கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் மீட்பு

mullivaikaal-02.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை  விடுவிக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் நேற்று 14ஆம் திகதி மீட்கப்பட்டதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தினம் 59ஆம் படைப்பிரிவினரிடம்  3250 சிவிலியன்களும்,  58ஆம் படைப்பிரிவினரிடம்  206 சிவிலியன்களும் 53ஆம் படைப்பிரிவினரிடம்  309 சிவிலியன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை 122,128 சிவிலியன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் – கருணாநிதி

karunanithi.jpgதேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

வவுனியா முகாம்களில் தற்போது தொற்றுநோய் பரவல் இல்லை- அரசாங்க அதிபர்

chals_.jpgவவுனியாவில் உள்ள முகாம்களிலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களிலும், உள் நாட்டில் இடம்பெயர்ந்த இரண்டு லட்சம் பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதுமான வசதிகளின்றி இருப்பதாகவும், மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதாக வரும் செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களிடம் கேட்டபோது, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்றார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதற்கு முன் கடும் வெயில் காரணமாக கொப்பளிப்பான் எனப்படும் சிக்கன் பாக்ஸ் நோய் பரவியதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அது பற்றி தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

mullivaikaal-01.jpgஎஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தப்பிவரும் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 14ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் இறுதியாக அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து நேற்றுக்காலை பெருந்தொகையான பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததாகவும் இவர்களை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணம் உள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கரையாமுள்ளி வாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தை உள்ளடக்கிய மிகவும் குறுகிய பிரதேசத்திற்கு படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டுவாக்கல் பிரதேசத்தின் ஊடாக கடந்த இரு தினங்களாக புலிகளின் பாரிய மண் அணைகளை தகர்த்த வண்ணமும், கைப்பற்றிய வண்ணமும் வேகமாக முன்னேறிச் சென்ற 59வது படைப் பிரிவினர் பொதுமக்கள் சிக்குண்ட பிரதேசத்தை அண்மித்திருந்தனர்.

நேற்றுக் காலை தொடக்கம் குறித்த சில மணிநேரத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து புலிகள் தப்பிவரும் சிவிலியன்களை தடுக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.புலிகளின் கடும் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் வர ஆரம்பித்ததை அடுத்து இராணுவத்தினர் புலிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்த பிரதேசத்திற்குள்ளும் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளை நோக்கி பொதுமக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளதாகவும் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை பாதுகாத்து சிகிச்சை அளிக்கும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முள்ளியாவளை பிரதேசத்திற்கு அவசர அவசரமாக விரைந்த ஹெலிகள் அநுராதபுரத்தை நோக்கி காயமடைந்தவர்களை அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் விமானப்படை ஹெலிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இதுவரை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்துள்ளனர்.

நேற்று உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் ஐசிஆர்சி கப்பல் திரும்பியது

green-ocean2.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் போர்ப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான உக்கிர மோதல்கள் காரணமாக அவற்றை அங்கு கரையிறக்கமுடியாமல் போனதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் என்ற கப்பலில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மூன்று தினங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் போர்ச்சூழல் காரணமாக அந்த முயற்சி நேற்றும் கைகூடவில்லை எனவும் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் கப்பலில் 25 மெட்றிக்தொன் உணவுப் பொருட்களும், ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற கப்பலில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 500 மெட்றிக் தொன் உணவுப் பொருட்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொடியுடன் கடற்படையின் பாதுகாப்புடன் நேற்று காலை முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக கப்பல்கள் இந்த உணவுப் பொருட்களை கரையிறக்கமுடியாமல் போனதாக சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

அரசு கூறுவதற்கும் புதிய செய்மதிப் படங்களுக்கும் இடையில் முரண்பாடு – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு

மோதல் பகுதியில் சனச் செறிவுள்ள இடங்களில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுவதற்கும் புதிய செய்மதிப்படங்களும் கண்கண்ட சாட்சியங்களும் தெரிவிப்பதற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல் இடம்பெறுவதை அண்மைய செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களும் வெளிப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களைப் பயன்படுத்துவதில் இலங்கை இராணுவமோ புலிகளோ தயக்கம் காட்டுவதாகத் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச்சங்கமானது மோதல் வலயத்தின் செய்மதிப் புகைப்படப் பிரதிகள் தொடர்பான பூர்வாங்க ஆய்வறிக்கையை செவ்வாய்க்கிழமை பிரசுரித்திருக்கிறது. அது கனரக ஆயுதங்களைப் பாவித்ததால் ஏற்பட்ட குறிகளையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பாவித்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டவற்றையும் காட்டுகிறது. மே 6 இற்கும் மே 10 இற்கும் இடையில் சாட்டுகிறது. மோதல் வலயத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பதையும் செய்மதிப்படம் காட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீண்டும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக மீண்டும் மீண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருப்பதாகவும் சனச் செறிவுடைய இடங்கள் மீது இலங்கைப் படையினர் ஷெல் தாக்குதல்களை எழுந்தமானதாக நடத்துவதாகவும் சாடியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாக அவசரமாக ஆராயப்பட வேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

இடம்பெயர்ந்த வன்னி சிறார்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

vavuniyatents.jpgவன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கைதடி, ஆதரவற்ற சிறுவர் இல்லம், கைதடி சித்த ஆயுர்வேதக் கல்லூரி விடுதி, பனை அபிவிருத்திச்சபை ஆராய்ச்சி நிலையங்களில் தங்கிவாழும் சிறார்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பதினெட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இச்சிறார்களுக்கான கல்விச் செயல்பாடுகளை ஆரம்பிக்க சிறுவர் நிதியம், யுனிசெவ் ஆகியன இந் நிலையங்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளன.

நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் இச்சிறார்களுக்கான கற்பித்தலில் ஈடுபடுவர். தென்மராட்சிக் கல்வி வலயம் இச் சிறார்களுக்கான பாட நூல்களையும், யுனிசெவ் இவர்களுக்கான சீருடை, கல்வி உபகரணங்களையும் வழங்கவுள்ளன.

யாழ்.இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு விழாவும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்பு விழாவும்

books.jpgயாழ்.  இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்குவார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்குவார்கள். நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொள்வார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்குவார்.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டு :ஆய்வு: “மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், நாவல்: “உதயக்கதிர்கள்’ திக்குவல்லை கமால், சிறுகதை: “இளங்கோவின் கதைகள்’ இளங்கோ, கவிதை: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, காவியம்: “திருநபி நாயகம்’ ஜின்னா ஷெரிப்புத்தீன், சிறுவர் இலக்கியம்: “உதவும் உள்ளங்கள்’ கவிஞர் மண்டூர் தேசிகன், சமயம்: “இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்’ டாக்டர் எஸ்.சிவசண்முகராசா, பல்துறை: “தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம், மொழிபெயர்ப்பு: தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு பிரசுரமானவற்றில் பரிசுக்குரியவையாக தெரிவு செய்யப்பட்டவை:

ஆய்வு: “தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்’ மருதூர் ஏ.மஜீத், நாவல்: “மீண்டும் வருவேன்’ செங்கை ஆழியான், சிறுகதை: “வரால் மீன்கள்’ எம்.எஸ்.அமருல்லா, கவிதை: “இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ எஸ்.புஷ்பானந்தன், காவியம்: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, நாடகம்: “அரங்கப்படையல்கள்’ கலாபூஷணம் க.செல்லத்துரை, சிறுவர் இலக்கியம்: “மரம் வெட்டியும் இரு தேவதைகளும்’ ஓ.கே.குணநாதன், சமயம்: “வெளிச்சத்தின் வேர்கள்’ தமிழ்நேசன், பல்துறை: “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ கலாநிதி செ.யோகராசா, மொழிபெயர்ப்பு: “பிளேக் கவிதைகள்’ வைரமுத்து சுந்தரேசன்.

பரிசு பெறும் வெளிமாவட்ட எழுத்தாளர்களுக்கு விழாக் குழுவினர் இலவச தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

மற்றுமொரு நிகழ்வாக கனக.செந்தி கதாவிருது பெற்ற சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவும் இடம்பெறும். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார். முதற் பிரதியை அ.த.கிருஷ்ணசாமி பெற்றுக் கொள்வார்.

இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காக பரிசும் பாராட்டும் பெறும் சிறுகதை எழுத்தாளர் விபரங்கள் வருமாறு: (இக்கதைகள் ஜூன் 2007 முதல் ஜூலை 2008 வரை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன)

“வைகறை மேகங்கள்’ கந்தர்மடம் தி.மயூரன் (தினக்குரல் 22.06.2007), “இது ஒரு அழிவுக்காலம்’ ஆரையம்பதி ஆ.தங்கராசா (தினக்குரல் 21.10.2007), “சகுனங்கள்’ கனகாம்பிகை கதிர்கான் (வீரகேசரி 21.10.2007), “மதமாற்றம்’ கே.ஆர்.டேவிட் (தினக்குரல் 06.01.2008), “பள்ளிக்கூடம்’ மட்டுவில் ஞானகுமரன் ஜேர்மனி (வீரகேசரி 02.03.2008), “பெரியத்தான்’ சந்திரகாந்தன் முருகானந்தன் (தினக்குரல் 02.03.2008), “அதுவும் சரிதான்’ மா.பாலசிங்கம் (தினக்குரல் 23.03.2008), “வேடத்தனம்’ மல்லிகை சி.குமார் (தினக்குரல் 30.2.2008) “வாழத்துடிக்கும் இதயங்கள்’ ந.பாலேஸ்வரி (தினக்குரல் 22.06.2008), “அதிசயம்’ தேவகி கருணாகரன் அவுஸ்திரேலியா (வீரகேசரி 20.07.2008), “ஒப்பாரி கோச்சி’ மு.சிவலிங்கம் (வீரகேசரி 13.07.2008), “துயரம் தோய்ந்த பயணத்திலே’ எஸ்.டேவிட் (தினக்குரல் 20.07.2008), “அகதிமணம்’ வெள்ளை மணாளன் (தினக்குரல் 06.03.2008), “யாதும் ஊரே’ செ.குணரத்தினம் (வீரகேசரி 27.07.2008).

மற்றுமொரு நிகழ்வாக நாவேந்தன் விருது வழங்கல் 2007, சிறுகதை தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பரிசளிப்புரையை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்துவார். பரிசுக்குரியவர்களாக “இன்னொரு புதிய கோணம்’ கலாபூஷணம் தெணியான், “வற்றாத நதி’ செங்கை ஆழியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரிசினை வைத்திய கலாநிதி த.சிவானந்தன் வழங்கவுள்ளார். நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்துவார்.

வணங்கா மண் பொறுப்பாளர் டாக்குத்தர் மூத்தியுடன் ‘பின்நவீனத்துவ’ நேர்காணல். : ஈழமாறன்

Vanni_Missionவணக்கம் தொப்புள் கொடி மற்றும் அரநாக்கொடி உறவுகளே. தொலைவார் தொலைக்காட்சியில் வாரம் தோறும் புலம் பெயர் சூழலில் இருக்கும் கோயில் சங்கம் என்று ஒரு அமைப்புக் கட்டி சுத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்து பேட்டி காணும் நாம் இன்று மிக முக்கியமான ஒரு நபரைப் பேட்டிகாண உள்ளோம். (மூத்தியை இன்னும் திரையில் காட்டவில்லை.) ஆம் அவர் வேறு யாருமல்ல வணங்கா மண் என்ற படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தி அவர்களே. இன்று தனது ஆழமான அரசியல் கருத்தை பதுக்கி கொள்ள மன்னிக்கவும் பகிர்ந்து கொள்ள கலையகத்திற்கு வந்திருக்கிறார். (டாக்குத்தர் மூத்தி இப்போது சிரித்துக் கொண்டு திரையில் தோன்றுகிறார்.)

இழிச்சவாயன்: வணக்கம் டாக்குத்தர். நீங்கள் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் போது சிங்கள நிருவாகத்திற்கு அடிக்கடி காட்டிக் கொடுத்து பல இளைஞர்களுக்கு அடிவிழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று நாம் அறிகிறோம். அதுபற்றிக் கூறமுடியுமா?

டாக்குத்தர்: என்னுடைய தலைவன் கரிகாலன் சோழன் தம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் தேசியத் தலைவன் பிரபாகரனின் வழிநடத்தலில் அரசியலுக்கு வந்த நான் அப்படிச் செய்ததில் என்ன தவறிருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் செய்யும் பித்தலாட்டம் இது. இதைப் போய்க் குற்றம் என்று சொல்கிறார்கள். இளிச்சவாயன் தம்பி, இதிலை உமக்கு நான் ஒண்டு சொல்ல வேணும். வெலிக்கடையிலை இருக்கும் போது இந்தப் போராளிகள் தப்பிறதுக்குப் பிளான் பண்ணுவாங்கள். அவங்கள் தப்பினா இருக்கிற எங்களுக்குத்தான் அடி விழும். அதாலை தழிழீழத் தன்மான உணர்வோடை காட்டிக்குடுக்கிறதை விட வேறை வழி தெரியேல்லை எனக்கு. குட்டிமணி, தங்கத்துரை ஆக்களுக்கு என்ன தலைவர் செய்தாரோ அதையே தொண்டனும் செய்தேன்.

இழிச்சவாயன்: மிக அருமையான பதில். உங்கள் தலைவர் வன்னியில் இன்று மக்களை தடுத்து வைத்து என்ன செய்கிறாரோ, மக்கள் தப்பிப் போனா தனக்கு என்ன நடக்கும் என்று சோழன் வயிறு கலங்கி இப்படிச் செய்கிறாரோ, அதையே முப்பது வருடங்களுக்கு முன் அவரது தொண்டனாக இருந்து செய்திருக்கிறீர்களே உங்கள் தமிழீழ உணர்வை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது.

டாக்குத்தர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி இழிச்சவாயன்.

இழிச்சவாயன்: நேயர்களே இன்று நாம் வணங்கா மண் படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தியை கலையக்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் கீழே கிடக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு டாக்குத்தரிடம் உங்களின் கருத்துக்களையும் பறிகொடுக்கலாம். மன்னிக்வும் டாக்குத்தரை கண்ட நேரம் முதல் எல்லாமே சுத்துமாத்து சொற்களாகவே வருகிறது. பறிகொடுப்பதில்லை. பகிர்ந்து கொள்ளுங்கள்.

இழிச்சவாயன்: வன்னியில் நடக்கும் துயரங்களுக்கு பதில் சொல்வது போல நீங்கள் எடுத்திருக்கும் படம் வணங்கா மண். அதற்கு புலம் பெயர் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கும் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றிச் கொஞ்சம் சுத்த முடியுமா. மன்னிக்கவும் சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள். நாசாமாய்ப் போன சனம் ஆஸ்டாவிலையும் ரெஸ்கோவிலையும் போய் சாமானை வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்குதள்.

இழிச்சவாயன்: அதெல்லாம் பெரிய கடையள். நல்ல பொருட்களாய்த்தானை இருக்கும்.

டாக்குத்தர்: சாமான் எல்லாம் நல்லதுதான். ஆனா வேறை இடங்களிலை கொண்டுபோய் எப்பிடி விக்கறிது? அதெல்லாம் விக்கிறதுக்கு நோர்வேய் வரைக்கும் கொண்டு போக வேண்டியதாய் போச்சு.

இழிச்சவாயன்: ஏன் விக்கவேணும?; உங்கட படக் கதையின்படி அது வன்னிக்குப் போய், வன்னியிலை உங்கட தலைவர் கைவிட்டு ஒடிப் போன மக்களுக்கு குடுக்கிறது தானை முடிவு. பிறகேன் டாக்குத்தர் விக்கவேணும்?

டாக்குத்தர்: வன்னி மக்களுக்கு சாமான் அனுப்பிற மாதிரித்தான் வெளிப்படையா பாத்தா தெரியும். ஆனா நான் வைச்சிருக்கிற ருவிஸ்ற் என்ன தெரியுமோ? வாற சாமான் எல்லாத்தையும் வித்து வீட்டு மோட்கேச்சை கட்டி முடிக்கிறதுதான். இந்த நாசமாப் போன சனம் என்னெண்டா ரெஸ்கோ ஆஸ்டா என்டு சீலடிச்ச சாமானை வாங்கித் தந்திருக்குதுகள். ஒரு இடத்திலையும் விக்க முடியாம கராச்சில போட்டு வைத்திருக்கிறேன். சொஞ்சம் டென்மர்க் நாட்டுக்கும் கொஞ்சம் நோர்வேக்கும் போயிருக்கு. மிச்சம் எல்லாம் மிச்சம் என்ற இடத்திலை இருக்கிற ஒரு கடையிலை விற்பனைக்குப் போட்டிருக்கு. வணங்கா மண்ணா கொக்கா?

இழிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். நீங்கள் மணிரத்தினத்தையும் விட நுணுக்கமாக காய் நகர்த்தியும் மக்கள் உங்களைவிட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நேயர்களே வன்னியில் எங்கள் மக்கள் தாங்கொணாத் துயரில் வாழும் இந்த வேளையில் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண்ணுக்காக செய்திருக்கும் தியாகங்கள் எண்ணிலடங்காது. இன்றைய இந்த அவலங்கள் தொடர்பாகவும் பேச இருக்கிறோம். வன்னி மக்கள் தொடர்பாக ஒரு பாடல் காட்சியைத் தொடர்ந்து நேர்காணல் தொடரும்

பாடல்: அடிடாங்க நாக்க மூக்க நாக்க மூக்க……..மூத்தி வந்தான். பேரை வைச்சான். பேரை வைச்சு காசு கேட்டான். அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க…. வெள்ளைப்புறா பறக்க விட்டான். கொள்ளை பணம் மடக்கி விட்டான். வன்னியிலை அண்ணைக் கெண்டு அடிடாங்க நாக்க.. மூக்க நாக்க மூக்க……என்ரை புள்ளை மெடிசின் செய்ய உன்ரை புள்ளை பாளிமெண்டில் அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க….

இழிச்சவாயன்: ஒரு அருமையான பாடலைத் தொடர்ந்து டாக்குத்தர் மூத்தி இந்த வணங்கா மண் கதை எவ்வளவு காலமாக உங்கள் மனதில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: நான் வீடு வாங்கிய காலத்தில் இருந்து இந்த யோசனை இருந்தது. எதுக்கும் ஒரு காலம் வரவேணும் பாருங்கோ. எத்தினை படம் செய்திருப்பன். ஓரு படத்திற்கும் சனம் இவ்வளவு ஆதரவு தரேல்லை. வணங்கா மண் என்னைப் பொறுத்தவரையில் ஜரோப்பா கனடா என்று எல்லா நாடுகளிலும் நல்ல கிட். அதுதான் நான் இப்ப சாபம் போன்ற ரீவியளிலை வாறதைப் பாக்க மாட்டியள்.

இளிச்சவாயன்: நல்லது. இப்போது சாம்பொண்டில் தொலைக்காட்சியில் இருந்து முகட்டுக் கவிஞன் உத்தரக் கவிஞன் இணைப்பிலிருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம். குறுக்கால போக வணக்கம்.
உத்தரக்கவிஞன்: டாக்குத்தரிட்டை ஒரு கேள்வி.

இளிச்சவாயன்: கேளுங்கோ. நீங்கள் தானே அந்த முகட்டைப் பாத்துக் கொண்டு வன்னி மக்கள் தொடர்பா கவிதை வாசிக்ற கவிஞன்.

உத்தரக் கவிஞன் : ஆமாம் அது நான் தான். இன்றும் டாக்குத்தரைப் பற்றி ஒரு கவிதை வாசிக்க இருக்கிறேன்.

இழிச்சவாயன்: அருமை. டாக்குத்தரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேளுங்கள்.

உத்தரக் கவிஞன்: உங்களுக்கு ஞபகம் இருக்கோ தெரியாது. நீங்கள் வெலிக்கடைச் சிறையிலை இருக்கும்போது, வெறும் ஆயுள்வேதி டாக்குத்தர் தான். பிறகு வெளியிலை வந்து ஒரு வருடம் இந்தியாவில நிண்டியள். பிறகு ஒரே ஓட்டமாய் லண்டனுக்கு வந்திட்டியள். லண்டனுக்கு வந்த கையோட மூத்தி பிஎச்டி எண்டு போடுறியள். இவ்வளவு கெதியா கலாநிதிப் பட்டம் குடுக்கிற பல்கலைக்கழகம் எங்கை ஜயா இருக்கு. எனக்கும் டொக்டர் எண்டு பொடக் கனநாளா ஆசை. இப்ப டொக்டர். புறபெசர். எண்டு சொன்னாத் தான் கொஞ்சம் காசு சுருட்ட வசதியா இருக்கும்.  சிலவேளை சுருட்டுவதில் தலைசிறந்தவர் என்பதற்காக உங்களுககு கௌரவப் பட்டம் ஏதேனும் கிடைச்சதோ அதை ஒருக்கா உங்கட பாதுகாப்பா இருக்கிற புள்ளையளாணை உண்மையைச் சொல்லங்கோ.

டாக்குத்தர்: வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள். எமது போராளிகள் வெறும் அலவாங்கினாலும் கருங்காலிக் கொட்டனுகளாலுமே மக்களை போட்டுத் தாக்குவார்கள். அரசாங்கமோ ஆட்லறியால் அடிப்பது கண்டிக்கப்படவேண்டும். வணங்கா மண் அதனையே இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

இளிச்சவாயன்: கவிஞரே இணைப்பில் இருக்கிறீர்களா?

உத்தரக் கவிஞன்: நான் என்ன கேக்கிறன. டாக்குத்தர் என்ன சொல்லிறார். டொக்டாமாரின்ரை தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. அண்ணை இழிச்சவாயன் அண்ணை… கவிதையை வாசிக்கட்டோ:

இளிச்சவாயன்: வாசியுங்கோ

உத்தரக்கவிஞன்:
வெலிக்கடைச் சிறையில்
அடிக்கடி நீங்கள்
கொடுத்த தகவலில்
நூறு இளைஞர்கள்
தாறுமாறாகத் தாக்கப் பட்டனர்.
உங்கள் தலைவன் போலவே
கூட்டுச் சேர்வதும்
காட்டிக்கொடுப்பதும்
தமிழீழ தலைநகர் மைந்தா
உன்னால் சிறையில்
பலர் சிந்தினர் ரத்தம்
உன்தலையால் வன்னியில்
வாழ்விழந்தனர் பல லட்சம்

தலைவர் சிரிக்க
தலைவற்றை பிள்ளைகள்
நீச்சல் குளத்திலே குளிக்க
வன்னிப் பிள்ளையள்
பள்ளம் மேடெல்லாம்
பிணமாக் கிடக்க
நாலைஞ்சு போட்டோ
குளோசப் வேறை.

எடுத்த கையோடை லண்டன் பறந்து வந்து
அக்குபஞ்சர் ஊசியும் போட்டாய், குள்ளச் சோழனே
வணங்கா மண் காசெல்லாம் சுருட்டியும் போட்டாய்
புலம்பெயர் மக்களுக்கு
புதுக்கதையும் சொல்கிறாய்
டாக்குத்தா….. இது என்ன நாட்டுக் கூத்தா

இளிச்சவாயன்: நல்லது உத்தரக் கவிஞன். நீங்கள் முகட்டைப் பாக்கத் தொடங்கிட்டியள் போல கிடக்கு. இனி நிப்பாட்டமாட்டியள். உங்கள் கவிதையை சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தொடருங்கள்.

இளிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். உங்களுக்குத் தெரியும் ஜமுனா ராஜேந்திரன்.

டாக்குத்தர்: சினிமா விமர்சகர்…

இளிச்சவாயன்: ஆமாம். அவரே தான். அவர் உங்களுடைய வணங்கா மண் படம் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண் கப்பலை விடுறமாதிரி பாவனை காட்டி காசு பொருள் எல்லாம் சேத்தபிறகு கப்பலையும் காட்டாமல் காசு சுருட்டின கீரோவையும் சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தலை காட்டாமல் காசு கொடுத்தவர்களை அம்போ என்று விடும் முடிவு பின்நவீனத்துவத்தை திருப்பிப்போட்டு எடுத்தபடம் என்றும் கார்ல் மாக்சினுடைய காலுக்கும் மாவோவின் மண்டைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மேலோட்டமாக எடுத்துச் சொல்லும் படம் என்று கூறியிருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

டாக்குத்தர்: இதற்கு பதில் சொல்ல முதல், நான்  முதலில் இயக்கிய வெண்புறா படம் பற்றி சிறிது சிலாகிக்க வேணும். வெண்பறா படம் தொடங்கிய போது சில நண்பர்கள் சொன்னார்கள் அந்தப் படத்தின் கதையும் களமும் வேறாக இருப்பதால் அவ்வளவாகச் சம்பாதிக்க முடியாது என்று. நான் அவர்களின் பேச்சைக் கேட்காது படத்தை எடுத்தேன். கொமர்சியல் சக்சர்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் திட்டத்தின் படி வீட்டை அகட்டிக் கட்ட முடிந்தது. இந்த அனுபவம் ஒரு சுத்துமாத்து படைப்பாளி என்ற முறையில் எனக்கு நல்ல பாடத்தைக் கொடுத்தது. இனி எடுக்கும் படத்தில் இந்தத் தவறை விடக்கூடாது என்று காத்திருந்த போதுதான் வன்னி மக்களின் அவலம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நல்ல தலைப்பொன்றுக்காக ஒரு நாள் முளுக்க நித்திரை இல்லாம இருந்து யோசிச்சன். அப்போது கிடைத்த பெயர்தான் வணங்கா மண். ஜமுனா சொன்னமாதிரி பின்நவீனத்துவத்தை பின்னிப் போட்டு கார்ல்மாக்சை கரைச்சு  தெளிச்சு வணங்கா மண் என்று எடுத்தேன். நல்ல கலக்சன். அதிலை ஒரு பகிடி என்ன தெரியுமோ? கப்பல் இப்பவும் வன்னிக்கு போய்கொண்டிருக்கெண்டு சொல்லிற சனமும் இருக்கு. தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் எண்டு சொன்னமாதிரி.

இளிச்சவாயன்: நான் நினைக்கிறேன். ஜேர்மனியில் இருந்து ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம்

அழைப்பு: வணக்கம். டாக்குத்தரோடை கதைக்கலாமோ?

இளிச்சவாயன்: தாராளமா? உங்கள் கேள்விகளை தயவு செய்து சுருக்கமாக கேளுங்கள்.

அழைப்பு: டேய்…… மகனே….. ஆண்டி….. றிங்ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

இளிச்சவாயன்: அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அழைப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் ஆத்திரம் புரிகிறது. அதற்காக அசிங்கமான வார்த்தைகளில் தயவு செய்து திட்ட வேண்டாம். வேண்டுமானால் மூத்தியின் வீட்டு முகவரியைக் கொடுக்கிறோம். அங்கு போய் படத்தின் முடிவில் ஏண்டா நாயே கப்பல் வன்னிக்குப் போகவில்லை என்று புலிப் பாணியில் கேட்டாலும் சரி. பின்நவீனத்துவ முறையிலை கேட்டாலும் சரி. அது உங்களுடைய பொறுப்பு. பணம் கொடுத்தவர்கள் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது. என்று கேட்கத் தவறுவதால் தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே செல்கிறார்கள். தயவு செய்து பாராளுமன்றத்திற்க்கு முன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் போல வணங்கா மண் இயக்குனரின் வீட்டுக்கு முன்னும் செய்யத் தயங்க வேண்டாம்.

இளிச்சவாயன்: இறுதியாக ஒரு கேள்வி. இந்த இங்கிலண்ட் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யிறவை பிள்ளையளைப் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம். படிப்பு முக்கியம் இல்லை. எல்லாரும் வந்து போராடுங்கோ எண்டு சொல்லுகினம். நீங்களும் அதுக்கு பூரண உடன்பாடு எண்டு செல்லிறியள். அப்ப ஏன் உங்கட பிள்ளையளை போராட்டத்திற்கு அனுப்பேல்லை.

டாக்குத்தர்: தலைவரை பின்பற்றிறதிலை என்னை விட்டா வேறை ஆள் கிடையாது. தலவைர் என்ன செய்தவர். தன்ரை பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு, வன்னிப்பிளளையளை கிடங்கு வெட்டி கழுத்தளவு வெள்ளத்திலை காலுக்கு செருப்புக் கூட இல்லாம அடிபட்டுச் சாக விட்டமாதிரி லண்டனிலையும் இந்த நாசமாப் போவாற்றை பிள்ளையளின்ரை படிப்பைக் கெடுத்து தெருவிலை விட்டிட்டு நான் என்ரை பிள்ளையளை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பிட்டன்.
 
இளிச்சவாயன்: தமிழ் மக்களின போராட்டத்தை விளையாட்டு மைதானமாக்கி விதை நிலமாக்கி வியாபாரமாக்கி லாபம் ஈட்டி மக்களை மாக்களாக்கிய வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வணங்கா மண்ணுக்குப் பிறகு அடங்கா பற்றுத் தொடங்கியிருப்பதாக கேள்ளிப் படுகிறோம். புடுங்காத் தமிழன் என்று இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்.

பொது மக்கள் கொலை தொடர்பில் அரசாங்கம் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டுத்தீர்மானம்

manig.jpgஅரசாங்கத்தின் எறிகனை தாக்குதல்களினால், பாதுகாப்பு வலயத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுவது தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கைக்கு, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் சிறிலங்கா சுதந்தி கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச் சாட்டினை முன்வைக்கும் போது, அதில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி, தம்மீது குற்றம் இல்லை என்றால் அதனை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.இவ்வாறான குற்றச் சுமத்தல்கள் மூலம், சர்வதேச ரீதியாக இலங்கையை தலைகுனிய செய்ய முனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்