கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு- ராணுவம் குவிப்பு

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோரை சுட்டு கொன்று இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பில் கொரில்லா தாக்குதல் நடத்தலாம், அதற்கான அபாயம் அதிகமிருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது.

இதனால் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது

பிரபாகரன் பற்றிய செய்தி:முன்னெச்சரிக்கையாக சென்னையில் 300 பேர் கைது

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போர் முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரன் பற்றிய தகவல்களால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வியாசர்பாடியில் அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
 
இந்த சம்பவங்களால் சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னையில் 110 பேரை இணை கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மத்திய சென்னை இணை கமிஷனர் ரவிகுமார் 72 பேரை கைது செய்தார். சென்னை முழுவதும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்; வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுவார்கள்: தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,   ‘’இலங்கை பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்க வில்லை என்று கூறுவது தவறு. அங்கு தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அறிந்த தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் வென்று விட்டதாக ராஜபக்சே எண்ணலாம். ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே கிடையாது. வேறுவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கும்’’ என்று தெரிவித்தார்.

ஜப்பானில் பன்றிக்காய்ச்சல்

japan.jpgஜப்பானில் மேலும் 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜப்பானில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒசாகா மற்றும் ஹியோகா பிராந்தியங்களை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள், இவர்களில் ஒருவர் கூட நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

ஜப்பானில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட நால்வருக்கு வட அமெரிக்காவில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றியது., மற்றவர்கள் அனைவருக்கும் ஜப்பானுக்கு உள்ளாகவே தொற்றியுள்ளது.

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்விமேம்பாட்டுக்கு விசேட திட்டம்

mullivaikaal-01.jpgஇடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் வவுனியா செல்லவுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா,  நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களுடன் இக்குழுவினர் செல்லவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர கல்வி அமைச்சினூடாக அவசரகாலக் கல்வியை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதிக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய வடக்கில் யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை,  உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவர். அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ்விடம்பெயர்வினால் பாதிப்படைந்துள்ளது. 

புலிகளின் மேலும் 3 தலைவர்களது சடலங்கள் மீட்பு -பாதுகாப்பு அமைச்சு தகவல்

SL_Army_in_Final_Phaseபுலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு வடக்கே தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வரும் படையினர் இன்று காலை புலிகளின் மேலும் 3 முக்கிய தலைவர்களின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ,  பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் இராணுவத்தின் 53ஆம் மற்றும் 58ஆம் படைப் பிரிவினர்  விசேட படையினருடனும் இராணுவக் கொமாண்டோக்களுடனும் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

mili.jpgதிங்களன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது எழும் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது, இலங்கை அரசு மீது எழும் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

சிறார்கள் உட்பட ஏராளமான சிவிலியன்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருவதாக செய்திகள் வருவது கண்டு ஐரோப்பிய ஒன்றியம் விரக்தியும் வேதனையும் அடைந்திருப்பதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள எமது செய்தியாளர் கூறுகிறார். பொதுமக்கள் நிறைந்து காணப்பட்ட இடங்களிலும் அரச படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியாகிய தகவல்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் கவலையைத் தந்துள்ளதாக அது கூறுகிறது.

இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவலம் நிலவுகிறது: அமைச்சர் டேவிட் மிலிபான்ட்

david-maliband.jpg இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவல நிலை இருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. வின் தலைமைச் செயலாளருக்கு தாம் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

“இலங்கையில் மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் .அங்கு காப்பாற்றப்பட வேண்டிய உயிர்கள் இன்னமும் உள்ளன. மக்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. உணவும் குடிநீரும் விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆகவே இப்படியான பிர்ச்சினைகள் எல்லாம் இருக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கததை விட அதிகமாக உயர்ந்த தரத்தைப் பேண வேண்டிய ஒரு ஜனநாயக அரசு, அந்த மக்களின் நலனில் முக்கிய பொறுப்புக்களை கொண்டிருக்க வேண்டும் .”என்றும் இலங்கை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை காப்பாற்ற விமானநிலைய மலசல கூடத்தில் கலந்துரையாடல்

Selvarasa_Pathmanathan_LTTEஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளதாக இன்றைய சிங்கள பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் இருப்பதாக கருதப்படும் கே.பி.யுடன் தொடர்பு கொள்வதற்காக வேண்டி நம்பியார் தேர்ந்தெடுத்த இடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடமென்றும் இப்பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுத கடத்தல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சர்வதேச இரகசிய  பொலிஸாரினால் (இன்டர்போல்ட்) தேடப்பட்டு வரும் கே.பி. தாய்லாந்திலிருந்து திருட்டுத்தனமாக மலேசியாவினுள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  இப்படிப்பட்ட ஒரு நபருடனேயே ஐ.நா.வின் பிரதிநிதி இரகசியமாக தொடர்புகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி இலங்கையிலிருந்து வெளிவரும் முக்கிய தினசரிகளில் ஒன்றான திவயினவில் முதல் பக்க செய்தியாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் பலி – பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

breaking-news.jpgஇன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார். 

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார். இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸிலும்   கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பா. நடேசன் தமிழ்ச் செல்வனின் மறைவினையடுத்து அவர் வகித்துவந்த பதவியை வகித்து வந்தார். விடுதலை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது