கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

school-girls.jpgபுனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர் மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வே தேர்தல் – நோர்வே நக்கீரா

தேர்தல் 2009 நோர்வேயில் களமாடி 15.09.2009 முடித்திருக்கிறது. இடது, வலது, நடு, சிவப்பு, நீலம், பச்சை, என மக்களைப் பங்குபோட்டுப் பங்குபிரித்து ஜனநாயகமான சனநாயகம் பதில் தந்திருக்கிறது. நாம் எவ்வளவுதான் புலம்பெயர் நிலத்தில் புதைந்தாலும் நாம் பாலர்களாய் தவழ்ந்தபோது நக்கித்தின்ற மண் எமது உடம்பில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சிந்தனை சிறகடிக்க என்நாட்டிலும் இப்படிச் சுதந்திரமாய் மக்கள் வாக்களிக்கும் நிலைவராதா என்ற ஏக்கம் எம் உணர்வுகளை எடைபோடத்தான் செய்கிறது.

norway partiesகட்சிகள்

றோசா பூ: தொழில்கட்சி
நீலத்துண்டு: வலதுசாரிகள்
பச்சை இலை: மத்தியகட்சி
SV: சோசலிச இடதுசாரிகள்
Fr:(அப்பிள்): முன்னேற்றக்கட்சி
Krf: கிறீஸ்தவக்கட்சி
V: இடதுகட்சி

நோர்வேயில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வன்ஸ்திர என்று அழைப்பப்படும் இடக்கட்சி (இடக்கட்சி என்பதற்காக இவர்கள் இடதுசாரிகளாக இருப்பார்கள் என்று எண்ணினால் தவறானது) இம்முறை தேர்தல் தடைவரப்புக்குக் தட்டத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் என்றும் வலதுசாரிகளுடனேதான் கூட்டமைப்பார்கள். தேர்தல் தோல்வியை கருத்திற் கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து லாஸ் ஸ்பூண்கொய்ம் பதவி விலகியுள்ளார்.

பலகாலமாக நோர்வேயில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நாட்டை நல்ல நிலைக்கு முன்னேற்றிய தொழிலாளர் கட்சி சுமார் 35.4 வீதமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 2.7 வீதம் அமோகமான வாக்குக்களைப் பெற்றுள்ளார்கள். ஆளுங்கட்சியில் தொடர்ந்திருக்கும் கட்சிகள் அடுத்தடுத்து வெல்வது கடினம். இந்த உலகம் முழுவதும் ஆடிப்போன பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாய் வென்று, தேர்தலிலும் தம்வெற்றியை நிலைநாட்டிய தொழிலாளர் கட்சிக்கு எம்வாழ்த்துகள்கள். இம்முறை இவர்கள் முக்கியமாக முன்வைத்த விடயங்கள் பாடசாலை, படிப்பு, தொழில் வாய்ப்பு என்பனவாம். ஒவ்வொரு முறையும் தொழிற்கட்சி கூட்டமைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

தொழிலாளர் கட்சியை அடுத்துப் பெரியகட்சியாக வளர்ந்துள்ள முன்னேற்றக்கட்சி (Frp) 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெருங்கட்சியானாலும் எதிர்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பார்களா என்பது கேள்விதான். அவர்கள் நேராகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்களை எதிர்ப்பவர்கள். ஏறக்குறைய துவேசத்தை வளர்ப்பவர்கள் எனலாம். எமது நாட்டைப்போல் வாக்குகளைப் பெறுவதற்காக துவேசத்தை வளர்த்துவிட்டு நாடு என்னவாகி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இந்த வாய்பேச்சு வீரர்கள் அனைவரையும் கூட்டமைப்பாக இயங்க அழைத்தாலும் எந்தக்கட்சியும் இவர்களுடன் இணைய விரும்புவதில்லை. அதற்கு வெளிநாட்டவர்கள் கொள்கையல்ல காரணம். இவர்களிடம் நிரந்தரமான உறுதியான எந்தக் கொள்கையையும் காணவியலாது. அன்று சொன்னோம் உங்களுக்கு இப்பதான் தெரிகிறதா என்று அடிக்கடி கேட்பார்கள். இலகுவாக எதையும் பொறுப்பிலில்லாதபோது பொறுப்பற்றுச் சொல்லலாம். இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவர்களுடன் எந்தகட்சியும் இணைந்து அரசமைக்கவோ எதிர்கட்சியமைக்கவோ விரும்புவதில்லை.

உதாரணமாக; தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தவேளை கட்சித் தலைவர்களின் உரையையும் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியின் தலைவி சீவ் என்பவர் மேடையில் அறைகூவல் விடுத்தார்; நாம் ஏனைய வலதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க விரும்புகிறோம், இடது கட்சியையும் சேர்த்துத்துத்தான் என்றார். அவவே தன்பழைய தலைவரான கார்ல் ஈ காகனை அழைத்துப் பேசுமாறு கேட்டபோது அவர் இடதுகட்சி வேண்டாம் என்று பேசினார். கட்சித்தலைவி வாய்மூடமுன்னரே மறுதலிப்பு. இப்படியான ஒருகட்சி இம்முறை 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் நோர்வேயின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதுதான். இவர்களிடம் வெளிநாட்டவர் எதிர்ப்பு என்பதே முன்னுரிமையாக்கப்படும். இவர்கள் கருதும் வெளிநாட்டவர்கள் நிறமனிதர்கள் அதாவது கறுப்பு, மண்ணிநிறங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பழைய தலைவர் கார்ல் தங்குவதே ஸ்பானியாவில்தான். அவருக்கு அங்கே வீடு உண்டென்றும், நோர்வேயை விட அதிகமாக அங்கேதான் தங்குவார் என்றும் அறியப்படுகிறது. இக்கட்சி எவ்வளவுக்கெவ்வளவு நோர்வேயின் சேமிப்புப் பணத்தை எடுத்து தூதாரித்தனம் செய்ய முடியுமோ அதற்கான வரவுசெலவுத் திட்டத்தையே இவர்கள் முன்மொழிவார்கள். அடிப்படை உணவு விலையை விட சிகரெட், வைன், மது போன்றவற்றின் விலையை குறை என்பார்கள்.

norway parlimentகட்சிகளின் வாக்குறுதிகள்

தொழிலாளர் கட்சி :- சமமான பாடசாலை அனுமதி, போதியளவு அரச உடைமைகள், தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல், எல்லோருக்கும் வேலைவாய்பு வயோதிபர் பாதுகாப்பு என்பனவாகும்.

சோசலிச இடதுசாரிகள் :- சுற்றம் சூழல்பாதுகாப்பு, சமமானவரி அல்லது சிறுகுறைப்பு, அரசபோக்குவரத்துச் சேவையை முன்னுரிமைப்படுத்தல், நீதியான வேலைவாய்ப்பு, பாடசாலை, சமூகஉதவி, தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல்,

வலதுசாரி கட்சி :- வரிக்குறைப்பு, தனியார் மயமாக்கல், தனியால் முதலீடுகளை ஊக்குவித்தல், அரசஉடமைகளை ஏலத்தில் விடுதல், தனியார் பாடசாலைகளை ஊக்குவித்தல், பெருந்தெருக்கள் அமைத்தல், வீதிப்பராமரிப்பு.

முன்னேற்றக்கட்சி :- அகதிகளைக் குறைத்தல், வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்துதல், முல்லா கிரேக்கார் எனும் குறுடிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதத் தலைவனை நாட்டை விட்டு வெளிறேற்றல், அரச உடமைகளை தனியார் மயமாக்கல், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமாக முதலாளிகளுக்குச் சலுகைகள், மாணவர்களின் படிப்புக்கான வங்கிக்கடனை நிறுத்துதல், பெருந்தெருக்கள், வீதிகள் அமைத்துப் பாதுகாத்தல், மது, சிகரெட்டுகளின் விலையைக் குறைத்தல்.

வலதுசாரிகளின் கண்களில் சுற்றம் சூழல் என்பது ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லையோ. மேலும் 2009 தேர்தலில் துவேசக்கட்சியை விழுத்துவதற்காகவே இடதுசாரிகளுக்குப் பல வெளிநாட்டவர்கள் தமது வோட்டுக்களை இட்டார்கள்.

சோசலிச இடதுசாரிகளின் ஒரு பிரதிநிதிதான் எரிக் சூல்கெய்ம். இவர்தான் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தடிகொடுத்து ஓடியவர். இவர் தன்கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சோசலிச இடதுசாரிகளை புறக்கணிக்குமாறும் கம்யூனிஸ்கட்சிக்கு (கம்யூனிஸ்கட்சி/ Red / RV ) வாக்களிக்குமாறும் ஒரு தமிழ்குழு வேண்டுகோள் விடுத்தது. இது சரிதானா என்பதை அலசிப்பார்ப்பது முக்கியமானது.

இந்த கம்யூனிஸ்கட்சி அதி கூடுதலாக ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார். கடைசி காலங்களில் பல ஆண்டுகளாக அவர்கள் நாமமே பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இக்கட்சிக்கு வாக்களிப்பதூடாக எம்தமிழர்களின் வாக்குகள் பெறுமதியற்று விட்டன. காரணம் இக்கட்சியில் ஒருவர் கூட நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லை. இத்தமிழர்களின் வாக்குகள் மற்றைய இடதுசாரிகளுக்கு விழுந்திருந்தால் குறைந்தபட்சம் வாக்குவீதமாவது இடதுபக்கமுள்ள ஒரு கட்சிக்குக் கூடியிருக்கம் அல்லவா? இன்னும் அரசியலில் நாம் தீர்க்க தரிசனமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.

நோர்வேயில் இடதுசாரிகள் கூடுதலாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், வலதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளுக்கும் தம் வாக்குக்களைப் போடுவார்கள். சுமார் 1 அல்லது 2வீதமான மக்கள் மட்டுமே இடதுசாரிகளா? வலதுசாரிகளா ஆட்சியில் அமர்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம்:- தொழிலாளர் கட்சி 2.7 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதேவேளை சோசலிச இடதுசாரிகள் 2.6 வீதத்தால் குறைந்துள்ளார்கள். ஆக 0.1வீதம் மட்டுமே தம்வாக்குக்களை மாறிப் போட்டிருக்கிறார்கள். இதே போன்றே வலதுசாரிகளிலும் 0.9 வீதமானவர்கள் மட்டும் தம்வாக்குக்களை மாறிப் போட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 0.1 சதவீதமான மக்களே தேர்தல் முடிவகளைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மேலும் துவேசக்கட்சியான முன்னேற்றக் கட்சியின் அபரீதமான முன்றேற்றம் நாட்டை போரொன்றிற்கோ கலவரம் ஒன்றிற்கோ இட்டுச்செல்லும் என எண்ணத் தோன்றுகிறது. இலங்கையில் 70கள் போல் துவேசப்பின்னணி தலைதூக்கும் போது அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தூக்கிய நிலை கண்முன் விரிகிறது. வெளிநாட்டவர்களின் அதிக வரவு இக்கட்சிக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. அதிலும் வெளிநாட்டவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர் வருகை அதிகரிப்பும் துவேசத்தை அதிகரிக்கிறது. ஐரோப்பியர் பார்வைக்கு வெள்ளையர்களாய் இருப்பதால் அவர்களை வெளிநாட்டவர்கள் என்று இக்கட்சி கணிப்பதில்லை. இந்த கிழக்கு ஐரோப்பியரே முக்கியமான பெரிய சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள். இக்கட்சி எதை எடுத்தாலும் கறுப்பு வெளிநாட்டவர்களையே தாக்குவார்கள். முக்கியமாக முஸ்லீம்களே இவர்களின் சத்துருக்கள்.

இக்கட்சியின் வளர்ச்சி எம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்கு நாகரீகத்தில் இருந்து மனிதவதை வரை நாம் முன்னோடிகளே. எமது சுவடுகளைதான் இவர்கள் தொடர்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பெரும்பான்மை வாக்குக்களை ஏன் தொழிற்கட்சி பெற்றது என்றால்; இப்பொருளாதார நெருக்கடியிலும் நாட்டை உடையவிடாது வங்கி வட்டிகளைக் குறைந்து மக்களிடையே பணப்புழக்கத்தை சீர்படுத்தியதும், துவேசக்கட்சியை நிறுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் தொழிற்கட்சி தெரிவுசெய்ததும், வலது பக்கத்தவர்களிடையே நிரந்தமில்லாத கூட்டுத்தலைமை என்பதெல்லாம் தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இத்தொழிற்கட்சி வரி உயர்த்துவது வழக்கம்.

இன்னும் நாலு வருடங்களின் பின்னரும் தேர்தலில் துவேசக்கட்சி இதைவிடப் பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிலவேளை கூட்டமைக்காமலே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா

21-somdev.jpgடேவிஸ் கோப்பைடென்னிஸ்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் உலக பிரிவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ்  தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.

இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய்,  வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா  நுழைந்துள்ளது.

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம்

ramadan-mosque.jpgஐக்கியம், சமாதானம், சகிப்புத்தன்மை நட்புறவு என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் நாட்டின் சமாதான முன்னேற்றங்களுக்கான பங்களிப்பையும் நாம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் இன்று பேருவகையுடன் கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு மாதமான ரமழான் மாதத்தின் மிக முக்கியமான மார்க்கக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாட்டங்களில் உலகெங்கிலும் வாழும் தமது ஈமானிய சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றார்கள்.  புனித அல்குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம் மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப ஒரு உயர்ந்த மார்க்கக் கடமையை நிறைவேற்றி முடித்ததன் பின்னர் மகிழ்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் உள்ளது.

இலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிங்களவர்கள், தமிழர்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்த நாட்டை தாய்நாடகக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா சமூகத்தவர் களுடனும் நட்புறவுடன் வாழ்ந்து வந்துள்ளதோடு, நாட்டின் முன்னேற்றதிற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

கடந்த வருட ஈதுல் பித்ர் கொண்டாட்டத்தின்போது நாம் கிழக்கு மாகாணத்தையும் அங்கு வாழும் பெருந் தொகையான முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருந்தோம். இன்று முழு நாடுமே பயங்கரவாத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு வட மாகாணத்தில் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச்சென்று சுதந்திரமாக தமது சமய பாரம்பரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு முகாமில் 40 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

தங்கள் மீதான வழக்குகளை விரைவாக முடித்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தொடங்கிய 40 அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. இவர்களில் பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக 20 அகதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தங்கள் மீதான வழக்குகளை முடித்து, விடுதலை செய்து பிற முகாம்களில் தங்கியிருக்கம் தங்களது குடும்பத்தினருடன் சேர அனுமதிக்க வேண்டும் என செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் கோரி வருகின்றனர். சமீபத்திலும் இதுபோன்ற போராட்டம் நடந்தது. இதையடுத்து சிலரை அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மினி உலககோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று ஆரம்பம்

110909-india.jpgமினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 6 வது சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடப்பதாக இருந்தது.

ஆனால் அங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டு அது இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ந் திகதி வரை நடைபெறுகிறது.

முந்தைய போட்டிகளில் குட்டி அணிகளும் பங்கேற்றன.  ஆனால் தற்போது முதல் முறையாக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்குவதால் ஒவ்வொரு ஆட்டங்களும் விருந்து படைப்பதாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ் தான், நடப்பு சம்பியன் அஸ்திரேலியா, மேற் கிந்திய ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும்.

தற்போதைய நிலவரப் படி ரேங்கில் முதல் 3 இடங்களை வகிக்கும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுக்கே கோப்பையை வெல்வதில் முன்னணியில் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் யாருமே எதிர்பார்க்காத பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தது போல் மீண்டும் அவை இங்கு அதிசயம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சமீபத்திய தொடர்களில் அடிப்பட்ட நியூசிலாந்து இதுவரை எந்த ஐ.சி.சி. கோப்பையும் வெல்லாத இங்கிலாந்து ஆகிய அணி கள் ஏதேனும் மாயா ஜாலம் காட்டுமா என்பதை பார்க்கலாம். ஒப்பந்த பிரச்சினை தீர்வு காணப்படாததால் கெய்ல், சர் வான், சந்தர்பால், பிரா வோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாம் 2ம் தர அணியாக களம் இறங்கி உள்ள மேற்கிந்திய அணி யின் நிலைமை மட்டுமே இங்கு பரிதாபமாக உள்ளது. ஆனால் இந்த அணி ஏதேனும் வெற்றி பெற்றாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமாக உள்ளது.  இதே போல் இந்தியா- அவுஸ்திரேலியா மோதலிலும் அனல் பறக்கும்.

ஒரு நாள் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பியன்ஸ் போட்டி ஐ.சி.சி. மிகவும் முக்கியமான போட்டியாக கருதுகிறது. இந்தப் போட்டியின் வெற்றி, அதற்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவையே ஒரு நாள் போட்டியின் எதிர்கால தலைவிதியாக அமையும்.

புரிந்துணர்வு, நட்பு, சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம்!- பிரதமர் ரட்னசிறி பெருநாள் வாழ்த்து

210909ramzan.jpgசமூகங் களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நட்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்தப் புனித மிகு நோன்புப் பெருநாளில் அனைவரும் கைகோர்ப்போமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் போன்றே உலகவாழ் முஸ்லிம்கள் ஒருமாத காலம் பகல் நேரங்களில் உண்ணாது குடிக்காது உபவாசம் இருந்ததன் பின்னர் கொண்டாடுகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 இஸ்லாம் என்பது சமாதானத்தைப் பிரதிபலிக்கின்றது. குரோதம், துவேசம் என்பவற்றை அகற்றி ஒரு பொதுவான நோக்கத்தின்பால் ஒன்றுபடுவது முக்கியமானதென இஸ்லாத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வழியில் சென்று ஒருமாத காலமாக பகல் வேளையில் பசித்திருந்து அனைத்து இனங்களிற்கும் கருணை, இரக்கம் என்பன காட்டி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் இந்த காலத்தை செலவிடுகின்றமை நாம் காணக்கூடிய முக்கிய அம்சமாகும்.

முப்பது ஆண்டுகளின் பின்னர் நாட்டு மக்கள் அச்சம், பயமின்றி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு இடத்திலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளமையால் இம்முறை நோன்புப் பெருநாளை நாடு முழுவதிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மனம் விரும்பியவாறு கொண்டாடுவதற்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

‘ஈதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள்) தாற்பரியங்களின் பிரகாரம் சமூகத்திலே எந்தவொரு பிரிவினரையும் தனிமைப்படுத்தாது சகல சமூகங்களுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, நடப்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்வோமென புனிதமிகு நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய – பாலத்தீன தலைவர்களை ஒபாமா கூட்டாக சந்திக்கிறார்

210909_flatboyafp.jpgமத்திய கிழக்கு சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கமாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் கூட்டு சந்திப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.

நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் நடக்கும் போது இந்தச் சந்திப்பும் நடக்கும். உடனடியாக இந்த விடயத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்பது தொடர்பில் அனைத்து தரப்பும் நம்பிக்கையற்றே இருக்கின்றன.

இஸ்ரேலுக்கு அதிபர் அப்பாஸ் அவர்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்துவிடக் கூடாது என்று போட்டி பாலத்தீனக் குழுவான ஹமாஸ் எச்சரித்துள்ளது. அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஜோர்ஜ் மிட்சேல் அவர்கள் மத்திய கிழக்குக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பகிரங்கமான முன்னேற்றங்கள் எதுவும் தெரியாததை அடுத்து, தற்போது இந்தச் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

உலக அமைதி நாள் (International Day of Peace) – புன்னியாமீன்

international_day_of_piece.jpgஉலக அமைதி நாள் (International Day of Peace)  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம்  செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி,  ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.

உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பழி கொண்டுள்ளன. 2ஆம் உலக மகா யுத்தத்தின் பின் உலக  சமாதானத்திற்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்த செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையிலாகும்.

யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் “மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்” என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் தான் அதனைப் பெற முடியும்” என்றார். இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப்பும் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யுனெஸ்கோவின் சட்ட யாப்பின் 1வது உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல்,  பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல, பண்பாட்டுத் தொடர்களின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா அமையமும்,  ஐ.நா சாசனமும் இக்குறிக்கோள்களின் பேரிலேயே நிறுவப் பெற்றுள்ளது.

மனித உரிமைகளையும்,  கடமைகளையும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுவது சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான,  நியாயமான  சட்ட ஆட்சியுடைய சமத்துவம்,  ஒருமைப்பாடு  என்பது தான் சமாதானம் ஆகும். சமாதானம்,  மேம்பாடு, சனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றுக்கொன்று உருதுணைபுரியும் முக்கோணங்களாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.

மிக அண்மையில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக உலகின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக  அவர், அணு ஆயுத வல்லமை மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதிகளை மீறுவதாகவே உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும்,  பாதுகாப்புக்கும் வடகொரியா பெரும் அச்சுற்றுத்தலாகவே விளங்குகிறது. சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணையையும் அந்நாடு இன்று சோதித்துள்ளதாகத் தெரிகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா வடகொரியாவை மையமாகக் கொண்டு இக்கருத்தினை வெளியிட்டாலும் கூட உலகில் அணுஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள்,  ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுருத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதற்கள் உற்பட ஆயுத பலத்தை பெருக்குகின்றன அன்றி அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது காணமுடியாமல் இருப்பதும் விந்தைக்குரிய விடயமே.

கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர்வையிலும் அமைதிக்கான அசசுருத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல, அது செயற்பாடு செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக்கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக, பண்பாட்டு அரசியல் சமூக,  பொருளாதார சூழல்களில் ஆழ வேரூண்றிய ஒன்றாகும்”.

இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதனத்தினதும் சொல்லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி,  ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village)  மிக உன்னத சாதனையாக அமையும்.

நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்காக பங்களிப்ப வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு

2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari),
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)

அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தொன்றை வழங்கியிருந்தார். அக் கருத்தின்படி  ‘அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்” . இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.  சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோசணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.
 

பாகிஸ்தானில் புதிய செயற்கை கோள்

210909flag.jpgதகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் புதிதாக ஒரு செயற்கை கோளை தயாரிக்கிறது. இதற்கு பக்சாட் – 1 ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சீனா உதவி செய்கிறது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதன்படி சீனா பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர் உதவி செய்யும்.

பாகிஸ்தானின் விண்வெளி மையம், மற்றும் சீனாவின் நெடுஞ்சுவர் தொழிற் கூட்டமைப்பும் இணைந்து இந்த செயற்கை கோளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.