ஜெயபாலன் த

ஜெயபாலன் த

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம்

மோசடிப் பல்கலைக்கிழகத்தின் துணைவேந்தர் – கலாநிதி செல்வின் குமார்

உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (யூஎஸ்ஏ) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களும் இல்லை. மாணவர்களும் இல்லை ஆனால் கலாநிதிப் பட்டம் வழங்கப் போகிறார்களாம். இன்றுள்ள மொழிகளிலேயே மூத்த மொழியாகவும் மக்களால் பரிபாஷிக்கப்படுகின்ற பயன்பாட்டில் உள்ள மொழி கடந்த 3500 ஆண்டுகளாக தன்னை நிலை நிறுத்தி வைத்துள்ளது. அம்மொழியின் பெருமையை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதன் பெருமையை சிறுமைப்படுத்தாமல் ஆவது இருப்பதுவே சாலச் சிறந்தது. உலகத் தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கடையைத்திற்ந்துள்ள ஒரு கூட்டம் தமிழ் கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் செயலில் இறங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் இயங்குவதாகக் கூறும் இயங்காத பல்கலைக்கழகம் ஒரு நூறுடொலருக்கு ஒரு இணையத்தை இயக்கிக் கொண்டு உலகத் தலைவர்கள் சிலரது படங்களையும் போட்டு சில பல்பலைக்கழகங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்விணையத்தளத்தில் இப்பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கும் பல்கலைக்கழகங்களின் பகுதி இன்னமும் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்ற இவ்வமைப்புகள் தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்துகின்றன. இதுவொரு மோசடியான பல்கலைக்கழகம் என இந்தியாவில் இருந்து வெளிவரும் தி ஹிந்து இணையத்தளமும் சுட்டிகாட்டியுள்ளது.

ஆரம்பப் பள்ளியைக் கூட இயக்குவதற்கு லாயக்கற்றவர்கள் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கின்றோம் என்ற பெயரில் ரீல் விட்டுக்கொண்டு தற்போது கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்போகின்றனராம். இந்த கௌரவ கலாநிதிப்பட்டம் என்பது இறால் போட்டு சுறா பிடிக்கும் தந்திரமாக மாறியுள்ளது. முகவரியற்ற இந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகம் முகவரியுள்ள சிலருக்கு ஆசைகாட்டி கலாநிதிப்பட்டம் வழங்குவதாகக் கூறி தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர். இந்த வலையில் லண்டனில் அறியப்பட்ட சில நல்ல தலைகளும் வீழ்ந்துள்ளது. அல்லது வீழ்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 6ம் திகதி பிரித்தானியாவின் முக்கிய பலகலைக்கழகங்களில் ஒன்றான யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரில் இந்த கௌரவ கலாநிதப்பட்டம் வழங்கப்பட இருப்பதாக உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரரின் ஹரோ கம்பஸில் நடைபெறும் இந்நிகழ்வுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்பல்கலைக்கிகத்தின் மண்டபத்தை வாடகைக்குப் பெற்றதைத் தவிர பல்கலைக்கழகத்திற்கு ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இது விடயமாக தேசம்நெற், யூனிவர்சிற்றி ஒப் வெஸ்ற்மினிஸ்ரருக்கு ஒரு மின்அஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த மோசடிக் கலாநிதிப் பட்டத்திற்கு கொன்சவேடிவ் கட்சி அமைச்சர் போல் ஸ்கலி, லிபிரல் டெமொகிரட் கட்சிப் பா உ சேர் எட்டேவி பிரித்தானியாவின் முன்னணித் தமிழ் வழக்கறிஞர் அருண் கணநாதன், சட்ட ஆலோசகர் குலசேகரம் கீதார்தனன், கவுன்சிலர் பரம் நந்தா, ஈலிங் அம்மன் ஆலயச் செயலாளர் சொக்கலிங்கம் கருணைலிங்கம், அருணாசலம் ராஜலிங்கம், நாடுகடந்த அரசு சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகிய லண்டனில் அறியப்பட்ட நபர்களுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை விடவும் உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவி டாக்டர் சாந்தினி ஒமகாண்டம், ஏ ஆர் ரகுமானின் சகோதரி டாக்டர் ஏ ஆர் ரெகானா உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இணைப்பாளர் டாக்கடர் எஸ் எம் ரஸ்மி ரூமி ஆகியோருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிலருடன் தொடர்புகொண்ட போது அவர்கள் தங்களுக்கு மின் அஞ்சல் வந்ததாகவும் மேலதிக விபரங்கள் தெரியவில்லை என்றும் தங்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் அனுசரணையோடுதான் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்படுவதாக நினைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறான தோற்றப்பாடே அங்கு தெரிவிக்கப்பட்டது. இப்பட்டங்களை தமிழகப் பல்கலைக்கழகங்கள் கூட வழங்க முன்வந்திருக்வில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான மோசடியான கலாநிதிப் பட்டங்கள் தொடர்பாக என் செல்வராஜா “கலாநிதிகளும் கல்லாநிதிகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தர். தமிழர்கள் சிலர் இவ்வாறான மோசடியான பட்டங்களை காவிக்கொண்டு திரிவதன் மூலம் கல்வியைiயும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ‘கௌரவ கலாநிதிப்பட்டம்’ வாங்க அழைக்கப்பட்ட சிலர் தாங்கள் அதில் கலந்துகொள்வதுபற்றி முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். தங்களுடைய பெயர்களை ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடியான பட்டங்களை கௌரவ கலாநிதி என்ற பெயரில் பெறுவதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பெற்ற கல்வித் தகமைகள் மீதும் சந்தேகம் ஏற்படும் நிலையை இப்பட்டங்கள் உருவாக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறான மோசடியான கல்வித் தகமைகளை நிரகரிப்பதும் ஒரு சமூகக்கடமையே.

இந்த கௌரவ கலாநிதிப் பட்டங்களுக்குப்பின் நாடுகடந்த அரசு இருப்பதாக நம்பப்படுகின்றது. நாடுகடந்த அரசு என்ற இந்தக் கருத்துரவாக்கம் கவிஞர் பேராசிரியர் சேரனால் முன்வைக்கப்பட்டு தற்போது இலங்கையில் கௌரவத் தடுப்புக்காவலில் உள்ள கே பி என்றறியப்பட்ட செல்லராசா பத்மநாதனால் (குமரன் பத்மநாதன்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. கெ பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுசெல்லப்பட விசுவநாதன் உருத்திரகுமாரனால் தற்போது இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த நாடுகடந்த அரசின் பிரதமராக உருத்திரகுமாரன் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து செயற்படுகின்றார். இந்த கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுபவர்களில் ஒருவரான சொக்கலிங்கம் யோகி நாடுகடந்த பிரதமர் அலுவலகத்தின் அமைச்சராக உள்ளார். நாடுகடந்த அரசு என்ற கருப்பொருள் ஆழமானதாக இருந்தபோதும் அதில் தங்களை எம்பிக்கள் அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் உள்ளடக்கமே இருப்பதில்லை. அதனால் நாடுகடந்த அரசு என்பது ஒரு கோமாளித் தனமாகவே பார்க்கப்படுகின்றது. சொக்கலிங்கம் யோகி தமிழர்களின் அகதி அந்தஸ்து விடயங்களில் நிறைய உதவுபவராக இருக்கின்றார். ஆனால் அவர் ஒரு அரசியல் உள்ளடக்கமற்றவராகவே கருதப்படுகின்றார். இந்த மோசடி காலாநிதிப் பட்டங்களுக்குப் பின் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் உள்ளது என்று தெரியவருகின்றது.

லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.

 

அமரதாஸின் ஒளி ஓவிய நூல்: சொன்ன சேதியும், சொல்லாத சேதியும் விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பும்


நூல் வெளியீடு – சொன்ன சேதி:
கோவிட் பெரும் தொற்று பற்றிய பயம் விட்டுப்போக லண்டன் தமிழ் அரசியல் அரங்கும் விறுவிறுப்படைய ஆரம்பித்து இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் அளவுக்கு தமிழ் அரசியல் சூடாகாவிட்டாலும் அது தன்னுடைய அளவில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் திரள் கலை, இலக்கிய குழுமம் நடத்திய “Through the Fire Zones: Photographs of Amarathas in Sri Lanka’s War Zones” என்ற அமரதாஸின் இலங்கை யுத்தம் தொடர்பான புகைப்பட நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒக்ரோபர் 22இல் ஹரோ பப்ரிஸ்ற் சேர்ச்சில் மாலை ஐந்துமணிக்கு மேலாக நிகழ்வு ஆரம்பித்தது. பா நடேசன் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு நூலின் முதற்பிரதி அவருக்கே வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தளபதிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர் பிரான்ஸிஸ் ஹரிசன். இவர் “Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War” என்ற நூலை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ‘போர் வலயங்கள்’ பற்றிய படத்தை தந்தமைக்காக பிராஸிஸ் ஹரிசனுக்கு நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. லண்டன் புகைப்படப் படக் கலைஞரும் அரசியல் சமூக ஆர்வலருமான சுகுன சபேசன் தமிழில் இருந்த புகைப்படக் குறிப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக அவருக்கும் அந்நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் முறைப்படி கூட்டம் தாமதமாக ஆரம்பித்தாலும் பேச்சாளர்கள் நெருக்கமான நேரத்தை கவனத்தில் எடுத்து தங்கள் கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர். பிரான்ஸிஸ் ஹரிசன் இந்த யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அமரதாஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளைச் சொல்ல முன்வந்ததை பாராட்டியதோடு, இவ்வாறு தப்பித்து வந்தவர்களின் ஆக்கங்கள் பல வெளிவர வேண்டும் அவை பல தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா, புகைப்படக் கலைஞர் கெவின் காட்டரின் சூடானின் வறுமையை வெளிப்படுத்திய ஒரு ‘பெண் குழந்தையின் மரணத்திற்காகக் காத்திருந்த கழுகு’ புகைப்படம் பற்றிச் சுட்டிக்காட்டி அப்புகைப்படக் கலைஞர் அது ஏற்படுத்திய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டமையைச் சுட்டிக்காட்டினார். ஒளி ஓவியங்கள் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதே போல் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க நேபாம் குண்டினால் நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவினதும் உலகினதும் கண்களைத் திறக்க வைத்தது பற்றி அரசியல் கலை இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அவர் தனதுரையில் புகைப்படக் கலைஞரின் அறம் பற்றி பேசியதுடன் அமரதாஸ் அதனை கவனமாகக் கையாண்டிருப்பதாயும் குறிப்பிட்டார். புகைப்படம் என்பது ஒரு வரலாறல்ல என்று குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன் அது ஒரு வரலாற்றின் சாட்சியம் என்று குறிப்பிட்டார். ஒரு படம் ஒரு சம்பவத்தை, ஒரு காலத்தை சொல்லக்கூடியது என்பதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் அமரதாஸ் அந்த மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய இப்படங்கள் அந்த யுத்த காலத்தின் சாட்சியங்கள் என்றும் அதனை அமரதாஸ் திறம்பட பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமரதாஸின் ஒளி ஓவியங்கள் ஓடும் படத்தின் தன்மையைக் காட்டுவதாக சுகுன சபேசன் தெரிவித்தார். இப்படங்கள் கோர்வைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுகுன சபேசன் தெரிவித்தார்.

இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தரும் சமூக, கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சேனன் குறிப்பிட்டார். அமரதாஸ் ஏனைய சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் போலல்லாது அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களின் வாழ்வை தன் புகைப்படங்களினூடாகப் பதிவு செய்துள்ளார். என்ன தான் ஜனநாயம் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னாலும் உண்மையில் அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. பிபிசி போன்ற ஊடகங்கள் ஓடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. இந்தப் படங்கள் எமக்கு அவசியமான ஆவணங்கள். எம்முடைய பொக்கிஸங்கள் என்றும் அதனால் இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் சேனன் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு ஆவணக்காப்பாளர் என்ற ரீதியில் நீண்ட கால நோக்கில் நூலை விமர்சனப் பார்வையில் அணுகி இருந்தார். நூலிற்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் தலைப்பையும் வழங்கத் தவறியது பிற்காலத்தில் தமிழ் நூல் சேகரிப்பில் இந்நூல் தவறவிடப்பட்டுவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். அமரதாஸ் ஒரு கவிஞராக இருந்தும் புகைப்படங்களுக்கான குறிப்புகளை வழங்கத் தவறியிருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பேச்சாளர்களின் உரைகளின் முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு முன்னதாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பா நடேசன், நூலகவியலாளர் என் செல்வராஜா ஆகியோருக்கு இந்நூல் தொடர்பாக தொலைபேசியில் பல அதிருப்திகள், நெருக்கடிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்வின் கலந்துரையாடலின் போது காணக்கூடியதாக இருந்தது. நூலில் தொகுக்கப்பட்ட படங்கள அமரதாஸ்க்கு மட்டும் சொந்தமானவை அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது, எனப் பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்படங்களை கருப்பு வெள்ளையாக வெளியிட்டதன் மூலம் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரதாஸ் மழுங்கடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இவை பற்றி அமரதாஸ் குறிப்பிடுகின்ற போது 2019இல் வரவிருந்த இந்நூல் சில காரணங்களால் அப்போது வெளியிடப்படவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கத்துடன் சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். நியாயம் பேச வேண்டிய சிலர் மௌனம் காத்ததாகவும் சிலர் மட்டும் தனக்கு தகுந்த நேரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் விசமிகளுடைய சதிகளுக்கு தான் பணியப் போவதில்லை என்றும் அமரதாஸ் தெரிவிக்கின்றார். தான் பாதுகாத்து வைத்திருக்கும்படி வழங்கிய படங்கள் கைமாறி, திருடப்பட்டு சில நபர்களால் அநாமதேயமாக வெளியிடப்பட்டதாகவும் அப்படங்களை வேறவரது படங்கள் போலக் காண்பிக்க முற்படுவதாகவும் அமரதாஸ் குற்றம்சாட்டுகின்றார்.

விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பு:
அமரதாஸ் தன்னுடைய அல்லது தன்னிடமிருந்த புகைப்படங்களின் உரிமையை பொதுமைப்படுத்த முன்வராததால் புலம்பெயர் புலிகளின் வெவ்வேறு பிரிவினருக்கும் அமரதாஸ்க்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்தது. ஒளிப்படங்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பாலும் அமரதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை புலம்பெயர் புலி விசிலடிச்சான் குஞ்சுகள் வைக்கின்றன. ஒளிப்படங்களை இரத்தமும் சதையுமாக வெளியிட்டு இருந்தால் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தங்கள் அரசியலுக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களுடைய விருப்பம்.

மேலும் அமரதாஸ் இறுதி யுத்தத்தை ஒரு இனஒழிப்பு யுத்தமாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு அமரதாஸ் முன்வைக்கின்ற விளகம் புரிந்துகொள்ளக் கூடியதே. நானும் இலங்கை அரசாங்கம் தமிழினவொழிப்புச் செய்ததாக நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் சர்வதேச அமைப்புகள் இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ளாததால் நான் அதனை இனவொழிப்பு யுத்தமாக குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் அல்ல. அவருடைய செயற்பாடுகள், எழுத்துக்கள் அவரை ஒரு தேசியவாதியாகவே உருவகப்படுத்துகின்றது. ஆனால் அமரதாஸ் விசிலட்டிச்சான் குஞ்சுகள் போன்று புலிகளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டாடவில்லை. அமரதாஸ் அறிமுகவுரையில் “ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆகவே போராட்டத்திலும் போர்சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. போரும் போராட்டமும் எப்படி உருவாக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளாத அமரதாஸின் குறிப்புகள் விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பிவிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பு, மக்கள் தஞ்சமடையும் இடங்களில் இருந்து தாக்குதலை நடத்துவது, கூடுதலான அழிவை ஏற்படுத்தும் வகையிலான மூன்றாம்தர யுத்த தந்திரங்கள், மக்களை தங்கள் காவலரன்களாக பயன்படுத்தியமை போன்ற பல விடயங்களை இந்த ஒளி ஓவியங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்நூலில் அமரதாஸ் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஒருவரின் இறப்பே மிகக் கூடுதலானது. ஒரு லட்சம் பேர் இறந்திருக்க வேண்டும் அதற்கு ஆயிரம் ஆயிரம் படங்களின் சாட்சியம் தேவை என்று எண்ணத் தேவையில்லை. ஆதாரமற்ற கதையாடல்கள் இருக்கின்ற உண்மையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும். உண்மையை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வதே எமது நியாயங்களை முன்வைப்பதற்கான வழி. மிகைப்படுத்தல்கள் அவசியமற்றது.

சொல்லாத சேதி:
அமரதாஸ் சொல்லத் தவறிய விடயங்களே அவர் தொடர்பான பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம். அமரதாஸினுடைய முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்துக் கூட அவருடைய நூலில் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய வைட்விஸன் – wide vision இணையத்தில் அவரைப் பற்றிய பக்கத்தில் கூட அமரதாஸ் தன்னை அறிமுகம் செய்யத் தவறி இருக்கின்றார். அல்லது அறிமுகப்படுத்த விரும்பவில்லை. இப்புகைப்பட நூலை பிரான்ஸிஸ் ஹரிசன் முதல் எல்லோருமே மிக முக்கியமான ஆவணமாகவே கருதுகின்றனர். சேனன் ஒரு படி மேலே சென்று அதனை தமிழர்களின் பொக்கிசம் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த ஒளி ஒவியங்களைத் தாங்கிய இந்நூல் அது ஆவணமாவதற்கு வேண்டிய முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு இருக்கின்றது. அமரதாஸ் தன்னிடம் இன்னும் சில ஆயிரம் படங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அவற்றை மேலும் ஓரிரு நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார். அதனால் இதே போல் எதிர்காலத்தில் அந்நூல்களை வெளியிடாமல் இருக்க இதனைப் பதிவு செய்கின்றேன்.

அமரதாஸின் புகைப்பட நூல் ஒரு ஆவணமாக கருதப்பட வேண்டுமானால் அதற்கான அந்த அறத்தை அந்நூல் கொண்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யார் என்பதை வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இருக்கின்றார். இதன் மூலம் அவர் படைப்பின் நம்பகத் தன்மையையும் நேர்மைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார். இதன் மூலம் அமரதாஸ் மிகத் துரதிஸ்டமான நிலையை தனக்கு ஏற்படுத்தி உள்ளார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளில் போராளியாக இணைந்து போராடியவர் என்றும் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையா மற்றும் பதவி பறிக்கப்பட்ட யோகி தரப்பினருடன், யோகிக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அமரதாஸின் இயக்கப்பெயர் இளம்திரையன் என்றும், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றனர். இவர் யோகியின் மெய்ப் பாதுகாப்பாளராக இருந்ததாகவும் அவர் கூறுகின்றனர். ஆனால் சுயாதீனமாக அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மாத்தையா இந்திய அமைதிப் படையுடனான யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை என்றும் இந்திய உளவுத்துறையோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இத்தகவலை யோகி அறிந்திருந்தும் இயக்கத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் பதவியிறக்கப்பட்டார். இக்களையெடுப்பில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட சிலர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மாத்தையா மிகப்பெரும் படையணியை வைத்திருந்தமையும் அவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த அமரதாஸ் யுத்தகளத்தில் (ஜெயசுக்குரு) தாக்குதலில் காலில் காயம்பட்டு இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகயில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இவரோடு கூட இருந்த நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளில் காயம்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் புகைப்படக் கலைஞர்களை உருவாக்குவதும் ஒன்று என்றும் அவ்வாறான பல புகைப்படக் கலைஞர்கள் வன்னியில் உருவாக்கப்பட்டதாகவும் அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய நூலில் கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் புகைப்பட ஊடகத்துறையை கற்பித்ததாக அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் அங்கு அதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் தன்னுடைய நூலில் “சர்வதேச பொது நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், எந்த ஊடகங்களும் வெளியில் இருந்து போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே இறுதிப் போர் நடைபெற்ற வன்னிப் பகுதிக்குள் இயங்கிக் கொண்டிருந்தன” என்று குறிப்பிடும் அமரதாஸ் அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் “நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த இறுதிப் போர்க்களத்தில், எனது ஊடகவியல்சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன”. அமரதாஸின் இப்பதிவு அவர் தன்னை வலிந்து ஒரு சுயாதீனமான ஊடகவியலாளராகக் காட்ட முயல்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமரதாஸ் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இல்லாமல் புகைப்படப் பிடிப்பாளராகச் செயற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகாளல் பயிற்றுவிக்கப்பட்டு புலிகளுடைய நிதர்சனம் தொலைக்காட்சின் புகைப்படக் கலைஞராக செயற்பட்டதாக அக்காலத்தில் அமரதாஸ் உடன் நட்பாக இருந்த போராளிகள் தெரிவிக்கின்றனர். அமரதாஸினுடைய புகைப்படக் கருவியும் இயக்கத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகின்ற போது அவனது படைப்புகள் அவர்களுடைய ஒப்பந்தத்திற்கமைய அவை அந்நிறுவனத்திற்கே சொந்தமாகின்றது. இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் சார்ந்தது. ஆனால் அதனை உரிமை கோருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளோ, நிதர்சனம் தொலைக்காட்சியோ இன்றில்லை. அவ்வமைப்பில் இருந்தவர்களுக்கோ அதில் பணியாற்றியவர்களுக்கோ அதனை உரிமை கோருவதற்கான எந்தச் சட்ட உரிமையும் கிடையாது. ஆனால் அமரதாஸ் உணர்வு ரீதியாக அதனை பொறுப்புணர்வுடன் கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.

2019 இல் நோர்வே தமிழ் சங்கம் இந்நூலை வெளியிடுவதற்கு உடன்பட்டு நூலையும் பதிப்பித்து இருந்தது. ஆனால் அப்பதிப்பில் புகைப்படத்திற்கான உரிமையை அமரதாஸிற்கு அல்லாமல் போராளிகளின் வெளியீடாக நோர்வே தமிழ் சங்கம் குறிப்பிட்டு இருந்தது. இதற்குப் பின்னணியில் தமிழ் சமூகம் மையம் TCC – Tamil Community Centre இருந்ததாகக் கருதப்பட்டது. ஒளிப்படங்களுக்கான தன்னுடைய உரிமையை நோர்வே தமிழ் சங்கம் நூலின் பதிப்பில் நீக்கியதற்கு எதிராக அமரதாஸ்; நோர்வே தமிழ் சங்கத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்தில் வென்ற அமரதாஸினால் மக்கள் மன்றத்தை வெற்றிகொள்ள முடியுமா?

புலம்பெயர் தேசம் தன்னுடைய முதலாளித்துவ நோக்கில் தனிமனிதனின் நலன்களை முன்நிறுத்துகின்ற சட்டங்களையே கொண்டுள்ளது. உணர்வு ரீதியான, அறிவியல் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பலவீனமான தேசத்தில் அனைத்து விடயங்களுமே சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியதாகவே உள்ளது. அந்த வகையில் அமரதாஸின் ஒளிப்படங்கள் சட்டரீதியாக அவருடையதாகவே இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமானதா? என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்றே சொல்வேன். உணர்வு ரீதியாகவும் அறிவியல் ஒழுக்கம், சார்ந்து தார்மீகக் பண்புகள் – அறம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யாரென்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய இந்நூலுக்கு அது இன்னமும் வலுச்சேர்த்து இருக்கும் என்றே நம்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அதிலிருந்த போராளிகளின் அர்ப்பணிப்பை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தமிழீழ விடுதலை புலிகளில் உறுப்பினராக இருப்பதோ, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகைப்படப் பயிற்சி பெற்றதோ, நிதர்சனம் தொலைக்காட்சியில் பணியாற்றியதோ தவறோ குற்றமோ அல்ல. ஆனால் அவற்றை இருட்டடிப்புச் செய்வது அவணப் பதிவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால் ஒரு ஆவண ஒளிப்படத் தொகுப்பு எப்படி வெளியடப்படக்கூடாது என்பதற்கு அமரதாஸின் இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். அதற்காக இந்நூலின் ஒளிப்படச் சாட்சியங்களை நான் நிராகரிப்பதாகவோ அல்லது அமரதாஸின் அர்ப்பணிப்பை நிராகரிப்பதாகவோ அர்த்தமில்லை. ஒரு படம் ஆயிரம் வாரத்தைகளுக்குச் சமமானது என்று சொல்கின்ற போது அமரதாஸ் 450 படங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை எவ்வித ஒழுங்கமைப்பும் குறிப்பும் இன்றி ‘கும்பையாகக் கொட்டியுள்ளார்’ என்றே எண்ணத் தோண்றுகின்றது. இது அவர் தெரியாமல் விட்ட தவறு அல்ல. தெரிந்துகொண்டே செய்த தவறு அல்லது சோம்பேறித்தனம். “அனைத்து ஒளிப்படங்களுக்குமான விரிவான குறிப்புகள் அல்லது தலைப்புகள் அவசியமில்லை எனக் கருதுகிறேன்” என்று தன்னுடைய நூலில் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தம் 2006இல் மாவிலாறு அணை மூடியதில் இருந்து 2009 மே 19 பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டவரை நீண்டது. அக்காலத்தில் மக்கள் அணியணியாக இடம்பெயர்ந்த வண்ணமே இருந்தனர். ஒரு ஒளிப்படத்திற்கு அதன் அடிக்குறிப்பு மிக மிக அவசியமானது. ஒவ்வொரு ஒளிப்படமும் பலநூறு சிந்தனைகளை தூண்டக் கூடியவை. அடிக்குறிப்புகள் தான் அவ்வொளிப்படத்தை அந்தக் காலத்தோடும் அந்தச் சூழலோடும் அப்பதிவை பிணைத்துக் கொள்ளும் .

நூற்பது ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எந்த நாளில் எரிக்கப்பட்டது என்ற சர்ச்சை நூலகவியலாளர் என் செல்வராஜா மே 31 1981 இரவு என்று உறுதிப்படுத்தும் வரை சர்ச்சையாகவே இருந்தது. அதனை மறுப்பவர்களும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் படம் பற்றிய அடிக்குறிப்புகள், படம் எடுக்கப்பட்ட திகதி, படம் எடுக்கப்பட்ட இடம் என்பவற்றைக் குறிப்பிடாமல் எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இவ்வொளிப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் அமரதாஸே தனது நூலுக்கான மதிப்பை குறைமதிப்பீடு செய்துள்ளார்.

இந்நூலில் அமரதாஸ் தோண்றுகின்ற பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படங்கள் அமரதாஸ் எடுத்த படங்களுக்கு நிகராக கனதியானதாகவும் உள்ளது. அப்படங்களை நிச்சயமாக அமரதாஸ் எடுக்கவில்லை. அப்படங்களை அமரதாஸ் போன்ற ஒரு புகைப்படக் கலைஞரே எடுத்திருக்க வேண்டும். போர் வலயங்கள் கொண்ட ஒரு சாதாரண இலங்கையின் வடக்குப் பகுதியின் படத்தை (இதனை கூகிள் சேர்ச்சில் தேடியே எடுத்திருக்க முடியும். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நூலில் பதிவு செய்திருக்கலாம்.) தந்ததாக பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் அமரதாஸ். ஆனால் இப்படம் பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு உரிமையானதும் அல்ல. அப்படியிருந்தும் இந்நூலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யுத்த பிரதேசத்திற்குள் தன்னுடைய படத்தை எடுத்தவருக்கு அல்லது எடுத்தவர்களுக்கு அமரதாஸ் நன்றி தெரிவிக்கவிலை. அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மைகள் சில சமயங்களில் கசக்கும். ஆனால் அவை அடுத்த படிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும். அடுத்த ஒளி ஓவிய நூல்களை வெளியிடுவதற்கு முன் அமரதாஸ் புகைப்படக் கலை பற்றிய தனது புரிதலையும் ஆழத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். புகைப்படக் கலையின் நுட்பங்களைத் தெரிந்திராத எனக்கு இந்த ஒளி ஓவியங்களின் மதிப்பை அல்லது அதன் ஆழத்தை அமரதாஸ் உணரத்தவறிவிட்டாரோ என எண்ணத் தோண்றுகிறது. அமரதாஸினுடைய உழைப்பும் ஓவியங்களும் விலைமதிப்பிட முடியாதவை. அந்தக் காலத்தின் சாட்சியங்கள் அவற்றை அதன் பெறுமதி குன்றாது வெளிக்கொணர்வது மிக முக்கியமானது. அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற போது ஒவ்வொரு தடவையும் அவை வேறொரு கதையைச் சொல்வது போல் தோண்றுகின்றது. எந்த விடயமாக இருந்தாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம். அமரதாஸின் அடுத்த நூல்கள் தற்போது விடப்பட்ட தவறுகளைக் களைந்து நேர்த்தியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

இலங்கைக் கல்விமுறைமை மௌனமான உடைவுகள் … அல்ல முற்றாக தகர்கப்பட வேண்டியவை:

இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும் பிரித்தானியாவின் காலனித்துவக் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. பொருளாதாரமும் பிரித்தானிய – அமெரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பிணைக்கப்பட்டே கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியினால் சரியான பொருளாதாரப் பாதையில் இலங்கை சென்றுவிடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய – அமெரிக்க நவகாலனித்துவம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்று மீண்டும் இலங்கையை தங்களது நலனுக்கு சேவை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. இங்கு பதிவு செய்ய வந்தவிடயம் பொருளாதாரம் அல்ல.

செப்ரம்பர் 16, 2022 அன்று ‘மௌனமான உடைவுகள் …‘ தொடரில் சோதணைகளும் … சாதனைகளும் … வேதனைகளும் என்ற தலைப்பில் அழகு குணசீலன் மட்டக்களப்பின் கல்வி பற்றி பேசி கல்வி தொடர்பான பரந்த ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கான எதிர்வினையே இது. அழகு குணசீலனின் பதிவின் சாரம்சம் இது தான்: சிறிய தொகையான மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்கின்றார்கள் பெரும்பாலானவர்கள் வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் தோல்வி அடைகிறார்கள். வேதனை அடைகின்றார்கள். அரசியல் வாதிகளும் கனவான்களும் சாதனைகளுக்கு மட்டுமல்ல வேதனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார் அவர். இதற்கு ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலலே காரணம் என்று மிகச் சரியாகவே அடையாளம் கண்டுள்ள அவர் சமூக நீதியைக் கோருகின்றார்.

இந்தக் காலனித்துவக் கல்விமுறை என்பதே ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறை. இந்தக் கல்வி முறை ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவராது. இந்தக் கல்வி முறையை நீங்கள் சீர்செய்ய முடியாது. இந்தக் கல்வி முறை முற்றாகத் தகர்க்கப்பட வேண்டும். வறுமையின் பிடியில் கல்வி கற்று அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக விரிவுரையாளரான போலோ பெரேரே இக்கல்வி முறையை ‘வங்கி வைப்பீட்டு முறைமை’க்கு ஒப்பிடுகின்றார். அதாவது ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தகவல்களை வைப்பிடுகின்றார்கள். திணிக்கின்றார்கள். இன்னும் விரிவாக ஆராய்ந்தால் (அரசியல்) அதிகார வர்க்கத்தினால் அதன் நலன்களுக்கு சேவை செய்யும் கல்விமுறை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்கிறார் போலோ பெரேரே.

இந்தக் கல்விமுறையானது ஒடுக்குபவர்களால் ஒடுக்கப்படுபவர்கள் மீது திணிக்கப்படும் கல்வி முறையாகும். இக்கல்விமுறையானது ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவரமாட்டாது. இன்று மேற்குலகில் ஊட்ப்படுகின்ற கல்விமுறை கூட பெரும்பாலும் பெரும் கோப்ரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை உருவாக்குகின்ற கல்விமுறையே. இக்கல்வி முறையில் முகாமையாளர்கள் நேர்மையானவர்களாகவும் தொழிலாளர்கள் களவாணிப்பயல்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். இக்கல்விமுறை பரந்த சிந்தனையை தடுக்கின்றது. கட்டத்துக்கு வெளியே சிந்திப்பதைத் தடுக்கின்றது. ஆக்கத்திறனைத் தடுக்கின்றது. சமூகப் பார்வையைத் தடுக்கின்றது.

போலோ பெரேரே உடைய வாதத்தை ஆதரிக்கின்ற வகையிலேயே பிரித்தானிய பிரதமர்களின் தெரிவு அமைந்துள்ளது. தற்போதைய பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ்ட் வரையான 56 பிரதமர்களும் பெரும்பாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளில்: ஈற்றின் கொலீஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கம் ஆகியவற்றிலேயே கல்வி கற்றுள்ளனர். பிரித்தானியாவில் இன்றும் கிரம்மர் ஸ்கூல், ஸ்ரேற் ஸ்கூல் என்ற பிரிவினை உண்டு. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் உள்ள கிரம்மர் ஸ்கூலுக்கு தெரிவுப் பரீட்சை மூலம் திறமையான மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

இப்பாடசாலைகளுக்கு அரசு மேலதிக சலுகைகளை வழங்குகின்றது. இம்முறைமை பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினுடைய கொள்கை. வசதியானவர்களை திறமையானவர்களை ஊக்குவித்து அவர்களை அதிகார மையமாக்குவது. ஸ்ரேற் ஸ்கூல் என்பது அவ்வப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான அரச பாடசாலைகள்.

இதே மாதிரியான கல்விமுறையை இலங்கையிலும் காணலாம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள் பொதுவாக அதிகார மையங்களாக உருவாகுவார்கள். முல்லைத்தீவில் என்னதான் படித்து வந்தாலும் பருந்தாக முடியாது. இது தான் தற்போதைய கல்விக்கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கம். அதாவது அவரவர் அவரவர் இடத்திரேயே இருக்க வேண்டும். ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரணாகவும் இருக்க வேண்டும். வளர்முக நாடு வளர்முக நாடாக கடன் கார நாடாகவே தான் இருக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்கித்தான் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தான் இந்தக் கல்விமுறை ஊட்டி இருக்கின்றது. அதற்கு வெளியே மாற்றீடு பற்றிச் சிந்திப்பதற்கான சிந்தனை முறை இவர்களிடம் இராது. ஒரு உள்ளங்கையில் அடங்கும் அப்பிளை வைத்து அவர்கள் ஒரு தொகை பண்டங்களைத் தயாரிக்கின்றார்களே நாங்கள் அப்பிளைப் போன்று பத்து மடங்கு பெரிய பிலாப்பழத்தை வைத்து பெரிதாக எந்தப் பண்டத்தையும் செய்வதில்லை. காலணித்துவச் சிந்தனையும் காலணித்துவக் கல்விமுறையும் அதற்கு எங்களை அனுமதிக்காது.

பிரித்தானிய – அமெரிக்க கூட்டினால் தூண்டப்பட்டு நடைபெற்ற போராட்டத்தினால் பதவி துறந்த கோட்டபாய ராஜபக்ச அரசால் இவ்வாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. சில ஆண்டுகளாகவே பல மில்லியன்கள் செலவிடப்பட்டு, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பெருமளவில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருந்தது. ரணில் விகிகரமசிங்க பதவியேற்று ஒரு சில தினங்களிலேயே புதிய பாடத்திட்ட அமுலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்விமுறையான போட்டிப் பரீட்சையின் முக்கியத்துவத்தை மூப்பது வீதமாகக் குறைத்து மாணவர்களுக்கு நேரடியான செய்முறைத் திட்டங்கள் எழுபது வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள போட்டிப் பரீட்சைமுறை மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நடைமுறையில் தொழில்துறைகளுக்குக் கூட இக்கல்விமுறை பெரிதாக உதவவில்லை. இப்பரீட்சைகளில் மிகத்திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் கூட தங்களுக்கோ சமூகத்திற்கோ எவ்வித பயனும் இல்லாமல் வாழ்கின்றனர். அல்லது தற்கொலை செய்கின்றதை காண்கிறோம். இந்தக் கணணி உலகில் கூட பல மாதங்கள், ஆண்டுகள் கற்றதை மனனம் செய்து, ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பரீட்சை எழுதித் தான் ஒரு மாணவன் தன்னுடைய ஆளுமையை திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆயினும் இந்நடைமுறை இறுக்கமாக பின்பற்றக் காரணம் கல்வியை பலருக்கும் எட்டாக் கனியாக வைத்திருப்பதனூடாக சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்கவைத்து தற்போதைய சமூகக் கட்டமைப்பைப் பேணுவதே.

கடந்த அரசின் புதிய கல்வித்திட்டம் அமூல்படுத்தப்படுமானால் சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய திருப்பு முனையாக அது அமையும். போலோ பெரேரே குறிப்பிடும் விடுதலைக் கல்வி என்பதும் இது சார்ந்ததே. மாணவர்களை பிரச்சினைகளை எதிர்கொள்ள வைப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைத் தேடத் தூண்டுவது. அதுவே மாணவர்களை அடிமைத் தளைகளில் இருந்து விடுதலை செய்யும் என்கின்றார்.

 

மூட்டை சுமப்பவளுக்கு கூள் காறிக்கு எப்படி திருமணம் ஆகும் என்றெல்லாம் பேசப்பட்ட கிளி ‘அக்காச்சி’ பிராண்டின் தற்போதைய மதிப்பு ஒரு கோடியை ரூபாயை எட்டும்!

ஓகஸ்ட் 29 மற்றும் 20ம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்ட ‘அக்காச்சி’ பிராண்டின் உரிமையாளர் அனுஜா ராஜ்மோகன், லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற கலந்துரையாடலில் “சின்னச் சின்ன தொழில்களை உருவாக்கும் சக்தியைப் பெறுங்கள், உங்களுக்கும் அயலவர்களுக்கும் தேவையான பொருட்களை செய்கின்ற சிறு உற்பத்தியார்களாக மாறுங்கள்” எனத் தெரிவித்தார். “நான் பட்ட வலிகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது” எனத் தெரிவித்த அவர் “பதின்மப் பருவத்தில் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு மூட்டைகளை சுமந்ததையும் கூழ் விற்றதையும் கிண்டல் பண்ணி எனக்கு திருமணமாகாது குடும்ப வாழ்வு அமையாது என்றெல்லாம் உறவுகள் ஒதுக்கி வைத்தனர்” என்றும் தன்னுடைய வலி மிகுந்த அனுபவங்களை அங்கு வந்திருந்த தொழில்முனைவோரோடு பகிர்ந்து கொண்டார். “அன்று அவர்களின் நையாண்டிகளைச் செவிமடுத்து இருந்திருந்தால் இன்று இந்த ‘அக்காச்சி’ என்ற பிராண்ட் உருவாகியிராது. நான் இந்த மேடையிலும் ஏறியிருக்க முடியாது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு இருப்பேன்” என்றும் அனுஜா ராஜ்மோகன் தன்னுடைய இன்றைய நிலையை இட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அனைவரது பாராட்டுக்களையும் சபையில் இருந்து பெற்றார்.
ஓகஸ்ட் 29 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுகைத் தொழில் அபிவிருத்தி பிரிவு கச்சேரி மற்றும் மனிதவலு அபிவிருத்தி பிரிவு, கிரிசலிஸ் (Chrysalis) ஆகியன உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சசியும் விற்பனையும் மேற்கொண்டது.இக்கண்காட்சியில் லிற்றில் எய்ட் நிறுவனம் தனது மணவர்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து 15,000 ரூபாய் வரை லாபமீட்டியது. ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் நிறுவனத்திலும் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் அத்துடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விற்பனையின் மூலம் லிற்றில் எய்ட் 40,000 ரூபாவரை லாபமீட்டியதுடன் பல்வேறு தொழில்முனைவோருக்கும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்வதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இவ்விரு கண்காட்சியிலும் விற்பனையிலும் பல்வகைப்பட்ட உணவுப் பொருட்கள், தைத்த ஆடைகள், தையல் அலங்காரங்கள், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் தங்கள் சந்தை வாய்ப்புகளைத் தூண்டும் நோக்கோடு இக்கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. பல தொழில்முனைவோர் இந்நிகழ்வுகளின் மூலம் பொருட்களுக்கான கட்டளைகளை (ஓடர்) பெற்றதாக தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20இல் லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற தொழில்முனைவோருக்கான கண்காட்சி கலந்துரையாடலை கிளிநொச்சியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற விவேகானந்தா கல்லூரியின் அதிபர் ஜெயா மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதை இந்த தொழில்முனைவோருக்கான கண்காட்சி எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் நாங்கள் கற்பித்து அனுப்புகின்ற மாணவர்களை லிற்றில் எய்ட் இப்பிரதேசத்தின் தொழில்முனைவோரோக்கி அவர்களாலும் முடியும் என்று காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். லிற்றில் எய்ட் இல் கல்வி பயிலும் மாணவர்கள் கிளிநொச்சி நகரத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோருக்கு உதவும் அலுவலராகவும் அதேசமயம் லிற்றில் எய்ட் நம்பக்கை சபை உறுப்பினராகவும் செயற்படும் எஸ் தேவதாஸ் அவர்கள் ‘தொழில்முனைவோருக்கான களம் கிளிநொச்சி’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். “மூலப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே விற்பனை செய்யப்படுகின்றது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக்கி அவற்றுக்கு வெவ்வேறு வழிகளில் பெறுமதியைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு அழுத்தமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் குறிப்பாக தமிழர்கள் பரந்து வாழுகின்ற மேற்கு நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக ஆகமுடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். உள்ளுரில் கிடைக்கின்ற சத்தான உணவுகள் பற்றி நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உரையாற்றுகையில் தொழில் முனைவோருக்கு உள்ள பல்வேறு உதவித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி தொழில்முனைவோர் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் தங்கள் தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் மாணவியாக இருந்து அதன் உதவித் தையலாசிரியராக தையல் வீட்டுத் தோட்டம் என்று தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் தமிழினி லிற்றில் எய்ட் இன் ஒரு முன்மாதிரியான தொழில்முனைவோர். தான் யாரிலும் எதற்காகவும் தங்கி இருப்பதில்லை என்று குறிப்பிடும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் வீட்டில் இருந்தவாறே தன்னால் தனது தேவைக்கதிகமாக பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் இதனை ஒவ்வொருவராலும் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார். தமிழினி வீட்டுத் தோட்டத்து ‘வோட்டர் மெலன்’ மிக அருமையான சுவையோடு இருந்ததாகக் குறிப்பிட்ட லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தமிழினி ‘சென்றவாரம் வோட்டர் மெலன்களை விற்று 30,000 சம்பாதித்து இருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் வீட்டிலேயே தையல் சேவையை வழங்குகிறார். கை வினைப் பொருட்களைத் தயாரிக்கின்றார். கம்பளி ஆடைகளை நெய்கின்றார். அவர் மிகவும் விவேகமான சுறுசுறுப்பான தொழில்முனைவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கண்காட்சியும் கலந்துரையாடலும் லிற்றில் எய்ட் ஆசிரியர்கள் மாணவர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
“வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வழங்கள் எதுவும் இல்லாமல் அந்நாடுகள் செல்வந்த நாடுகளாக உள்ளன. ஆனால் இந்நாட்டில் அளவுக்கு மிஞ்சிய வளங்கள் இருந்தும் கவனிப்பார் இல்லாமலே பூத்துக் காய்த்து கனி தரும் மரங்கள் இருந்தும் நாங்கள் வறிய நாடுகளாக இருப்பது வேதனையளிக்கின்றது” என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் குறிப்பிட்டார். ‘தொழில்முனைவோர் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். “பிரித்தானியாவில் ‘அப்பிள்’ உள்ளங்கையளவு பழம். அதிலிருந்து முடிவுப்பொருட்களாக குளிர் பானங்கள், ஏராளமான உணவு வகைகள் (அப்பிள் பை, அப்பிள் ரேன்ஓவர், அப்பிள் சோர்ஸ், அப்பிள் கேக், அப்பிள் ஸ்ரப்பிங்,..) குடிபானங்கள் உருவாக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் கனியும் அந்தப் பெரிய பிலாப்பழத்தில் நாங்கள் முடிவுப் பொருளாக குறிப்பிடப்படும் படியாக எதையும் செய்வதில்லை. இந்நிலை மாற்றப்பட்ட வேண்டும்” என த ஜெயபாலன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் முதகெலும்பானவர்கள். அவர்களே அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் வரவேற்கப்படக் கூடியது. ஏனெனில் இலங்கை மக்கள் மாற்று வழியில் சிந்திக்க வேண்டும். தொழில்முனைவோர் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இப்போதுள்ள உற்பத்தி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடு சுயஉற்பத்தியில் ஈடுபட்டு இறக்குமதியைக் குறைத்து இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்கு தொழில்முனைவோருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி த ஜெயபாலன் தனனுரையை நிறைவு செய்தார்.
லிற்றில் எய்ட் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சில நூறுபேர் கலந்து சிறப்பித்தனர். தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

யாழில் போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை கலாச்சாரத்தையும் தூண்டிவருகிறது.

இளைஞர்களிடையே வேகமெடுக்கும் இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை. அன்றாடம் செய்திகளில் நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் (11.09.2022) இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை. இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

மிக்கையில் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா?

ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை சிதறடித்தவராகக் தன் மக்களால் – ரஷ்யர்களால் கருதப்படும் ஜனநாயகத்தை கொண்டுவந்தவராக அமேரிக்க கூட்டு நாடுகளால் போற்றப்படும் சர்ச்கைக்குரிய முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் மிக்கையில் கோர்ப்பசேவின் உடல் இன்று மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட பின் இடம்பெற்ற தேர்தலில் மிக்கைல் கோர்பசேவால் ஒரு வீத வாக்குகளை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. தனது கடைசிக் காலங்களை மிக்கையில் கோர்பசேவ்வால் நிம்மதியாகக் கழித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

பனிப் போரை இருதரப்பும் விட்டுக்கொடுத்து முடிவுக்கு கொண்டுவரவில்லை. சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் பெற ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ சுற்றி வளைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட நேட்டோ அந்த நாடுகளை அணி சேர்த்துக்கொண்டது. இன்றைய ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு வித்திட்டதும் அன்று 1991இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மிக்கைல் கோர்பசேவ்.

அமெரிக்காவும் நேட்டோவும் கனவிலும் எதிர்பாரத்திராத வகையில் சோவியத் யூனியன்வை சிதறடித்தது மிக்கைல் கோர்பசேவ்வின் மீள்கட்டமைப்பு என்ற ‘பிறிஸ்ரொய்கா – perestroika’. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவருடைய வெளிநாட்டு அமைச்சர் பொறிஸ் யெல்சின் நேட்டோ நாடுகளின் குட்டி நாய் போலவே நடந்துகொண்டார். குடிக்கும் பெண்களுக்கும் அடிமையான இவர் பொதுவெளியில் கூட கண்ணியத்தை கடைப் பிடிப்பதில்லை. மிகைல் கோர்பசேவ்வும் – பொறிஸ் யெல்சினும் சோவியத் யூனியனைச் சிதறடித்து கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்டோனால்ட்ஸ் போன்ற தங்கள் பல்தேசியக் கொம்பனிகளை ரஷ்யாவினுள் நுழைத்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்தது. தங்கள் குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கைக்கு ரஷ்யப் பெண்கள் தங்களை விபச்சாரத்திற்கு தள்ள வேண்டிய நிலை 1990க்களில் ஏற்பட ஆரம்பித்தது.

மிக்கைல் கோர்ப்பசேவின் இறுதி அடக்கம் அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யர்கள் அவருடைய மரணம் தொடர்பில் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய ரஷ்யத் தலைவர் விளாடிமிர் பூட்டினுக்கும் – மிகைல் கோர்ப்சேர்வ்க்கும் கொள்கை அடிப்படையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. மிகைல் கொர்பசேவின் மீள்கட்டமைப்பு பிறிஸ்ரொய்கா இந்த நூற்றாட்டின் மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட விளாடிமீர் பூட்டின், மேற்குநாடுகளை கோர்பசேவ் மிகையாக நம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1980க்களில் பனிப்போர் காலத்தின் அரசியல் சூழல் இலங்கையிலும் பிரதிபலித்தது. இந்திய – சோவியத் உறவுகள் மிக இறுக்கமாக இருக்க, அமெரிக்க இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அயல் நாடான இலங்கையில் தனக்கு எதிரான போக்கில் அமெரிக்காவுக்கு சாயும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட வளர்த்து எடுக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமும். தமிழீழ விடுதலைப் புலிகளும். அதன் பின் வேலியே பயிரை மேய்ந்ததும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றானது. இந்த அரசியல் சதுரங்கத்தில் அரசியல் கூட்டுக்கள் மாறியது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்பாகியது. விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகினர். இந்தியா உசுப்பிவிட்ட தமிழீழத்துக்கு தமிழீழம் உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் துடித்தனர். பாவம் இலங்கைத் தமிழர்கள். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இருந்த உரிமைகளையும் இழந்தனர். இன்னும் இந்தியா தமிழீழம் வாங்கித் தரும் என்று அடம்பிடிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது பிஜேபி யோடு சேர்ந்து மறவன்புலவு சச்சிதானந்தம் கோஸ்டி சைவத் தமிழீழம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு கொடி பிடிக்கவும் போராடவும் நியாயம் கற்பிக்கவும் எமக்கு அரசியல் தலைமைகள் இருக்கின்றன. யாரோ பெற்ற பிள்ளைகளை விடுதலை என்ற பெயரில் எதற்கும் பலிகொடுப்பதில் இலங்கைத் தமிழர்களும் புலத்து தமிழர்களும் மகா வல்லவர்கள்.

பனிப் போர், கோடைப் போர், அரப் ஸ்பிரிங், ஹோல்பேஸ் ஸ்பிரிங் என்பதெல்லாமே மக்களை மடையர்களாக்குவதாக ஆகிவிட்டது. பிறிஸ்ரொய்கா போல். மிகைல் கோர்பசேவ்வின் பிறிஸ்ரொய்கா நேட்டோ நாடுகளுக்கு கிடைத்த அல்வா.

தமிழீழம் கேட்ட ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தமிழீழம் எடுத்து தராவிட்டாலும் ஜுலி சங் தமிழீழம் எடுத்துத் தர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ரிஷி சுநாக் நிச்சயம் உதவியிருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால். எத்தளை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை?

மிகைல் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா? என்ற இந்தக் கேள்விக்கான இரு பதில்களுமே சரியானது. பதில் அளிப்பவரைப் பொறுத்தது.