி ஆகியோர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

முல்லை மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (முல்லைத்தீவு மாவட்டக் கிளை) இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம். எச். எம். இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றோம். அந்த குடும்ப விபரங்கள், அரச ஊழியர்கள், உலமாக்கள் போன்றோரிடமிருந்து விபரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் விபரங்கள் கட்டாயம் திரட்டப்பட வேண்டியுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பெற்ற குடும்பத் தலைவரோ/ தலைவியோ, உலமாக்களோ, அரச ஊழியர்களோ அல்லது இதுவரையும் விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களோ 0718232462, 0714494040, 0312226710 இவர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று 17ம் திகதிக்கு முன், ஹிஜ்ரா மாவத்தை, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

டெங்கு அச்சுறுத்தல்: உலமா சபையின் வேண்டுகோள்

dengu_1.gifடெங்கு நாட்டின் பல பாகங்களிலும் பரவிய வண்ணமுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ண முள்ளன. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா பின்வரும் அறிக்கையை விடுக்கிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இன்று வரையிலான ஐந்து மாதக் காலப் பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோய்க்கு ஆளாகியும், நூற்றுக் கணக்கானோர் பலியாகியுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில் மிக வேகமாகப் பரவி வரும் இந்நோயிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் நிமித்தம், நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியமென்பதை நினைவுறுத்த விரும்புகிறது. எனவே, இவ்விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மிக விழிப்புடன் இருக்குமாறும், சுத்தத்தை பேணுமாறும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, சுத்தம் ஈமானின் பாதியென்ற நம்பிக்கையோடுள்ள அனைத்து முஸ்லிம்களும் அதனை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது. இந்நோயினால் அவதியுற்றிருக்கும் சகல மக்களுக்காகவும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுதல், தானதர்மம் செய்தல், பிரார்த்தனையில் ஈடுபடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்வதுடன், உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் குத்பா போன்ற சந்தர்ப்பங்களில் மக்களை விழிப்பூட்டுமாறு உலமா சபை வினயமாக வேண்டிக் கொள்கிறது.

2010: தேசிய மீலாத் விழா காத்தான்குடியில்

hisbulla-mlam.jpg2010ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந்நபி விழா காத்தான் குடியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.தேசிய மீலாதுந்நபி விழாவை 2010ம் ஆண்டு காத்தான்குடியில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஜனாதிபதி மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார்.

“இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்தால் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி’

SLMC Gen Sec M T Hasan Aliவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.  தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.

அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.

ஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.

hajj.jpgஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள்  பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.