இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் போர்ப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான உக்கிர மோதல்கள் காரணமாக அவற்றை அங்கு கரையிறக்கமுடியாமல் போனதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
கிறீன் ஓசியன் என்ற கப்பலில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மூன்று தினங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் போர்ச்சூழல் காரணமாக அந்த முயற்சி நேற்றும் கைகூடவில்லை எனவும் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
கிறீன் ஓசியன் கப்பலில் 25 மெட்றிக்தொன் உணவுப் பொருட்களும், ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற கப்பலில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 500 மெட்றிக் தொன் உணவுப் பொருட்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொடியுடன் கடற்படையின் பாதுகாப்புடன் நேற்று காலை முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக கப்பல்கள் இந்த உணவுப் பொருட்களை கரையிறக்கமுடியாமல் போனதாக சரசி விஜேரட்ண தெரிவித்தார்.