கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

உலக சாதனை- சனத் ஜயசுரிய

srilanka-india.jpgஇன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் சனத் ஜயசுரிய சதம் அடித்ததினால் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் கூடிய வயதில் சதம் அடித்தது இவரின் இந்த சாதனையாகும். இவர் சதம் அடிக்கும் போது இவரின் வயது 39 வருடங்களும் 254 நாட்களும் ஆகும். இதற்கு முன் இச்சாதனையை ஏற்படுத்தியவர் ஜெப்ரி பொய்கொட் (இங்கிலாந்து) என்பவராவார். அவர் சதம் அடிக்கையில் அவரது வயது 39வருடங்களும் 51நாட்களும் ஆகும்.  

இலங்கை- இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று

doni-maha.jpgஇலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரன்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்பஜன்சிங் இல்லாவிட்டாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றுமுன் தினம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கிரிக்கெட்சபை நிர்வாகிகள், இந்திய அணியினரை வரவேற்றனர்.

இந்திய அணி வீரர்கள் கொழும்புக்கு புறப்படும் முன்பு நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்தும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீசக்கூடிய புதுமுக சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம், இலங்கை பயணத்துக்கான இந்திய அணியில் காயம் காரண மாக ஹர்பஜன்சிங் இடம்பெறாதது பின்னடைவா? என்று கேட்டதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அணியில் இடம்பெறாததால் அணிக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம். வீரர்கள் எல்லோரும் தங்களது துறையில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய அணி வருமாறு:-

டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), டெண்டுல்கர், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, யூசுப் பதான், சகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஒஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன்குமார்.

இலங்கை அணி வருமாறு:-

ஜயவர்த்தன (கப்டன்), சங்கக்கார, ஜயசூரிய, தரங்க, கப்புகெதர, முபாரக், தில்ஷான், கன்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மஹ்ரூப், பெர்னாண்டோ, குலசேகர, துஷார, மெத்தியு.

இந்திய – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-

போட்டி அட்டவணை

ஜன  28:  முதல் ஒரு நாள் போட்டி தம்புள்ள
ஜன  31  2 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் -இரவு)
பெப்.  3  3வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  5  4 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  8  5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு
பெப்.  10  20 ஓவர் போட்டி, கொழும்பு (பகல் – இரவு)

சீதனத்தை தடைசெய்துள்ள நேபாள அரசு தலித்களைக் காப்பாற்ற புதிய சட்டம்

நேபாளில் சீதனக் கொடுமையை இல்லாதொழிக்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் பிரசண்டா பாரபட்சமற்ற நேபாளைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பிரசண்டா அமைதியான முறையில் அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நேபாளத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சீதனக் கொடுமைகள் அதிகரித்துள்ளமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் சீதனம் நேபாளத்தில் தடை செய்யப்படுவதுடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரும். சீதனம் வாங்குவோரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தலின் போது தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ் வேளையில் அரசுக்கெதிரான செயற்பாடுகளையும், பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், பெண்கள் அடக்கியாளப்படுவது நேபாளத்துக்குப் பெரும் அவமானம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் 14 வீதமானோர் தீண்டத்தகாத தலித் இனத்தவராவர்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நேபாளின் பிரபல இந்து ஆலயங்களில் தலித்கள் வழிபடவும் பொது வைபவங்களில் பங்கேற்கவும் தடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் பாராபட்சமும் சமூகக் குற்றமும் எனச் சுட்டிக்காட்டிய சமூகத் தலைவர்கள் இம் முறைகள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார். சரிந்து செல்லும் தனது அரசின் செல்வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அடிமட்டத்திலும் கிராமப் புறங்களிலும் ஆதரவைத் தேடும் முயற்சியே இதுவென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நேபாள அரசில் பல வகைக் கொள்கையுடைய கட்சிகள் உள்ளதால் அரசைக் கொண்டு செல்வதற்கான அனுபவம் குறைவாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் பிரசண்டா கட்சிகளின் கருத்துக்கள், தெரிவுகள் என்பவற்றை வரையறுத்துள்ளதாகக் கூறினார்.

போர்க் குற்றங்களிலிருந்து இஸ்ரேலிய படைவீரர்களை அரசாங்கம் பாதுகாக்கும் -இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

gaa-sa.jpgகாஸா மீதான படை நடவடிக்கை தொடர்பில் எந்தவொரு இஸ்ரேலிய படைவீரர் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டால் இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்குமென அந்நாட்டுப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைப் பாதுகாத்த அவர்களின் நடவடிக்கைக்காக இஸ்ரேல் அவர்களைப் பாதுகாக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களாக நடைபெற்ற காஸா மீதான தாக்குதல்களில் 1300 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ள நிலையில் இங்கு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரிகள் விரும்புகின்றனர். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஒல்மேர்ட் நாட்டின் தேவைக்காக சாவின் விளிம்புக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் கடல்கடந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படைவீரரும் தளபதிகளும் எம்மைப் பாதுகாத்துள்ளனர். இதற்காக எவ்வித விசாரணைகளிலிருந்தும் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்பதனையும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களுக்கு உதவும் என்பதையும் இராணுவ வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களினால் இஸ்ரேலிய இராணுவ தந்திரோபாயங்கள் கடும் கண்டனங்களுக்குள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் முறையிட்டுள்ளன.
வெண்ணிற பொஸ்பரஸை பயன்படுத்தியமையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும் சர்வதேச சட்டங்களை தான் மீறவில்லையெனத் தெரிவிக்கின்றது.

போராட்ட களங்களில் புகையை உருவாக்குவதற்காக வெண்ணிற பொஸ்பரஸ் பயன்படுத்துவது சட்டரீதியாக்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்ரேல் இதனை மக்கள் குடியிருப்புக்கள் மீது பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எகிப்திய மத்தியஸ்தர்களுக்கு 18 மாதகால போர்நிறுத்தமொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ள அதேவேளை, ஹமாஸ் ஒரு வருட போர்நிறுத்தத்தை பிரேரித்துள்ளது.நீண்டகால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் பேச்சுக்களுக்காக ஹமாஸ் தூதுக்குழு எகிப்தை சென்றடைந்துள்ளது.

பிரபாகரனை தேடிக்கண்டுபிடிக்க இலங்கைக்கு உதவியளிக்கும் இந்தியா

army-1401.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடிக்கண்டு பிடிப்பதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்து வருவதாக “ஏசியன்ஏஜ்’ பத்திரிகை நேற்று முன்தினம் திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி, விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் இறுதித்தளமாக இருந்த முல்லைத்தீவின் நகர் பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத் தகவலை தெரிவித்துள்ளன. “இந்திய கடற்படை எமக்கு சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. அத்துடன், இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப்படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன’ என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிவழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் முல்லைத்தீவு காடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. (கருணா) தெரிவித்துள்ளார். ஆனால்,கடல்வழியால் பிரபாகரன் சென்றிருக்கும் சாத்தியத்தை இங்கே பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை. பிரபாகரன் செக் தயாரிப்பான சிலின் 143 ரக விமானத்தில் சென்றிருக்கலாமெனவும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால், புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் பிரவேசித்திருப்பது அமைதியைகொண்டு வருமா என்பது தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இராணுவ வெற்றியை தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மட்டக்களப்பு நகரைச்சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் நிருபருக்கு கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கறியுள்ளார்.

“இராணுவ நடவடிக்கை முடிவுறும் நிலை ஆனாலும் மோதல் தொடரும்’

truck.jpgமரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார்.  அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் வன்னி மக்களை கேடயங்களாக வைத்திருக்கவில்லை. அந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர் – பா.நடேசன்

nadesan.jpg.வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடி  மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின்வாங்கிச் செல்வதும் – பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது. எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.

உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் எங்கும் ஓடவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்” என்று நடேசன் கூறியுள்ளார்.

பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்

பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார்.  ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் “பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன” என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

“போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் கூறினார்.  “வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணம்

r-venkatraman.jpg
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘முல்லைத்தீவில் 26 பொதுமக்கள் பலி’- B.B.C தமிழோசைக்குவழங்கிய செவ்வியில் டாக்டர். டி. சத்தியமூர்த்தி

truck.jpgஇலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று  நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவிபுரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் B.B.C தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்., வன்னிக்கு விஜயம் செய்யுமாறு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

president.jpgமுல்லைத்தீவில் புலிகள் மனிதக் கேடயங்களாக உடயோகிக்கும் தமிழ் மக்களை விடுவிக்கவென சொந்த முறையில் வேண்டுகோள் விடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணைய தளத்துக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் மேற்கொள்ளும் விஜயத்தின்போது அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து உரையாட முடியுமெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த இரு இந்தியத் தலைவர்களும் ஜனாதிபதியின் அழைப்பு சம்பந்தமாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் சமயத்தில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது அவசியமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை வரமுடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவித்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது தொடர்பான சமரச பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தலைவர்கள் நடத்த முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாவிகளையும் அணைக்கட்டுகளையும் தகர்ப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களுக்கு புலிகள் இயக்கம் அளப்பரிய கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதென்றும் இந்த பேட்டியின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதென்றும் ஜனாதிபதி அதில் கூறியுள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனரெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.