உலக மூத்தோர் விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 18 ஆம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 முதல் 101 வயதிலான பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன. 95 நாடுகளைச் சேர்ந்த 28,292 வீரர், வீராங்கனைகள் சிட்னியில் குவிந்துள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டிகளில் எல்லோரையும் கவர்ந்தவர் அவுஸ்திரேலிய வீராங்கனை ரூத் பிரித். காரணம் அவரது வயது 100. இந்த வயதிலும் மனம் தளராமல் போட்டிக்களத்தில் குதித்து உள்ளார். குண்டு எறிதல் போட்டியில் 100 முதல் 104 வயதினருக்கான பிரிவில் அவர் பங்கேற்றார். ஆனால் இப்பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை அவர் தான். இதனால் போட்டியின்றி அவர் தங்கப்பதக்கம் வென்றார். இருப்பினும் அவர் 4.07 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார்.
பதக்கம் வென்றதும் மது வகைகளுடன் வெற்றியை கொண்டாடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் ரூத் பிரித்தை அழைத்த போது, அவர் மது, சிகரெட் குடிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்று மறுத்து விட்டார்.
மதுவகைகளுடன் வெற்றியை கொண்டாடும் இந்த நவநாகரீக பாணி தனக்குரியதல்ல என்றும் அவர் கூறினார். இந்த வயதிலும் ஆரோக்கியமுடன் இருக்கும் ரூத் பிரித்தின் உணவு முறையில் ஒரு ஆச்சரியமான விஷயமும் உண்டு. அதாவது சிறு வயது முதலே அவர் ஒரு போதும் காய்கறி வகைகளை சாப்பிட்டதில்லையாம். ‘போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறேன். ஓய்வு பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், இந்த செஞ்சூரி மூதாட்டி.