கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் : விஜய்காந்த்

vijayakanth.jpgஉடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதத்தில் சிங்களவர்களின் புத்தாண்டு வருகிறது. அதற்குள் தமிழர்களை அழித்து புத்தாண்டை வெற்றித் திருநாளாகக் கொண்டாட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் இனவெறிப்போக்கால் இனி தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் முகாம்கள் அமைக்க வேண்டும். போர்நிறுத்தம் ஏற்பட இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

நிர்வாணப்படுத்தப்பட்ட மலைவாசிப் பெண் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

laxmi_.jpgஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த போராட்டத்தின்போது நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மலைவாசிப் பெண் ஒருவர் அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

லக்ஷ்மி ஒராயன் என்கிற அந்த பெண்மணி, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னமும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, உள்ளூர்வாசிகளால் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலைவாசிமக்களுக்கு கூடுதல் உரிமைகள் கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் அமைப்பு விசாரணை நடத்துகிறது கம்போடிய அரசு

cambodia.jpgவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தது.

ஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்சு

hillary-clinton.jpgஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன். அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒபாமாவை சந்திக்கும் மன்மோகன்:

இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலக உணவுத் திட்டம்’ வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு பிஸ்கட் புலிகளிடம்.

sl-army.jpgமுல்லைத்தீவு சாலைப் பிரதேசத்தில் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து உலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட் ஒன்றை படையினர் கண்டெடுத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவரிடமிருந்து ரி. 56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களும் மூன்று வரைபடங்களும் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.01.2008 இல் மதவச்சி சோதனை முகாமில் வவுனியா நோக்கிச் சென்ற லொறியொன்றில் தேடுதல் நடத்திய பொலிஸார் 39000 கிலோ கிறேம் அதி உயர்ந்த போஷக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட்டுக்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பிஸ்கட் தொகைகள் புலிகளைச் சென்றடைந்திருக்கலம் என்ற சந்தேகம் இப்பேது ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சர் ரிசாட் பதியுதீன் தகவல்

risard.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, வவுனியா மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, வைத்தியம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவனியா மாவட்டத்தில் தற்போது 3 நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தாங்கள் சமைத்து உண்பதற்குரிய வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு கூட்டு சமையல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அரச செயலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும், உள்ளுர் தொண்டு நிறுவனங்களினதும் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 115 சிவிலியன்கள் வருகை

navy_rg.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்கு 115 பொது மக்கள் நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே 115 பொதுமக்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 1800 பொது மக்கள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர், கடல் மற்றும் தரை வழிகளைப் பயன்படுத்தி யாழ்., வவுனியா, திருகோணமலையை நோக்கி ஜனவரி முதல் இதுவரை 38, 477 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரிடம் தஞ்சமடைந்த 115 பொதுமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி : ஜெ. அறிவிப்பு

jayalalitha.jpgஇலங்கை யில் ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அங்கு வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியும், அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் ஜெயலலிதா இதனை வெளியிட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். மாலை 5 மணியளவில், உண்ணாவிரத முடிவில் பேசிய ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதிக்கு அதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் மேலும் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று கூறினார். தவிர மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியினர் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள நிதி சென்னை வந்து சேர்ந்ததும், மொத்தமாகச் சேர்த்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

மேடையில் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்ற பள்ளிக்குழந்தைகள் இருவர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவிற்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ

jayalalitha.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களையும், தளவாடங் களையும் இந்திய அரசு அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதனை மத்திய அரசு மறுக்கவில்லை. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை திமுக எதிர்க்கவும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும்போது கருணாநிதி வாய்மூடி மவுனியாக மாறி விடுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களது சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும். அதே வேளையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறக்க காரணமான திசை மாறிப் போன ஆயுதமேந்திய போராட்டத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இவை இரண்டையும் ஒன்று சேர்த்து கருணாநிதி பிரச்சனையை குழப்ப முயற்சி செய்கிறார். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்து உணவு, உடை, மருந்து எதுவுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உணவு, உடை மற்றும் மருந்துகளை ஏன் அனுப்பவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் மாபெரும் தோல்வி அடைந்து விட்டன. தமிழ் மக்கள் மேல் மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் உண்மையான அக்கறையே இல்லை. நாம் இங்கு உண்ணாவிரதம் இருப்பதால் பசியால் வாடும் இலங்கை தமிழர்களின் வயிறு நிரம்ப போவதில்லை. இது ஒரு அடையாளமே. இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்திருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த போராட்டம் என்றார்.

உணவுக் கப்பல் மீது புலிகள் ஷெல் தாக்குதல்

ltte_attack.pngமுல்லைத் தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்மீது புலிகள் இன்று காலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய எம்.வி பிந்தன் சரக்குக் கப்பல் கடந்த 07 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கோதுமை மா 399 தொன், பருப்பு 61 தொன், மண்எண்ணெய் 1400 தொன், சீனி 20 தொன், மரக்கறி எண்ணெய் 21 தொன்,பெற்றோல் 200 தொன் மற்றும் குளோரின் 90 கிலோ ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இக்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் புதுமாத்தளன் பிரதேசம் சென்றடைந்த இக்கப்பல் பொருட்களை இறக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டது. எனினும் 142 மெற்றிக் தொன் பொருட்கள் இறக்கப்பட்ட வேளையில் திடீரென புலிகள் ஷெல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் என கப்பல் கெப்டன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக இக்கப்பல் ஆழ்கடல் நோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் எனினும் கொந்தளிப்பான நிலையில் கடல் காணப்படுவதாகவும் கெப்டன் தெரிவித்துள்ளார்.