கட்டுரைகள்
கட்டுரைகள்
கட்டுரைகளும் விவாதங்களும்
பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இன்று, காலை வவுனியா நலன்புரி முகாம்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தலைமைத்துவ பதவியை ஏற்கவுள்ள சுவீடன் பிரதிநிதி, அதன் ஆணைக்குழுவின் பிரதிநிதி மற்றும் செயலாளர், காரியாலய பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களில் குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் புதிதாககத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட்டு சமையலை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனிக்பாம் 4 ஆம் பிரிவிற்கு (ஸோன் 4) இடம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு உடனடியாக கூட்டுச் சமையலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றில் இன்று ஆங்காங்கே வன்முறைகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் விரைவில் அறிவிக்கும்.
இன்றைய மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். மொத்தம் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 117 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க நாட்டிலே முதன்முறையாக வெப் கேமராக்கள் யன்படுத்தப்பட்டன. இந்த வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப் பதிவை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரதீபா பட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் இந்தியா மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பற்றியும் அவர்கள் விவாதித்ததாகவும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது இப்படி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உதவும்முகமாக கொரிய அரசாங்கம் ஐந்து இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள இந்த நிதி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, மன்னார் மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 61 சடலங்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூந்தோட்டம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் சவச்சாலையில் சடலங்களை வைத்திருக்க கூடிய இடவசதியின்மையால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் அனைத்து சடலங்களும் ஒரே குழியில் போடப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. நலன்புரிநிலையங்களில் இயற்கை மரணமடைந்த முதியவர்களின் சடலங்களே இவற்றில் பெரும்பாலானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.
கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.
தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.
சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.
அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.
இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.
