கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில்

cricket_.jpg2011ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. சென்னையில் இந்தியா ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் நடக்கிறது. 10 வது உலக கோப்பை ஒரு நாள் கிரிக் கெட் போடியை 2011ம் ஆண்டில் நடத் தும் உரிமையை ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பெற்றன.

பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதால் அந்த நாடு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இழப்பீடு தொகை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் இந்தியாவுக்க கூடுதலாக 8 ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.  அதாவது மொத்தம் 49 ஆட்டங்களில் இந்தியாவில் 29 ஆட்டமும், இலங்கையில் 12 ஆட்டமும், பங்களாதேஷில் 8 ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை முடிவு செய்ய உள்ளூர் போட்டி அமைப்பு குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என். சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், மொகாலியில் ஒரு அரை இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், அகமதாபாத்தில் ஒரு கால் இறுதிப் போடி மற்றும் 2 ஆட்டங்களும், டில்லியில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடைபெறுகிறது.

சென்னையில் இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், பெங்களூரில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், நாக்பூரில் இந்திய அணி மோதும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், கொல்கத்தாவில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

உலக உணவு நாள் (World Food Day) – புன்னியாமீன்

15-hunger2.jpgஉலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐக்கிய நாடுகள் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.

இத்தாலியில் உரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் ‘ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்,  விவசாயத்தையும்,   உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல்,  விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது “ரொட்டி (இலங்கையில்: பாண்) ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945 ஆம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து உரோமுக்கு மாற்றப்பட்டது.  ஆண்டு தோறும் உரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் இடம்பெறுவது வழமையாகும்.  11 ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.இந்த அமைப்பின் முதன்மை இலக்குகளை நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல்,  இந்நாட்டு மக்களின்  போஷாக்கினை அதிகரித்தல், உணவு,  விவசாயம்,  காடுகள்,  மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்,   இவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்,  உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை தொடர்பாக பக்க சார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும்.

உலகளாவிய ரீதியில் உணவு விவகாரம் தொடர்பிலான ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக உணவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாண்டு அக்டோபர் 16ம் திகதி 29வது உலக உணவு நாளாகும். ‘நெருக்கடியைச் சமாளித்து,  தானியப் பாதுகாப்பை நனவாக்குவதை” ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாண்டின் உலக உணவு நாளின் தலைப்பாக அறிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இத்தினத்தின் கருப்பொருள் “உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்” என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய  அமைப்பின் 20வது பொது மாநாட்டில் அதாவது நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வமைப்பின் ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நிதி நெருக்கடி,  தானிய நெருக்கடியைத் தீவிரமாக்கியது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டிருந்தனர். குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து,  நிதி நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியளித்து,  நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் விளைவாக தானியப் பாதுகாப்பு நனவாக்கப்பட முடியும் என்று அது கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்,  இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல்,  உடைகள் வாங்குதல்,  அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளதை இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார்(2009) இது பற்றிக் கூறுகையில்,  உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவையாகும் என்றார். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டியது காலத்தின் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவு கிடைக்காமலும்,  போதிய போசாக்கின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்த யுகத்தில் ஆச்சரியப்பட வேண்டிய ஓர் தகவலாகும். அதே நேரம் பல பில்லியன் கணக்கான டொலர்களை சந்திரனையும், வான்வெளியையும் ஆராய மேற்குலக நாடுகள் செலவளித்துக் கொண்டிருக்கிறன.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில்,  வன்முறையும்,  உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில்,  ஒரு குடும்பம்,  தனக்குத் தேவையான உணவு,  குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டொலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன..

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும்,  உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில்,  சத்தான உணவு கிடைக்காததால்,  ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது எனக்கூறப்படுகிறது. ஆபிரிக்கா முழுவதிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய்விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் போசாக்கான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.

1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இது இலேசான உயர்வைக் காட்டி நிற்கின்றது. ஆனால் போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

2009 ஆண்டு உலக உணவு நாளின் கருப்பொருள் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதும் உணவு பாதுகாப்பை நனவாக்குவதும் என்பதாகும். உலகப் பொருளாதார நெருக்கடி வளரும் நாடுகள் உள்ளிட்ட முழு உலகின் உணவுப் பாதுகாப்பு நிலைமைக்கு மாபெரும் சவாலையும்,  பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில்,  உலக உணவு அமைப்பு முறையிளான சீர்திருத்தத்தை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட 2009ம் ஆண்டு உலக உணவு நெருக்கடி நிலைமை பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்

முதலாவதாக,  பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் கூட்டாக ஏற்பட்டன. 2006ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரையான காலத்தில்,  உணவுப் பிரச்சினை முழு உலக தானிய விலையை உயர்த்தியுள்ளது. 2008ம் ஆண்டில் இருந்ததை விட தற்போதைய தானிய விலை தணிந்துள்ள போதிலும்,  இன்று வரை ஒப்பீட்டளவில் உயர் நிலையிலேயே இருந்து வருகின்றது.

இரண்டாவதாக,  உலகளவில் மிகப் பெரும்பாலான நாடுகளை இந்த பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது. எனவே,  நாணய மதிப்பிறக்கம்,  கடன் மற்றும் சர்வதேச உதவி ஆகிய முறைகள் பெருமளவிற்கு இப்பாதக நிலையை ஊக்குவிக்கின்றன.

மூன்றாவதாக,  உலகப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து விரிவடையும் நிலையில் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சர்வதேசச் சந்தை பாதிப்படைகிறது. தற்போது,  பல நாடுகளின் வர்த்தகத் தொகையும் முதலீட்டு புழக்கமும் பன்முகங்களிலும் குறைவதுடன்,  வணிக நிலுவை,  வெளிநாட்டு நேரடி முதலீடு,  வளர்ச்சி உதவி ஆகியவையும் குறைவடைந்துள்ளன. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் வருமான பிரச்சினைகள் முனைப்பாயுள்ளன. அத்துடன்,  உணவுப் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளின் அரசுகள் வழங்கிய நிதியளவும் தொடர்ந்து குறைந்தே வருகின்றன..

உணவு பாதுகாப்பை நனவாக்குவதற்கு சர்வதேசச் சமூகம் மேலதிக முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். குறுகிய காலத்தில் பார்க்கும் போது,  தற்போதைய உலகின் பட்டினி மக்கள் தொகையின் பரவல் நிலைமையை அறிந்து தெளிவுபடுத்துவது,  உணவு பற்றுக்குறைக்கான உதவி மற்றும் நிதி ஆதரவை முன்கூட்டியே வழங்குவது,  வேலை வாய்ப்பை அதிகரிப்பதுடனான  திட்டங்களை வகுப்பது ,  விவசாய அதிகரிப்பையும் தானிய உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றுவது,  விவசாயத்தை நவீனமயமாக்க விவசாய உற்பத்திச் சாதனங்களையும் தொழில் நுட்பத்தையும் வழங்குவது உள்ளிட்ட வகையில் உணவுப் பாதுகாப்பு அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

நீண்டகாலத்தில், வளரும் நாடுகளின் வேளாண்மை உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையில்,  முதலீட்டை மேலும் அதிகரிப்பது,  பொருளாதார அதிகரிப்பை தூண்டி, வறுமை மற்றும் பட்டினிப்பிரச்சினையைக் குறைக்க முக்கியமாக பங்களிக்கும். 2008ம் ஆண்டு,  முழு உலக தானியங்கள் உற்பத்தியளவு 224 கோடியே 50 இலட்சம் தொன்களைப் பிடித்துள்ளது. இது வரலாற்றில் கூடிய அதிகரிப்பாகும். ஆனால்,  வளர்முக நாடுகளின் உற்பத்தியளவு 1.1 விகிதத்தால் மட்டுமே உயர்ந்துள்ளது. சீனா,  இந்தியா,  பிரேசில் உள்ளிட்ட விவசாய வல்லரசுகளை கருத்தில் கொள்ளாத நிலையில்,  இதரஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தானிய உற்பத்தியளவு 0.8 வீதத்தால் குறைந்துள்ளது.

தற்போது,  உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையிலான சார்பளவு மேன்மேலும் நெருக்கமாகி வருகின்றது. உணவு பாதுகாப்பு அமைப்பு முறையிலான தொடர்பு தொடர்ந்து ஆழமாகி வருகின்றது. உலக உணவு பாதுகாப்பை பொருளாதார நெருக்கடி கடுமையாக பாதிக்கும் வேளையில்,  பல்வேறு நாடுகளின் அரசுகள் நிதி நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கிய போதிலும்,  விவசாயத்துறை மீதான ஆதரவு ஆற்றலை குறைக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தைப்  போன்று உலக உணவு தினம் முன்னென்றுமே கூடுதலான அளவுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருந்திருக்க முடியாது. உலகில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதன் விளைவாக பட்டினியில் வாடுவோரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. தாராளமாக வளங்கள் இருக்கின்ற போதிலும், உலகிலே சுமார் 85 கோடி 40 இலட்சம் மக்கள் நீடித்தபட்டினியில் உழலுகிறார்கள் என்று கடந்த 2007 ஆம் வருடத்தைய உலக உணவு தினத்தை முன்னிட்டு விடுத்த செய்தியில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கிமூன் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் சில கோடிகளினால் நிச்சயம் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உணவு விவசாய நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாடொன்றில் ஐ.நா.செயலாளர் நாயகம் முன்னிலையில் 181 அரசாங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கங்கள் குறித்தும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தனர். உலகமானது அதிவேகமாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் வகையில் விவசாய உற்பத்திகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும்,  இல்லையேல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து உணவுகளுக்கான செலவினமானது உலகளாவிய ரீதியில் 40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கமரூன்,  புர்கின்கா பஸோ,  ஹெயிட்டி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணவு விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “நாங்கள் தவறு எதனையும் செய்யவில்லை. பிரச்சினை பாரியதாக உள்ளது. நாங்கள் சரியான உதவி வழங்கினால் தீர்வுகள் கிட்டும்” என பான் கீமூன் தெரிவித்திருந்தார். கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்” என பான் கீமூன் குறிப்பிட்டிருந்தார் . எண்ணெய் விலைகள் உயர்ந்தமை,  அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த்தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது 80 நாடுகளிலுள்ள 73 மில்லியன் மக்களுக்கான உணவுகளைப் பெற்றுக்கொடுக்க வருடாந்தம் 750 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக பான் கீமூன் கூறினார். உலக பொருளாதார வரைவிலக்கணங்களுக்கு அமைய அல்லாமல் உலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை அரைவாசியாகக் குறைப்பது என ஐக்கிய நாடுகள் சபையில் 2000 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிலேனியம் இலக்குகள் எட்டப்படாத நிலையிலேயே உள்ளன என பான் கீமூன் குறிப்பிட்டார். “நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பன் மடங்கு முயற்சிக்க வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்தார்.பான் கீமூன் இவ்வாரம் லைபீரியா,  புர்கினா பஸோ மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்பது அவரின் வாதமாகும்.

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Wanni_IDPs_Queueing_for_Water._._._._._.

முகாம்களை மூடுங்கள் – கண்டனப் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் 280 000 மக்களை சிறை வைத்துள்ள வன்னி முகாம்களை மூடுமாறு கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று ஒக்ரோபர் 17ல் லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ஒருங்கமைப்பு – ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டனக் கூட்டம் நீண்ட போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து – என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தக் கண்டனக் கூட்டத்தை தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு மேற்கொள்கின்ற போராட்டங்கள் இன்றைய சூழலில் மிக அவசியமானவையாக உள்ளது. தமிழ் அரசியல் சூழல் மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது ஒற்றைப் பரிமாணமாகி நின்று தமிழ் மக்களை மிகமோசமான அரசியல் சூழலுக்குள் தள்ளியுள்ள நிலையில் அந்த ஒற்றைப் பரிமாண அரசியலை நிராகரிக்கின்ற இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு சோசலிசக் கட்சியின் போராட்ட முன்னரங்க அமைப்பாகும். ஒக்ரோபர் 17ல் சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் பீற்றர் ரப்பே, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஜனனி பரமசோதி, சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய ஆய்வாளர் நாகர்ஜீனன் (ரமேஸ் கோபாலகிருஸ்ணன்), தமிழர் ஒருங்கிணைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: PUBLIC MEETING -sat 17 october, 6pm, Queen mary university, room 210, Laws building
._._._._._.

அரசியல் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற இலங்கை அரசு அவற்றுக்கு சளைக்காமல் வன்னி மக்கள் தொடர்பில் திட்டமிட்ட ஒரு இன ஒடுக்குமுறையையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த அசமந்தப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை நவம்பர் மாதத்திற்குள் மீள்குடியேற்றப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் யூலை 10ல் ஜனாதிபதி ராஜபக்ச நவம்பரில் 60 வீதமான மக்களை மீள்குடியேற்றப் போவதாகத் தெரிவித்தார். “We have a 180-day programme. That is our plan. In 180 days, we want to settle most of these people,” எனத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச ஆனால் “It’s not a promise, it’s a target.” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 60 வீதமான மக்களை மீளக்குடியேற்ற வழங்கிய காலக்கெடு இன்னும் இரு வாரங்களில் வந்துவிடும். 180 நாள் இலக்கும் வெகு தொலைவில் இல்லை. ஆனால் மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான அறிவிப்புகளை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

உலகின் ‘மிகச் சிறந்த’, ‘மிகக் கட்டுக் கோப்பான’ இராணுவ அமைப்பு என்று பெயரெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 30 ஆண்டுகள் ஆயுத வன்முறையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘புரஜக்ற் பீக்கன்’ என்ற திட்டத்தை வகுத்து கால அட்டவணைப்படி இரு வார தாமதத்தில் இலங்கை அரசு துடைத்து அழித்தது. அவ்வளவு வல்லமையைப் பெற்றிருந்து அரசு வன்னியில் உள்ள 300 000 லட்சம் மக்களை தான் குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்றத் திணறுவதற்கு அரசின் இனவாதப் போக்கைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

வன்னி முகாம்களில் உள்ள மக்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மக்கள் அவர்களது அடையாள அட்டையில் உள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஓக்ரோபர் 13 தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளவர்களது ‘பூர்வீகம் அப்பிரதேசங்களாக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்பிரதேசங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை’ என்று தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் ‘இம்மக்களுக்கு மீளத் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான எவ்வித உதவிகைளயும் அரசு வழங்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தீவுப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களில் இரு கால்களையும் இரு கைகளையும் இழந்த ஒரு போராளிப் பெண்ணும் அவரது தாயும் அடங்குவதாகவும் எவ்வித உதவியும் இல்லாமல் அத்தாய் எவ்வாறு தனது ஊனமாக்கப்பட்ட மகளைப் பராமரிக்க முடியும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

இவற்றின் பின்னணியில் வன்னி முகாம்களில் உள்ள கணிசமான பகுதியினர் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறத் தயாராக இல்லை என அங்குள்ள சிலருடன் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரியவருகின்றது. எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்புகளும் கிடையாத பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் நிரந்தரமான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. (பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தையே சேர்ந்தவர்கள்.) இவர்கள் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறும் பட்சத்தில் இவர்களது நாளாந்த வாழ்வுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலை ஒன்றும் உள்ளது. அதனால் இம்மக்கள் தாங்கள் முகாம்களைவிட்டு வெளியேறினால் நிர்க்கதியாவோம் எனத் தேசம்நெற்க்கு தெரிவித்தனர். அவ்வாறு இருந்தும் தங்களது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அரசு தங்களை கைதிகளாக நடத்துவதாக அம்மக்கள் உணர்கின்றனர்.

இவ்வாறு வன்னி முகாம்களுக்கு உள்ளேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களில் வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்களும் கணிசமானவர்கள் உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் நடந்து முடிந்த யுத்தத்திலும் இம்மக்கள் மிகுந்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடத்தில் வன்னிக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினை தமிழ் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்சினை. (அதனை முடிந்தவரை ஆர் புதியவன் தனது ‘மண்’ படத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் வடக்கு – கிழக்கில் குடியமர்த்த முடியும் ஆயினும் அரசு அவர்களை வடக்கு கிழக்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்துவதற்குப் பதிலாக தென்னிலங்கையில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்த முற்படுவதன் பின்னணி அபாயகரமானது. ஏற்கனவே சனத்தொகை ரீதியாக மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தெற்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்தப்படுவார்களாக இருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய விழ்ச்சி ஏற்படும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் மொத்த  வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551,000. ( மன்னார் – 100,000, கிளிநொச்சி – 142,000, முல்லைத்தீவு – 145,000, வவுனியா – 164,000) இவர்களில் 250 000 மக்கள் தொகையினர் – 50 வீதமான மக்கள் வன்னி முகாம்களில் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினரை அரசு தென்பகுதிகளில் குடியேற்ற முயற்சிக்குமாக இருந்தால் வன்னி நிலப்பரப்பிலும் வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் சனத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது.

ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் வாழந்த முஸ்லீம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வாழ்நிலையை அங்கேயே ஸ்தீரப்படுத்திக் கொண்டதால் அவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீக மண்ணுக்கு வருவதற்கு தயாராகவில்லை. அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கான மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை அவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொள்வர்.

இன்று வன்னி முகாம் மக்களை தெற்கில் முடியமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இதே விளைவையே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கடைசியாக 1981லேயே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் வடக்கு கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான சுமூகமான சூழலோ அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச கட்டுப்பாட்டிலோ இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட உள்ள குடிசனமதிப்பீடு 2011ல் இடம்பெற இருக்கின்றது. 1991, 2001 ல் வடக்கு கிழக்கின் சனத்தொகை மதிப்பீடு இலங்கையின் வளர்ச்சி வீதத்துடன் ஒத்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கு முழுமையாக அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2011ல் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி வடக்கு கிழக்கின் உண்மையான சனத்தொகைப் புள்ளிவிபரம் வெளிவரும்.

கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கின் சனத்தொகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. அண்ணளவாக மூன்று மில்லியனாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். இன்னும் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான தமிழர்கள் தென்பகுதிகளில் வாழ்கின்றனர். எஞ்சிய ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான தமிழர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களில் 660 000 பேர் (முஸ்லீம்கள் உட்பட) இடம்பெயர்வு முகாம்களில் வாழ்வதாக தமிழர் தகவர் நடுவம் தெரிவிக்கின்றது.

வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு மிக மோசமாக மனித உரிமைகளை மீறியது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இலங்கை அரசு இன அழிப்பை மேற்கொண்டதாக நிறுவுவது கடினம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமானவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்தால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற முட்டாள்தனமான சமன்பாட்டை வைத்துக் கொண்டு மக்கள் கொல்லப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு திங்ராங்க். யுத்தத்தின் கொடுமை தாங்காது தங்கள் கட்டுப்பாட்டை மீறி அரச படைகளை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஓடித்தப்ப முடியாது சிக்குண்டவர்கள் அரசின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்வாறு  தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி சர்வதேசத்தை கூவி அழைத்தனர் புலிகள். இம்முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அதனால் வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு இனஅழிப்புச் செய்துள்ளது என்பதனை நிறுவுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்கொடுக்கவில்லை.

ஆனால் ‘இலங்கை அரசு தற்போது செய்ய முற்படுகின்ற விடயங்களே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனஅழிப்பு நடவடிக்கை’ என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏபிஆர்சி உறுப்பினருமான எஸ் தவராஜா. தற்போதைய இன அழிப்பு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களை படுகொலை செய்வதும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்துவதும் அல்ல எனத் தெரிவிக்கும் அவர் ‘அரசு மிகத் திட்டமிட்டு நிதானமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது’ என்கிறார். ‘இதுவே தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்’ எனவும் அவர் தெரிவிக்கின்றார். ‘எப்போதும் வருமுன் காப்பதே நன்று’ எனக் கூறும் எஸ் தவராஜா ‘தமிழ் மக்களுக்கு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை ஒரு போதும் மீளப்பெறப்படப் போவதில்லை. கல்லோயக் குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை நிலைமைகள் அவ்வாறே உள்ளது. அவற்றை இனிமேல் நீக்க முடியாது. அதனால் அவ்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதில் இலங்கை அரசு பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அந்த முகாம்களை மூடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த முகாம்களை மூடிவிட்டு மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் விருப்பம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அரசு இம்மக்களில் கணிசமான பகுதியினரை வடக்கு கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்று குடியேற்றவும் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுகின்றது. கிழக்கில் அரசு வெற்றிகரமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட போதும் வடக்கில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழல் வடக்கிலும் அவ்வாறான ஒரு சனத்தொகை மாற்றத்தை அரசு மேற்கொள்வதை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கானது மலேசிய அரசு தனது சிறுபான்மை இனங்களை எவ்வாறு கையாள முற்படுகின்றதோ அதை நோக்கியதாக உள்ளதாக அண்மையில் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு ஒன்றில் மலேசிய நண்பர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணிகளைக் கொண்டு வன்னி முகாம்களில் உள்ள மக்களது எதிர்காலம் தொடர்பில் அந்த மக்களுடன் தொடர்புபட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. நாம் சரியெனத் தீர்மானிக்கும் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் அந்த மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட வேண்டும். அதற்கு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது.

._._._._._.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி முகாம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக …..

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மகன் பதவியில் அமர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸியின் மகன் அரசாங்கத்தின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டதற்கெதிராக எதிர்க்கட்சி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் முதலாவது மனைவியின் மகன் ஜின்சர்கோஸி வயது (22) அரசகூட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார். கோடிக்கணக்கான ரூபாக்கள் புழங்கும் இப்பாரிய நிறுவனத்துக்குப் பொருத்தமில்லாத வரை நியமித்தமைக்கு பிரான்ஸின் பிரதான எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சர்கோசியின் மகன் ஜீன் சட்டக் கல்லூரியில் மாணவராக இருக்கிறார். அவர் இந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று எதிர்க்கட்சியான சோஷலிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்னாட் மோன்டேன்பர்க் கூறுகையில், சட்டவிதிகள் இல்லை.

கொள்கை இல்லை. எதையும் செய்யமுடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. முதலில் அவர் படித்து முடிக்கட்டும். படிப்பில் அவர் தன்னை நிரூபிக்கட்டும். பிறகு பதவிக்கு வரலாம் என்று குறிப்பிட்டார்.

சர்கோசியின் கன்சர்வேடிவ் கட்சியினர் கூறுகையில், ஜீன் தன் தந்தையை விட திறமையானவர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினம் : புன்னியாமீன்

eye.gifஉலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,  தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,  சில சந்தரப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்  அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,  மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல்;: விபத்துக்கள்,  கவனயீனங்கள, ; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.

சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர் போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.  அனுபவம்.  ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. 

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,  அழகுக்கும் உகந்ததல்ல.

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,  காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,  பறவைகள், ஊர்வன,  மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,  நோய்கள் காரணமாக அமையலாம்.

நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்  போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி   பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,  நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,  மனதில் பதிவு செய்து,  பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,  ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,  தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு” உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது  உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும்.
வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.

வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,  ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,  விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,  அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை,  பார்வை மந்தம்,  கண்ணில் சதை வளர்தல்,  கண்ணில் பூவிழுதல்,  கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,  கண்ணில் நீர்வடிதல்,  மாலைக்கண்,  வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,  கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,  அதன் மூலமாக வரும் தலைவலி,  தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,  மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,  கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,  வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

******

இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,  ஒரு கண் கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,  மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,  வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,  இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.

*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,  வறட்சி,  வீக்கம் அல்லது புண்,  வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,  தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;

*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,  ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,  பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் – வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,  தொழிற்சாலைக் குப்பைகள்,  பாட்டரி அமிலம்,  விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,  வாணவேடிக்கை,  UVB-  கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,  சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.

*******

‘மயோபியா’ என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.

********

‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,  ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,  அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.

********

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.
1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். 

********
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

******

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

*******
 
விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,  முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை,  அவரைக்கீரை,  முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,  வெண்ணெய்,  முட்டை,  மீன்,  மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

********

எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,  முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.

*********
 
கண்நோய் அல்லது கண் வலி,  தூசு,  பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்  கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

********
 
 கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,  அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,  ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.
2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.
3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,  இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.
4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,  தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
5. கண் எரிச்சலோ,  வலியோ ஏற்படும்.
6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.  நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.  சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

*******

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,  தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,  வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

**********

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,  மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*******

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,  மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,  வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,  கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,  கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – புன்னியாமீன்.

141009tsunami.jpgஉலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்,  சூறாவளிகள்,  நில அதிர்வுகள்,  எரிமலை வெடிப்புக்கள்,  கடும் மழை,  வெள்ளம்,  கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டுதோறும் உலகப் பேரழிவுத் தடுப்புதினம் ஒக்டோபர் 14ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இயற்கையை வெல்ல முடியாவிடினும்கூட,  இயற்கையால் ஏற்படக்கூடிய அழிவுகளிலிருந்து ஓரளவாவது பாதுகாப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இத்தினத்தின் குறிக்கோளாகவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான உலக பேரழிவுக் குறைப்புத் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய பேரழிவுகளால் ஏற்படக்கூடிய மக்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுப்பதை விசேட அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருந்தன.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். இக் கட்டுரையை எழுதப்படும் நேரத்திலும்கூட,  (2009 ஒக்டோபர் இல்) சிட்னி: பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக  194க்கும் அதிகமானோர் பலியானதுடன்,  பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும்,  நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு வட கிழக்கே இருக்கும் இந்த குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவானதாக குறிப்பிடப்படுகின்றது. அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி பலர் பலியானார்கள். இந்த சமோவா தீவு அமெரிக்காவின் கட்டு்ப்பாட்டில் உள்ள நாடாகும்.

எனவே,  சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.)  ‘ட்சு’ சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட,  அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில்,  கடல் பகுதியில்,  மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால்  மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப்,  பிரிய, அதன் தட்ப,  வெப்ப,  இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம்,  கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட்,  ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும்,  இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம்,  சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.  கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும்,  கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும்,  மலையில் எரிமலைகள் தோன்றும்போதும்,   வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும்,  (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும்,  விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும்.  கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு.,  365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி,  எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால்,  முதன்முதலில் 1755ம் ஆண்டு,  நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  போர்த்துக்கல்,  ஸ்பெயின்,  மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா,  ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா,  இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள்,  பொருட் சேதங்கள்,  உட்கட்டமைப்புச் சேதங்கள்,  வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15, 197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை,  மட்டக்களப்பு,  அம்பாந்தோட்டை,  காலி,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள்,  வைத்தியசாலைகள்,  மக்கள் மண்டபங்கள்,  பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம்,  தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள்,  பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட,  இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.  

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம்.  அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும்.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான்,  பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா,  கனடா,  சிலி,  கொலம்பியா,  குக் ஐலண்ட்ஸ்,  கோஸ்டரிகா,  தென் கொரியா,  வடகொரியா,  ஈக்வேடார்,  எல்சல்வடார்,  பிஜி,  பிரான்ஸ்,  குவாதமாலா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,  மெக்சிகோ,  நியூசிலாந்து,  நிகரகுவா,  பெரு,  பிலிப்பைன்ஸ்,  ரஷ்யா,  சமோவா,  சிங்கப்பூர்,  தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்,  சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள்,  கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால்,  அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால்,  சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம்,  சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க்,  தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக்,  ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

உலக பேரழிவு விழிப்புணர்வு தினமான 2009 ஒக்டோபர் 14ஆம் திகதி  ஒரேநேரத்தில் 18 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகையை மேற்கொண்டன. இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலும் அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்; சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்பட்டன.

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை,  இந்தியா,   இந்தோனேஷியா,  மலேசியா,   அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்றன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்,  எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் இவ்வொத்திகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டாலும்கூட,  மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவானால் மாத்திரமே இவை வெற்றியளிக்கலாம். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1014-international-day-for-natural-disaster1.html

ஊழல் குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகத் தயார் என பாகிஸ்தான் கேப்டன் அறிவிப்பு

141009younuskhan226.jpgசமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளின் முடிவுகளை முன்கூட் டியே நிர்ணயிப்பதற்கு பணத்தை பெற்றுக்கொண்டு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பாகிஸ்தசன் கிரிக்கெட் அணியின் தலைவர் யூனிஸ் கான் பதவி விலக முன்வந்துள்ளார்.

தம் மீதும் தமது அணியின் மீதும் எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த பாகிஸ்தானின் நாடாளுமன்ற குழு, இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த பிறகும் யூனுஸ்கான் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

அவரது ராஜினாமவை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரி யம் ஏற்குமா இல்லையா என்பது உடனடியாக தெரியவில்லை.

100 வயதில் தங்கப் பதக்கம் வென்றார் அவுஸ்திரேலிய மூதாட்டி

gold-madel.jpgஉலக மூத்தோர் விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 18 ஆம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 முதல் 101 வயதிலான பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன. 95 நாடுகளைச் சேர்ந்த 28,292 வீரர், வீராங்கனைகள் சிட்னியில் குவிந்துள்ளனர்.

இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டிகளில் எல்லோரையும் கவர்ந்தவர் அவுஸ்திரேலிய வீராங்கனை ரூத் பிரித். காரணம் அவரது வயது 100. இந்த வயதிலும் மனம் தளராமல் போட்டிக்களத்தில் குதித்து உள்ளார். குண்டு எறிதல் போட்டியில் 100 முதல் 104 வயதினருக்கான பிரிவில் அவர் பங்கேற்றார். ஆனால் இப்பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை அவர் தான். இதனால் போட்டியின்றி அவர் தங்கப்பதக்கம் வென்றார். இருப்பினும் அவர் 4.07 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார்.

பதக்கம் வென்றதும் மது வகைகளுடன் வெற்றியை கொண்டாடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் ரூத் பிரித்தை அழைத்த போது, அவர் மது, சிகரெட் குடிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்று மறுத்து விட்டார்.

மதுவகைகளுடன் வெற்றியை கொண்டாடும் இந்த நவநாகரீக பாணி தனக்குரியதல்ல என்றும் அவர் கூறினார். இந்த வயதிலும் ஆரோக்கியமுடன் இருக்கும் ரூத் பிரித்தின் உணவு முறையில் ஒரு ஆச்சரியமான விஷயமும் உண்டு. அதாவது சிறு வயது முதலே அவர் ஒரு போதும் காய்கறி வகைகளை சாப்பிட்டதில்லையாம். ‘போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறேன். ஓய்வு பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், இந்த செஞ்சூரி மூதாட்டி.

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் பலி

தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெரும்பாலும் கிளர்ச்சிக்காரர்கள் எவரும் இல்லாத பிராந்தியம் என்று பாகிஸ்தான் இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வாட் பள்ளத்தாக்கில் தற்கொலைக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

துருப்பினரின் வாகானத் தொடரணி ஒன்று சனநெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றை கடந்து சென்றபோது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் அவற்றின் மீது மோதச் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.