புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தோகையான மக்களுக்கு விநியோகிக்கவென நேற்றைய தினமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப் படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக வும் அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்ததிலிருந்து விமானப் படையினர் எந்த நேரத்திலும் உதவும் வகையில் முழுமையான தயாரில் இருந்தனர்.
21ம் திகதி 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளை அவசரமாக விமானம் மூலம் படையினர் எடுத்துச் சென்றனர். அதேபோன்று, 22ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 17 ரக விமானத்தின் மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் விமானப் படைத் தலைமையகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. நேற்றைய தினம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
இரத்மலானை விமான நிலையத்திலிரு ந்து வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் ஊடாக கிளிநொச்சிக்கு இந்த உணவுப் பொதிகள் கொண்டு செல்லப்பட்டன என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.