கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முழு உண்மைகளை வெளிக் கொண்டு வராத பாடங்கள்! : வடக்கான்ஆதாம்

Douglas_Devananda_at_Islandsகற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் உரையாற்றிய எமது முன்னாள் தோழரும் இங்குள்ள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரையில் பெரும்பகுதியானவற்றுடன் ஒத்துப்போகும் அதேவேளையில் அவர் சொல்ல மறந்த கதை (சேரனின் படம் அல்ல) சிலவற்றை நாம் கூறிக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முதலாவதாக அவர் சிங்கள மக்களை விழித்து இந்த உரையை ஆற்றியுள்ளார் போலுள்ளது. ஏனெனில் அப்பாவி மக்களான உங்களைக் கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களைப் பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப் போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக பாருங்கள் தமிழ் மக்களை பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஓர் இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத் தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும் என கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் தமிழ் மக்களுக்கும் வேண்டும் என அவர் நினைக்கவில்லை அல்லது தமிழ் மக்களை விழித்து அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த சிங்கள இராணுவத்தின் ஊடாக சிங்கள மக்களைப் பார்க்காதீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். அவர் அதை கூற மறுக்கிறார். ஏன்? தமிழ் மக்கள் தெளிந்து விட்டார்கள் என கருதுகின்றாரா? அல்லது அவரைப் போல் எல்லா இனங்களையும் நேசிக்கும் தலைவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் இல்லை என நினைக்கிறாரா?

இலங்கைத் தீவிலே வாழும் அனைத்து இனங்களும் செழித்து வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கு எந்தவித ஊசலாட்டமும் இன்றி உண்மைகளை எடுத்து வைப்பதன் மூலமே பாடங்களை கற்க முடியும். அல்லது விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் புலித் தலைமை செய்ததை புலியின் முகவர்கள் தமிழ் மக்களுக்கு மறைத்து விட்டதைப் போன்றே முடியும் என்பது திண்ணம்!

“கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதேபோலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயை புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்படுத்தலாம்” என கூறுகின்றார்.

சரி! இவரது கட்சி எத்தனை கூட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் நடத்தியுள்ளது. தமிழ் மக்களின் நிலமைகளை சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்களா? (என்ன நடக்குது இங்கே ஒன்றுமே புரியவில்லை என்ற கவிதைதான் ஞாபகம் வருகின்றது) இவர் செய்ததெல்லாம் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்ற சிக்கலான ஆட்களுடன் அரங்கம் அமைத்ததுதான்.! புலிகளை வென்றதற்காக விழா எடுப்பவர்களுடன் இனப்பிரச்சனை பற்றிய விளக்கக் கூட்டம் நடத்துமாறு கோரினால் நன்றாக  இருந்திருக்கும்! மேலும் ஈபிடிபி கட்சியானது சிங்கள மக்கள் மத்தியிலும் சேவைகளைப் புரிந்து தேசிய கட்சியாக வளர வேண்டும். சிங்கள மக்கள் விரும்பியிருந்த போதும் டக்ளஸ் தன்னை ஒரு தமிழ் தலைவனாகவே கருதி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றார்.

இவ் ஆணைக்குழு முன் முழுஉண்மைகளையும் பேசுவதன் மூலமே பாடங்களை கற்றறிய முடியும் என்பதே யதார்தமாகும். ஆனால் மாண்பு மிகு மந்திரியார் சிங்கள அதிகார மட்டங்களுக்கு நோகாமல் அவர்களது கடந்த கால நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை மட்டுப்படுத்திக் கூறியும் புலித் தலமை இழைத்த குற்றங்களை உரத்துக் கூறுவதன் மூலம் (இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் புலிகளின் குற்றங்களை மிகைப்படுத்தி கூறவில்லை) யாரையோ திருப்திப்படுத்த முயற்சிக்கிறார் போலும். தொடர்ந்து வந்த அரசுகளாலும் இராணுவத்தாலும் புலிகளாலும் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காது. இவற்றைசொல்ல மறுப்பவர்ளை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது தலைவர்களாக கருத மாட்டார்கள். இவரது உரையில் தமிழ்மக்களை விட சிங்கள மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள் போன்ற கருத்தே தொக்கி நிற்கின்றது.

ஜனநாயக வழியில் முப்பது வருடங்கள் (1947-1977) போராடிய தமிழர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் இந்த சந்தர்ப்பத்தை அயல்நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டன என்பதையும் தனது இருப்பு நிலை (மந்திரி பதவி) காரணமாக தெளிவாக எடுத்து வைக்க மறந்து புலிகளுக்கெதிரான பிரசங்கத்தையே (நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.) செய்துள்ளார். இடையிடையே அரசுகளின் தவறுகளையும் அவர்களின் மனம் கோணாமல் தெளித்துள்ளார்.

சுதந்திரமடைந்த உடனேயே இந்திய வம்சாவழி குடியுரிமை பறிப்புச் சட்டம் அதைத் தொடர்ந்து தனிச்சிங்கள சட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என வேகமெடுத்த சிங்கள ஆட்சியாளர்களின் அநியாயங்கள் தரப்படுத்தலில் வந்து நின்ற போதே ஆயுதப் போராட்டத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டதென்பதை இவர் அங்கு அடித்து சொல்ல மறந்தாரா அல்லது தவிர்த்தாரா?

இணைப்பு மொழியாக இருந்த ஆங்கிலத்தை சுய பாசை திட்டத்தின் மூலம் இல்லாதொழித்து இன்று இவர் கூறும் உலகமயமாக்கலில் ஒரு பகுதியான கோல் சென்றர் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கு ஆப்பு வைத்தவர்கள் யார்? ஒரு முட்டாள் பிரபாகரனின் எதிர்காலம் பற்றிய அறிவின்மையை எடுத்துக் கூறிய மந்திரியார் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளின் மக்களின்; எதிர்காலம் பற்றிய தவறான திட்டங்களினால் தென்கிழக்காசியாவிலேயே அதிக கல்லியறிவு பெற்ற ஒரு நாட்டை சுடுகாடாக்கியது பற்றி கூற மறந்துள்ளார்.

மாறி வரும் உலகப் போக்கை புரிந்து கொண்டு உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு……. எனவும் அவர் கூறியுள்ளார். மிக உண்மையான விடயம். இதை புலிகள் புரிந்து கொள்ளாதது மடமை. ஆனால் இவர் செய்யும் அரசியலுக்கு இது மிகவும் தேவைப்படுகின்றது என்பதே எமது கருத்தாகும். நாளை நிலமை மாறி உலக ஒழுங்கு மாறினால் இவரது நிலமை என்ன?

“இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பிந்திய காலந்தொட்டு இன்றுவரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை. அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டி விடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை. இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது “

இந்த கருத்தானது தனது அரசியலுக்கு வலு சேர்க்க டக்ளஸ் கூறும் வாய் வார்த்தைகள் ஆகும். டக்ளஸ் கூறும் இக்காலத்தில் ஒரு இனக்கலவரம் என்பது தமிழ் ஈழத்திற்கான அல்லது புலிகளின் அரசியலுக்கான மைல்கல் என்பது முட்டாள் புலிகள் போல் அல்லாது மிகப் புத்திசாதுரியமான இலங்கை அரசிற்கு புரியாதது அல்ல. அதனால் தான் புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பல தடவை கொலை புரிந்து இனக்கலவரம் ஏற்பட முயற்சி செய்தார்கள் என்பது டக்ளஸிற்கும் புரியாதது அல்ல.

உண்மைகளை தெலைத்து விட்டு அல்லது தமது அரசியல் நலன் கருதி தவிர்த்து விட்டு, வசதியாக மறந்து விட்டு பாடங்களைப் படிக்க முடியாது. எனவே அழகிய இலங்கைத் தீவில் எல்லா இன மக்களும் நன்றாக வாழ பிரச்சனை எங்கே உள்ளது  என அறிய வேண்டும். லண்டனில் இலங்கை தூதரகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி தான் ஒரு பௌத்தர் என கூறுகின்றார். அது அவரது உரிமை. அது அவரது அடையாளம். இதே போல் சிறுபான்மை மக்களும் சொல்லுவதற்கு வழி விட வேண்டும்.!!

ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா

முன்னாள் மேயர் பொன் சிவபாலன் சில நினைவலைகள்!

Pon Sivabalan Memorialசெப்ரம்பர் 11 2001 ல் இடம்பெற்ற அவலம் உலக மக்கள் யாரினாலும் மறக்கப்பட முடியாத நாளாக அதனை ஆக்கியது. உலக ஊடகங்களின் கமராக்கள் உயிரோட்டமாக நேரடி ஒளிபரப்புச் செய்ய அவ்அவலம் நடந்தேறியது. ஆதற்குப் 12 ஆண்டுகளுக்கு முன் அவ்விடத்திற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் யாழ்ப்பாணத்திலும் ஒரு அவலம் நிகழ்ந்தது. ஆம் 1998 செப்ரம்பர் 11ல் இடம்பெற்ற தாக்குதலில் யாழ்ப்பாண மாநகரின் மேயர் பொன் சிவபாலன் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் அவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால ஆயதவன்முறை அழிவுகளையும் அவலங்களையுமே மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மையான அளுமைகளை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றனர். அல்லது அவாறானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறான ஆளமைகளுக்கான பாரிய வெற்றிடம் தமிழ் சமூகத்தில் இன்று தோன்றியுள்ளது.

போன் சிவபாலன் பற்றிய சில நினைவுக் குறிப்புகளையும் ஆர் எப் அஸ்ரப் அலி யினுடைய கட்டுரையும் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.

._._._._._.

Sivakumar Ponயாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை.
பொன் சிவகுமார் – பொன் சிவபாலனின் சகோதரர் தேசம் ஏற்பாடு செய்த அவருடைய 10வது நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சிறுபகுதி. – செப்ரம்பர் 14 2008

 ._._._._._.

எனது 15 ஆவது வயதில் 98 ஆம் ஆண்டில் உங்களது அண்ணனின் மரணம் நடைபெற்றது. அந்நேரத்தில் நான் யாழ்ப்பாணத்தில் மாணவனாக இருந்தேன். கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக அந்நேரத்தில் நாம் சந்தோசப்பட்டதாக ஞாபகம். ஆயினும் அன்று அச்செய்தியைப் பற்றி அப்பாவுடன் பேசும் போது, அப்பா அம்மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பாவின் கூட்டணியுடனான மென்போக்கு அவர் இதனை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அன்று என்மனதில் இருந்தது. ஆயினும் எனது வயது காரணமாக அப்பா எனக்கு விளக்கம் எதனையும் சொல்லவுமில்லை. அரசியல் பற்றிய உரையாடல்களை சூழல் நமக்கு அனுமதிக்கவும் இல்லை.

சில காலங்களின் பின்பு ‘கொலை’ களின் மோசமான முகம் எமக்கு பிடிபடத் தொடங்கிற்று. ஒரு உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் எவ்வளவு வன்மையாகக் ஆதரிக்க வேண்டும் என்பதான மனநிலையை பிரிவிகளும் கொலைகளும் எமக்கு அனுபவ பூர்வமாக உணர்த்தியது. சகலவிதமான கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகவும் ஒருவன் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை, எமது சூழல் எம்மீது கட்டமைத்துக் கொண்டிருக்கும் வலைப்பின்னல்களை மீறி வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. கொலைகளைக் கொண்டாடும் சமூகத்தில் இருந்து- அதன் அங்கமாக இருந்தவாறு அதனை எதிர்ப்பதற்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. உங்களது தலைமுறை அல்ல நமது தலைமுறை. ‘கலவரத்தில்’ பிறந்து போராட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொலைகளுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்கு நாம் அரசியல் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இன்றைய இளைய சமூகச்சூழலை வைத்துச் சொல்கின்றேன். இச்சூழலில் அம்மனநிலையை வளர்த்துக் கொள்வதின் கடினம் உங்களில் யாருக்கும் புரிபடாதது. இது தோடர்பாக தமிழ்சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள்ளது.

பொன். சிவகுமார் அவர்களுக்குஇ நான் சிறுவயதில் உங்களது அண்ணனது இறப்பில் சந்தோசப்பட்டேன் என்ற குற்றவுணர்வுடன் தான் இதை எழுதத் தொடங்கினேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். மன்னிப்பீர்கள் என நம்புகின்றேன்.
சேகர் பொன் சிவகுமாரின் பிரிவுத் துயர் தொடர்பாக 2008ல் எழுதப்பட்ட குறிப்பு

 ._._._._._.

பொன்.சிவபாலன் யாழ் மேயராக இருந்து புலிகளின் குண்டுக்குப் பலியானவர். எனது மிக நெருங்கிய நண்பர், தமிழுணர்வு நிறைந்தவர், எழுபதின் கடைசிகளில் என் நண்பரானவர், அப்போ அவர் சட்டக்கல்லூரி மாணவர். இன்றும் என் மனதை விட்டகலாத ஒரு நிகழ்ச்சி அவரும் நானும் வேறு நண்பர்களும் யாழ் சிறீதர் தியேட்டரில் இரண்டாவது ஷோ படம் பார்த்து விட்டு பலாலி வீதியால் வந்து கொண்டிருக்கிறோம் ஆரியகுளம் சந்தியில் இரண்டு சிங்களப் பொலிசார் லைற் இல்லாமல் போவோருக்கு இருட்டில் நின்று வெளுக்கிறார்கள். எமக்கு முன்னால் போனோர் சைக்கிள்களை போட்டுவிட்டு சிதறி ஓடுகிறார்கள். சிவபாலன் திடீரென தன் சைக்கிளை போட்டு விட்டு சிங்களத்தால் ஏதோ கத்தியபடி பொலிசை நோக்கி நடக்க பயந்து ஓடியவர்களும் இப்போ பொலிசை நோக்கி திரும்பி வர பொலிசார் பயந்து ஏதோ மென்மையாக சொன்னபடி தமது சைக்கிளில் அந்த இடத்தை விட்டு மாறிவிட்டார்கள். இது நடந்தது 78ல் என்று நினைக்கிறேன். பின் எண்பதின் தொடக்கத்தில் நான் நாட்டை விட்டு வெளியேற சில வருடங்களில் அவருடனான தொடர்பும் அற்றுவிட்டது. பின் அவர் மேயரானது அதைத் தொடர்ந்து அவரின் மரணம் எல்லாம் செய்திகள் மூலம் அறிந்ததுதான். பின் எமது நண்பர் ஒருவருடன் பேசும் போது சொன்னார் தான் சிவபாலன் மேயராக இருக்கும் போது அவருடன் கதைத்ததாகவும் அவர் தான் ஏற்றிருக்கும் பதவியின் ஆபத்தை அறிந்திருந்ததாகவும் ஆனாலும் எல்லோரும் பயந்து ஒதுங்கினால் யார் மக்களின் தேவைகளை கவனிப்பதென்று கேட்டதாகவும் சொன்னார். தேசத்தின் ஊடாக இதை எழுதியதின் மூலம் என் இனிய நண்பன் சிவபாலனுக்கு அஞ்சலி செலுத்தியதான ஒரு மனநிறைவு.
அக்கு (தேசம்நெற் கருத்தாளர்) பெப்ரவரி 8 2009

 ._._._._._.

போல் சத்தியநேசன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள், புத்திஜீவிகள், சமூகவிரும்பிகள் என்று தமிழினத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈகம் செய்த அனைவரும் மண்ணின் மைந்தர்களாக கௌரவிக்கப்பட வேண்டும். இன்றையதினம் மேயர் சிவபாலன் அவர்களை நான் மண்ணின் மைந்தராக கெளரவிக்கின்றேன். இவர்போன்று படுகொலை செய்யப்பட்ட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும்
கவன்சிலர் போல் சத்தியநேசன் (செப்ரம்பர் 14 2008)

 ._._._._._.

I know him around 4 years when I lived in Borrella,Colombo.He is a gentlemen,always give respect for every one.As good friend of my father,he always advice me so many things.I really miss him,when I hear that he was killed in jaffna,I was in a shock for around a week.Still I got a foto we took together with Mr.Neelan Thiruchelvam and Sivapalan Anna.He will be rememberd all in my life.Om shanthi,Shanthi.
M.Muhunthan Sep 12, 2008

._._._._._.

யாழ்.மாநகர முன்னாள் மேயர் பொன் சிவபாலன் – மகோன்னதமான ஒரு அரசியல்வாதி : ஆர். எப். அஷ்ரப் அலீ 

யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு காலத்தில் இலங்கையின் ஏராளமான புத்திஜீவிகளையும், தலைசிறந்த அரசியல்வாதிகளையும் கொண்டிருந்தது. இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் தமது சுயமுயற்சியில் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதற்கான நல்லுதாரணமாக யாழ்ப்பாணத்தின் படித்த சமூகம் ஒரு காலத்தில் எடுத்துக் காட்டப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய பெரும்பாலான அரசியல் வாதிகளும், தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்த புத்திஜீவிகளில் பெரும்பாலானவர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனாலும் 1978ம் ஆண்டு தொடக்கம் அவ்வாறான அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததன் காரணமாகவே தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும்இ நிர்க்கதியான அரசியல் நிலைமைக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண மக்கள் அண்மைக்காலமாக இழந்த அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதன் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர் பொன் சிவபாலன் என்றால் அது மிகையல்ல. அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவத் தொடங்கிய 1983ம் ஆண்டு தொடக்கம் தமிழ் அரசியற் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுத் தப்பியோட வேண்டிய அளவுக்கு உயிரச்சுறுத்தலான சூழ்நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான காலகட்டத்திலும் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாது அரசியலில் மிகவும் துடிப்பாக ஈடுபட்ட ஒரு சிலரில் மறைந்த திரு. பொன் சிவபாலன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரது குடும்ப அங்கத்தவர்களிலும் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். வசதியாக வாழலாம் என்ற ஆசையைக் காட்டி அவரையும் வெளிநாட்டுக்கு அழைத்துக் கொள்வதற்கு அவர்கள் பகீரதப் பிரயத்தனப்பட்டனர். ஆனாலும் தான் பிறந்த மண்ணுக்கும், அங்குள்ள மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற தணியாத தாகம் காரணமாக, மக்கள் சேவையைப் புனிதமாக அவர் கருதியதன் விளைவாக வெளிநாடு சென்று தான் மட்டும் வசதியாக வாழும் எண்ணம் அவருக்கு கடைசி வரையிலும் வரவேயில்லை. அவ்வாறான ஆலோசனைகள், அழைப்புகள் அனைத்தையும் அவர் அடியோடு நிராகரித்தார். அவ்வாறான அவரது அரசியல் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் காரணமாகவே தான் நேசித்த யாழ்ப்பாண மக்களின் அரசியல் பிரதிநிதியாக, அந்த மக்களின் மேயராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் அவரைத் தேடி வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிக முக்கியமான காலகட்டமொன்றில்தான் அவர் யாழ்ப்பாண மேயராகப் பதவியேற்றார். ஆனாலும் யாழ்ப்பாண மக்களின் துரதிருஷ்டம் மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே தான் நேசித்த, தன்னை நேசித்த மக்களையும், மண்ணையும் விட்டு அவரைப் பிரித்து விட்டது.

யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பிரதேசத்தில் சித்தங்கேணியில் பிறந்த பொன் சிவபாலன், வட்டுக்கோட்டை விக்டோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவராவார்.தனது இளம் வயது தொடக்கம் தமிழ், இலக்கியம், கவிதைத்துறை, மற்றும் பெர்துமேடைகளில் பேசுதல் போன்ற விடயங்களில் பொன் சிவபாலன் அவர்களுக்கு அலாதியான விருப்பமும், திறமையும் இருந்தது. சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியிலும் அதன் தமிழ் இலக்கிய மன்றத்தில் பணியாற்றியதோடு, பல விவாதப் போட்டிகளிலும் பங்கெடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார். 1980ம் ஆண்டு சட்டக்கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து சட்டத்தரணியாக வெளியாகிய அவர், யாழ்ப்பாணத்தில் தனது சட்டத் தொழிலை மேற்கொண்டார். அக்காலத்தில் சட்டத்தரணிகளாக வெளியான பலரும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் சட்டத்தரணியாக தொழிற்படுவதன் மூலம் பெரும் பணத்தை உழைத்துக் கொள்வதில் குறியாக இருக்க, பொன் சிவபாலனோ தனது மண்ணில் வாழும் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டிலும் சேவையாற்றும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலேயே சட்டத்தரணியாக தொழிற்பட்டார். அதிலும் குற்றவியல் வழக்கறிஞர் என்றால அன்று மட்டுமல்ல இன்றும் கூட குறுகிய காலத்துக்குள்ளாகவே பெரும் வருமானமீட்டிக் கொள்ள முடியும் என்பது பகிரங்கமாகத் தெரிந்த விடயமாகும். குற்றவியல் வழக்கறிஞராக இருந்த போதும் தான் எடுத்துக் கொண்ட விடயங்களில் கருத்துணர்வு, நாணயம் பேணல், கருணையுள்ளம், சேவை மனப்பாங்கு என்பன காரணமாக பொன் சிவபாலன் குறுகிய காலத்துக்குள்ளாகவே புகழ் பெறத் தொடங்கினார். மக்கள் மத்தியில் அனைவராலும் மதிக்கப்பட்டார்.

1983ம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய அசாதாரணமாக சூழல் காரணமாக அப்பிரதேசத்தின் ஏனைய மக்களைப் போலவே பொன் சிவபாலனும் இடம்பெயர்வு அவலங்களை எதிர்கொண்டார். அதன் காரணமாக அவரது தொழிலும் வருமானமும் பாதிக்கப்பட்டு தீவிரமான பொருளாதார நெருக்கடிகளால் பெரும் அல்லலுற்றார். அக்காலகட்டத்தில் கொழும்பு வீட்டுச் சொந்தக்காரர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வருவோருக்கு வாடகைக்கு வீடுகளை வழங்கப் பின்னடித்த காலகட்டமாக இருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் போதுமான வருமானமின்றிய காரணத்தால் அடிக்கடி இடம் மாறி பல வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய அவலத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

ஒரு கட்டத்தில் தொடர்ந்தும் கொழும்பில் வசிக்கப் பிடிக்காதவராக அவர் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு இருந்தபடி தனது சட்டத்தொழிலை மீண்டும் மேற்கொள்வது அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. இவ்வாறாக எத்துணை துன்பங்கள், அல்லல்களுக்கு மத்தியிலும் அவர் தான் சார்ந்திருந்த கட்சி மூலமான தனது அரசியற் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதில் பின்னிற்கவில்லை. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணத்தில் தொய்வேற்படவில்லை. அரசியல் வழிமுறை குறித்த அவரது நம்பிக்கை, எதிர்பார்ப்பு, விசுவாசம் என்பன அத்துணை துன்பங்களின் மத்தியிலும் தளராதிருந்தது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளை நிரந்தரமாகத் தணிப்பதாயின், சமாதானக் காற்றை சுவாசிப்பதாயின் அரசியல் தீர்வொன்றின் ஊடாக மட்டுமே அது முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றினார்.

பொன் சிவபாலன் தனது அரசியல் ஆசானாக மகத்தான மக்கள் தலைவன் மறைந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதன் காரணமாக சமஷ்டிக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பொன் சிவபாலன், அமிர்தலிங்கத்தின் அரசியற் பணிகளில் நெருக்கமாகச் செயற்பட்டதுடன், திரு. அமிர்தலிங்கத்துக்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய, தான் பிறந்த வட்டுக்கோட்டைத் தொகுதியில் அயராத அரசியற் பணிகளில் ஈடுபட்டார். (சமஷ்டிக் கட்சிதான் பிற்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றம் பெற்றது.) அவ்வாறாக அமிர்தலிங்கத்தின் அரசியற் கொள்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்த பொன் சிவபாலன், அமிர்தலிங்கம் அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான பின்னர் அமிர்தலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் தவிசாளராகவும் செயற்பட்டிருந்தார். தான் நேசித்த பெருந்தலைவரின் பேர் என்றும் நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லுரியில் சிறந்த விவாத ஆற்றலுக்கு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஞாபகார்த்தமாக ஒரு தங்கப் பதக்கத்தை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.

இவ்வாறான அர்ப்பணிப்பான செயற்பாடுகளைப் பாராட்டும் வண்ணமாக அவர் சார்ந்திருந்த கட்சியின் சட்டச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கட்சி விடயங்களில் காட்டிய அர்ப்பணிப்பு காரணமாக தனது சட்டத்தொழிலின் மூலமாகக் கிடைத்த வருமானத்தையும் தியாகம் செய்தவர். கட்சியின் எண்ணற்ற அலுவல்களை திறமையாக மேற்கொண்டு வந்த அதே நேரம், எவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் சமகாலச் சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளில் கலந்து கொள்ள அவர் ஒருபோதும் தவறியதேயில்லை.

அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அபிவிருத்திகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். ஜனநாயக விழுமியங்கள்இ மனித உரிமைகள் குறித்து அவருக்குள் ஆழமான அர்ப்பணிப்புணர்வு காணப்பட்டது.கட்சியினால் ஒப்படைக்கப்படும் எந்தப் பொறுப்புகளையும், அதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்திருந்தாலும் எதுவித தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டார். கட்சியின் அரசியல் விசுவாசத்தின் அடிப்படை அம்சங்கள் அவை என்பதாகவே அவர் கருதினார்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் பொன் சிவபாலன் தவறாது ஆர்வத்துடன் கலந்து கொண்டார். அவரது கருத்துணர்வு, தீவிர அரசியல் அர்ப்பணிப்பு, தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக வழிமுறையினூடாகப் பெற்றெடுப்பதில் சளைக்காத ஆர்வம் என்பன கண்டு ஜனாதிபதி பிரேமதாச கூட ஒரு தடவை பொன் சிவபாலனை மனம் விட்டுப் பாராட்டினாராம். சர்வ கட்சி மகாநாட்டில் மாத்திரமன்றி ஏனைய கட்சிகளோடு இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏராளமான கலந்துரையாடல்களிலும் அவரது பங்களிப்பை நல்கியிருந்தார். இவ்வாறாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொள்வதற்காக தன்னாலான வரையில் அயராது உழைத்தார்.

லண்டனில் இருக்கும் சிறுபான்மையோர் உரிமைகள் குழு விரைவிலேயே சிவபாலனின் திறமைகள், மற்றும் சமத்துவத்துக்கான அர்ப்பணிப்பு என்பவற்றை இனம் கண்டது. அதன் காரணமாக அக்குழுவின் தலைவர் அலன் பிலிப்பிடமிருந்து ஜெனீவாவில் இடம்பெற்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான மகாநாடொன்றில் கலந்து கொள்ளுமாறு சிவபாலனுக்கு அழைப்புக் கிடைத்தது. குறித்த மகாநாடு 1996ம் ஆண்டளவில் நடைபெற்றதாக நம்புகின்றேன். ஆர்வத்தோடும், கருத்துணர்வுடனும் அதில் பங்கெடுத்துக் கொண்ட பொன் சிவபாலன், குறித்த மகாநாட்டின் மூலமாக சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நியமங்களையும், உலகெங்கும் உள்ள சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசாலமான தெளிவைப் பெற்றுக்கொண்டார்.

மகாநாட்டில் பங்கெடுத்த நாட்களில் தான் சந்தித்த மத்திய ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடன் நேசமிகு கலந்துரையாடல்கள் மூலமாக அவர்களின் மதிப்புக்கும் நட்புணர்வுக்கும் பாத்திரமானார்.
பொன் சிவபாலனின் ஐரோப்பா விஜயங்களின் போது அங்குள்ள நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வதிவிட அனுமதிக்காக தன்னாலான உதவிகளைச் செய்து கொடுத்தார். அறிந்தவர் அறியாதவர் என்று அவர் அன்று செய்த உதவிகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நம்மவர் பலர் வதிவிட உரிமை பெற்று இன்றும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கொள்கைக்காக தனது வருமானத்தையே உதறித்தள்ளி விட்டு, பொருளாதார நெருக்கடிகளில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தமை, இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி என்பன காரணமாக பொன் சிவபாலனில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்கள் பலர், அவரது ஐரோப்பிய விஜயங்களின் போது அவரை அங்கேயே தங்கி விட வற்புறுத்திய போதும் அவர் மசியவில்லை. கொண்ட கொள்கைக்காகவும், தான் பிறந்த மண்ணில் அல்லல்படும் மக்களுக்காகவும், சேவையாற்றும் தனது இலட்சியத்தை விட்டு, மரணத்துக்கு அஞ்சி ஓடியொளிக்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

அதற்கு மேலதிகமாக சர்வதேச ரிதியாக நடைபெற்ற மனித உரிமைகள் மகாநாடுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் ஆயுதக் கலாசாரம் மூலமான மனித உரிமைகள் தொடர்பிலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதில் பாரிய பங்காற்றியிருந்தார்.அதற்கு மேலதிகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் விடயத்தில் அந்தந்த நாடுகள் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வந்தவர்.

அதன் காரணமாகவே வடக்கில் முக்கியப் பொறுப்புகளிலிருந்தவர்கள் ஆயுததாரிகளால் தொடர்ந்தும் வரிசையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்இ பதவிகளைப் பொறுப்பெடுத்து மக்களுக்குச் சேவையாற்ற யாருமே முன்வராத அச்சுறுத்தலான சூழ்நிலையின் மத்தியிலும் யாழ். மேயர் பதவியைப் பொறுப்பெடுத்து துணிச்சலுடன் மக்களுக்குச் சேவையாற்றினார். தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்த போதும் அவர் தான் எடுத்த காரியத்தில் ஒரு போதும் பின்னிற்கவில்லை. அதே போல ஆயுததாரிகளால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று தெரிந்திருந்த போதிலும்இ அந்த ஆயுததாரிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ ஏதாவது தேவையின் நிமித்தம் தன்னை நாடி வந்த போதெல்லாம் மறுக்காது அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முயற்சி செய்தார்.

தனிப்பட்ட ரிதியில் பொன் சிவபாலன் பழகுவற்கு மிகவும் இனிமையான மனிதர். பரிவும் கருணை உள்ளமும் கொண்டவர். கலாநிதி நீலன் திருச்செல்வம் போலவே அரசியலிலும், சட்டத்துறையிலும் ஆர்வம் கொண்டிருந்த பொன் சிவபாலன், அவரைப் போலவே ஆங்கிலத்திலும் சிறந்த புலமையைக் கொண்டிருந்தார். நல்ல ஆளுமையும், மனித நேயமும் கொண்டிருந்த அவரிடம் ஒருபோதும் தீய நோக்கம், பொறாமை மற்றும் வஞ்சக குணங்கள் காணப்படவில்லை. விசுவாசமும், நேர்மையும் கொண்ட எளிமையான மானிட நேயன் அவர். தன் குடும்பத்தினர் மீது அளவற்ற பாசமும், தமிழ் மக்கள் மீது எண்ணற்ற நேசமும் கொண்டிருந்தவர். உண்மையாகவே மக்களை நேசித்த, யதார்த்தமானதும் ஆழமானதுமான அரசியல் பார்வை மட்டுமன்றி, நடைமுறைச் செயற்பாட்டாளராகவும் மக்கள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர். அதன் காரணமாக இன்றளவும் இங்குள்ள மக்களால் மட்டுமன்றி புலம் பெயர்ந்து வாழும் மக்களாலும் இடைவிடாது நினைவு கூரப்படுகின்றவர்.அரசியல் வாதிகள் பலரிடம் காண முடியாத விலைபோகாத பண்பு பொன் சிவபாலனிடம் நிறையவே காணப்பட்டது. நேர்மைக்கும் மேலான நெஞ்சுரம் காணப்பட்டது.

1995ம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தன் பின்வந்த காலப்பகுதியில் அங்கு உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்தியிருந்தது. அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாண மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, திருமதி சரோஜினி யோகேஸ்வரனை மாநகர மேயராக நியமித்தது. ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல் ரிதியாகப் பெற்றுக் கொள்வதில் நாட்டமில்லாத ஒரு சிலரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலாகவும் அது கொள்ளப்பட்டது. அதன் காரணமாக திருமதி சரோஜினியின் மறைவை அடுத்து யாழ். மாநகர மேயர் பதவியைப் பொறுப்பெடுப்பதற்கு எவரும் முன்வராத நிலைமையொன்று காணப்பட்டது. அவ்வாறான அச்சுறுத்தலான சூழ்நிலையின் மத்தியிலும் பொன் சிவபாலன் துணிச்சலுடன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வேண்டும் என்ற ஆர்வம், அதற்கான துடிப்பு அவரிடம் காணப்பட்டது. 1998ம் ஆண்டின் ஜுன் மாதம் 29ம் திகதி பொன் சிவபாலன் யாழ். மாநகர மேயராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவருக்கான பதவிப் பிரமாணத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய பிரதித் தலைவர் ஆனந்த சங்கரி செய்து வைத்திருந்தார். அழிந்து போயிருந்த யாழ்ப்பாண மாநகரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஏனைய மாநகரங்களின் முதல்வர்கள், அமைச்சர்மார், ஜனாதிபதி, மற்றும் பிரித்தானியத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்து நிலைமைகளை எடுத்து விளக்கினார். யாழ் மாநகரின் பாதைகளைச் செப்பனிடும் நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கையிலேயே, 1998ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 11ம் திகதி அவரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மானிடநேய மிக்க அரசியல்வாதியின் மரணமும் மக்கள் நலன் தொடர்பான நடவடிக்கையொன்றின் போதே நிகழ்ந்தது. அந்த வகையில் பொன் சிவபாலன் தனது கடைசி மூச்சு வரை மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர். மிதவாத அரசியலில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த பொன் சிவபாலன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்து தனது சேவைகளைத் தொடர்ந்திருப்பாராக இருந்தால், யாழ்ப்பாணத்தில் முற்று முழுதாக ஜனநாயக சூழல் கட்டியெழுப்பப்படுவதற்கான சூழ்நிலைமை படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டிருக்கும்.

அவரது மறைவு குறித்து அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் விடுத்திருந்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது போன்று, மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதிகளின் இத்தயை உயிரிழப்புகளால் யாருக்கும் நன்மை கிட்டப் போவதில்லை. சகோதரப் படுகொலைகள் காரணமாக தமிழ் சமூகம் இழந்தது போதும். வன்செயல்கள் மூலமாக எதையும் சாதிக்க முடியாது என்பதை இனியாவது உணர்வோம். அதன் மூலமாக எம்மைப் பிடித்தாட்டும் அவலங்களையும், அராஜகங்களையும் தோல்வியுறச் செய்வதற்கு அணிதிரள்வோம்.
‘‘அபூநுஹா” – ஆர். எப். அஷ்ரப் அலீ (செப்ரம்பர் 11 2008)

செப்டெம்பர் 11(9/11) றும் பார்க் 51(Park 51) றும்: எஸ் ஆர் எம் நிஸ்தார்

Is_America_Islamophobicபயங்கரவாதம், இஸ்லாம், முஸ்லீம், குர்-ஆன்(Qur-‘an) என்ற வார்த்தைகள் மிக அதிகமாக ஊடகங்களில் பாவிக்கப்படுவது 2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்திலேயே. இப்போதெல்லாம் பயங்கரவாதத்துடன் இஸ்லாம் பிணைத்து பேசப்பட்டாலும் மனித மேம்பாட்டுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு இதே ஊடகங்கள் தன் பங்களிப்பை செய்வதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக ” Intellectually most influenced text in the world- The Qur-‘an” என்ற விவரணப்படத்தை சொல்லலாம்.

11ம் திகதி 9ம் மாதம் 2001ஆண்டு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், 21ம் நூற்றாண்டின் உலக (அரசியல்) ஒழுங்கை திசை திருப்பிய ஒரு நிகழ்வு நடந்த ஆண்டு இது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க நீவ் யோர்க் (New York) நகரத்தின் உலக வர்த்தக மையம் (World Trade Centre) என்ற பெயர் கொண்ட இரட்டைக் கோபுரம் வெறுமனே இரண்டு உயர்ந்த கட்டிடங்களல்ல. அது உலக முதலாளித்துவதின் ஒரு முக்கிய குறியீடு. மேற்கின் வாழ்வியல் விழுமியத்தின் மையப்புள்ளியை சுட்டி நிற்கும் அடையாலம். அமெரிக்காவின் கெளரவ சின்னம். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோபுரங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அல்-கயிடா(Al-Qaeda- தளம்) வினால் தாக்கியழிக்கப்பட்ட சம்பவமே இந்த உலக ஒழுங்கை திசை திருப்பிய நிகழ்வு. மிக மிடுக்காக நிமிர்ந்து நின்ற கோபுரங்கள் தாக்கியழிக்கப்பட்ட வேளையிலே அங்கே பலியிடப்பட்டது சுமார் 3000 அப்பாவி உயிர்களுமே. கோபுரங்கள் இருந்த அடையாலமே இல்லாதவாறு அந்த இடம் “வெறுமை நிலம்” (Ground Zero) என்ற பெயரையும் இன்று பெற்றுள்ளது.

குறிப்பாக இஸ்லாமியரிடையே இந்த நிகழ்வு தொடர்பாக முக்கிய இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
1) இது இஸ்லாமிய கொள்கை, கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது, ஆகவே இது அல்-கயிடாவினால் செய்யப்படவில்லை, இது அமெரிக்க, சியோனிஸ கூட்டு (நாடகம்) நடவடிக்கை.
2) ஆம், இது அல்-கயிடாவினால் தான் நிகழ்த்தப்பட்டது, அப்படி அழித்ததில் தப்பே இல்லை, ஏனெனில் அமெரிக்கர், அங்கு இருந்து கொண்டே லிபியாவின் மருந்து தொழிற்சாலைக்கு ரொக்கட் தாக்குதல் செய்ய முடியுமானால். ஏன் அவர்களுக்குள் புகுந்து நாம் தாக்க முடியாது. ஒஸாமா பின்லாடன் ஏற்கவே மேற்கு மீது, குறிப்பாக அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்து விட்டார், எனவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களே கவனம் செலுத்த வேண்டுமே அல்லாமல் நாம்மில்லை. இது புது விதமான யுத்த முறை. எமது போராட்ட வடிவத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். இது இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை கேள்விகுற்படுத்வில்லை. அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியேறுவதுடன் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பொம்மை ஆட்சியாளருக்கு மேற்கின், குறிப்பாக அமெரிக்க ஆதரவும், நிதியும் நிறுத்தப்பட்டால் நாம் ஏன் அமெரிக்காவை தாக்க வேண்டும். என்ற வாதங்களே அவை.

அல்-கயிடாவின் விமான தாக்குதலுக்கு முன்பும் இந்த இரட்டை கோபுரம், அல்-கயிடாவினால் தாக்குதலுக்கு உள்ளானதாலும், பின்னைய தாக்குதலுக்கு அவர்கள் உரிமை கொண்டாடியதாலும், மேற்குலகிற்கு அது தொடர்ச்சியாக செய்து வந்த எச்சரிக்கைகளையும் சேர்த்து பார்க்கும் போது, இத் தாக்குதுலுக்கான பொறுப்பு அல்- கயிடா வினுடையதே. அத்தோடு அவர்கள் இஸ்லாமிய எல்லையை மீற மாட்டர்கள் என்பதற்கோ அல்லது எப்போதும் அவர்கள் எல்லை மீறி செயல்படவில்லை என்பதற்கோ ஆதாரங்களும் இல்லை.

அதேநேரம் அமெரிக்காவும், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் இஸ்லாத்துக் கெதிரான போக்கை கைக்கொள்ளாதவர் என்றோ அல்லது திட்டமிட்ட சதிகளை எப்போதும் செய்யவில்லை என்று கொள்ளும் அளவுக்கோ அவர்கள் நிரபராதிகளும் அல்ல. ஆகவே இத்தாக்குதலுக்கும் அவர்கள் மேல் பலியை போட்டு அல்-கயிடாவை நிரபராதியாக்கும் முயற்சியும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதுடன் அப்படியான செயல் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பிரதிகூலமாக அமையும் என்பதனையும் நாம் மறத்தலாகாது. பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதமே. தற்காப்பு போரிலும் பயங்கரம்வாதம் பற்றி எச்சரிக்கும் குர்-ஆன் இந்த இரட்டை கோபுர தாக்குதலை வித்தியாசமாக மொழி பெயர்க்கின்றது என்பது ஒரு முட்டாள்தனமான விவாதமாகும்.

இது இப்படியிருக்க இந்த 9/11ன் இன்றைய விசேடம் தொடர்பானதுடன் அது நிகழ்த்தப்பட்ட இடம் சம்பந்தமான புதிய திருப்புமுனையே இக் கட்டுரையின் சாரம்.

எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி 9ம் மாதம் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப்பட்ட 9வது வருடம், அன்றைய தினம் (இந்த வருடத்தின் தற்செயலான சம்பவம்) உலக முஸ்லீம்களின் ஈகை திருநாளின் ( Eid ul- fithr, ஈதுல்- பித்ர்) இரண்டாம் நாளும் ஒன்றா இணைவதாகும். அன்று அமெரிக்காவின் ப்ளொரிடா(Florida) மானிலத்தில் Gainesville என்ற இடத்தில் டொரி ஜொன்ஸ்(Terry Jones) என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரி குர்-ஆனின் பிரதிகளை இஸ்லாத்துக்கு எதிரான ஆர்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து “தீயிட்டு எரிக்க” திட்டம் தீட்டியுள்ளார்.  உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

இவரின் தேவலயதில் மொத்தம் 50 உறுப்பினரே. அதிலும் 30 பேரே நிறந்தரமகாக கோவிலுகுச் செல்வோர். அவரின் அடியாளர்களில் எத்தனை பேர் இந்த “எரிப்பார்பாட்டத்தில்” கலந்து கொள்வர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த “குர்-ஆன்” எரிப்பு தீர்மானத்திற்கான அவரின் நியாயம் குர்-ஆன் என்பது ஒரு புனித நூல் அல்ல என்பதுடன், இறைத் தூதர் ஏசு( peace be upon him) இன்று இருந்திருந்தால் அவரும் அதை எரித்திருப்பார் என்பதாகும். இதுவரை 200 குர்-ஆன் பிரதிகளை சேர்த்து வைத்துள்ள இந்த பாதிரி கடவுளால் எந்த இடையூரும் வராவிட்டால் இந்த முயற்சி தங்கு தடையின்றி தொடரும் என்கிறார். இந்த முயற்சியில் எவ்வளவு தூரம் இவர் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கப்பால், இந்த திட்டமிட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கிடையே மாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக பிற சமயத்தவர், சமயம் சாராதோர் என்ற பேதமின்றி எதிர்ப்பலைகள் கிழம்பிவிட்டன. இதற்கு எதிரான கையெழுத்து வேட்டை பல இடங்களில் முடக்கி விடப்பட்டுள்ள அதே நேரத்தில், ஆர்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என்று எதிர் நடவடிக்கைகளும் ஆரம்பித்து விட்டன. மேற்குலக வானொலிகளின் எதிர்ப்பு, வெள்ளை மாளிகையின் உத்தியோக எதிர்ப்பறிக்கை என்று இது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகவே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. மேலும் பல எதிர் நடவடிக்கைகள் அந்த தினத்துக்காக திட்டமிடப்பட்டுள்ளன.

சரி அந்த பாதிரி எரித்தால் என்ன அந்த எரிப்பு முயற்சியுடன் சேர்ந்து இஸ்லாம் அழிந்து விடவா போகின்றது? முஸ்லிம்கள் அமைதியாக தத்தமது கருமங்களில் கவனம் செலுத்த வேண்டாமோ? ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்ப நாளில் இருந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அதே வேகத்தில் இஸ்லாமும் வளர்ந்து கொண்டுதானே செல்கிறது. இன்று உலகத்தில் ஒப்பிட்டு ரீதியில் கூடுதலாக மக்கள் இணைவது இஸ்லாத்திலேயே என்பதுடன் அதிகமான கிறிஸ்தவ புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை ஏற்பதும் கண்கூடு. எனவே குர்-ஆன் எரிப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாத்தை பாதிக்காது என்பதுடன் அந்த பாதிரி அந்த எரிப்புக்கப்பால் எதையும் சாதிக்கப் போவதுமில்லை. ஒரு வேளை தனது கோயிலின் உறுப்பினர் எண்ணிக்கையையும் இச்செயல் குறைக்கலாம்.

இந்த உத்தேச குர்-ஆன் எரிப்பு நாளில் சுமார் 25 தேவாலங்களும்(Churches), யூத வழிபாட்டுத் தளங்க( Synagogues)ளும் தத்தமது வழிபாட்டு தளங்களில் குர்-ஆனை தங்களின் பக்த கோடிகளுக்காக வாசிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஒரு மனிதனின் துவேச முயற்சிக்கு எதிராக 25 பேரின் நற்பு முயற்சி. ஆகவே முஸ்லிம்கள் ஆர்பரிக்கத் தேவையில்லை. அத்துடன் இது அமெரிகாவில் புதிய விடயமும் அல்ல. அமெரிக்க அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை வழியுறுத்திவரும் போதும், அமெரிக்கரின் எல்லையற்ற சுதந்திர உணர்வென்பது சில வேளைகளில் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதை மறுப்பதற்கில்லை. 1866 ம் ஆண்டு இதே அமெரிக்கர்(கிறிஸ்தவரும் உற்பட) ஆபிரிக்க- அமெரிக்கரின் தேவாலயங்களை தீயிட்ட சம்பவங்களும், 1938ல் பாதிரி சார்ல்ஸ் கெளகின்(Fat. Charles Coughlin) யூதர்களுக்கு எதிரானதும் ஜெர்மனிய நாஷிகளை ஆதரித்தும் நிகழ்த்திய பேச்சுக்கள் என்று பல்வேறு சம்பவங்கள், பல்வேறு கால கட்டங்களில் நடந்தேறியுள்ளன. உலகெங்கும் நடந்தேறுகிறது. இனியும் நடக்கும். அப்படியான சம்பங்களின் புது வடிவங்களில் ஒன்றே பாப்பரசர் 16ம் பெணடிக்காக அறியப்பட்ட முன்னை நாள் நாசிகளின் இளைஞர் படையில் இருந்த ஜேர்மனியரான ராட்சிங்கரின் இஸ்லாம் என்ற மதம் “கொடியது” என்ற அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பு. அதேபோல் இத்தகைய சேறடிப்பு சம்பவத்தின் புதிய முகமே அமெரிக்கர் அவர்களின் ஜனாதிபதியின் சமயம் தொடர்பான சந்தேகத்தை கிளப்பி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்கும் முயற்சி. இந்த அடிப்படையில் இப்போது நான்கில் ஒரு அமெரிக்கர் அதிபர் பரக் ஒபாமா(Barek Obama)வை ஒரு “இரகசிய முஸ்லிம்” மாகவே பார்கின்றார்களாம். ஆக இவை எல்லாம் ஒருவகை காரணமற்ற இஸ்லாமிய பீதியே(Islamophobia) என்று ஒதுக்கிவிடுவதில் தவறில்லை.

இன்று உலக சனத்தொகையில் சுமார்1.3 பில்லியன்(Billion) முஸ்லிம்கள். CIA யின் கணக்குபடி உலகலாவிய ரீதியில் செயல்படும் அல்- கயிடா தீவிரவாதிகளின் எண்ணிக்கை 14,000. இதை % பார்த்தால் எத்தனை பூஜியங்களுக்கு பினால் ஒரு இலக்கம் வரும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். சரி இவர்களுடன் கூடவே நாடுகள் தோரும் காணப்படும், நம் நாட்டில் காணப்பட்ட முன்னை நாள்(?) ஜிஹாத் அமைப்பும் உற்பட, முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களையும் சேர்த்து பார்க்கும் போது எத்தனை பேர் தீவிரவாத போக்குடையோர் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர் என்றால் முன்னால் பூஜியங்கள் நிறைந்த ஒரு எண் தான் மீண்டும் பதிலாக வரும்.

ஆகவே நியாய சிந்தையுடைய முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் வைக்கப்படும் இத்தகைய பொறிகளுக்குள் அகப்பட்டுக்கு கொள்லாமல் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த பொறிகளில் ஒன்றே இலங்கையில் முஸ்லிம்களுக் எதிரான அடக்குமுறை இலங்கை அரசாங்கதால் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று காவப்படும் செய்தி. இலங்கை என்பது எம் நாடு அதில் எமக்கு உரிமையுண்டு என்று உரிமையுடன் செயல்படும் போது காரணமற்ற பயங்களுக்குள் நாமும் புதைந்து விட வேண்டியதில்லை.

இப்படி இந்த குர்-ஆன் எரிப்பு என்ற விடயத்துடன் தொடர்புபட்டதே Park 51 என்ற ஒரு இடமும், அந்த இடம் தொடர்பான உரிமை பிரச்சினையும். இந்த விடயம் அமெரிக்காவில் காரசாரமான வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது Lower Manhattan, அதாவது “வெறுமை நிலம்”(Ground Zero) என்றறியப்பட்ட இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கும், இந்த பார்க் 51 திட்டவாளர், றவூப் கான், அவர் மனைவி டெய்சி கான் ஆகியோருக்கும் ஒரு தலையிடியாக மாறி வருகின்றதாம். இந்த உத்தேச கட்டிட இடத்தை சுற்றி துயிலுரி(strip clubs) நிலையங்கள், மது பாண சாலைகள், மற்றும் மேற்கத்திய களியாட்டு நிலையங்கள் என்று இன்னோரன்ன அம்சங்களை கொண்ட அந்த மன்கெட்டன் பகுதியில் இந்த பார்க் 51க்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள், முஸ்லிம்களுக் கெதிரான அவமான பேச்சுக்களும், செயல்களும் இடம் பெறுவதையும் பொருட்படுத்தாது அந்த சிறிய பள்ளீவாயிலை 13 மாடி கட்டடமாக்கி அதில் இஸ்லாமிய (பல் மத நற்புறவு) கலாச்சார மண்டபமும் அமைக்க கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார் திரு, திருமதி கான் அவர்கள். இவர்கள் அமொ¢காவில் பல் மத பு¡¢ந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சமயங்க்களுக்கிடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடலுக்கு (inter-faith dialouge) பெயர் பெற்றவர்களாம். இந்த கட்டிட முயற்சிக்கு நிவ் யோர்க் மேயரும் அனுமதி அளித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பரக் ஓபாமாவும் வெள்ளை மாளிகையின் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றில் அங்கே கலாச்சார மண்டபமும், பள்ளிவாயிலும் கொண்ட கட்டிடம் அமைப்பது முஸ்லிம்களின் சமயத்தை பின்பற்றுவதற்கான அவர்களுக்குள்ள மத சுதந்திரத்தினதும், ஜனநாயக உரிமையின் பாற்பட்டது. இந்த அடிப்படை உரிமை அமெரிக்கர் அனவருக்கும் இருக்கும் உரிமைக்கு சமமான உரிமை என்று பெரிய போடு போட்டார். ஒரு சில நாற்களுக்குப் பின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜனாதிபதியின் அன்றைய பேச்சு ஒரு தேவை கருதி நிகழ்த்தப்படடதாகவும், இந்த உத்தேச கலாச்சார நிலைய, பள்ளிவாசல் கட்டிட அனுமதி தொடர்பாக அதை எதிர்ப் போரினது நியாங்களும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்ற ஒரு விடயத்தையும் மெல்லவே விட்டுள்ளார்.

இந்த எதிர்பாளர் வரிசையில் பலதரப்பட்டோரும் காணப்படுவது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். பொக்ஸ் செய்தி(Fox news) குழுவில் இருக்கும் லவுரா இங்கிராம் (Laura Ingraham) டெய்சி கானுடனான நேர்காணலுக்குப் பின் பின்வருமாறு கருத்து வெளீட்டுள்ளார், ” இது இஸ்லாத்தின் அதிகார போக்கினதும் அதன் விரிவாக்கத்தினதும் ஒரு செயல்பாடு”. கூடவே இந்த இடத் தேர்வானது தற்செயலான விடயமல்ல, இது ஜெருசலத்தில் ஒரு தேவாலயத்தின் மேல் கட்டப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாயிலை ஒத்தது” என்றும் கூறியுள்ளார்.

அதே போல் 9/11ல் தன் சகோதரியை பறிகொடுத்த நிவ் யோர்க் சட்டத்தரணி ஒருவர், தாம் திரு, திருமதி கான் அவர்களின் ஜனநாயக உரிமைக்குட்பட்ட செயற்பாட்டில் கருத்து வேற்றுமை படாவிட்டாலும், அவர்கள் தமது உரிமைகு உட்பட்ட விதத்தில் நடந்தாலும், இந்த முயற்சியானது இந்த சந்தர்பத்தில் ஒரு பொருத்தமான நடவடிக்கையாக தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அதே நேரம் இந்த கட்டிட நிர்மானத்துக்கான எதிர்ப்பு இஸ்லாமிய சமயத்துக்கான எதிர்பாக ஒருபோதும் அமையவும் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளாதாகவும் கூறுகின்றார்.

அதேநேரம் இந்த பள்ளிவாசல் நிர்மானத்துக்கான அனுமதி மறுப்பு, தீவிரவாதிகளுக்கு தீனி போடுவதாகவே முடியும். முஸ்ளிம்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு முஸ்லிம்கள் தங்களை முழு அமெரிகர்களாக பார்க்க மறுகிறார்கள் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரணான அனுகுமுறை. 15 தீவிரவாதிகளுக்காக முழு உலக முஸ்லீம்களையும் குற்றவாளிக் கூண்டில் போடுவது புத்திசலித் தனமாகாது என்ற கோசங்களும் அமெரிக்க அரசியல் வட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

போர் குற்றவாளி ஜோர்ஜ் டப்லிவ் புஸ்(George W. Bush) கூட 9/11ன் பின்னான நாட்களில் வசிங்டன்னில் உள்ள இஸ்லாமிய நிலையத்துக்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எந்த அமெரிக்கரும் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் முகம் அல்ல என்றும், இஸ்லாம் என்பது ” சாமாதானத்துக்கான் சமயம்” என்பதே தனது நிலைப்பாடு என்றார். இதையே முன்னை நாள் ராஜாங்க செயலர் கொண்டலீஸா ரைசும்(Condoleezza Rice), அனைத்து படை அதிகாரிகளின் தலைவருமான கொலின் பவுள்(Colin Powell)ழும் வழி மொழிந்தனர். இவர்களின் கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஓபாமவின் ஆலோசகர்களில் ஒருவரான பட்டேல்(Patel) என்ற முஸ்லிம் பின்வருமாறு கூறுகின்றார், ” பின் லாடனின் தீவிரவாததை ஆதரிக்கும் ஒரு சிறு குழுவினரின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும், அமைதியை விரும்பும் கோடிக்கணக்கான முஸ்ளிம்களின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புஸ்சும், ஒபாமாவும் மிக சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்”.

ஆக இஸ்லாத்தின் பெயரால் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப் பட்டதை எப்படி எதிர்த்தோமோ, அதே போல் இந்த குர்-ஆன் எரிப்பை இஸ்லாத்தின் பெயரால் எதிர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஆனால் அத்துமீறல் நிச்சயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

அதேநேரம் இந்த 13 மாடி கலாச்சார நிலையமும், பள்ளிவாசலும் அந்த வெறுமை நிலத்திற்கு (Ground Zero) அண்மையிதான் அமைய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் சற்று பிரச்சினைக்குறிய விடயம் போலவே தெரிகிறது. அங்கு உயிரிழந்த 3000 பேரின் உறவுகள் இந்த இடத்தில் உங்கள் பள்ளிவாசலை கட்ட வேண்டாம் என்று கேற்பது நீங்கள் அமெரிகாவில் எங்குமே கட்டவேண்டாம் என்று சொல்லும் செய்தியல்ல. அமெரிக்க முஸ்லிம் மற்றவர் போல தமது வணக்கஸ்தளத்தை எங்கும் கட்டலாம் என்ற உரிமை இங்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் படுகிறது. ஏனெனில் உலகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம் என்கிறது இஸ்லாம். ஆகவே நாம் தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடு மேற்கினாலும், அமெரிக்காவினாலும் எடுக்கப்பட்டாலும், சோஸலிசத்தை தோற்கடித்த மேற்கின் அடுத்த குறி இஸ்லாம் என்றாலும். தங்களையறியாமலேயே இஸ்லாத்துடன் ஒட்டி செல்ல வேண்டிய தேவை மேற்கிற்கு மாத்திரமல்ல உலகத்துக்கும் உண்டு. இதற்கு சான்றாகா பாரிய விற்பனை நிலையங்கள்(Supper markets) தம் கதவை திறந்து அங்கிகரிக்கப்பட்ட உணவை(Halal food) சிபாரிசு செய்கிறது, வங்கிகள்( Banks) வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை அனுமதித்து தமது பொருளாதார மூலத்தில் மாற்றத்தை செய்துள்ளது. விரைவில் பெண்களின் வேலை/காரியாலய உடுப்பில் (Business suit ) மாற்றம் ஏற்படுவதை மேற்கத்தைய பெண் அறிஞ்சர்கள் வரவேற்க ஆயத்தமாக உள்ளனர் என்ற செய்திகள் எல்லாம் செயற்கையான உலகமயமாக்கலுக்கு( Globalization) எதிராக எழும் இயங்கியலாக இஸ்லாமிய மயப்படுத்தல் (Islamization) இயற்கையாகவே நடந்தேறுவதை காணலாம்.

ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன்

David Milliband Meets London Tamilஇதுவரையும் இலங்கையில் நடந்த அரசியல் சதுராட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள். பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவியைச் சூதாட்டத்தில் இழந்ததுபோல் தமிழ்த் தலைவர்கள். ஏழைத் தமிழர்களின் வாழ்க்கையைச் சிங்கள இனவெறிக்குப் பலியிட்டார்கள்.  பாஞ்சாலி, கணவர்களின் சபதத்தை நிறைவேற்ற, அவள் பயணத்தைக் காடுமேடுகளிற் தொடர்ந்தது போல்த் தமிழ்மக்களும் தலைவர்களின் பகற்கனவை நிறைவேற்ற இடத்துக்கு இடம் அநாதைகளாக மேய்க்கப் பட்டார்கள் கடைசியில் புதுக்குடியிருப்பின் மிகச்சிறிய முள்ளியவளைப் பகுதியில் அடைக்கப்பட்டு, வைரவ கடவுளுக்குப் பலி கொடுக்கப்பட்ட ஆடுகளாகத் தமிழ் மக்கள் எதிரிக்குப் பலி கொடுக்கப்பட்டார்கள்.

கொலைகளுக்குத் தப்பி  வேலி தாண்டி ஓடிய உயிர்கள் இருபக்கக் குண்டுகளாற் துளைக்கப்பட்ட வெற்று மரங்களாகத் தமிழ்மண்ணிற் சாய்ந்து விழுந்தார்கள். ஊனமடைந்த உயிர்கள் இன்று ஏனேதானே என்று வாழ்ந்து முடிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் விடுவதாயில்லை. இதுவரையும் தமிழர்களின் ‘விடுதலை’ என்ற பெயரில் பணம் படைத்த  புலம்பெயர் தமிழ் முதலைகள் இன்றும் இலங்கைத் தமிழர் பெயரில் எப்படி உழைக்கலாம் என்ற வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதும்,  ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ்க் கடைகளில் கூலிவேலை செய்யும் ஏழைத் தமிழ் இளைஞர்களிடம் ‘தலைவர் கடைசி யுத்தத்திற்குப் பலம் வாய்ந்த ஆயுதம் வாங்கப்போகிறார், பிரபாகரன் தலைவராகவிருந்து சண்டை தொடர்வதால் வெளிநாடு  வந்த நீங்கள் ஒவ்வொருத்தரும் கட்டாயம் பணம் தரவேண்டும்’ என்று சொல்லிப் பணத்தை அள்ளிக்கொண்டு போனதை எத்தனையோ ஏழைத்தமிழ் இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்.

தமிழர்களின் பெயரில் சேர்த்த கோடிக்கணக்கான பணம் அவர்களின் கையில் இருக்கிறது. அதை மறைத்து, அந்தப் பணத்தைச் சூறையாட தமிழர்களின் பெயர் சொல்லிக்கொண்டு பல கூட்டங்கள் போடுகிறார்கள். வெளிநாட்டுப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தமிழருக்கு ஈழம் எடுத்துத் தருவதாகக் கற்பனைக் கதைகள் விடுகிறார்கள். மனச் சாட்சியுள்ள தமிழர்கள் இவர்களைக் கேள்வி கேட்காமல் விட்டால் புலம்பெயர்ந்த ஈழம் என்ற பெயரில் பல கோமாளிக் கூத்துக்கள் இன்னும் அரங்கேற்றப்படப் போகின்றன. அதற்கு இந்திய தமிழக அரசியல்க் கோமாளிகள் தாளம் போடுவார்கள். இலங்கைத் தமிழரின் கண்ணீரும் கதறலும் ஒரு சில முதலைகளின் மூலதனமாக மாறிவிட்டது. இதைக்கேட்க யாருமில்லையா?

David Milliband Meets London Tamilsஅண்மையில், 04.09.10ல் ‘பிரிட்டிஷ் தொழிற்கட்சிசார்ந்த தமிழர்கள்’ என்ற பெயரில் வெஸ்ட்மினிஸ்டர் சென்றல் ஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. தொழிற் கட்சியின் பழைய தலைவர் கோர்டன் பிறவுன் இராஜினாமா செய்ததால் தொழில் கட்சியின் புதிய தலைமைத்துவத்துக்குப் போட்டியிடும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாம். ஆனால் கூட்டத்தில் பேசிய புலி ஆதரவாளர்கள், ‘பிரித்தானியா, உலக ஐனநாயகக் காவலன்’ என்றும், மிலிபாண்ட் ஒருகாலத்தில் பிரதமராக வந்தால் கட்டாயம் ஈழம் கிடைக்க வாய்ப்புண்டு என்ற தோரணையில் பேச்சுரைகளை அள்ளி வழங்கினார்கள்.

( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

பிரித்தானியரின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை நிறுத்தாத (பிரபாகரனைக் காப்பாற்றாத) இலங்கை அரசைக் கிண்டலடித்தார்கள். இலங்கையில் ஆளுமை செய்யும் ராஜபக்ஸா சகோதரர்களை யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் அகில உலக கோர்ட்டுக்கு கொண்டுபோவதற்கு உதவி செய்யும்படியும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். பொருளாதாரத் தடைபோட்டு இலங்கையைப் பணிய வைக்கும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

பிரித்தானியா ஒருநாளும் தனக்கு இலாபம் கிடைக்காத விடயங்களில் தலையிடாது என்பதும், இலங்கையில் பிரித்தானியரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியாத தமிழ்ப் பிரமுகர்களின் குழந்தைத்தனமான பேச்சுக்களால் வந்திருந்த பலர் தர்மசங்கடப்பட்டார்கள். புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்த முயன்றதும் டேவிட் மிலிபாண்ட்டுடன் ஒன்றாய் நின்று படம் எடுக்க முண்டியடித்ததும் வேடிக்கையாகவிருந்தது.

பிரித்தானிய தொழிற்கட்சி பற்றியோ அந்தக் கட்சியின் பாரம் பரியம் பற்றியோ, இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தொழிற்கட்சி ஆட்சியிலிருந்த படியாற்தான் பிரித்தானிய சாம்ராச்சியத்தை உடைத்து அடிமைகளாகவிருந்த நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதும் புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும். ஆனாலும் இன்று பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவராகவிருந்த ரோனி பிளெயர் ஈராக் நாட்டுக்குப் படையெடுத்து சதாம் ஹசேயினைக் கொலைசெய்து, ஈராக் மக்களைத் துன்பத்தில் ஆள்த்துவது போல், இலங்கைக்கும் பிரித்தானியப் படையிறங்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கூட்டத்திற்கு வந்திருந்த புலி ஆதரவாளர்களில் ஒன்றிருவர் பகிர்ந்து கொண்டார்கள்.

கூட்டத்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ‘இவர்கள் (புலி ஆதரவாளர்கள்) எப்படியெல்லாம் சொல்லித் தமிழ் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள்’ என்று விரக்தியுடன் பேசியதையும் கேட்கக் கூடியதாகவிருந்தது.

கூட்டத்துக்கு வந்திருந்த  தொழிற்கட்சி உறுப்பினர்களான, பழைய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பழைய அமைச்சர்களில் ஒருத்தரான கீத்வாஸ், ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதியான குளொட் மொறிஸ், பிரித்தானியப பாராளுமன்றப் பிரதிநிதிகளான சிவோன் மக்டோனால், மைக்கல்கேற், ஸ்ரெலா கிறிஸி, என்போர் தமிழர்களின் ‘ஈழப்’ பிரச்சினையில் கைவைக்கவில்லை. இராஐதந்திரத்துடனான வசனங்களால், தமிழர்கள் ஏன் தொழிற் கட்சியில் சேர வேண்டும் என்று பேசினார்கள். பட்டும்படாத மாதிரி தமிழரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் இங்க தமிழ்ப் பிரச்சினை பற்றிப் பேசவரவில்லை, லேபர் பார்ட்டி பற்றிப் பேசவந்திருக்கிறேன்’ என்று சிவோன் மக்டோனால்ட் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பேச்சாளர்கள் ‘இலங்கையில் சிங்களவர்கள் செய்த அதிபயங்கரமான இனப் படுகொலையைப்’ பற்றிப் பேசினார்கள். புலிகள் மற்ற இயக்கங்களுக்குச் செய்த கொடுமைகளையோ, டெலோ உறுப்பினரை ஆரிய குளம் சந்தியில் டயர்களைப் போட்டு உயிரோடு எரித்ததையோ யாரும் அங்கு பேசவில்லை.

டேவிட் மிலிபாண்ட் பேசும்போது இலங்கைத் தமிழர்கள் உலக அரசியலில் தனது பார்வையை விரிவுபடுத்தியிருப்பதாகச் சொன்னார்.

பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் மிகவும் சிறந்த முறையில் ஒன்றுசேர்ந்து வேலை செய்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அங்கு வந்திருந்த தமிழர்களுக்கு ஐஸ் வைக்கப்பட்டது. தமிழர்கள் ஒற்றுமையாயில்லாத படியாற்தான் தமிழர்கள் இந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்களால் அரசியல் பார்வை பெற்ற டேவிட் மிலிபாண்டக்குச் சொல்வாரில்லை.

பாராளுமன்றப் பிரதிநிதியான சிபோன் மக்டோனால்ட் ‘இலங்கைப் பொருட்களை பகிஸ்கரிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்வதாகச் சொல்லப்பட்டது. தமிழக்கடைகளில் வல்லாரைக்கீரை கிடைக்காவிட்டால் விரதச்சாப்பாட்டில் ருசிவராது என்ற உண்மையை அந்தப் பெண்ணுக்கு யாரும் சொல்லவிலலை.

இலங்கைக்குப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற குரலும் தமிழ்ப் பேச்சுக்களில் ஓங்கி ஒலித்ததது. பொருளாதாரத்தடை மூலம் ஈராக் நாட்டைப் பிரிட்டிசார் பழிவாங்கினார்கள். வெள்ளைக்காரன் மருந்து கொடுக்காமல் ஈராக்கியக் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்த கதை தெரிந்தபடியாற்தான் இன்று வெள்ளைக்காரனை நம்பியிருக்காமல் ‘சிங்கள சகோதரங்கள்’ இந்தியாவை நம்புகிறது என்பதையும் புலி ஆதரவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்கு நாட்டின் பொருளாதார வீழ்சியினால் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது, இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இலங்கையைப் பழிவாங்க பிரிட்டிஷார் தயஙகுவார்கள். இன்று இந்திய, சீன  மூலதனங்கள் இலங்கையை வளம்படுத்துகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பதுபோல் புலிகள் கனவு காண்கிறார்கள்.

இலங்கைக்குப் போய்வரும் பல தமிழர்கள் யாழ்ப்பாணம் எப்படி விருத்தியடைகிறது என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். இதைப் புலிகள் நம்பத் தயாரில்லை போலிருக்கிறது. இலங்கையில் எப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதில் பணம் படைத்துத் தனது குடும்பத்தை முன்னேற்றுவதையே பல முதலைகள் விரும்புகிறார்கள் என்பது பல தமிழர்களுக்குத் தெரியும்.

பிரபாகரனை வை.கோ எமலோகம் அனுப்பி விட்டதாக கேபி அறிக்கை விட்டதையும் செவி மடுக்காமல் இன்னும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்குத் துடிக்கும் இவர்களுக்குத் தமிழர்கள் பாடம் படிப்பிக்க வேண்டும்.

இன்று உலகில் நடைபெறும் மாற்றங்ளை அவதானித்தால், நாளைக்குப் பிரித்தானிய அரசு, இலங்கையுடன் பெரிய வர்த்தக உடன்படிக்கையைச் செய்யாது என்று சொல்வதற்கில்லை. இலங்கையின் மன்னார்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் எண்ணை பற்றிய முழுத்தகவல்களும் நோர்வே நாட்டில் இருக்கிறது. இலங்கைக்குரிய எண்ணையின்  பலன் இலங்கைக்குக் கிடைப்பதற்கு இலங்கையிடம் விஞ்ஞான, தொழில் வளர்ச்சி கிடையாது. அதனால் இந்தியாவும் பிரித்தானியாவும் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் நிலை வந்தால் பிரித்தானியாவில் தமிழர்கள் லண்டனில் அரசியல்வாதிகளை வைத்துக் கூட்டம் வைத்துப் படம் எடுப்பதற்கும் வசதி வராது.

இதுவரையும் புலிகள் ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகள், தோற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள். பிரபாகரன் புலிகளின் ஆதரவு அளவுக்கு மிஞ்சிப்போனதால் வைகோ கோஸ்டியால் பரலோகம் அனுப்பப்பட்டார்.

‘கிலாரி கிளிண்டனுக்கான தமிழர்கள் என்று அமெரிக்காவில் புலி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்தார்கள் அந்தப் பெண்மணி தோற்றுப்போக, முன்பின், மக்களுக்குப் பெரிதாகத்  தெரியாமலிருந்த  ஓபாமா வெற்றி பெற்று இன்று விழிபிதுங்கப் பிதுங்க அமெரிக்கப் பிற்போக்குவாதிகளிடம் பேச்சுவாங்கிக் கொண்டிருக்கறார்.

லண்டனில் மேயராகவிருந்த கென் லிவிங்ஸ்டனைத் தோளிற் சுமக்காத குறையாகக் கொண்டு புலிகள் திரிந்தார்கள் பாவம் அந்த மனிதனுக்கும் படுதோல்வி.

இன்று கனடியக் கவர்ச்சிக் கவிஞரும் அமெரிக்க விரக்தி வழக்கறிஞரும் இதுவரை முப்படையும் வைத்துப் போராடிப் பிரபாகரனால் எடுக்க முடியாத ஈழத்தைத் தமிழருக்கு எடுத்துத்தருவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கனவை வைத்துக்கொண்டு சிலர் இன்னும் பணம் பறிக்கிறார்கள் இது கொடுமையிலும் கொடுமை. இலங்கையில் இன்னும் அகதிகளாகத் துயர்படும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் பற்றி இவர்கள் பேசுவது கிடையாது. இந்தியாவில் கண்ணீர் சிந்தும் இலங்கை அகதித் தமிழர்கள் பற்றி மூச்சும் விடமாட்டார்கள்.

David Milliband Meets London Tamilsஎப்படியும் ஈழம் எடுத்து தமிழருக்குக் கொடுப்பதாகப் பறை சாற்றுகிறார்கள். இதுவரை இருதரம்  தமிழர்கள் கையில் ஈழம் மற்றவர்களால் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்தியா வந்து ஈழம் (கிட்டத்தட்ட) எடுத்து கொடுத்தபோது எதிரியுடன் சேர்ந்து இந்தியாவைத் துரத்தினார்கள். ஈழம் எடுத்துக்கொடுத்த ரஜீவ் காந்தியைப் போட்டுத் தள்ளினார்கள். இந்தியாவுக்கு எதிராகச் சண்டைபிடிக்க ஆயுதம் கொடுத்த அவர்களின்  சினேகிதனாயிருந்த பிரேமதாசாவைக் கொலை செய்தார்கள். நோர்வே நாடு ஈழம் (கிட்டத்தட்ட) என்ற ஒப்பந்தத்திற்கு கொண்டு போனபோது அந்த ஒப்பந்தத்தை உதறிவிட்டுச் சண்டைக்குப் போய் மண்டைகளைப் போட்டார்கள். இப்போது மிலிபாண்ட் மூலம் ஈழம் கேட்கிறார்கள் அதை வைத்துக்கொண்டு யாரைப் பரலோகம் அனுப்பப் போகிறார்கள்?
 
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’

(இக்கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர். எழுத்தாளர். )

நடிகர் முரளி மரணம்

08-murali.jpgதமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

08-2muralai.jpgபூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் மாநாடு

moon.jpgஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை (9) வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள் கிறது. அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரியபள்ளி வாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

உலமாக்கள், கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளி வாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

w-t-c.jpgபுனித குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத்துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார். அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.

இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது.  தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் தலிபான், அல் கைதா அமைப்புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன்

Sitharthan_Speaking_at_Memorialதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வி தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 நடைபெற்றது.

தர்மலிங்கமும் சக பாராளுமன்ற உறுப்பினருமான ஆலாலசுந்தரமும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது படுகொலைகளுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் விடுதலை அமைப்புகள் அரசியல் படுகொலைகளை ஒரு அரசியலாகவே முன்னெடுத்தனர்.

தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) அல்பிரட் துரையப்பாவுடன் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சாரம் அவர்களையே பலியெடுக்க முற்பட்டபோது அவர்களுக்குப் பிறந்த ஞானம் காலம் கடந்ததாகி விட்டது. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட இன்றைய அரசியல் தலைவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதுவரை தமது அரசியல் தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. 

Selvam Adaikalanathan TNA_TELOபாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை படுகொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மெளனமாகவே உள்ளார். இவர்களது படுகொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பொது மக்கள் என இக்கொலைப் பட்டியலும் நீளமானது. இவை தொடர்பாக அவ்வமைப்பிற்கு தலைமை தாங்கும் ஜனநாயக வழிக்குத் திரும்பிய செல்வம் அடைக்கலநாதனுக்கும் தனது கடந்த காலம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.

அல்பிரட் துரையப்பாவுடன் ஆரம்பமான இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அதனை முன்னின்று நடாத்திய வே பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்துள்ளது. வே பிரபாகரனின் படுகொலைக்குப் பின்னான 15 மாதங்களில் குறிப்பிடத்தக்கதான அரசியல் படுகொலைகள் நிகழவில்லை. இருப்பினும் இப்படுகொலை அரசியல் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் மக்கள் மனங்களில் இன்னமும் ஆறாத வடுவாக உள்ளது.

Memory_of_Dharmalingam_Vஅமரர் வி தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வு கௌரிகாந்தன் தலைமையில் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி ரி லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இலங்கையின் இனவாதக் கட்சிகளாகக் கொள்ளப்படும் ஜேவிபி மற்றும் ஜாதி ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பெயருக்காகவேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை இயக்கமோ இதுவரை தங்கள் அரசியல் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தந்தையைப் பலிகொடுத்த தனயனின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இதுவரை தங்கள் அமைப்பு மேற்கொண்ட அரசியல் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை.

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையைத் தூண்டியதற்காகவும் அவரது இறுதிக் கிரியைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எப்) தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைக்களுக்காக பகிரங்கமாகவே மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர்.

தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் ஏற்கனவே விடப்பட்ட தவறுகளை திருத்தவோ மாற்றி அமைக்கவோ அல்லது இழக்கப்பட்ட உயிர்களை மீளளிக்கவோ முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் விடப்படமாட்டாது என்ற நம்பிக்கையைப் பெறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் மீளுறவை ஏற்படுத்தவும் வழியேற்படும்.

ஆனால் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளுக்கு இவர்கள் இடமளிப்பார்கள் என்பதும் அதனையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.

People_at_Memorialதமிழ் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் அரசியல் தவறுகளை தமிழ் மக்கள் முன் ஒப்புக்கொள்ளவும் அவ்வாறான தவறுகள் இனி இடம்பெறமாட்டாது என்ற உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான அரசியல் பொறுப்புணர்வை தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசை அதன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்த முடியும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் எதிரியாகவே கருதப்பட்டு வரும் எதிரியாகவே உள்ள இலங்கை அரசிடம் தமிழ் மக்கள் நியாயம் கேட்பதற்கு உள்ள உரிமையைக் கூட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதனை வழங்கவும் தயாரில்லை.

ஆகவே தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே உண்மையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் சுயமுயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலை அமைப்புகளாலும் இலங்கை அரசபடைகளாலும் கொல்லப்பட்ட மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவர்களை நினைவுகூருவதற்கான நினைவுநாள் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் பற்றிய உண்மைகளை குழிதோண்டிப் புதைப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீளுறவை ஏற்படுத்த முடியாது. உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே மீளுறவை ஏற்படுத்த முடியும்.

‘I am nothing. I am just a tool in the hands of God!’ அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா : பி எம் புன்னியாமீன்

Mother_Theresa_with_armless_babyகருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும்,  தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்”, எனவும்  புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்” என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா” என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்” என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

Mother_Teresa1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு” என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு “அருளாளர் பட்டம்” அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் – டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்”ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ, பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று,  இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்” எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு”வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும்,  நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து,  நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில்,  தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, “உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள்,  வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள்,  தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும்,  கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்.” கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக்  கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும்,  எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும்,  தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர்,  ஊனமுற்றோர்,  முதியோர்,  மது அடிமைகள், ஏழை எளியோர்,  வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும்,  நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும்,  இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே,  முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை – எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள்,  இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள்,  அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும்,  ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்” என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது,  சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல்,  பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும்,  ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை,  அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான “நேரு” விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா” விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979-ல் நோபல் பரிசு

அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் “இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்” என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், “உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?”, என்றுக் கேட்டனர். அதற்கு அவர், “வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . “உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல,  மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது” என்றுரைத்தார். “தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ,  ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்.”

1980-ல்,  மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா” விருது

1981-ல்,   ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி  ஹொனர்” (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல்,  ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்” விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்” விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி” விருது மற்றும் “பாரத சிரோமணி” விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்” விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது” மற்றும் “தயாவதி மோடி” அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல்,  அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்” வழங்கியது.

2003-ல்,  அக்டோபர் 19ம்திகதி “அருளாளர் பட்டம்” திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம்,  இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை,  ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.