கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பாதுகாப்பு வலயத்தில் 1658 பொதுமக்களை இராணுவம் கொன்றதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை – ரம்புக்வெல மறுப்பு

keheliya_rambukwella.jpgகடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களுள் 1658 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பிழையானதாகும். இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீகாந்தா எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நான் சபையில் அமர்ந்திருக்காத நேரத்திலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே உள்ள தொலைக்காட்சி மூலம் இதனை அவதானித்த நான் உடனடியாக சபைக்குள் சென்று அதற்கான ஆதாரம் என்னவென அவரிடம் கோரினேன். தான் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றின் மூலம் அத்தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.

புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களை ஊடகங்கள் எனக் கூற முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பாராளுமன்றத்துக்குள் இன்னும் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற விஷேட உரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அவலம்-ஐநாவில் விளக்க மறுத்த நம்பியார்

vijaynambiar.jpg இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி – போலீசார் விசாரணை

22-sivanandhan.jpg
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.

கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

22-sivanandhan.jpg

விடுவிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு விமானம் மூலம் சமைத்த உணவு – விமானப் படைப் பேச்சாளர் தகவல்

mcns_j_nanayakkara.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் இன்று கொழும்பிலிருந்து எம்.ஐ.17 ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங்கொமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு விமானப் படைப் பேச்சாளர் மேலும் கூறியதாவது,

புலிகளிடமிருந்து சிவிலியன்களை விடுவிக்கும் போராட்டத்தில் விமானப் படை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வான் வழியாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் படையினரின் முன்நகர்வுகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த 238 பேர் விமானம் மூலம் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமானப் படையினரால் பனிஸ் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இராணுவத்திடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை : டி.கே.பி. தஸாநாயக்க

dkb-dasanayaka.jpg
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன்கருதி கடற்படையினர் பல நடவடிகைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரு நாட்களில் கடற்படையினரிடம் 5000க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடையும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல எமக்கு ஆறு மணிநேரம் தேவைப்பட்டது. கடல் வழியாகத் தப்பி வரும் மக்களில் காயமடைந்தவர்களின் நலன் கருதி மருத்துவ மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய வசதிகள் புல்மோட்டை கடற்தளத்தில் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்க்கக் கூடிய வகையில் கடற்படையினர் தயாரான நிலையலேயே உள்ளனர்” என்றார்

கடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் விடுவித்துள்ளனர்- கெஹெலிய ரம்புக்வெல

keheliya_rambukwella.jpgகடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெரும் தொகையினரை படையினர் விரைவில் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்ததுவ உதவிகளை படையினர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். 

நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை – அதிமுக, தேமுதிக,மதிமுக, இடதுசாரிகள்

jayalalitha.jpg“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்தச் சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும்” என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களைச் சட்ட விரோதம் என்று அறிவித்திருக்கிறது.

வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதி படையினர் வசம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு

keheliya_rambukwella.jpgபாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதியை படையினர் இப்போது கைப்பற்றியுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இராணுவத்தின் 55 ஆம் 58 ஆம் படையணியினர் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து பொது மக்களை விடுவித்துக்கொண்டு தெற்கு பக்கம் நோக்கி முன்னேறுகின்றனர். இன்னும் 8 கிலோ மீற்றர் தூரமான நிலப்பரப்பு மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது. இதற்குள்தான் பிரபாகரனும் மறைந்துள்ளார் என நம்புகிறோம். புலிகளின் தலைவலைரக் காப்பாற்றும் நோக்கில் இப்பிரதேசத்தில் சுய விருப்பத்துடனேயே பொது மக்கள் தங்கியுள்ளனர் என்ற பொய்ப் பிரசாரம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

புலிகளிடமிருந்து விடுதலை பெற அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கெண்டனர். கையில் கிடைத்த பொருட்களுடன் கடல் ஏரியில் மார்பளவு நீரில் இறங்கியேனும் தப்பிச் செல்ல அவர்கள் காட்டிய வேகம் இதனை நன்கு நிரூபிக்கின்றது.

புலிகளின் முக்கிய இரு தலைவர்கள் படையினரிடம் சரண் – பாதுகாப்பு அமைச்சு :எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை- விடுதலைப்புலிகள்

dayamaster.jpgஎல்.ரி.ரி.ஈ.  இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று பிற்பகல் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்களிருவரும் சரணடைந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஊடகத்துறைப் பெறுப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் செயல்பட்டு புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சேவையாற்றியவராவார்.

geargemaster.jpgஜோர்ஜ் என்பவர் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் எல்.ரி.ரி.ஈ. தலைவரான பிரபாகரனின் மொழி பெயர்ப்பாளரகவும் செயல்பட்டு வந்தார். அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் கடந்ட 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின்போது இவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி

20-karunanithi1.jpgஇலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.