கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா

லண்டன் சிவன் கோயில்: குறைந்த காலக் குத்தகைக் காணியில் ஒரு மில்லியன் பவுண் செலவில் ஆலயத் திருப்பணி : நடராஜா சச்சிதானந்தன்

Satchthnanthan_Nஅன்புடையீர்,
இறைவன் திருவருளினால் நான் எங்கள் சிவன் கோயிலை ஆரம்பிப்பதற்கு வேண்டிய அங்குரார்ப்பணக் கூட்டத்தை எனது (49 Ravensbourne Park Crescent, Carford, London, SE6 4YG,UK) இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்தேன். அப்போது ஆண்டு 1993. நானும் துடிப்புடன் இருந்தேன். இக்கூட்டத்திற்கு என்னால் அழைக்கப்பட்டவர்கள்: திருவாளர்கள் வி.கணேசமூர்த்தி, செ.யோகராசா, வ.கிருஷ்ணானந்தராஜ், தி.அருள்தாஸ், சு.பேரின்பநாதன், ந.சிவசுப்பிரமணியம், நா. ஸ்ரீ கெங்காதரன், ஆ.ரவீந்திரன் ஆகிய அப்பெரியார்கள் என் அழைப்பை ஏற்று வந்தனர்.

சிவன் கோயில் அங்குரார்ப்பணப் பூசை Newstead Community Hall, Lee எனும் மண்டபத்தில் நடைபெற்றது மண்டபத்திற்குரிய வாடகை முதலிய பிரதான செலவினங்களையும் நானே உற்சாகத்துடன் பொறுப்பேற்றிருந்தேன். அத்துடன் நானே அடியார்கள் தரிசித்து வரும் மூலஸ்தானத்திலுள்ள சோமஸ்கந்த மூர்த்தியின் திருமேனியையும் மகிழ்வுடன் உபயம் செய்தேன். ஆலயம் அமைந்துள்ள காணியை வாடகைக்கு எடுப்பதற்கு மூலகாரணமாகவும் பின் அக்காணியில் ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளையும் ஏனைய அறங்காவலர்களுடைய ஒத்துழைப்புடன் 1993 -1994 இல் நான் மேற்கொண்டேன்.

தொடக்கத்தில் ஆரம்பகால அறங்காவலர்களுடைய நிதி உதவிகள் கிடைக்காமையினால் நிதிப் பற்றாக்குறையின் நெருக்கடியைச் சமாளிக்கும் நிலையும் எனக்கு ஏற்பட்டது. எனினும் என் பணி தயங்காமல் நடந்தது. தற்போது சிவன் நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியை வாங்குதவற்கும் நானே மூலகாரணமாக இருந்தேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அக்காணியை வாங்குவதற்கு ஏதுவாகும் வகையில் வைத்திய கலாநிதி சீ.நவரத்தினம், வைத்திய கலாநிதி சி சோமசேகரம், கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா, அமரர் மு. அழகப்பன் ஆகியோரை அறங்காவலர்களாக வருவதற்க்கு அழைத்தேன். அவர்களும் வந்து எனக்கு ஊக்கம் தந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமரர் க.செல்வேந்திரன், திரு.சோ.பாலசுந்தரம், திரு.த. ஸ்ரீதரன், வைத்திய கலாநிதிகள் சி.இராஜசுந்தரம், சு.சிவதாசன், ஆர். கந்தவேள் ஆகியோர் அறங்காவலர்களாக வருதவதற்கும் மூலகாரணமாக இருந்துள்ளேன் என்பதையும் பெருமையுடன் இன்று நினைவு கூருகிறேன். எனது அழைப்பின் பேரில் ஆரம்பகால அறங்காவலர்களில் சிலர் சில விக்கிரகங்களை தாராள மனதுடன் உபயமாக வழங்கினர். சிலர் அலங்கார உற்சவ உபயகாரர்களாக வந்தனர். மற்றும் சிலர் விசேட உபயகாரர்களாக வந்தனர். பொதுமக்களில் சிலரும் விசேட உபயகாரர்களாக வருவதற்கு அடியேனுடைய உற்சாகமும் பங்கும் பிரயத்தனமும் காரணிகள் ஆகின.

அடுத்த கட்டமாக எம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களையும் பொதுமக்களின் உதவியுடன் ஸ்தாபிதம் செய்வதற்கும் அவர்கள் உபயகாரர்களாக வருவதற்கும் நான் எடுத்தபிரயத்தனங்கள் வெற்றியளித்தன. இவ்வாறு எம்கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அர்ச்சகர்கள் தேடும் கட்டத்தில் இங்கு பணி புரிவதற்கு சிவஸ்ரீ சபாமகேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீம சுந்தரக் குருக்கள் அவர்களையும் தமிழில் பூசை செய்வதற்கு சிவஸ்ரீ மணிவாசகக் குருக்கள் அவர்களையும் பன்னிரு திருமுறை ஓதுவதற்கு திரு. சாமி தண்டபாணி ஓதுவார் அவர்களையும் அடியேன் மூல காரணமாக இருந்து வரவழைத்தேன். வெற்றிக்கு மேல் வெற்றி வர, நானும் ஊக்கப்பட்டேன்.

இப்பணிகளை எல்லாம் செய்தபின்னர் ஆலயத்தை ஆகம முறைப்படி புனரமைப்தற்கு எண்ணினேன். எனவே கோயில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தவற்கான சிவலிங்கத்தையும் வட இந்தியாவிலிருந்து சுணக்கம் இன்றித் தருவித்திருந்தேன். கோயில் தொடர்ந்து நடந்தது. கோயில் அமைந்துள்ள காணி கோயிலுக்குச் சொந்தமாக இல்லாத படியால் சட்டத்தரணி திருமதி. இந்திரா செபஸ்தியான் அவர்களையும் பொறியியலாளர் (Mr. Payne) திரு.பெயின் அவர்களையும் அறங்காவலர் சபைக் கூட்டத்திற்கு அழைத்து வேண்டிய சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கான ஒழுங்குளையும் என் தர்க்கரீதியான நல்லெண்ணத்துடன் செய்திருந்தேன்.

குறைந்த கால குத்தகைக் காணியில் பெருமளவில் பொதுமக்களின் பணத்தைச் செலவுசெய்து கோயிலை அமைப்பதில் உள்ள சட்டமுறை ஆபத்துக்களால் அது உகந்த வழியல்ல என இவர்கள் இருவரும் தமது ஆலோசனையை அறங்காலர்களின் கவனத்திற்கு முன்வைத்தனர். இந்த ஆலோசனைக்கமைய கோயிலைச்சிறு அளவில் புனரமைப்பதற்கு வேண்டிய விபரங்களை அறங்காலர் சபையில் நான் முன்வைத்தேன். இதற்கான செலவுத்தொகை 200,000 பவுண்களேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனையைப் பெரும்பான்மையான அறங்காவலர்கள் ஏதோ துரதிஷ்ட்டத்தினால் ஏற்றுக் கொள்ளவில்லை.

இக்காலகட்டத்தில் அறங்காலவர்கள் சபை தன் தலைவரை மாற்றிக் கொண்டது. அத்துடன் நான் செய்து வந்த பணிகளும் முடங்கத்தொடங்கின. என் வேகமும் குறைந்தது. எனினும் விடமனமின்றி தொடர்ந்து என்னால் ஆகியவற்றைச் செய்தேன்.

புதிய தலைவர் கலாநிதி து. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் குறைந்த கால குத்தகைக் காணியில் (Short term Lease) கோயில் கட்டுவதற்கு ஒரு மில்லியன் பவுண்கள் (1,000,000) செலவில் ஒரு ஆடம்பரமான ஆபத்தான திட்டம் வகுத்தார். அத்தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அந்தத்திட்ட விபரங்களை எமது பொதுமக்கள் அறிவதற்கு முன்வைக்க வேண்டுமெனவும் பொதுமக்களின் ஆலோசனைகளையும் இணக்கமும் பெறப்பட வேண்டும் எனவும் எம் அறங்காவலர் சபையை நான் மிகவும் பணிவுடன் வேண்டினேன்.

அதற்கு எம்தலைவர் ஏனோ சம்மதிக்கவில்லை. நானும் எம்தலைவர் கலாநிதி து.ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெரிய செலவுத் திட்டத்தை ஏற்க என்மனச்சாட்சி இடங்கொடாத நிலையில் அவர்களின் திட்டத்தை பொதுமக்கள் கவனத்திற்கு நானாகவே முன்கொணர்ந்தேன். அறங்காவலர்களின் இத்தவறான திட்டத்தை அடியேன் பொறுப்புணர்வுடன் பொது மக்களின் முன் வைத்த காரணத்தால் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் வேண்டுகோளின் படி அறங்காவலர் சபையிலிருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்.

நான் முன்னின்று தொடங்கிய கோயிலின் விருத்தியிலும் நிர்வாகத்திலும் நான் பங்குகொள்ள முடியாதநிலை என்னை வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகம் செல்லும் போக்கையும் பொறுக்க முடியாது ஈசனிடமே எம் அடியார்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு நூலை வெளியிட எண்ணியுள்ளேன். எனவே மேற்கூறிய உண்மை விபரங்கள் எல்லாம் அடங்கிய இலண்டன் சிவன்கோயில் வரலாற்று நூல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இந்நூலில் இதுவரை பொதுமக்கள் அறியாத எல்லா விடயங்களையும் கூறலே நலம்.

எனவே எம்ஆலயம் சம்பந்தமான பூரண வரலாறும் விபரங்களும் அடங்கிய அடியார்களுடைய கட்டுரைகளையும் இந்நூலில் சேர்க்க விரும்பி இத்தால் நல்லெண்ணத்துடனும் அன்புடனும் தயவாக உங்களையும் அழைக்கிறேன்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
Maazaru Printers,
28/8 Muthukalathi Street,
Triplicane
Chennai-5
Tamilnadu (South India).

தயவுசெய்து கட்டுரைகளை விமானத்தபாலில் அனுப்புங்கள். தட்டச்சுவசதி இல்லாதவர்கள் மட்டும் தெளிவான கையெழுத்தில் அனுப்பினால் நான் அவற்றை உசிதமாக உள்ளடக்கத்தெண்டிப்பேன். மின்ஞ்சல் வசதி உள்ளவர்கள் maazaru@rediffmail.com எனும் மின்னஞ்சல் விலாசத்துக்கு முடியுமான கெதியில் அனுப்பி வைக்கவும். உங்கள் கட்டுரைகள் 31.06.2010 கடைசித் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்குமாறு இத்தால் அன்பாக வேண்டுகிறேன். தமிழிலேயே எழுதுவதை விரும்புகிறோம். ஆங்கிலமும் பரவாயில்லை.

இங்ஙனம்
தங்கள் ஆதரவை நாடும்
நடராஜா சச்சிதானந்தன்
நிறுவனர் – இலண்டன் சிவன் கோயில்

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது!!!

TNA_Government_08June10தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா

நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன.  இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக  செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TNA_Government_08June10கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

TNA_Government_08June10தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி

இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

Sampanthan_Rநாளை (07-06-2010) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வலியுறுத்தவிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகவுள்ள நிலையில் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே திரு. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை ஜனாதிபதியுடன் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் விபரங்களை என்னால் இப்போது முழுமையாக கூற முடியாது. வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் முதலில் கலந்துரையாடவுள்ளதாகவும், அடிப்படை வாழ்வாதார உதவிகளின்றி அம்மக்கள் அல்லல் படுவதாகவும் அவர்களுக்கான உதவிகளை உடனடியாக செய்தாக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கூட்டமைப்பினர் அங்குள்ள நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றைத் தாயரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நடாளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், போருக்குப் பின்னான மீள்குடியேற்றம், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பான விடயம், விடுதலைப் பலிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு  வழங்குவது போன்ற விடயங்களும் வலியுறத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதே வேளை, நாளை மறுதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அப்பயணத்தில் இணைந்து கொள்வார் என தெரியவருகின்றது.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் செல்கின்றனர். எனினும், குழுவில் யார்? யார்? அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப் படவுள்ளது.

என்னைப் போன்ற இளைஞன் யாருமில்லை -கருணாநிதி

karunanidhi.jpg87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

டாக்காவில் பயங்கர தீவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி

04-dakka-fire.jpgவங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மனித உரிமை அரசியல் : த ஜெயபாலன்

Nelson_Mandela”ஒடுக்குமுறையும் அதற்கான எதிர்ப்பும் நிகழ்ந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை. உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவினால் மட்டும் அவை குணப்படுத்தக் கூடியவையல்ல. எங்களுடைய பொது மனிதத்துவத்தை இழிவுபடுத்துகின்ற இன அடிப்படையில் ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரிக்கின்ற அமைப்புமுறையில் இருந்தும் எங்களை ஒடுக்கப்படுபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றதில் இருந்தும் நாங்கள் எங்களை விடுவிக்க வேண்டும்.”
நெல்சன் மண்டேலா, October 29 1998

_._._._._

வருமுன் காப்பதே மிகச் சிறந்த அரசியல் இராஜதந்திரம். ஆனால் வந்த பின் அதனை வைத்து அரசியல் செய்வதற்கும் ஒரு பிரிவினர் உள்ளனர். வருமுன் காக்கப்பட வேண்டியதில் மனித உரிமைகளும் விதிவிலக்கல்ல. மனித உரிமைகள் ஏனைய அனைத்து உரிமைகளிலும் முதன்மையானது. எந்த உரிமைகளுக்காகவும் மனித உரிமைகளை பணயம் வைக்க முடியாது. நாம் வாழ்கின்ற உலகு சமத்துவமான உலகல்ல. ஏற்றத் தாழ்வுகளையுடைய, முரண்பாடுகள் நிறைந்த, ஒடுக்குமுறைகள் தலைதுக்கி நிற்கின்ற உலகு. இதுவே மனித உரிமை மீறல்களுக்கான விளைநிலமாக உள்ளது. இதற்கு மேற்குலகு முதல் மூன்றாம் உலகு வரை விதிவலக்கல்ல. இங்கு மனித உரிமை மீறல்களின் அளவும் கொடூரமும் வேறுபடுகின்றனவே அல்லாமல் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றது. நிகழ்த்தப்படுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த அதே ஆண்டு 1948ல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனாலும் இலங்கை உட்பட உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வடிவங்களில் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுக்கொண்டே உள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. முரண்பாடுகளை வன்முறையற்ற வழிமுறைகளில் தீர்ப்பதற்கான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததன் விளைவு முரண்பாடுகள் கூர்மையடைந்து மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படுவதில் முடிவடைகின்றது.

இவ்வாறு மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்ற சூழலிலும் மனித உரிமைகளைக் கண்காணிக்கின்ற அமைப்புகள் அதனை மீறுகின்ற நாடுகளுக்கோ அமைப்புகளுக்கோ எதிராக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைக் கண்காணிப்பு என்பது அறிக்கை தயாரித்தலுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. அறிக்கைகளுக்கு அப்பால் சென்று மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது அரசியல் சார்ந்ததாகி விடுகின்றது. மே 28 2009ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகள் எவ்வளவுதூரம் அரசியல் சார்ந்தது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம், இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த இத்தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

இவ்வாறு மனித உரிமைகள் என்பது அரசியல் சார்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது.

Omar_al_Bashirசுடானின் டாபூர் பிரதேசத்தில் ஒமர் ஹசன் அகமட் அல் பசீரின் ஆட்சிக்காலத்தில் 200,000 முதல் 400,000 பேர்வரை கொல்லப்பட்டனர். அல் பசீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க் குற்றங்கள் மற்றும் மனித்துவத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மார்ச் 4 2009ல் பிடியாணையை விதித்தது. ஆனாலும் 2010 ஏப்ரல் 26ல் அல் பசீர் மீண்டும் சூடானின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியை நடத்துகின்றார். சர்வதேச நீதிமன்றத்தின் பிடியானை அர்த்தமற்றதாக்கி உள்ளது.

மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டு சர்வதேசத் தலையீட்டுடன் தனிநாடுகளாகத் தங்களை அமைத்துக் கொண்டவை ஈஸ்ற் தீமோரும் கொசோவோவும். இவ்விரு நாடுகளிலும் இலங்கையில் இடம்பெற்றது போன்று அரச இராணுவத்துடன் ஒரு யுத்தத்தை மேற்கொள்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற கட்டமைக்கப்பட்ட பலமான இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கவில்லை. கிழக்கு தீமோரில் இந்தோனேசிய இராணுவமும் கொசோவோவில் யுகோஸ்லோவிய படைகளும் மோசமான இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. கிழக்கு தீமோரில் அவுஸ்திரேலியாவும் கொசோவோவில் நேட்டோ நாடுகளும் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தங்கள் அரசியல் நலனுக்கு சாதகமாக்கிக் கொண்டன. மேலும் கிழக்கு தீமோரும் கொசோவோவும் அமைந்திருந்த புவியியல் அமைவு, மற்றும் சர்வதேச அரசியல் சூழலும் அதற்கு இயைவாக அமைந்தது.

Kosova_Today_Eelam_Tommorrowஅதேசமயம் நேரடியான ஒடுக்குமுறையாளர்களாக இருந்த இந்தோனேசிய அரசிடம் இருந்தும் யுகோஸ்லாவிய அரசிடமிருந்தும் கிழக்கு தீமொரும் கொசோவோவும் விடுதலை பெற்றமை ஓடுக்கப்பட்ட தேசங்களைப் பொறுத்தவரை சாதகமாக அமைந்தது. இதனை முற்றிலும் மாறுபட்ட அரசியல் புவியியல் சூழலுடைய இலங்கையிலும் பிரதியீட செய்து தமிழீழம் பிரித்தெடுக்கப்படும் என்று தனிநாட்டு மனக்கோட்டை கட்டியவர்கள் பலர். தங்கள் மனக்கோட்டைக்கு பல்லாயிரக் கணக்கான வன்னி மக்களை இவர்கள் பலியிட்டனர்.

இந்த மனித உரிமை அரசியலின் அடிப்படையிலேயே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டே வந்துள்ளது. தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டு மலையக மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் போராட்டமும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கானோரின் உயிர்வாழ்வதற்கான உரிமையும் பறிக்கப்பட்டு உள்ளது. இதன் உச்சமே மே 18 2009 வரை இடம்பெற்ற மனித அவலம்.

இயற்கை அனர்த்தங்களால் மோசமான அழிவுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த இயற்கை அனர்த்தங்களை தடுக்கின்ற ஆற்றல் மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்துகின்ற அழிவை மட்டுப்படுத்த முடியுமே அன்றி தடுக்க முடியாது. ஆனால் மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்துகின்ற அவலங்கள் மனித சமூகத்தாலேயே மனிதத்துவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை. இதனை முழுமையாகத் தடுப்பதற்கு மனித சமூகத்தால் முடியும். எப்போதும் வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அறிவார்ந்த செயல். மனித உரிமை மீறல்களுக்கு இட்டுச்செல்லக் கூடிய சூழல் தவிர்க்கப்பட வேண்டும்.

Rwandan_Genocideஆனால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று அவலங்கள் நிகழ்ந்த பின் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் முனைப்பு அம்மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது தடுப்பதற்கு காட்டப்படவில்லை. இந்த மோசமான தவறு 1994ல் ருவாண்டாவில் இடம்பெற்றது. ருட்சி – குற்ரு இனக்குழுக்களுக்கு இடையே இனமுரண்பாடு கூர்மையடைந்திருந்த ருவாண்டாவில் ருவாண்டாவின் குற்ரு இன ஜனாதிபதியும் புரூன்டி ஜனாதிபதியும் பயணம் செய்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்து இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஐநா படைகளில் 10 பேர் கொல்லப்பட்டதையடுத்து ஐநா தனது படைகளை விலத்திக்கொண்டது. ருவாண்டாவின் மனித அவலத்தில் சர்வதேசம் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஏப்ரல் 6 1994ல் முதல் 100 நாட்களில் 800,000 பெரும்பாலும் ருட்சி இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

Kofi_Annan_2004ருவாண்டா படுகொலையின் 10வது ஆண்டு நினைவு மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் கொபி அனன் “The international community failed Rwanda and that must leave us always with a sense of bitter regret. – சர்வதேச சமூகம் ருவாண்டா விடயத்தில் தவறு செய்துவிட்டது. அது எங்களை எப்பொதும் கவலைகொள்ள வைக்கின்ற உணர்வை விட்டுச்சென்றுள்ளது.” எனத் தெரிவித்தார். ருவாண்டா படுகொலையின் போது கொபி அனன் ஐநா அமைதிப்படைக்கு தலைமை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Romeo_Dallaire_UN_Rawanda_PKFஅதே மாநாட்டில் உரையாற்றிய ருவான்டாவில் இருந்த சிறிய அமைதிகாக்கும் படைக்கு தலைமை தாங்கிய Lieutenant General Romeo Dallaire வருமாறு தனது அதிருப்தியை வெளியிட்டார். “I still believe that if an organisation decided to wipe out the 320 mountain gorillas there would be still more of a reaction by the international community to curtail or to stop that than there would be still today in attempting to protect thousands of human beings being slaughtered in the same country. – நான் இப்பொழுதும் நம்புகின்றேன், ஒரு குழு மலைகளில் உள்ள 320 கொரில்லாக்களை இல்லாமல் ஒழிக்க முடிவெடுத்தால், சர்வதேச சமூகம் இன்றும் அதே நாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதைக் காட்டிலும் கூடுதலான கவனத்தை அந்த கொரில்லாக்கள் கொல்லப்படுவதைதத் தடுப்பதில் காட்டும்.”

ருவாண்டா படுகொலைகளில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறிவிட முடியாது. ருவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னரே இலங்கையில் மற்றுமொரு மனித அவலம் நிகழ்ந்து உள்ளது. ஏன் இவ்வாறான மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியவில்லை என அப்போதைய கனடிய வெளிவிவகார அமைச்சர் Bill Graham, இவ்வாறு கூறுகின்றார். “We lack the political will to achieve the necessary agreement on how to put in place the type of measures that will prevent a future Rwanda from happening. – எதிர்காலத்தில் ருவான்டாவில் நிகழ்ந்தது போன்றதொன்று நிகழாமலிருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கான அரசியல் விருப்பு எங்களிடம் குறைவாகவே உள்ளது.” மனித உரிமை அரசியலின் யதார்த்தத்தை அப்போதைய கனடிய வெளிவிவகார அமைச்சர் மேற்கூறியபடி வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்ததும் இலங்கை அரசு இனமுரண்பாட்டை இராணுவ ரீதியிலே கையாள முற்பட்டதும், இலங்கை மனித உரிமை மீறல்களின் விளைநிலமாகியது ஆச்சரியப்படுவதற்கில்லை. மே 18 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசும் ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களும் தம் பங்கைக் கொண்டுள்ளன. இம்மனித உரிமை மீறல்களை முற்றாக தவிர்த்திருக்கக் முடியாது போனாலும் வெகுவாக அதனை மட்டுப்படுத்தி இருக்க முடியும்.

சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதனை தனது அரசியலமைப்பிலும் கொண்டுள்ள இலங்கை அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை.

TE_LTTE_Pirabaஇலங்கை அரசு பேரினவாத ஒடுக்குமுறை அரசு என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட விடுதலை அமைப்புகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிலும் பார்க்க மோசமான மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் மீதும் சக போராளிக் குழுக்களின் மீதும் சக இனமக்களின் மீதும் மேற்கொண்டன. இவ்வகையான மனித உரிமை மீறல்கள் மே 18 2009 வரை இலங்கை அரசினாலும் அதற்கு ஆதரவாக ஆயுதக் குழுக்களினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை கூட அவரவர் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப ஆறாயிரத்தில் இருந்து ஐம்பதினாயிரம் வரை மதிப்பிடப்படுகின்றது.

யுத்தம் எப்போதுமே மிகக் கொடுமையானது. யுத்தத்தில் முதலில் பலியாக்கப்படுவது உண்மை. இப்போது யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகியும் யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகள் வெளிவரவில்லை. இந்த யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளை ஆராய்வதில் அதனைக் கண்டறிவதில் இலங்கை அரசுக்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ எவ்வித அக்கறையும் இல்லை. இவர்களுடைய கவனம் முழுவதும் எதிர்த் தரப்பை அரசியல் ரீதியாக முறியடிக்க மனித உரிமையைப் பயன்படுத்த முற்படுகின்றனர்.

ஓகஸ்ட் 25 2009ல் சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்கின்ற காட்சி பிரித்திhனியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது. (http://link.brightcove.com/services/player/bcpid1529573111) இதே போன்று மற்றுமொரு இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்ற காட்சி படங்களாக மே 2010ல்  வெளிவந்தள்ளது. இக்கொடுரங்கள் 2009 ஜனவரியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது. மேலும் மே 18 2010ல் பிரித்தானிய சனல் 4 செய்திக்கு பேட்டியளித்துள்ள யுத்த களத்தில் நின்ற முன்னிலை இராணுவ வீரர் சரணடைந்த பொது மக்களையும் புலிகளையும் சித்திரவதை செய்ததாகவும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். வே பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் தன்னுடைய மெய்பாதுகாவலர்களுடன் சரணடைந்த போது தகப்பனின் இருப்பிடத்தைக் கேட்டு சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

மே 21 2009ல் தேசம்நெற்றில் வெளியான இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதப்பட்டு உள்ளது. மேலும் மே 17 2009ல் நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்என்ற கட்டுரையில் சரணடைய உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு உள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவற்றுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தேன். ஏப்ரல் 16 2009ல் வெளியான கட்டுரையில் புலிகளின் கையில் ஆயுதம் எதற்கு என்ற கேள்வியை ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். பெப்ரவரி 23 2009ல் ”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் ரவி சுந்தரலிங்கத்தின் நேர்காணல் வெளியானது. இதே போன்று பெப்ரவரி 06 2009ல் ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் என்று சிவாஜிலிங்கம் வழங்கிய நேர்காணல் தேசம் நெற்றில் வெளியானது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2008 நவம்பரிலேயே இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ள மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் தெருநாடகம் ஒன்றை தேசம்நெற் நடத்தி இருந்தது.

Pearl_Logoவன்னி இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தடுப்பதற்கு குறைந்தபட்சம் அதன் அவலத்தை மட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இருந்தும் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டது. இன்று மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அன்று யுத்த களத்தின் யதார்த்தத்தை ஏற்கமறுத்து அடம்பிடித்தனர். இன்னும் சொல்லப்போனால் யுத்தகளத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேசம் முயற்சிகள் எடுக்க முயன்றபோது அதற்கு எதிராக அறிக்கைகள் கூட வெளியிடப்பட்டது. யுத்தத்தின் கோரத்தில் சிக்குண்ட மக்களுக்கு அதுவே அவர்களின் பூர்விக மண் என்றும் அங்கிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்றும் இந்த அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டது. முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் என்ற மார்ச் 3 2009ல் வெளியான செய்திக்கட்டுரையில் ‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.’ என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற தமிழ் ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் பெரும்பாலும் அன்று யுத்தத்தின் உண்மைத் தகவல்கள் மக்களைச் சேரவிடாமல் இருட்டடிப்புச் செய்தன. யுத்தத்திற்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் களநிலவரம் பற்றிய மயையிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த ஊடகங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களது வலையில் இம்மக்கள் வீழ்த்தப்பட்டனர். அதனால் அவர்களால் வன்னி மக்களை அவலத்தில் இருந்து மீட்க முடியாதது மட்டுமல்ல தங்களை அறியாமலேயே வன்னி மக்களின் அழிவுக்கு இம்மக்களும் உடந்தையாக்கப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை படிப்படியாக மீறிவந்திருக்கின்றது. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இறுதியில் தமிழ் தலைமைகள் தாங்கள் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்போம் என்றும் அதற்கு தாங்களே ஏகபோக தலைமை என்றும் அறிவித்தனர். இந்தச் சூழலில் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை யாருடன் யுத்தம் புரிகின்றோமோ அவர்களிடம் ஒப்படைக்க முடியுமா? அதனால் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற பொறுப்பு தமிழ் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் உரியது. இந்தப் பொறுப்புக்களை பொறுப்பற்ற விதத்தில் தட்டிக்கழித்தது மட்டுமல்ல தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியவர்களே அம்மக்களின் உரிமைகளை மட்டுமல்ல அம்மக்களையே பணயம் வைத்து யுத்தம் புரிந்தனர்.

இன்றும் இந்த உண்மையை இருட்டடிப்புச் செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் சொல்லும்படி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். எதிரியிடம் நியாயம் கேட்கும் தமிழ் அரசியல் தலைமைகள் இன்னமும் தமது சொந்த மக்களுக்கு நியாயம் சொல்லவில்லை. ‘ஏன் பேச்சுவார்த்தைகளைக் குழப்பினீர்கள்? ஏன் யுத்தத்திற்குச் சென்றீர்கள்? ஏன் வன்னிக் குழந்தைகளை பலாத்காரமாக இழுத்துச் சென்றீர்கள்? ஏன் யுத்த பிரதேசத்திற்குள் மக்களை பலாத்காரமாகத் தடுத்து வைத்தீர்கள்? ஏன் யுத்தத்தில் இருந்து தப்பியோடிய மக்களைச் சுட்டுக் கொன்றீர்கள்?’ ஏன் இது பற்றியெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்று வாய் திறக்கவில்லை?’

இந்த நாடுகடந்த தமிழீழம் குழுவும் வட்டுக்கோட்டைக் குழுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளும் மௌனம் காத்து வன்னி மக்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்தனர். எதிரியிடம் கேட்ட நியாயத்தில் சிறிதளவையாவது தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கியும் தங்களை நோக்கியும் கேட்டு இருந்தால், இந்த உண்மைகளை அன்றே வெளியே கொண்டுவந்திருந்தால் இந்த இழப்புகளை முற்றாகத் தடுத்திருக்காவிட்டாலும் பெருமளவில் மட்டுப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் எதிரியிடம் நியாயம் கேட்பதற்கு இருந்த வெளி தங்கள் சொந்தத் தலைமைகளிடம் கேட்பதற்கு இருக்கவில்லை என்பதே யதார்த்தம். தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களுக்கு எண்ணற்ற நியாயங்கள் இருந்தது. இன்றும் இருக்கின்றது. ஆனால் தமிழ் தலைமைகளின் பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் தமிழ் அமைப்புகளின் குறுகிய அரசியல் நலன்களும் வறட்டுத்தனமான அரசியலுமே அந்த நியாயங்கள் அனைத்தையும் சிதைத்து வெறும் மனித அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற கீழ்த்தரமான நிலையை ஏற்படுத்தியது.

LTTE_Training_Civiliansமே 18 2009 முள்ளிவாய்காலுக்கு முன்னதாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அரசியல் மையத்தை சற்று பார்ப்பது இங்கு பொருத்தமானது. மாவிலாறு அணையை மூடுவதற்கு முன்னதாகவே மக்களை ஆயுத மயப்படுத்துகிறோம் மக்களுக்குப் பயிற்சி அளிக்கின்றோம் என்ற புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் வெளிவரத் தொடங்கியது. மாவிலாறு அணை மூடப்பட்டு யுத்தத்திற்கு அழைப்பு விடப்படுகின்றது. சர்வதேசம் எங்கும் தமிழ் மக்கள் வாழும் நகரங்களில் பொங்கு தமிழ் நடாத்தி யுத்தத்திற்கான முரசு கொட்டப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு வேண்டுமானால் யுத்தம் என்பது அவர்களின் குழந்தைகள் விளையாடும் ‘எலக்ரோனிக் கேம்’ அக இருக்கலாம். ஆனால் தாயக மக்களுக்கு யுத்தம் என்பது இரத்தமும் சதையும் கொண்ட அவலம். மனித உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறுவதற்கான விளைநிலம் தான் யுத்தகளம். இந்த யுத்தகளத்தை அமைத்துவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவது பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதைப் போன்றது.

யுத்த முரசு கொட்டிய போதும் யுத்தத்தின் ஆரம்பக் கட்டத்திலும் மனித இழப்புகளும் அவலங்களும் பற்றிக் கேள்விகளை எழுப்பிய போது இவர்கள் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கவில்லை. ‘விடுதலைப் போராட்டத்தில் இவை தவிர்க்க முடியாதவை. இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைய முடியாது.’ என்றெல்லாம் இவர்கள் ழுழங்கி யுத்த வேள்விக்கு நெய்வார்த்தனர்.

Kosovo_Tamil_Eelamபின்னர் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்த வேளையில் கொசோவோ, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற அவலங்களை முன்வைத்து வன்னி மக்களை யுத்த வேள்விக்கு பலியிடவும் தயாராய் இருந்தனர். தமிழ் மக்களின் மனித அவலம் மோசமாக மோசமாக கொசோவோ, கிழக்கு தீமோர் போன்று சர்வதேசம் தலையிட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்றும் விளக்கம் தரப்பட்டது. தமிழ் மக்கள் மனித அவலத்தின் உச்சியில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் தலைமைகளும் ஊடகங்களும் அமைப்புகளும் தமிழீழத்தை நெருங்கிவிட்டதாகவே பிரச்சாரம் செய்தன. வன்னி மக்கள் யுத்த அவலத்தின் வலியில் துடித்துக் கொண்டிருந்த அப்போதும் இவர்கள் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவில்லை.

மே 18 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்து தற்போது ஓராண்டு ஆகியுள்ள வேளையில் கோமாவில் இருந்து எழும்பியவர்கள் போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுவிட்டதாக கோசம் எழுப்புகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் தலைமைகளும் ஊடகங்களும் அமைப்புகளும் இன்று எழுப்புகின்ற மனித உரிமை மீறல் தொடர்பான கோசங்கள் அவர்களின் அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக தங்கள் குறுகிய அரசியல் நலன்களையும் வியாபாரங்களையும் பேணுவதற்காக வைக்கப்படுகின்ற கோசங்களே. இவர்கள் மனித அவலத்தை அரசியலாக்கி மீண்டும் ஒரு மனித அவலத்திற்கு வித்திடக் கூடியவர்கள்.

அதேசமயம் இலங்கையில் வன்னி யுத்தம் உட்பட இதுவரை மீறப்பட்டு வந்த மனித உரிமைகள் தொடர்பான தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் நியாயமான குரல்கள் வலுப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயங்கள் கிடைப்பதற்கான வழி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமூகங்களிடையே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சமூகங்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் மீளுறவும் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அவலங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது வெறுமனே நீதி கிடைப்பது ஆகாது. நீதி என்பதும் ஒரு வகையில் பழிவாங்குவதே.

நூறுநாட்கள் ருவாண்டாவில் இடம்பெற்ற ருட்சி இனத்தவர்களின் படுகொலைகள் 1994 யூலை அளவில் குற்ரு அரசு சரிந்து Rwandan Patriotic Front (RPF) ருட்சி அரசு ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. 1994ல் நூறுநாட்களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் 120 000 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். விசாரணைகளை மேற்கொள்ள 100 வருடங்கள் ஆகும் என மதிப்பிட்ட ஆர்பிஎப் அரசு குறைந்த குற்றம் இழைத்த 20 000 பேரை 2003ல் விடுதலை செய்தது. 2004ல் குற்றங்களை ஒப்புக் கொண்ட 30 000 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பவர்கள் விடுவிக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற சட்டத்துறை சார்ந்தவர்கள் அல்லாமல் கிராமப் பெரியவர்களின் தலைமையில் தொகையாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. ஆனாலும் 1994 யூலையில் ஆர்பிஎப் அரசமைத்ததை அடுத்து 2 மில்லியன் குற்ரு இனத்தவர்கள் கொங்கோவில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்து குற்ரு ஆயுதக் குழுக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் 5 மில்லயன் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கொன்கோலிஸ் ருட்சி ஆயுதக் குழுவும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. தாங்கள் ஆயுதத்தை வைத்தல் தங்கள் மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என அவர்கள் கருதுகின்றனர்.

ஒரே மொழி பேசுகின்ற ஒரே ஒரே பாரம்பரியத்தையுடைய ஒரே பிராந்தியத்தில் வாழ்பவர்களான ருட்சி – குற்ரு சமூகக் குழுக்களால் மீளுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அங்கு இனப்படுகொலைக்கு உள்ளான ருட்சி இனத்தவர்களே ஆட்சியைக் கைப்பற்றிய போதும் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்ட போதும் அங்கு இனமுரண்பாடு இன்னமும் கூர்மையாகவே உள்ளது. 1994 இனப்படுகொலையில் கொல்லப்பட்டது போன்று ஐந்து மடங்கு மக்கள் 5 மில்லியன் வரை கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் பாதிக்கப்பட்ட சாட்சிகள் பலரும் தேடிக் கொல்லப்பட்டனர்.

இந்த வகையில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட Truth and Reconciliation Commission – உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு ஒரு முன்னுதாரணமாகும். 21000 சாட்சியங்களின் வாக்குமூலங்களுடன் 3500 பக்கங்களில் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதை தென்னாபிரிக்காவின் இனஒடுக்குமுறை அரசின் அதிபராக இருந்த டிபிள்யு டி கிளார்க், இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினருமே எதிர்த்தனர், அவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையிலும் இறங்கினர். இவ்வறிக்கை எவ்வித பாரபட்சமும் இன்றி சகல தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தது. இம்மனித உரிமை மீறல்களில் டபிள்யு டி கிளார், வின்னி மண்டேலா உட்பட முக்கிய அரசியல் புள்ளிகளினது பாத்திரம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Nelson_Madela_and_Desmond_TuTuஉண்மையறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அச்பிசப் டெஸ்ட்மன் ருரு ”Fellow South Africans, accept this report as a way – an indispensible way – to heal. – சக தென்னாபிரிக்கர்கள் இந்த அறிக்கையை ஏற்பட்ட காயங்களில் இருந்து குணம் அடைவதற்கான வழியாக தவிர்க்க முடியாத ஒரே வழியாகக் கொள்ள வேண்டும்” என இவ்வறிக்கையை அப்போதைய தென்னாபிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவிற்கு கையளிக்கும் போது தெரிவித்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு கருத்து வெளியிட்ட நெல்சன் மண்டேலா “The wounds of the period of repression and resistance are too deep to have been healed by the TRC alone. We are extricating oursleves from a system which that insulted our common humnaity by dividing us from one another on the basis of race and setting us against each other, as oppressed and oppressor. – ”ஒடுக்குமுறையும் அதற்கான எதிர்ப்பும் நிகழ்ந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை. உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவினால் மட்டும் அவை குணப்படுத்தக் கூடியவையல்ல. எங்களுடைய பொது மனிதத்துவத்தை இழிவுபடுத்துகின்ற இன அடிப்படையில் ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரிக்கின்ற அமைப்புமுறையில் இருந்தும் எங்களை ஒடுக்கப்படுபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றதில் இருந்தும் நாங்கள் எங்களை விடுவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா, டெஸ்மன்ட் ருரு போன்ற மாண்புமிகு தலைவர்களால் தென்னாபிரிக்கா இன ஒடுக்குமுறையில் இருந்து தன்னை குறிப்பிடத்தக்க அளவில் விடுவித்துக் கொண்டது மட்டுமல்ல சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக மற்றுமொரு இனஒடுக்குமுறையை தாங்கள் மேற்கொள்ளாமலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குச் செல்வதில் இருந்தும் தென்னாபிரிக்காவை தற்காத்துக் கொண்டனர். இதன் மூலம் சர்வதேசத்திற்கு இனமுரண்பாடுகளை அணுகுவதற்கும் பகைமையுண்ட சமூகங்களிடையே மீளுறவை ஏற்படுத்துவதற்கான யதார்த்தமான செயன்முறையை வழங்கி உள்ளனர்.

உண்மை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு மூன்று குழுக்களைக் கொண்டிந்தது. அதில் முதன்மையாக இருந்தது மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகளை அறிவது. இக்குழு பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளையும் அவர்களின் சாட்சியங்களையும் பதிவு செய்தது. இரண்டாவது குழு இரு தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தது. மூன்றாவது குழு பொது மன்னிப்பு அளிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தது. தங்களுடைய செயற்பாடுகள் பற்றி முழுமையாக ஒத்துக்கொண்டு உண்மையை அறிய உதவியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதில் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் புதிய தேசத்தை கட்டமைப்பதற்கு உண்மைகளை வெளிக்கொண்டுவந்து மீளுறவை ஏற்படுத்துவதே சரியான வழியாக கணிக்கப்படுகின்றது.

gl-hilary.bmpரமிழ்ஸ் போர் ஓபாமா என்று ‘அணிவகுத்த தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற’ ஒபாமா அரசு இலங்கை அரசின் Lessons Learnt and Reconciliation Commission – பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு  என்ற ஆணைக்குழுவை வரவேற்றுள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து மே 19 வரையான நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்றதற்கான காரணங்களையும் சுழலையும் அறிவதும் அதற்கு குறிப்பிட்ட நபரோ, குழுவோ, நிறுவனமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமா என்பதை கண்டுகொள்வதம் எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதுமே இந்த ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடாக உள்ளது. இங்கு மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், பற்றி எதனையும் இலங்கை அரசு குறிப்பிட்டு இருக்கவில்லை. இது ஐ நா வின் விசாரணைக் குழுவை அமைத்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பதிலாக இந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தென்னாபிரிக்காவின் உண்மையை அறியும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவில் இருந்து இக்குழு அதன் அடிப்படை நோக்கத்திலேயே வேறுபடுவதால் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் மீளுறவை ஏற்படுத்தும் ஆணைக்குழுவின் உருவாக்கம் இலங்கை அரசு பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கின்றது என்ற ஐயப்பாட்டையே தருகின்றது.

Mahinda Rajapaksaஇலங்கை அரச படைகள் மனித உரிமைகளை மீறவில்லை, இந்த யுத்தத்தில் பொது மக்களின் ஒரு சொட்டு இரத்தமும் சிந்தவில்லை போன்ற உண்மைக்கு முற்றிலும் முரணான விடாப்பிடியான இலங்கை அரசின் கருத்துக்கள் இவ்வரசு உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை என்பதனையே காட்டுகின்றது. தவறுகளை ஏற்றுக்கொள்ளாத எவரும் அத்தவறுகளில் இருந்து தம்மைத் திருத்திக்கொள்ள முடியாது. அதற்கு இலங்கை அரசும் விதிவிலக்கல்ல. இலங்கை அரசு தென்னாபிரிக்காவின் பாடங்களைக் கற்றுக்கொண்டு உண்மையை அறியவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். இங்கு உண்மையை அறிவது தண்டனை வழங்குவதற்காக அல்ல அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு புதிய பாதையில் மீளுறவை ஏற்படுத்தி பயணிப்பதற்காகவே.

இலங்கை அரசு மனித உரிமைகள் பற்றிய உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கின்றதன் அடிப்படைக் காரணம் அது வெற்றி பெற்ற தனது இராணுவத்தை தண்டனையை நோக்கித் தள்ளிவடும் என்பதும் அதனால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற அச்சமும். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்களில் இருந்து எழுகின்ற மனித உரிமைக் கோசங்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு எப்படியாவது இலங்கை அரசைப் பழிவாங்கி விடவேண்டும் என்கின்ற ஆவல். இந்த கோல்போஸ்ட்டுகளுக்கு இடையே மனித உரிமைகள் என்கின்ற பந்து உதைபடுகின்றது.

இவற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு முரண்பட்டு, பிளவுண்டுள்ள சமூகங்களிடையே எதிர்காலத்தில் இவ்வாறான துயர் மிகு அவலங்கள் நிகழாது என்ற அச்சத்தைப் போக்கும் வகையிலும் சமூகங்களிடையே நம்பிக்கையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் வகையில் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உண்மைகளை அறியவும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவையானாலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நட்ட ஈட்டை வழங்கி அவர்களுடைய புனர்வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும். இங்கு கேட்கப்படுகின்ற நீதி தண்டனை வழங்குவதற்கான பழிவாங்குகின்ற நீதியல்ல மாறாக சமூகத்தின் மீளுருவாக்கத்திற்கான நீதி.

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

ship.jpgகாசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.  இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில். ”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.

திங்களன்று நடந்த, குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.  இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை. இருந்த போதிலும், இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளது. ஆனால், சிப்பாய்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான மரியாதையும் கிடையாது என்பதையே காட்டுவதாக அரபு லீக்கின் தலைமைச் செயலாளரான அமர் மௌசா கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஸ்டொட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இஸ்ரேலின் பல இடங்களிலும், சுமார் 600 பாலத்தீன ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆயுதங்களை வைத்திருந்ததாக இஸ்ரேலால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்களில் சில செயற்பாட்டாளர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த இராணுவத் தாக்குதல் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்று லண்டனுக்கான இஸ்ரேலிய தூதுவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

நன்றி: BBC

பலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துருக்கி கப்பல் தலைமையில் ஆறு கப்பல்கள் சைப்பிரஸிலிருந்து காஸாவுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது சைப்பிரஸ¤க்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலியப் படையினர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது கப்பல்களில் 600 பேர் இருந்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்திற்கும் உள்ளாகின. சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலிடம் கோரியுள்ளன.

கஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல்களில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தன்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த முற்றுகை தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அவசரமாக கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தை கேள்வியுற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தெதன்யாஹு கனடா மற்றும் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ விஜயத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய சகாவான அமெரிக்க சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதன் சூழ்நிலை குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் நடுவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வத்திக்கான் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளையிட்டு அதிர்ச்சியும் கவலையும் தெரிவிப்பதாக மத்திய கிழக்கு சமாதானத் தூதுவர் டோனி பிளெயர் கூறியுள்ளார். இடம்பெற்ற முற்றுகை பலவந்தத்தின் முறையற்ற பாவனை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல் ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கை’ என்று அரபு லீக் கூறியுள்ளது. 22 நாடுகளைச் சேர்ந்த அரபு லீக் அவசர கூட்டம் நடத்தி இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று அரபு லீக் தலைவர் அமீர் மூஸா கூறியுள்ளார்.

காஸாவில் ஆட்சி நடத்தும் ஹமாஸ், சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் இறங்குமாறு முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலிய உதவி தூதரக அலுவலகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிக பலாத்கரத்தை பிரயோகித்துள்ளதாக சம்பவம் பற்றி சர்வதேச மன்னிப்பு சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் மெல்கம் ஸ்மார்ஸ் கூறியுள்ளார்.முற்றுகை தொடர்பாக ‘உடனடியான நியாயமான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்றும், காஸா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இந்நிலையில் தனது படையினர் தற்பாதுகாப்புக்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களே முதலில் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.