கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா வட பகுதியில் கடும் சமர்; சில பகுதிகள் இஸ்ரேல் வசம்

gaasaa.jpgகாஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.

வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஒட்டுசுட்டான் படையினர் வசம். நிர்வாக, விநியோக நடவடிக்கைகள் துண்டிப்பு.

srilanka_army_.jpg முல்லைத்தீவிலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் நேற்று படையினர் வசமானது. முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறி வரும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் இந்தப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. ஒட்டுசுட்டானில் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணி நேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களின் போது இருபதுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், புலிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாங்குளம் – முல்லைத்தீவு ஏ-34 பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் சந்தி அமைந்துள்ளது. இங்கிருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களை நேரடியாக சென்றடைய முடியும். இதனை சாதகமாக பயன்படுத்தி புலிகள் தமது பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ள படையினர் புலிகள் தமது நிர்வாக மற்றும் களஞ்சிய வசதிகளை முன்னெடுப்பதற்கு இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக திகழ்ந்துள்ளதென கூறியுள்ளனர்.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தமது முதலாவது நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய பிரதேசங்களில் ஒன்றான நெடுங்கேணியை கைப்பற்றினர். அங்கிருந்து வட பகுதியின் ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கையை மேற்கொண்டு நேற்று நண்பகல் ஒட்டுசுட்டான் நகருக்குள் பிரவேசித்துள்ளனர். இராணுவத்தின் 14வது சிங்க ரெஜிமண்ட் பிரிவினர் மேஜர் யு. எஸ். என். கே. பெரேராவின் வழிகாட்டலிலும், 642வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் பி. ரி. ஹத்னாகொடை தலைமையிலான படையினரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஒட்டுசுட்டானுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்த மோதல்களின் போது படையினர் புலிகள் பயன்படுத்தி வந்த புதுகுடியிருப்புக்குச் செல்லும் வீதியையும் இராணுவத்தின் நான்காவது செயலணியினர் துண்டித்துள்ளனர். இதேவேளை புளியங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுசுட்டானை கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு உதவியாக விமானப் படையின் விமானங்களும் நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

தற்பொழுது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆனையிறவையும், முல்லைத்தீவையும் நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் – காங்கிரஸ் கட்சி

congras.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடிக்க வேண்டும். அவரை ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகும். தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதேசமயம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதப் பிரச்சினை வேறு, மனிதாபிமானப் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்றார் அவர்.

முல்லை. நோக்கி முன்னேறும் படையினருக்கு உதவியாக புலிகள் இலக்குகள் மீது விமானப்படை தாக்குதல்

mi24-1912.jpgமுல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று ஐந்து தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24 ரக மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஓட்டுசுட்டானுக்கு வட – கிழக்காக 6 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளங்களை இலக்கு வைத்து நேற்றுக் காலை 6.30 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு இலக்குகள் மீது நேற்றுப் பிற்பகல் 1.20 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் முதலாவது செயலணியினருக்கு உதவியாக இந்த விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வடகிழக்கே 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளம் மீது நேற்று பிற்பகல் 2. 45 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை, ஆணையிறவு மற்றும் பரந்தனுக்கு கிழக்கு பகுதியிலுள்ள புலிகளின் இரு இலக்குகள் மீது நேற்று மாலை 5.00 மணி 6.30 மணியளவில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். விமானப்படையினரின் இந்த தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஒட்டிகளும், களமுனை படைவீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப் படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சமளிக்காது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஷேய்க் ஹசீனா

haseena.jpg பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சம் அளிக்காதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசீனா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 262 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசீனா மேலும் கூறியதாவது; “அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் பங்களாதேஷ?க்குள் தீவிரவாதிகள் புகுவதை அனுமதிக்கமாட்டோம். அண்டை நாடுகளுடனான உறவு குறிப்பாக, இந்தியாவுடனான உறவை தொடர்வதே புதிய அரசின் செயல்திட்டமாக இருக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதில்லை. இனி ஆட்சி அமைக்கும்போதும் இந்த நிலை தொடரும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய அதிரடிப் படையை அமைக்கலாம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் இந்த பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. பயங்கரவாத விடயத்தில் இந்த பிராந்திய நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி பேசுவது வழக்கமாக இருக்கிறது. தெற்காசிய அதிரடிப்படை உருவாக்கப்பட்டால் இந்த நிலை இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடந்துமுடிந்த தேர்தல் மோசடி நிறைந்த தேர்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஷியா. 300 ஆசனங்களைக் கொண்டது பங்களாதேஷ் பாராளுமன்றம். இதற்கான தேர்தல் டிசம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி கூட்டணி வெறும் 32 இடங்களையே வென்றது. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாருமே இல்லாத கிளிநொச்சியைத் தான் ராணுவம் பிடித்துள்ளது.- புலிகள் கருத்து

0301-ltte.jpgயாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமையகத்தையும் நாங்கள் ஏற்கனவே மாற்றி விட்டோம் என விடுதலைப் புலிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ந்தது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆட்களே வசிக்காத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளதாக அவர்கள் சார்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கிளிநொச்சியில், இருந்த மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஏற்கனவே வட கிழக்குக்கு இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமை அலுவலகமும் வட கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மொத்தத்தில் யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது.

கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை * ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக “இந்து’ ஆசிரியர் ராம் தெரிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் “இந்து’ பத்திரிகையின் முதல் பக்கத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது “பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை’ படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். “அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்’ என்று ராஜபக்ஷ கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.

“கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை’

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை. இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது; விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது. தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.

இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.

கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது. கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார

விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை

kili-04.jpg
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இவ்வாறு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகிட் கூறுகையில், இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார் டூகிட்.

முல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்

mi24-1912.jpg
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மற்றும் பலமான நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. – 24 ரக விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டானுக்கு வடகிழக்கே உள்ள புலிகளின் பலமான நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை 6.15 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு தெற்காக முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினருக்கு உதவியாக நேற்றுக்காலை 6.15 மணியளவிலும் 10.30 மணியளவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது செயலணியினருக்கு உதவியாக பரந்தன் முல்லைத்தீவு வீதியை நோக்கி நேற்றுப் பிற்பகல் 1.15 மணியளவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு களப்பு பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளம் ஒன்றை இலக்கு வைத்து நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் விமானப் படையின் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்த கடற்புலிகள் முல்லைத்தீவிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆணையிறவு, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கடற்புலித் தளம், ஆயுத முகாம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து நேற்று முன்தினம் பத்துத் தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.