நீர் மின் உற்பத்தி குறைந்துள்ள போதும் எக்காரணம் கொண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன அறிவித்துள்ளார்.
மேலதிக மின் அழுத்தம் காரணமாக நேற்று முன் தினம் (13) இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதையடுத்து நீர் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.
அதனால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோருகிறோம். இதன் மூலம் 30 வீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். நீர் மின் உற்பத்தி குறைந்த போதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அமைச்சர், மின்சார சபை உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நேற்று முன்தினம் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார சபை மின்வெட்டை அமுல்படுத்தவில்லை எனவும் அதிகூடிய மின் அழுத்தத்தினாலேயே மின்சாரம் தடைப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.