கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

11வது நாளாக தொடரும் பெண்கள் உண்ணாவிரதம்

20-fast.jpgஈழத் தமிழர்களைக் காக்க்க கோரியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையி்ல பெண்கள் கூட்டமைப்பினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் 11வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும் 6 பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து பெண்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்றும் கவலைப்படாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த 13ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பேராசிரியை சரஸ்வதி (இவர்தான் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்), வழக்கறிஞர் பாண்டிமாதேவி, பழனியம்மாள், லித் வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகிய 6 பேருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது. நேற்று இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை ரோகிணி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த பெண்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நாளை மேல்மாகாணசபைத் தேர்தல்

sri-lanka-election.jpgநாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்

மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் – இந்தியா

mugarsjee_piranap.jpg இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. வியாழன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக இரண்டு விசேட தூதுவர்கள் இலங்கை செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளிடமிருந்து தப்பி வருவோர் நிலை – உச்ச அளவில் வசதிகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு

Wanni_War_Boat_Refugeesபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு உச்ச அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென சுகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்ஸில் நேற்று கூடி ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக 300 க்கும் அதிகமான மருத்துவர்களும் 550க்கும் அதிகமான தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது- வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சகல வசதிகளும் அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலில் விளக்கமளித்தேன். 300 டாக்டர்களுக்கு மேலதிகமாக வதிவிட மருத்துவர்கள் 200 பேரும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் அங்கு அனுப்பப்படுவர்.

நோய்வாய்ப்பட்டு வரும் மக்களில் மேலதிக சிகிச்சை தேவையானவர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் கட்டில்களை ஒதுக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரண்டு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி வழங்க முன்வந்துள்ளது.

தப்பி வரும் மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளை பெற்று அந்த மக்களுக்கு உதவ அரசு ஆவன செய்து வருகிறது.

வன்னியில் இருந்து வரும் மக்களை அழைத்து வருவதற்கென 150 க்கும் அதிகமான பஸ்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் பஸ்கள் தேவைப்படுமானால் மேலதிக பஸ்கள் அங்கு அனுப்பப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஏற்கனவே 50 க்கும் அதிகமான பஸ்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் சகோதரர்களுக்கு உதவுங்கள் ……….

anura.jpgவன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

அந்த மக்களுக்கு உதவ விரும்பும் நலன்விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள், வர்த்தகர்கள், அமைப்புகள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து உலர் உணவுப் பொருட்கள், திரவப்பால், குழந்தைகள் பால் மா, குளுக்கோஸ், பிஸ்கட் வகைகள், சமபோஷ, அரிசி, சீனி, மா உட்பட பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் போன்றவற்றை சேகரித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கோ, அல்லது தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ, உதவி பிரதேச செயலகத்திற்கோ, மாவட்ட செயலகத்திற்கோ ஒப்படைக்கலாம்.

புலிகளின் பிடியிலிருந்து சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் படையினரின் பாதுகாப்பைத் தேடி வருகின்றனர், வந்துள்ளனர், வந்துகொண்டிருக்கின்றனர்.

மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக விசேட கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவன பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கொடையாளிகளிடம் ஐ.நா கோரிக்கை

Wanni_War_Welfare_Campஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மோதல்களற்ற பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு நாட்களாக வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தடைந்தடைந்திருக்கும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சிவிலியன்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அவசியமான நிதியுதவியை வழங்கும்படி சர்வதேச கொடையாளிகளை ஐக்கிய நாடுகள் சபை கோரியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கைக்கான பிரதிநிதி நீல் பூன், வியாழனன்று வவுனியா சென்று அங்கு வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பார்வையிட்ட பின்னர் இந்தக்கோரிக்கையை கொழும்பில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தடைந்திருக்கும் சுமார் 80,000ற்கும் அதிகமான சிவிலியன்களை தான் கண்ணுற்றதாகவும், அங்கு பல சிறுவர்களும் பெண்களும் நோய்வாய்ப்பட்டவர்களாக, போசாக்கின்றி காணப்படுவதாகவும், ஆண்கள் உடல்காயங்களுடன் கிழிந்த ஆடைகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்து வரும் இவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள், உடை, குடிநீர், சுகாதார மற்றும் வசதிகளை வழங்குவதற்கு நிதி தேவைப்படுவதாகவும், இங்குள்ள சிறுவர்களிற்கான பாடசாலைக் கல்வி வசதியினைச் செய்து கொடுத்து அவர்கள் மத்தியில் சுமூகமான மனநிலையொன்றினைத் தோற்றுவிப்பது மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிக்கு மனிதநேய குழு ஒன்றை தாம் அனுப்புவதாக அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வருகை

cvili.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கென இந்தியா அனுப்பி வைத்திருக்கும் அவசரகால உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவென வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் பிடிலியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

இச்சமயம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு இராஜ தந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரோகித போகொல்லாகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகளின் பிடியிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி வந்துள்ளனர். இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை இம்மக்களின் தேவைகளையும் நாம் இனம் கண்டுள்ளோம். குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தற்காலிக மற்றும் இடைத்தங்கல் வசதிகள் என்பனவே அத்தேவைகளாகும். இது தொடர்பாக இராஜ தந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கிய அமெரிக்கா நடமாடும் வைத்தியசாலையொன்றை வழங்கவும் முன்வந்துள்ளது. ஐ. நா. நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.

புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்மக்களின் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்லாமல் கனடா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று முன்தினமிரவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு நேற்றும் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவேன் என்றார்.

கிருஸ்ணா அம்பலவாணரின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் அவர்களின் உண்ணா நோன்பு 11 நாட்களின் பின் வியாழக்கிழமை 11.30 அளவில் முடிவுக்கு வந்தது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Wanni_War_Boat_Refugeesவவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், அவற்றை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பரோபகாரிகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக புத்தாடைகள், உலருணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல், பிஸ்கட், பால் மா, தேயிலை, பற்பசை பற் தூரிகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் சேகரித்து வருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவற்றை அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் லொறிகள் மூலம் இலவசமாக வவுனியாவுக்குக் கொண்டு சென்று வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்க முடியுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0112431590 மற்றும் 0112431579 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளரையோ அல் லது 0112395513 என்ற இலக்கத்துடன் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹலால்தீனையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து 12,000 உணவுப் பொதிகள் விமானத்தில் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தோகையான மக்களுக்கு விநியோகிக்கவென நேற்றைய தினமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப் படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக வும் அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்ததிலிருந்து விமானப் படையினர் எந்த நேரத்திலும் உதவும் வகையில் முழுமையான தயாரில் இருந்தனர்.

21ம் திகதி 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளை அவசரமாக விமானம் மூலம் படையினர் எடுத்துச் சென்றனர். அதேபோன்று, 22ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 17 ரக விமானத்தின் மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் விமானப் படைத் தலைமையகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. நேற்றைய தினம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

இரத்மலானை விமான நிலையத்திலிரு ந்து வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் ஊடாக கிளிநொச்சிக்கு இந்த உணவுப் பொதிகள் கொண்டு செல்லப்பட்டன என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.