ஜெயபாலன் த

ஜெயபாலன் த

சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது

Balendra_Kலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. கூத்துப்பட்டறை மூன்றாம் அரங்கு என்ற இரு அரங்கியல் அமைப்புகளின் அனுசரணையோடு இம்மேடையேற்றம் இடம்பெற்றதாக அவைக்காற்றுக்கழகக் கலைஞர் வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

250 பேர் வரை இவ்வரங்க நிகழ்வை காண வந்திருந்தனர். தமிழக நாடகக்கலை மற்றும் கலைஇலக்கிய தளங்களில் அறியப்பட்டவர்களான ந முத்துசாமி இந்திரா பார்த்தசாரதி ஞானி ரங்கராஜன் பாரதிமணி சதானந்த மேனன் ரி அண்ணாமலை பிரசன்னா ராமசாமி புரசை கண்ணப்பகாசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கூத்துப்பட்டறை மாணவர்களாக இருந்து சினிமாவுக்குள் அறியப்பட்டுள்ள பசுபதி கலைவாணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரங்கியல் தொடர்பான தம் தேடலுக்காக சென்னை சென்றிருந்த தமிழ் அவைக்காற்றுக்கழகம் அங்குள்ளவர்களின் ஏற்பாட்டில் இம்மேடையெற்றங்களை மேற்கொண்டனர். மூன்றாம் அரங்கு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நாடகங்களை மேடையேற்றுவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவர்களது நட்பு தாங்கள் தங்கள் ஊரிலேயே நாடகத்தை மேடையேற்றுவது போன்ற உணர்வையூட்டியதாகவும் வாசுதேவன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இப்பயணம் உதவியுள்ளதாகவும் வாசுதேவன் தெரிவித்தார். க பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா மனோ வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தமிழ் அவைக்காற்றுக்கழகக் குழுவினரே சென்னை சென்றிருந்தனர்.

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

Prof_Hoole‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம் தேசம்நெற்றில் தொடர்கிறது. இவ்விவாதம் இதுவரை பேசப்படாத பல விடயங்களை மக்கள் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மேலும் தமிழ் அறிவியல் சமூகம் – அதன் ஸ்தாபனமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றியுமான ஒரு மீள் மதிப்பீட்டின் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தி இருந்தது. இலக்குகள் மீள்வரைபுக்கு உட்பட்டு தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை மீள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. (முன்னைய விவாதத்தைப் பார்வையிட: சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சூழலில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்த நேர்காணல் இந்த விவாதத்தை மற்றுமொரு தளத்திற்கு நகர்த்தும் என நினைக்கின்றேன்.

Prof_Hooleஇலங்கையின் சிறந்த நேர்மையான கல்வியியலாளராக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகவே அமைந்தது. அவருடைய பதில்கள் அவர் கைப்பட தமிழில் எழுதி மின் அஞ்சலூடாகவே அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது. அவருடைய தமிழ் மொழிப் பாவனை அறுபதுகளின் இறுதிப் பகுதியுடனேயே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் அப்போதைய மொழிநடையிலேயே தனது பதில்களை அவர் பதிவு செய்துள்ளார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம்…..

._._._._._.

தேசம்நெற்: உங்களைப் பற்றிய ஒரு ஆழமான சுருக்கமான அறிமுகம்…..

பேராசிரியர் ஃகூல்: ஃகூல் குடும்பத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீநிவாசன் ஆவார். அவர் பருத்தித்துறையில் ஒரு சைவக் கோவில்மனியக்காரன். ஆனால் 15 ஏப்ரல் 1845 அன்று கனம் பீட்டர் பேசிவல் ஊழியத்தால் ஞானஸ்ஞானம் பெற்று பின்பு பேசிவலோடு மெதடீஸ் திருச்சபையிலிருந்து ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு 1850 மட்டில் மாறினார். இதிலிருந்து நாம் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய ஆங்கிலிக்கன் ஸ்தாபனங்களைக் கொண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறேம். ஊர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் சிக்கலானது.

எனது அம்மாவின் தகப்பனார் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கொடிமர சங்கரர் என்ற பட்டத்தை உடையவர். மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி, கருகம்பானை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர். மாவிட்டபுரம் கோவிலின் மூலஸ்தானத்திலுள்ள மூன்று விக்கிரகங்களில் இடதுபக்கமாகவுள்ளது சோமசுந்தரத்தின் தமயன் முதலியார் பிள்ளையால் திருவிழாவில் கொடியேற்றும் உரிமையைத் தொடர வாரிசு வேண்டி நேத்திக் கடனாகக் கட்டியது.

சோமசுந்தரம் கிறிஸ்தவனாகி பரியோவான் கல்லூரியில் டீன் ஆகவும், சுண்டிக்குழி சோமசுந்தரம் வீதியில் வீடு கட்டி பின் நல்லூரில் 32 வருஷம் குருவாகவும் இயங்கினார். என் அய்யபாவின் தாய் பக்கம் ஏழாலையைச் சேர்ந்தவர்கள்.

Prof_Hoole_and_his_Familyஎன் மனைவி துஷியந்தி ஆசீர்வாதம். ஐந்து பிள்ளைகள். இப்போ நான்கு.

அரசியல் பின்னணி என்றால் தமிழரசுக் கட்சி. செல்வநாயகம், திருச்செல்வம் (தகப்பன் – மகன், -நீலன் திருச்செல்வம்), நாகநாதன், கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம் யாவரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குச் சொந்தமானவர்கள். அப்பா ஃகூல் போதகர் அவர்கள் TULF மேடைகளில் பேசாமல் உட்கார்ந்து இருப்பார்.

படித்தது நல்லூர் சாதனா பாடசாலை, பரி யோவான் கல்லூரி, பட்டங்கள் D.Sc (Eng) London, Ph.D. Carnegie Mellon, MSc (Distinction) London, BSc (Ceylon / Katubedde), IEEE Fellow, C.Eng.

தேசம்நெற்: உங்கள் இளமைக்காலம் தமிழ்த்தேசிய எழுச்சியுடன் பிண்ணிப் பிணைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: குறிப்பாகப் பெரிதாய் ஒன்றும் இல்லை. அம்மா நல்லூர் பரி யாக்கோபூ ஆலயப் பெண்களுடன் சத்தியாக்கிரகம் இருக்கப் போனபோது நான் துணையாகப் போவேன். சொந்தக்காரர் தமிழரசுக்கட்சி வேட்பாளரான போது நானும் சிறு பெடியனாக அவர்களுடன் ஒரு வால்போல் போனேன். 1970ல் மாணவர் பேரவை ஊர்வலங்களில் ஈடுபட்டிருந்தேன். 1986 வரை இயக்கங்களுக்கு ஆதரவு என் மனதில் இருந்தது. என் அண்ணன் ஒருவர் சத்தியசீலன், தோமஸ் அரியரத்தினம் ஆகியோருடன் சுப்பிரமணியம் பூங்காவில் வகுப்புகளுக்குப் போனவர்.

நியூயோர்க் இலங்கைத் தமிழ் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியனாகவும் 1983/4 செயல்பட்டு Tamil News என்ற வெளியீட்டை வைத்தியர் நாகேந்திராவின் கீழ் செய்தேன். ஆனால் நாமே எம்மைக் கொல்லத் தொடங்கி, எங்கள் நிறுவனங்கள் யாவும் அக்கொலைகளை ஆதரித்ததுடன் நான் தனியாய் இயங்கி எங்கு மனித உரிமைகளைப் பேண முடியுமோ அங்கு செய்யக் கூடியதைச் செய்து வருகிரேன். மனித உரிமைகள் தமிழரின் மட்டுமல்ல. பெண்கள், பிள்ளைகள், சாதி பெயரில் தாழ்த்தப்படுவோர் போலப் பலரை அடக்கும்.

மேலும் என் பாட்டனுக்கும் அப்பாவுக்கும் குரு உடைகள் (cassock) தைத்தவர் ஒரு இஸ்லாமிய தையலாளர். அவர் மகன்மார் ரஃபிக், ஸசீற் ஆகியோர் பரியோவான் கல்லூரியில் படித்து, என்னையும் என் சகோதரரையும் brother என்று அழைத்து, பிரதான வீதியில் கடை வைத்து, எமது உடுப்புகளைத் தைத்தனர். அவர்களை துரோகிகள் என்று குடியெழுப்ப எல்லாமே எனக்குப் புளித்துவிட்டது. அதை ஆதரித்த என்னுடன் தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது.

தேசம்நெற்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நீங்கள் சமூகம் பற்றிய ஆழமான அக்கறையுடைய ஒரு மனிதர். அந்த வகையில் சமூக மாற்றம் பற்றிய உங்கள் இளமைக்கால கனவுகள் எதிர்பார்ப்புகளுக்கு உங்கள் கல்வியியல் சாதனைகள் துணைபுரிந்துள்ளனவா?

பேராசிரியர் ஃகூல்: நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். குடும்பமாக திருவிவில்லியத்தை வாசித்து வந்தோம். என் கனவுகள் எல்லாம் அந்த அடிப்படையில் அமைந்துள்ளன. கடவுள் கெட்டவர் உட்பட யாவரையும் நேசிக்கிறார். இந்த அடிப்படைக் கூற்றிற்கு அமைய விதவைகளையும் அனாதைகளையும் பேணல், ஊர் பெயரும் தற்காலிக வாசகரை பராமரித்தல், மறியலில் உள்ளோரைப் பார்த்தல், அறுவடை நேரம் ஒரு பங்கை அறுக்காமல் ஏழைகளுக்கு விடல் போன்ற பல கட்டளைகள் வேதவசனத்தில் உள்ளன. இவை யாவும் எம்மத்தியில் சமத்துவத்தை பேணுகின்றன. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலாக என் சமயக் கல்வியே என் கனவுகளை உருவாக்கியுள்ளது. சமயசார்பற்ற கல்வியில் சமத்துவத்திற்கோ மனித உரிமைகளுக்கோ அடிப்படை காண்பது கஷ்டம்.

தேசம்நெற்: சமூக மாற்றத்திற்கு அல்லது சமூகப் பொறியியலுக்கும் அறிவியல் சமூகத்திற்கும் உள்ள உறவுபற்றி குறிப்பிட முடியுமா? பல்கலைக்கழக சமூகத்தை அறிவியல் சமூகமாக வரையறுக்க முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: மேற்கூறியவாறு சமூகக் கல்வியில் எது சரி, எது பிழை என்பதற்கு அடிப்படையில்லை. நான் Ethics for Engineers என்ற ஒரு பாடம் கற்பிக்கிறேன். பல்கலைக்கழகத்தில் நாம் சமயம் சாராமல் படிப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் புஸ்தகங்களில் இன்னும் ஒரு திருப்தியான அடிப்படையில் சரி – பிழைக்கு வரைவிலக்கணம் இல்லை. ஆகவே சுயநலத்தையே அடிப்படையாக வைத்து பலர் கற்பிக்கிறோம். உதாரணமாக மனித உரிமைக்கு அடிப்படை ‘‘அதிகாரம் வல்லமை உள்ள நாம் இன்று மற்றோரை நசுக்கலாம். ஆனால் நாளை இந்த அதிகாரம் வல்லமை மறுபக்கம் மாறினால் அவர்கள் அதே துன்புறுத்தலை எமக்குச் செய்யலாம். ஆகவே இருவரும் சேர்ந்து உரிமைகளைப் பேணும் ஒரு நிற்பந்தத்திற்கு வருவதே இருவருக்கும் நல்லது.’’ இதில் பல்கலைக்கழகத்திற்கு பெரிய பொறுப்புண்டு. யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பதெல்லாம் சரித்திரத்தில் உண்டென்று காட்டினால் யானை பூனையைப் பராமரிக்கும்.

தேசம்நெற்: இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டும் அப்பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி உள்ளீர்கள். அவற்றின் ஒப்பு நோக்கில் கடந்த ஆறு சகாப்த சுதந்திர இலங்கையில் பல்கலைக்கழகங்கள் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார அம்சங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

பேராசிரியர் ஃகூல்: சிங்களவரும் தான் தமிழரும் தான் மார்க்க ஏகாதிபத்திய சரித்திரம் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்கள். மெய்யென்றாலும் பரவாய் இல்லை. ஆனால் பல படுபொய்கள். சரித்திரம் என்று பாடப் புஸ்தகங்களில் எப்படி சிறுபான்மையினரைத் தாக்குகிறது என்று யோசியாமல் எழுதுகிறார்கள். எழுதி இலங்கையை நொருக்கிவிட்டார்கள். இலங்கையிலோ மேல்நாட்டிலோ பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சியே முதற்கடமை – முதல் பட்ட (BA, BSc) படிப்பு அல்ல. இந்த அடிப்படையில் தான் விரிவுரைகள் ஒரு வருடத்திற்கு 9 மாதங்களுக்கும் அதுவும் கிழமைக்கு 4 – 5 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இதை எல்லோரும் சரியாயச் செய்தால் எல்லாம் சீராக இருக்கும். அதனால் வரும் கூற்றுகளுக்கு இடையிலான போட்டியும் விவாதமும் இந்த மார்க்க ஏகாதிபத்தியத்தை முறித்திருக்கும். சிலர் சொல்வார்கள் இலங்கையில் வசதிகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாதென்று. அப்படியென்றால் எப்படி ஒவ்வொரு வருஷமும் சுமார் 150 இலங்கையர் ஜனாதிபதியின் பரிசை தமது ஆராய்ச்சிக்கு வெல்லுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மீண்டும் அடிப்படை ஆராய்ச்சி செய்ய பல வாய்ப்புகள் தலைப்புகள் எல்லாத்துறைகளிலும் உள்ளன.

தேசம்நெற்: 19ம் நூற்றாண்டில் இருந்த பல்கலைக்கழகம் பற்றிய கருத்தியலுக்கும் பல்கலைக்கழகம் பற்றிய தற்போதுள்ள கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கருத்தியல் என்னவாக உள்ளது.

பேராசிரியர் ஃகூல்: காலப்போக்கில் பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன. பழைய காலத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் மாணவரை வைத்து தன் ஆராய்ச்சியை நடத்தினால் பல வருஷங்களுக்குப் பின் ஆசிரியருக்கு கலாநிதிப் பட்டம் (DSc., D.Litt.) வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியின் நிமித்தம் கூடக் கூட பட்டதாரிகள் தேவைப்பட கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதனுடன் வந்த ஆசிரிய தேவையை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்ய கலாநிதிப் படிப்பு தனிமையாக பல வருடங்களில் முடிக்கும் நிலையிலிருந்து 2 – 5 வருஷங்களில் ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செய்யும் பாடமாக மாற்றப்பட்டது. இதன் தாக்கவிளைவையே இன்று காண்கிறோம். உலகெங்கும் அரசாங்கங்களும் முதல்ஈடு செய்கின்றன. ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சியாளரே நிதி திரட்டுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக விளைவு தரும் ஆராய்ச்சி மட்டுமே இப்படி மேலோங்குவது துக்கத்திற்குரியது. ஆராய்ச்சிக் கலாசாரம் வேரூண்டாத இலங்கையில் இது ஒரு பேரழிவு. குறிப்பாக எமக்கு வேண்டிய சமூக சரித்திர வட்டாரங்களில் கேடு தரும்.

தேசம்நெற்: இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமாக இருந்த காலகட்டங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நீங்கள் பேராசிரியராக இருந்துள்ளீர்கள். தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், தமிழர் என்ற வகையில் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: பல பிரச்சினைகள். பொலிஸ் மாணவரைப் பிடித்தல், புலிகள் சாராத மாணவர் வாயை மூடவேண்டிய நிலை, ஆங்கில பாடக்கோப்பில் விரிவுரையாளர் சிங்களத்தில் படிப்பித்தல், தொழில் பயிற்சிக்கு, தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி CEB, SLT போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமை. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து சில தமிழ் மாணவர் பட்டாசு கொழுத்த அதைத் தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழரிடம் இருந்து இறந்த இராணுவத்தினருக்கு நிதி சேர்க்க, ஒரு பதட்டமான நிலையேற்பட்டமை, வன்னி மாணவர் அனுமதிக் கடிதம் பிந்திக் கிடைத்ததால் பிந்தி பீடத்திற்கு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டமை. இதில் ஆசிரியராகிய நாம் தலையிடுவது கஷ்டம்.

திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University, Colombo) சைவ மாணவர்கள் தைப்பொங்கலைக் கொண்டாட முயன்ற போது அரிசி மூட்டைகளை வாசலில் இறக்கி சோதித்த பின் தூக்கி ஒரு கட்டை தூரம் நடக்க வேண்டும் என்றார்கள். மாணவர்கள் சொல்ல என் மனைவி அப்போதைய தமிழ் துணை வேந்தரிடம் இதைப் பற்றிக் கூறிய போது அவர் அன்பாகச் சொன்னது, ’’பிள்ளை, நாங்கள் இங்கு இருப்பதே கஷ்டம். இவற்றை எழுப்பினால் இருக்கவே முடியாமல் போய்விடும்.’’ இதுவே நிலை. 
 
தேசம்நெற்: தமிழ் பேராசிரியர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? கல்வியியலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

பேராசிரியர் ஃகூல்: பேராதனையில் நான் மாணவர் சார்பாக காவலகம் சென்ற போது பொலிஸார் பேராதனைப் பேராசிரியர் என பெயருக்கு மரியாதை கொடுத்து 24 மணிகளுக்குள் மாணவரை விடுவித்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தினுள்ளே நான் மேற்கூறிய பிரச்சினைகளை எழுப்பிய போது என்னை சிங்களவருக்கு எதிரானவர் என்று கருதி 3 வேறு வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கினர்.

இப்பொய் குற்றச்சாட்டுக்கள்
1) பீடத்தில் புள்ளிவிபரப் புஸ்தகத்தை மோசடியாக மாற்றினேன் .
2) பாடத்திற்கு வெளியான கேள்விகளை பரீட்சையில் கேட்டு பீடத்தின் தரத்தை குறைத்தேன்.
3) துறைத் தலைவருடன் ஒத்துழைக்க மறுத்தேன் என்றும் இதன் விளைவால் என் கேள்வித்தாளில் பிழைகள் இருந்தன என்றும். மேலும் நான் விசாரணையின் கீழ் இருந்தேன் என்றும் சொல்லி என்னை உத்தியோகத்தில் நிரந்தரமாக்கவும் சிரேஷ்ட பேராசிரியராக்கவும் மறுத்து என் மனைவியையும் வேலை நீக்கினார்கள். எல்லாம் தாங்க முடிந்தது. ஆனால் முதலாம் குற்றச்சாட்டு நான் ஒரு தமிழ் மாணவனை 2ம் வகுப்பு மேற்பிரிவிலிருந்து முதலாம் வகுப்பு பட்டதாரியாக மாற்றச்செய்ததென்பது என் சிங்கள நண்பர்களையும் என்மேல் சந்தேகம் கொள்ள வைத்தது.

ஒருநாள் விரிவுரை முடித்து வந்த போது ஒரு CID தலைவர் என் வருகைக்கு காத்திருந்து தான் சிகல உருமயவைத் தொடரும் குழுவைச் சேர்ந்தவரென்றும் என் பெயர் பல கூட்டங்களில் கோபமாய் பேசப்பட்டதென்றும் சொல்லி, எச்சரிக்கையாயிருக்க வேண்டி கொழும்பு கண்டி தொலைபேசி இலக்கங்களை அவசரமேற்படின் அழைக்கத் தந்தார். ஒரு தஞ்சத்திற்கு, என்னை வேலை நீக்க முயலும் துணைவேந்தரிடம் ஓட முடியவில்லை. அதிலிருந்து குடும்பத்தை கொழும்புக்கு மாற்றி பகலில் மட்டும் பேராதனைக்கு வந்து சென்றேன்.

மூன்று வருடங்களின் பின் விசாரணைகள் நான் குற்றமற்றவன் என்ற முடிவுக்கு வந்தன. மேலும் நீதிமன்றம் என்னை நிரந்தர பணியாளாக்கி சிரேஷ்ட்ட பேராசிரியராக 3 வருடம் பின் செயலாகச் செய்யும்படி கட்டளையிட்டது. இதைச் செயற்படுத்தவும் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தின் எனக்குச் சார்பான முடிவுக்கு பல்கலைக்கழகம் மரியாதையீனமாய் நடந்தது. (Contempt of Court) என்ற மனுவை பதிந்துதான், நீதிமன்றக் கட்டளைகள் அமுல்படுத்தப்பட்டன. இதேபோல் மனித உரிமை ஆணைக்குழு என் மனைவியின் வேலை நீக்கத்தை பிழையானது என்று தீர்த்தது.

மார்ச் 2008ல் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பேராதனை என்னை 3 வருடத்திற்குக் துணை வேந்தனாக இயங்கக் கொடுத்தது. நான் இந்த 3 வருடம் முடியும் காரணத்தால் டிசம்பர் 19 2008 இலங்கை வந்து என் 7ம் வருட விடுமுறையை எடுப்பேன் என்று எழுதி அங்கு சென்றேன். அதேநாள் துறைத் தலைவருக்கு துணை வேந்தரிடம் இருந்து நான் வேலை நீக்கப்பட்டுள்ளேன் என்ற கடிதம் வந்தது. எனக்கு இன்னும் அந்த கடிதத்தின் பிரதி வரவில்லை.

தமிழராகிய எமக்கு இது சிங்கள வியாதி என்று இப்படிப்பட்ட நடத்தையை தட்டிவிடுவது சுலபம். ஆனால் சிங்களவர், தமிழர் நாம் யாவரும் இப்படியே. எமக்கு எதிராக இயங்கிய தமிழர் ஒருவர் தேவையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இப்போ பேராசிரியர் ஆக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தேவையான பேராசிரியர் அனுபவம் அற்று இளைப்பாறச் சற்று முன்பு சிரேஷ்ட பேராசிரியராக்கப்பட்டார். சேர் தொமஸ் மோ சொன்னது போல, ஒரு பட்டத்திற்காக தங்கள் ஆத்மாவைக் கூலியாக வித்துள்ளனர். இதேபோல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணணிப் பேராசிரியராக விண்ணப்பித்தேன். என் வயதைச் சேர்ந்தோர் படித்த காலத்தில் கணணியியல் ஒரு துறையாக இருக்கவில்லை. ஆகவே உலகெங்கும் துறையை உருவாக்கியவர்கள் ஒன்றில் என்னைப் போல் மின்-கணணிப் பொறியியலாளர் அல்லது கணிதத்துறை சார்ந்தோர்.

மேலும் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை கணணியலை சேர்ந்தவை மட்டும் அல்லாமல், பேராதனை கணணித்துறையை பொறியியல் பீடத்தின் கீழ் ஸ்தாபித்து திறந்த பல்கலைக்கழகத்தில் IT பேராசிரியராகவும் 2 வருஷகாலம் வேலை செய்துள்ளேன். அப்படி இருந்தும் என் விண்ணப்பம் தெரிவுக்குழுவுக்குப் போடப்படவில்லை. நான் வழக்கு வைத்தபோது வேறு விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் என்னை நியமிக்குமாறு தீர்ப்பு தரப்பட்டது. பல கடிதங்கள் எழுதியும் அமுல்படுத்தப்படவில்லை. மறுமொழியும் தரப்படவில்லை. இந்தத் தமிழ் நிர்வாகம் சிங்கள நிர்வாகம் போன்றதோ அல்லது எமக்கு நியாயத்தோடும் நீதியோடும் நிர்வகிக்க முடியுமா என்பதே தமிழராகிய நம்மை எதிர்நோக்கும் சவால்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலங்களுக்கு ஒருமுறை பின்நோக்கிப் பயணிப்போம். அப்போதைய உங்கள் மனப்பதிவுகளை எமது வாசகர்களுக்கு வெளிக்கொண்டுவர முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இது தரப்படுத்தலின் உச்சத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீமா என்றாலே மாணவர் மத்தியில் வயிற்றெரிச்சல். பரமேஸ்வரா, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளை அரசாங்கம் எடுத்து ஒரு சதம் செலவழியாமல் எமக்குப் பல்கலைக்கழகம் தருவதாக செய்ததை ஒரு நாடகமாய் கருதி மாணவர் பேரவையும் தமிழரசுக்கட்சியும் திறப்பு விழாவை பகிஷ்கரித்தோம். ஆனால் 1979 மட்டிலான கண்ணோட்டத்தில் அது ஒரு பெரிய காரியமாகும். 1974ல் நாம் மாட்டுக்கொட்டிலாகக் கருதியது 1979ல் நாட்டின் ஒரு பிரதான பல்கலைக்கழகமானது. இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால். சின்னக் காரியங்களிலும் சுயநிர்ணய உரிமையை எடுத்தால் அதைக் கட்டி எழுப்பலாம் என்பதே. 1987ல் 2000ம் ஆண்டும் பின் 2004இலும் கிடைத்த தருணங்களை ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கையின் கீழ் கைவிட்டது எனக்கு பெரிய கவலை. 

தேசம்நெற்: 2006ல் நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது உங்கள் உணர்வு எப்படி இருந்து? நீங்கள் அப்பதவியைத் தொடர்ந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் உயிராபத்து விளையும் என்ற நிலையேற்பட்ட போது உங்கள் மனநிலை என்ன?

Prof_Hoole_with_his_Wifeபேராசிரியர் ஃகூல்: என்னத்தைச் சொல்வது. மனம் மிகத் தளர்ந்திருந்தேன். அமெரிக்காவில் இருந்து கூட்டி வந்த பிள்ளைகள் ‘‘அப்பா, இதுவா உங்கள் யாழ்ப்பாணம்?’’ என்று கேட்டனர். ஒரு சில தமிழரை வைத்து எல்லாத் தமிழரையும் மறியலில் அடைக்கக் கூடாதென்று வாதாடும் நாம், அதேபோல் ஒரு சில தமிழரின் கோழைத்தனத்தை வைத்து முழு சமுதாயத்தையும் குறைத்துப் பேசக்கூடாது.

துரோகி என்றும் சைவக் கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்படி என்னை நடமாடவிட முடியும் என்றும் வேறும் கிறிஸ்தவரை தாழ்த்தி ஒரு பேப்பர் என்ற பத்திரிகையில் சிலர் ஆசிரியர் கட்டுரை எழுதினார்கள். இதற்கும் நான் என் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவது 25 பேர் கொண்ட பேரவையில் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். மீதிப் பத்துப் பேரில் பலர் மதம் சாரா காரணங்களுக்காக தம் வாக்கை அளியாமல்விட்டிருப்பர். ஆகவே மதவெறி கொண்டவர்களை ஒரு மிகச் சிறுபான்மையானவரென்றே நாம் கருத வேண்டும் என்பதே.

என்னை அந்த நேரம் பேணிய மாணவர், MP மார், குருமார் பொது மக்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

மேலும் நான் தமிழருக்கு குறிப்பாக வடமாகாணத்தாருக்கு செய்த காரியங்களில் சிலவற்றை (என் செயல்களை நானே எடுத்துச் சொல்வது அழகற்றதாக இருந்தாலும்) இந்தக் கேள்வியின் பட்சத்தில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
1) 1977 – 1980 காலத்தில் சுமார் 600 உபாத்தியாளர் நியமனக் கடிதங்களை நைஜீரியாவில் இலவசமாக தமிழருக்கு எடுத்துக் கொடுத்தேன். இவற்றில் பல யாழ் பல்கலைக்கழகத்தின் புதுப் பட்டதாரிகளுக்கு.
2) இலங்கையில் கஷ்டத்துக்குள்ளாகியோர் பலரை என் பட்டதாரி மாணவராய் அமெரிக்காவுக்கு எடுத்து இன்று பெரிய உத்தியோகங்களில் வாழ வைத்துள்ளேன். சிலரை நான் என் பரிட்சைக் கூடத்திலேயே பட்டப்படிப்பு முடித்தும் உத்தியோகஸ்தராக்கி Green Card எடுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் என் எழுத்துக்கள் காரணத்தால் அமெரிக்க மத்திய அரசின் உள்குடியேற்ற நீதிமன்றம் என்னை இலங்கையைப் பற்றிய வல்லுனர் என்று ஏற்றதன் நிமித்தம் பலர் சார்பில் இலவசமாகச் சாட்சியமளித்து தஞ்சம் எடுக்க உதவியுள்ளேன்.
3) மானியங்கள் ஆணைக்குழுவில் சேர்ந்த சமயம் யாழ்பாணத்தில் ஒரு வருஷத்தில் ஒரு மாணவனிற்கு 44 000 ரூபாயும் ஏனைய பல்கலைக்கழகங்களில் சுமார் 80 000 ரூபாயும் (2004ம் ஆண்டுக் கணக்கு) ஒதுக்கி வந்தது. நான் இது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியதும், 2005ம் ஆண்டு யாழ் மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது  ரூபாய் 90 000. நான் எழுதிய முன்மொழிவின்படி  வவுனியா வளாகத்திற்கு 200 மில்லியன் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு கணணித் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் கணணித்துறை பெருப்பிக்கப்பட்டது.

திருகோணமலை வளாகத்தை கந்தளாயிற்கு மாற்றும் திட்டம் நான் எதிர்த்ததும் கைவிடப்பட்டது.

இப்படியே நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் சொல்ல வருவது என்ன? ஏன் இதைச் செய்கிறேன்? சைவ மக்கள் மேல் பகையென்றால் ஏன் இவற்றை செய்வேன். நான் சைவ மக்களின் பகைவன் என்பவர்கள் சைவ மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

தேசம்நெற்: உங்கள் பதவியை ஏற்கவிடாமல் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளனர். மிக அவலமாகவும் கோரமாகவும் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நீங்கள் சொல்வது போல ஒரு நாளும் ஒரு இயக்கத்தை முற்றாக அழிக்க முடியாது. அவ்வியக்கத்தை எழுப்பிய காரணங்கள் நீங்கினால் மட்டுமே அவ்வியக்கம் அழியும். புலிகளின் ஆதரவாளர் பலர் மிஞ்சவில்லை என்பது முட்டாள்தனம். மேலும் புலிகளினால் அழிக்கப்பட்டவர்களின் சொந்தக்காரர் அப்படிக் கொன்று தமிழர் மத்தியில் புலிகள் ஏற்படுத்திய பகை என்பவையே பல தமிழரை இராணுவத்துடன் இயங்க வைத்தது புலிகளின் அழிவுக்கான காரணங்களில் ஒன்றானது. இன்று இராணுவத்தின் கையில் இறந்தவர்களின் சொந்தங்கள் அதேபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் இராணுவத்திற்கெதிராக இயக்குவார்கள் என்பது எதிர்பார்க்க வேண்டியது.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கொலை – மீள்கொலை வட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதைச் செய்வதற்கான ஞானம் அரசாங்கத்திற்கு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

யாருடைய மரணத்தையும் வைத்து நாம் மகிழ முடியாது. குறிப்பாக வன்முறையினால் கட்டாயப்படத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய பிள்ளைகளை நாம் தீவிரவாதிகளென்று சொல்வது பெரிய தவறு. அரசாங்கம் இப்பிள்ளைகளைச் சமூகச் சீர்திருத்தும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கோரமான அவலத்திற்கு நாங்கள் சாட்சியாக இருந்திருக்கின்றோம். தமிழ் அரசியல் தலைமைகள் அல்லது தமிழ் அறிவியல் சமூகம் இந்த அவலமான அல்லது கோரமான முடிவை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா?

பேராசிரியர் ஃகூல்: மேல் கூறியவாறு ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கை எம்மை கை விட்டுள்ளது. 1987, 2000, 2002 – 4 ஆகிய ஆண்டுகளில் வந்த எல்லா வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும். அதிகாரம் அரசாங்கக் கையில் உள்ள போது தூர விலத்தி ‘‘நீங்கள் எங்கள் நன்மையை கருதுகிறீர்கள் என்று நிரூபியுங்கள்’’ என்று சொல்வது 1965ல் பலிக்கவில்லை. இன்றும் பலிக்காது. தமிழ் மந்திரிமாருக்கே தமிழரின் தேவைகள் சரியாய் தெரியும். தமிழராகிய நாம் இப்படி என்றாலும் எடுக்கக் கூடிய அதிகாரத்தை எடுக்க வேண்டும். கூட்டுறவே ஒரே வழியாகியுள்ளது.

தேசம்நெற்: கடந்த மூன்று தசாப்தகால தமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது தமிழ் இளைஞர்களின் ஆயுத வன்முறை மிகவும் அவலமான முடிவுக்கு வந்துள்ளது. இதிலிருந்து தமிழ் சமூகம் குறிப்பாக தமிழ் அறிவியல் சமூகம் எதனைக் கற்றுகொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

பேராசிரியர் ஃகூல்: ஞானம், அனுபவம் என்பன முதிந்தோர் மத்தியிலேயே கூட உள்ளன. ஆனால் எமது முதிர்ந்தோர் வழிகாட்டாமல் வாலிபருக்கு வால் பிடித்து அவர்களை ஏமாற்றி தத்தம் காரியங்களைப் பார்த்தார்கள்.

உதாரணமாக மேடையேறி போர் உற்சாகத்தை ஊட்டி, அதேவேளையில் தம் பிள்ளைகளுக்கு வெளியேற அனுமதி பெற்றார்கள். எனக்குத் தெரிந்த வெள்ளாளப் பூசாரி ஒருவர் கலிபோனியாவிலிருந்து பகவத்கீதையின்படி இலங்கையிலுள்ள வாலிபர்களின் தர்மம் போர் புரிவதும், தனது தர்மம் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் என்று எனக்குப் புழுகினார்.

அறிவியல் சமூகத்தினர் பலர் நிலமை எல்லாம் விளங்கியும் தம் மௌனத்தை கைவிடவில்லை. அம்மௌனமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலம் வீரத்தோடு தம் தனித்துவத்தைப் பேணியும், கடைசியில் தலைகுனிந்த நிர்ப்பந்தம் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆண்டுகால வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் பிண்ணிப் பிணைந்ததாகவே உள்ளது. நடந்து முடிந்தள்ள மூன்று தசாப்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பேராசிரியர் ஃகூல்: ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம். இதுவே பிளேற்றோ கூறியபடி பல்கலைக்கழகங்கள் – நாட்டு ஆளுமைக்கு ஆதாரம் என்ற நோக்குடன் கல்வியில் ஈடுபட வேண்டும். – அரசியலுக்கோ எம் மார்க்கத்திற்கோ காரணம் வைத்து எம் ஆராய்ச்சிப் பணியைச் செய்ய முடியாது. இந்த உண்மையை மறந்ததால் தான் யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த கடைசி 30 வருஷங்களாகக் கவலைக்கிடமான பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சிங்களவரும் அப்படிச் செய்கின்றனர், ஏன் நாமும் அப்படிச் செய்யக் கூடாது என்று கேக்கிறவர்கள் சிலர். அதற்கு என் பதில் அவர்களுடைய மாதிரிப் பல்கலைக்கழகமா எங்களுக்கு வேண்டும்.

அல்லது உதாரணமாக புதிய பொறியியல் பீடத்தை அரசியல் காரணங்களுக்கு கிளிநொச்சியில் போட வேண்டும் என்கிறார்கள் பலர். அப்படி நடப்பின் ரஜரட்டை பல்கலைக்கழகம் போல், இளம் பிள்ளைகள் உடைய விரிவுரையாளர் (அதாவது அநேகர்) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து திங்கள் பின்நேரம் அல்லது செவ்வாய் வேலைக்கு வந்து வியாளன் அல்லது வெள்ளி காலை யாழ்ப்பாணம் செல்வார்கள். செனட் பேரவை கூடும் நாட்களில் ஒரு அதிகாரியும் வளாகத்தில் இருக்க மாட்டார். இது எமது சமூகத்தின் போலித்தனத்தை மீண்டும் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் வசதியாய் வாழும் நாம், எம் வாலிப விரிவுரையாளர்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் குடும்பங்களுடன் கிளிநொச்சியில் வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் சரித்திரத்தில் அப்படி நடப்பதில்லை. ஒருவர் தன் குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பதே இயற்கை, வழக்கம்.

அறிவைப் பேணி அரசியல் நோக்கங்களுக்கு பல்கலைக்கழகத்தை அடியாக்க முன்வரும் சக்திகளை எதிர்க்கும் பலம் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு வேண்டும். இப்பலம் இல்லாமல் இருந்ததே கடைசி 30 வருடங்களின் குறை.  

தேசம்நெற்: யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக உங்களை நியமிக்க பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதை தேசம்நெற் அறிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் தற்போது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவிகளைத் துறந்து யாழ் செல்வீர்களா? அதற்கான தயாரிப்பில் நீங்கள் உள்ளீர்களா?

பேராசிரியர் ஃகூல்: அந்த அழுத்தங்கள் ஜனநாயகமுறையில் வந்தால் அவற்றை நாம் வரவேற்க வேண்டும். நான் செல்வேனா என்பது இப்போது ஒரு கேள்வியாக அமையாது. ஏனெனில் நான் அமெரிக்காவில் என் பதவியை ஏற்கனவே ராஜினாமாச் செய்து ஓகஸ்டில் நாடு திரும்புகிறேன்.

பேராசிரியர் துரைராஜா 1989ல் என்னை மின்பொறியியல் துறைக்குத் தலைவராக வரவேண்டும்  என்று கேட்டபோது என் மனைவியின் Ph.D. பட்டப்படிப்பு முடிந்ததும் என் 7ம் வருஷ விடுமுறையை எடுத்துக்கொண்டு 1993ல் வருவேன் என்று வாக்களித்திருந்தேன். யுத்த காரணத்தால் அவர் பொறியியல் பீடத் திட்டங்கள் பலிக்கவில்லை. 1995ல் என் நீண்ட காலத் திட்டங்களுக்கமைய ஊர் சென்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் உஸ்தியோகம் கிடைக்கவில்லை. நான் பொறியியல் பீடத்தை அமைக்க உதவுவேன் என்று சொல்லியும் சிவில் பொறியியல் பதவியையே விளம்பரப்படுத்தினர். தகுந்த விண்ணப்பதாரி இல்லையென்று தெரிந்தும் மீண்டும் சிவிலையே விளம்பரப்படுத்தினர். மின்துறையைச் சேர்ந்த நான் விண்ணப்பிக்க முடியவில்லை.

Prof_Hoole_with_his_Wifeசரி கணணித்துறைக்குச் செல்வோம் என்று வெளிக்கிட்டதும் நடந்தது தெரிந்ததே. சரி மனைவி பிள்ளைகளை ஆகிலும் அனுப்புவோமென்று அவர்கள் இரசாயணப் பதவியை விளம்பரப்படுத்திய போது என் மனைவி விண்ணப்பம் அனுப்பினார். பல மாதங்கள் பின் அதையே நாம் மறந்த கட்டத்தில் அடுத்தநாள் நேர்முகப்பரீட்சைக்கு யாழ்ப்பாணம் வருமாறு கொழும்பில் இருந்த அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் உடனடியாகத் தொலைபேசியில் தனக்கு விரும்பினாலும் வரமுடியாதென்று முறைப்பட்ட போது, ‘‘பரவாயில்லை அடுத்தமுறை விளம்பரம் வரும் போது விண்ணப்பியுங்கள்’’ என்றார்கள். மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பட்ட போது, அவர் விண்ணப்பதாரிகள் இல்லாதபட்சத்தில் மீண்டும் தெரிவுக்குழுவைக் கூட கட்டளையிட்டனர். அதற்கிணங்க தெரிவுக்குழு கூடி, ”வெற்றிடம் இல்லை’’ என்று முடிவெடுத்தது! உடனடியாக வழக்கு வைத்தோம். ஆனால் நாட்டைவிட்டு வெளியேறியதால் வழக்கைத் தொடர முடியவில்லை.

நான் 1993இல் இருந்து யாழ் வளாகத்துட் செல்லத் திட்டமிட்டும் ஓரிருவரால் தடுக்கப்பட்டுள்ளேன். எம் கடிதங்களுக்கு பதிலே வருவதில்லை. வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடமென்றாலும் எடுக்கும். இங்கே (அமெரிக்காவில்) இருந்தால் அங்கு போவது ஒருபோதும் நடவாதென்ற முடிவில்தான் என் பதவியை ராஜினாமாச் செய்தேன். கிடைத்தால் உபவேந்தர் பதவியை ஏற்பேன்.

தேசம்நெற்: பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக அமைந்துவிடுவது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை மட்டுப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு பலவலாக உள்ளது. இக்குற்றச்சாட்டுப் பற்றியும் உபவேந்தர்களின் நியமனம் பற்றியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை பற்றியும் சற்று கூறமுடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இந்தக் குற்றச்சாட்டு தவறானது. பல்கலைக்கழகங்கள் யாவும் பல்கலைக்கழக 1987 சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டம் மிகக் கவனமாக எழுதப்பட்டது. ஆளும் பேரவையில் துணைவேந்தர், பீடத் தலைவர் போன்ற பலர் தம் உத்தியோகஸ்தின் நிமித்தம் அங்கத்தவர்கள். இவர்களை மட்டுமே தீர்மானங்கள் எடுக்கவிடுவது நல்லதல்ல என்ற காரணத்தால் கூடவே சுற்றிய சமூகத்தில் இருந்து உள் அங்கத்தவர் எண்ணிக்கை சக ஒரு வெளிப் பெரியோர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர். இதற்கமைய யாழ் பேரவையில் 12 உள்ளங்கத்தாரும் 13 வெளியங்கத்தாரும் 2006ல் இருந்தனர். இவர்கள் அதிபர்மார், கணக்காளர், GAமார், குருமார், இளைப்பாறிய பேராசிரியர்மார் போன்ற சமூகப் பெரியோர்களும் உள்ளனர். இப்படியிருந்தும் உள் அங்கத்தவரே அதிகாரம் கூடியவர்கள். ஏனெனில் வெளி அங்கத்தவர் வழமையில் ஒரு பெரிய தப்பைக் கண்டாலே ஒழிய தலையிடுவதில்லை. இந்தப் பேரவை மாதாந்தம் கூடுவதாலும் அடிக்கடி தெரிவுக்குழு, நாணயக்குழு போன்றவற்றில் சந்திப்பதாலும் அவர்களுக்குள் நட்புகள் ஏற்பட்டு பீடத் தலைவர் அல்லது தொடர விரும்பும் துணைவேந்தர் பேரவையின் வாக்கை துணைவேந்தர் பதவித் தேர்தலில் கேட்கும் போது ஒரு வெளியாள் வருவது மிகவும் கஷ்டம்.

சட்டத்தை எழுதியவர்கள் இப்படி ஒரு நெருங்கிய பேரவையில் திறமை நட்புக்கு இலக்காகும் என்பதையும் மனதில் கொண்டு பேரவையின் பொறுப்பு 3 பேரைத் தேர்ந்து ஜனாதிபதியிடம் அனுப்புவது மட்டும் என்றும், இறுதித் தெரிவு மானியக் குழுவின் ஆலோசனையோடு ஜனாதிபதியுடையதென்றும் அமைந்தது. எனக்குத் தெரிந்த அளவு நானும் துரைராஜாவும் மட்டுமே வெளியாட்களாகப் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

இந்த அமைப்பில் பிழை காணலாம். ஆனால் இது பொதுவாக வேலை செய்கிறது. பேரவையில் பெரும்பான்மை வெளி அங்கத்தவர்களிடம் இருந்தாலும், நட்புகள், இளைப்பாறிய பேராசிரியர்மாரால் உள்அங்கத்தவரிடமே அதிகாரம் உள்ளது. அவர்கள் தெரிவு செய்யாத ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது. தாம் ஏற்கத்தக்க 3 பேரை ஜனாதிபதியிடம் அனுப்புவது பேரவையின் கடமை. அனுப்பிய பின் தாம் விரும்பாதவர் நியமிக்கப்பட்டார் என்பது பொறுப்பற்ற நடத்தையே.

தேசம்நெற்: யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலின் ஆதிக்கத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் உள்ளது. இதுவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாக இருந்தவர்கள் இந்தக் கருத்தியலுடன் உடன்படாவிட்டாலும் சைவ-வேளாள சமூகப் பின்னணியில் இருந்தே வந்துள்ளனர். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலை எதிர்த்து நிற்கவில்லை. அதனுடன் சமரசம் செய்துகொண்டனர். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தை இறுக்கமாகப் பின்பற்றுபவர். சைவ-வேளாள கருத்தியலை தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பவர். 2006ல் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் (கத்தோலிக்கர்) என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்த முரண்நிலையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நான் கத்தோலிக்கன் தான், ஆனால் ஆங்லோ கத்தோலிக்கன். உரோமன் கத்தோலிக்கன் அல்ல, ஆனால் பாப்பரசரை அத்தியட்சர் மாரில் (அதாவது Bishop மாரில்) முதல்வர் எனக் கருதுபவர்.

நான் சைவ சமயத்தவன் அல்ல. ஆனால் சைவ சமயத்தவருக்கு எதிரானவன் அல்ல. இதை என்னுடன் பழகிய மாணவர். நைஜீரியாவில் வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்த 600 வாத்தியார்மார் சொல்ல வேண்டும், நான் இல்லை. எனது எழுத்துகளின் போது என் அறிவியல் கடமையையே செய்கிறேன்.

மேற்கூறியவாறு பற்பல கட்டுக்கதைகள், பொய்ப் பிரச்சாரங்கள் பாடப் புஸ்தகங்களில் வெள்ளாளரால் எழுதப்பட்டு வருகின்றன. உதரணமாக ‘குலத்தாலவே ஆகுமாம் குணம்’ அல்லது ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ ஏன் இவற்றைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை? கேட்கக் கூடாதா? கேட்பது வெள்ளாளரைப் பகைப்பதா? இக்கட்டுக்கதைகளை எம்மை வரைவிலக்கணம் கூறும் கதைகள் என்பர். இவற்றை தாக்கும் போது அவர்களில் சிலருக்கு அது ஏதோ கத்தியைப் போட்டு திருப்புவது போல் இருக்கிறது. ஆகவே என் கேள்வியை வேறு விதத்தில் கேட்கிறேன்:

இலங்கை அரசின் பாடப் புஸ்தகங்கள் கற்பிக்கின்றன சிங்களவர் குடியமர்ந்து இலங்கையைக் கட்டியெழுப்பவும், தமிழர் ஆக்கிரமிப்புக்காரராயும் வந்தார்களென்று. இதை வினவுவது சிங்களவரைப் பகைப்பதா? இதுக்கு விடையைக் கூறிய பின்,

தாமோதரம் பிள்ளையின் சரித்திரத்தை எடுப்போம். என் மூதாதையரான சி வை தாமோதரம் பிள்ளையின் திருச்சபைப் பதிவுகளின் படி அவர் பிறந்த ஒரு சில நாட்களில் சிறுபிள்ளை ஞர்னஸ்ஞானம் பெற்றார். தகப்பன் வைரவி தாய் பெரியாய். இவர்கள் ஏற்கனவே ஞானஸ்ஞானம் பெற்று அந்நேரத்தில் சைரஸ் கிங்ஸ்பெரி, மேரி கிங்ஸ்பெரி என்ற பெயர்களில் இயங்கினர். ஆனால் ஆறாம் வகுப்புத் தமிழ் பாடப் புஸ்தகமோ அவர் பெற்றார் வைரவநாதர், பெரும்தேவி என்ற (இன்றைய வெள்ளாளப்) பெயர் உடையவர் என்றும் சலுகைகளுக்காக கிறிஸ்தவனாய் தாமோதரம் பிள்ளை நடித்தார் என்றும் கற்பிக்கின்றது. என் மதத்தாரைப் பற்றிய பிழையான கற்பிப்பைப் பற்றி கேள்வி எழுப்புவது சைவ மக்களுக்கு எதிரியாய் இருப்பதா? இல்லை! ஆனால் நான் இப்படிப் பொய் கதைகளை உருவாக்கி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டபவர்களை எப்போதும் எதிர்ப்பேன். இதில் சிந்திக்கும் வைச மக்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று ஐக்கியநாட்டு பிள்ளைகள் உரிமைக் கோட்பாட்டைப் பேணுவர். அக்கோட்பாட்டுக்கு விரோதமாய் சிறுபிள்ளைகளுக்கு சாதி சமய நச்சூட்டுவதை எதிர்ப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிர்வாக ஒழுங்கீனம் முதல் அறிவியல் தகமை வரை பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டதாக உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் தனித்துவம் அடையாளம் அனைத்துமே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் நீங்கள் இதனை குறுகிய உங்கள் பதவிக்காலத்தில் சீர்செய்ய முடியும் என நினைக்கின்றீர்களா? எவ்வாறு இந்த சீராக்கத்தை செய்ய உள்ளீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: ஏற்கனவே இதை தொட்டுள்ளேன். இவற்றைச் செய்ய ஓரேயொரு வழி மட்டுமே. குட்டப்பட்டும் குனிந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து தலைநிமிரப் பண்ணுவதே. ஒரு சின்ன உதாரணம் – என் மனைவியை யாழ் கழகம் அடுத்தமுறை விண்ணப்பியுங்கள் என்றது. மனிதரை மனிதராக பாவிக்க மறுப்பதற்கு அது ஒரு உதாரணம். அவர் முறைப்பட்டது குட்டக் குட்டக் குனிய மறுப்பதற்கு உதாரணம். 3 வருடத்தில் சீர் திருத்தம் செய்ய முடியாது. ஆனால் மனிதரை மரியாதையுடன் பாவிக்கத் தொடங்கினால் அந்தச் சீர்திருத்தம் தொடரும்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தில் அந்த இறுக்கமாக மூடப்பட்ட அறிவியல் சமூகத்தில் நடைபெறுகின்ற பாலியல் துஸ்பிரயோகம் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும் அமைகின்றது. பல்கலைக்கழக சமூகத்திற்கு இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் (அதிகாரப் படிநிலையில் மேலுள்ளவர்கள் தமக்குக் கீழுள்ளவர்களை தமது பாலியல் விருப்புக்கு பயன்படுத்துவது. கீழுள்ளவர் அதற்கு சம்மதித்தாலுமே அது துஸ்பிரயோகம்.) பொதுவான விடயமா? அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமே எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினையா? இதனை எவ்வாறு கையாள முடியும்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: நான் பாலியல் துஸ்பிரயோகம் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் என் மனைவி திறந்த பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவரின் பாலியல் இம்சைக்கு (sexual harassment) இலக்கான போது அவர் முறையிட்டு, அவ்வாறு சம்பவம் நடக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு கொள்கைப் பத்திரம் இருக்க வேண்டுமென்று கேட்ட போது ஏற்பட்ட எதிர்ச்சி பெண்களின் தாழ்ந்த நிலையைக் காட்டுகின்றது.

‘‘பொய் சொல்லாதே’’ என்று திட்டினார் பீடத்தலைவர். ‘‘இது அமெரிக்காவில்லை’’ என்றார் ஒரு பேராசிரியர். ‘‘அவர் மார்பைப் பிடிக்காவிட்டால் அது பாலியல் துஸ்பிரயோகம் இல்லை’’ என்றார் இன்னுமொரு பேராசிரியர். ‘‘அது சீலை உடுக்காமல் சட்டை போடுவதால் தான்’’ என்று இன்னுமொருவர். ‘‘அது தனக்கு ஏன் நடப்பதில்லை’’ என்றும் கேட்டார் அவவிலும் ஒரு 28 வயது கூடிய ஒரு பெண் பேராசிரியர்.

நான் உப வேந்தராய் நியமிக்கப்பட்டு ஏதாவது காண நேரிட்டால் என்னைப் பொறுத்தவரை நான் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். என் மனைவி இதை ஜனாதிபதியிடம் எழுப்பியதை தொடர்ந்து ஜனாதிபதி உயர்கல்விக் காரியதரிசிக்கு எழுதி, புதிய மாணவர் இம்சை தடைச்சட்டத்தின் கீழ் பாலியல் துஸ்பிரயோகமும் தடைப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் முன்னின்ற பேராசிரியர் கெ கைலாசபதி அதனை ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக்க கனவுகண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பின் பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பாக உங்கள் வேலைத்திட்டங்களை வெளியிட்டு இருந்தீர்கள். தற்போது மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி உங்களை நெருங்கி வந்துகொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உங்களுடைய தொலைநோக்குப் பார்வை இலக்கு என்ன?

பேராசிரியர் ஃகூல்: இலக்குகள் பிரதானமாக 3.
1) பொறியியல் பீடத்தை அமைப்பது.
2) வவுனிய வளாகத்தை பல்கலைக்கழகமாக்குவது. (ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சுதந்திரப் பல்கலைக்கழகமாக்கும் பொறுப்புடன் ஒரு வளாகம் கொடுக்கப்பட்டது. இரு தமிழ் பிரதேச வளாகங்கள் மட்டுமே இன்னும் வளாகங்களாக உள்ளன. ஏனைய வளாகங்கள் பல்கலைக்கழகங்களாகி இப்போ பல வருஷங்கள்.)
3) யாழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நியாய, நீதியான, நிர்வாக வழிகாட்டியாக அமைப்பது.

(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களின் இலக்குகளை அடையும் தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் மீளுறுதி செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இந்நேர்காணலை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.)

தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க வானொலி நடாத்தவில்லை. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தோம்.’’ ரிபிசி பணிப்பாளருடன் நேர்காணல்

Ramraj V TBCRamraj V TBCRamraj V TBC
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு மத்தியில் இயங்கிய இவ்வானொலியின் கடந்த பத்து ஆண்டுகள் என்பது புலம்பெயர் தமிழ் ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு பதிவு. அதற்காக இவ்வானொலியும் இதன் பணிப்பாளரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை. ரிபிசி மீதும் அதன் பணிப்பாளர் மீதும் அவர்களின் கடந்தகால அரசியல் மீதும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை. ரிபிசி அதன் பணிப்பாளர் அவர்களின் அரசியல் மீது தேசம்நெற் வைத்த கேள்விகளுக்கு ரிபிசி இன் பணிப்பாளர் ராம்ராஜ் பதிலளிக்கின்றார். இந்நேர்காணல் யூன் நடுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டது.
._._._._._.

தேசம்நெற்: ராம்ராஜ் நீங்கள் எப்படி விடுதலைப் போராட்ட இயக்கத்தினுள் உள்வாங்கப்பட்டீர்கள்? உங்களுடைய போராட்ட அனுபவம் என்ன?

ராம்ராஜ்: 1981க் காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேராவையிலிருந்து முக்கியமாக மக்களுக்கு உதவி செய்தல் தமிழர் விடுதலைக்காக பிரச்சாரங்கள் செய்தல் ஆகிய விடயங்களில் ஈடுபடும்போது புலிகளின் முழு தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டது. இதன்போது ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை குண்டுவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கண்டி போகம்பரை சிறைக்கு நாம் 11 பேர் கொண்டு வரப்பட்டோம். இந்த சிறையில் இருந்து பின்னர் நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டோம்.

மட்டக்களப்பு சிறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தமூர்த்தி, தங்கத்தரை போன்றோர்களை மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வருகிறார்கள். அப்போது தான் எமக்கும் கூட்டணிக்கும் இடையில் தொடர்பு ஏற்ப்படுகின்றது. இந்த சிறையில் இருக்கும்போது அப்போது தமிழ் இளைஞர்பேரவை ராஜன் (பரந்தன் ராஜன் – ஈஎன்டிஎல்எப்) எம்மைப் பார்க்க அடிக்கடி வந்து போவார். எமக்கான பல உதவிகளையம் செய்து தருபவர். ராஜன் எமக்கான உதவிகளை கண்டியிலும் மட்டக்களப்பிலும் செய்து தருபவர். இந்தக் காலத்திலேயே புளொட்டும் புலிகளிலிருந்து பிரிந்து இயங்குகிறார்கள். இதில் ராஜன் புளொட்டுடன் இணைந்து வேலை செய்கிறார்.

நாம் சிறையில் இருக்கும் போது என்னையும் மற்றவர்களையும் எனது அப்பாவும் ராஜனும் தான் துணிந்து வந்து பார்ப்பவர்கள். அப்போது ராஜன் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் என்ற ஒரு அடிப்படையிலேயே தான் எம்மை வந்து பார்ப்பார். அதனாலேயே நான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய பின்னர் புளொட்டுடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். இந்தக் காலத்தில் புளொட்டும் மிகவும் பிரபல்யமான அமைப்பாக தமிழ் பிரதேசம் எங்கும் இயங்குகின்றது.

மட்டக்களப்பில் புளொட்டுக்கு அமைப்பு ரீதியாக இயங்குபவர்களில் நானும் ஒருவன். புளொட் மலேசிய வாசுதேவனை அழைத்து ஒரு நிதிசேகரிப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பை என்னிடம் தந்தது. இந்த நிகழ்ச்சி எமக்கு தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எம்மை பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு அமைப்பாக நிறுவனமாக இயங்க முயற்சிப்பதன் அம்சத்தை நிறுவியது. இது பலர் எம்முடன் இணையவும் காரணமாகியது. கே எஸ் ராஜா வந்து செய்த இந்த நிகழ்ச்சிகளை என்னுடன் முன்னின்று செய்தவர்கள் பரந்தன் ராஜனும் ராஜனுடைய அண்ணாவுமாகும்.

இந்தக் காலத்திலிருந்தே ராஜன் அடிக்கடி மட்டக்களப்பு வருவார். எமக்கும் மக்களுடன் தொடர்பு இக்காலத்தில் அதிகமாகி வருகின்றது. கிளிநொச்சி வங்கி கொள்ளையும் புளொட் செய்து முடிக்கிறது. இக்காலத்தில் ராஜன் கிளிநொச்சியில் இருக்கிறார்.

ராஜன் ஒருமுறை மட்டக்களப்பு வந்து திரும்ப கிளிநொச்சிக்கு போகும்போது பொலீஸ் சுற்றிவளைத்து ராஜனை கைது செய்து விட்டார்கள். அப்போது நான் 1983ல் புளொட்டின் முழுநேரமாக வேலை செய்கிறேன். இக் காலங்களில் நாம் மன்னார், உடப்பு போன்ற பிரதேசங்களுக்கு கடலால் படகு மூலம் பிரயாணங்களை ஆரம்பிக்கின்றோம். இதனை தொடர்ந்து நிக்ரவெட்டியாவில் வங்கிக்கொள்ளையை புளொட் நடாத்துகின்றது.

இந்த காலத்துடன் நான் இந்தியாவிற்கு வருகின்றேன். இந்தியாவில் புளொட்டின் அமைப்புக்குள்ளேயே நிறையப் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ராஜன் புளொட்டுக்குள்ளேயே முரண்படுகின்றார். அதில் முதலாவதான பிரச்சினையானது நிரஞ்சனுடைய (காக்காவினுடைய) பிரச்சினை நடக்கிறது, முகுந்தனுடன் (உமாமகேஸ்வரனின் இயக்கப்பெயர்களில் ஒன்று) கடுமையாக முரண்பட்ட ராஜனின் நண்பன் காக்கா கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றார். ராஜன் இந்த காக்கா பிரச்சினையில் கருத்த முரண்படுகின்றார்.

011109dag.jpgஇதே காலத்தில் ஈபிஆர்எல்எப் இல் இருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறுகின்றார். தோழர் டக்ளஸ், ராஜன் இணைந்து வேலை செய்வதற்கான பேச்சுக்கள் நடைபெற்று இருவரும் உடன்பட்டு இணைந்து வேலை செய்கிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் புளொட்டின் உட்கட்சிப் பிரச்சினைகளை முன்வைத்து கண்டித்து வெளியேறினீர்களா?

ராம்ராஜ்: இல்லை! நான் ராஜனுடன் சேர்ந்தே இருந்தேன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரான அசோக் ஈஎன்டிஎல்எப் உடன் பிரிந்து வந்தார். ராஜன் புளொட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சினைகளை பலமாக எதிர்த்தார். ஆனாலும் புளொட்டில் பல பிரச்சினைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமான புலனாய்வுத்துறையினரால், ராஜனுக்கு எதிராக ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் ராஜனுக்கு புளொட்டுக்குள்ளேயும் வெளியே மற்ற இயக்கத்தவர்களிடையேயும் பலமான உறவு இருந்தது. குறிப்பாக ரெலோ சிறிசபா, தோழர் டக்ளஸ், தோழர் நாபா போன்றவர்களிடம் ராஜனுக்கு பலமான உறவு இருந்தது. இந்த உறவு நாட்டில் சேர்ந்து இயங்கிய காலங்களிலிருந்தே இருந்து வந்தது. இவர்கள் யாரும் தம்மிடையே முரண்பட்டுக்கொண்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புளொட்டுக்குள்ளே உட்பிரச்சினை பெரிதாக வளர்ந்து பல வரலாறு காணாத பிரச்சினைகள் எழுந்த போது ராஜன் லெபனானில் இருக்கிறார். ராஜனை கொண்டு வர பாஸ்போட் தேவைப்பட்டது. லெபனானில் பாஸ்போட்டை வாங்கி வைத்திடுவார்கள். முகுந்தன் திட்டமிட்டு ராஜன் பாஸ்போட் எடுக்க முடியாதபடி செய்தார். பிறகு ராஜனை திரும்ப கொண்டு வருவது இழுபறிப்பட்டு போயிருந்தது.

புளொட்டிலிருந்து ராஜன் பிரிந்து சென்று ஈஎன்டிஎல்எப் யை உருவாக்கியபோது ராஜனுக்கு மாற்று இயக்கத்திடமிருந்து பல உதவிகள் கிடைத்திருந்தது. அதில் ரெலோ ஆயுதங்களையும் பணத்தையும் நேரடியாக ராஜனுக்கு தந்து உதவியது. இதற்கு காரணம் ராஜன் – சிறி நெருக்கமான உறவேயாகும்.

தேசம்நெற்: புளொட்டில் இருந்து நீங்கள் பிரிந்து சென்ற போதும் புளொட் செய்தது போன்றே ஈஎன்டிஎல்எப் உம் ஆட்கடத்தல், கொலை, அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள்?

ராம்ராஜ்: புளொட்டில் நடந்த பிரச்சினைகள் கடத்தல்களுக்கும் எம்மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நான் சென்னையில் புளொட்டில் நிதிப் பொறுப்பாளராக இருந்த போதும் இந்த குற்றச்சாட்டுக்கள் இருந்தது. நிதி பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்மீதும் வைக்கப்பட்டடிருந்தது. இந்தக் காலத்தில் யார்? யார் மீது? யாருக்கு? ஏது? என்ன? என்று இல்லாமல் வகை தொகையாக குற்றச்சாட்டுக்கள், பலர் மீதும் பல தடவைகளும் தாறு மாறாக வைக்கப்பட்டிருந்த காலம் என்பதை மறக்கக்கூடாது.

நானும் என்போல பலரும் இயக்கத்துக்கு சேரும் காலங்களில் இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே வந்தோம். அப்படித்தான் இயக்கங்களும் வளர்க்கப்பட்டிருந்தன. எல்லோருமே தற்கொலை குண்டுதாரியாயும் மண்ணை மீட்க வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர வேறு என்ன சிந்தனையும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் எல்லா இயக்கத்திலும் இந்த சிந்தனைமுறை தானே இருந்தது. யாரும் இதை மறுக்க முடியுமா?

தேசம்நெற்: புளொட்டில் மிகமோசமான உட்படுகொலைகள் இடம்பெற்றது. அப்போது அதனை எதிர்த்து பலர் குறிப்பாக தீப்பொறி குழுவினர் வெளியேறி இருந்த போதும் நீங்கள் தொடர்ந்தும் புளொட்டில் இருந்ததாக கூறுகிறீர்கள். இன்று ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிப் பேசும் நீங்கள் அன்று நடந்த உட்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. நீங்கள் புளொட்டினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் எதிலும் சம்பந்தப்பட்டு அல்லது அதற்கு துணையாக இருந்திருக்கின்றீர்களா?

Ramraj_V_TBCராம்ராஜ்: எந்த விதமான கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் எதிலும் சம்பந்தப்படவில்லை. இதில் புளொட்டிலிருந்த மிகப் பெரும்பான்மையினரைப் போல நானும் சாதாரண போராளியாகவே இருந்தேன். புளொட்டுக்குள்ளே இருந்தவர்களில் பலர் இந்த உள்வீட்டுப் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள், பலமாக எதிர்த்தவர்கள், தாமும் கொலை செய்யப்படுவோம் என்று பயந்தவர்கள் பலர். இயக்கம் பாதை தவறிவிட்டது என்று தாமாகவே வெளியேறிப் போனவர்கள் பலருக்கு நான் உதவி செய்துள்ளேன். அப்படி வெளியேறியவர்களில் பலர் இன்றும் ஜரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் என்னோடு நட்பாக பழகுபவர்கள், எனது நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்பவர்களாக உள்ளனர்.

Manikkadasan_and_Guardsபுளொட்டினுள் நடந்த எல்லா கொலைகளும் உமாமகேஸ்வரனுக்கு தெரிந்து நேரடி ஆலோசனையுடன் நடந்தது என்பது தவறு. சில தெரிந்திருக்கலாம் ஆனால் புளொட்டின் புலனாய்வுத்துறையினரே தமக்கு நினைத்த மாதிரி பல கொலைகளை செய்தார்கள். உதாரணம் மொக்கு மூர்த்தி. இவரே பல உட்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்.

தேசம்நெற்: உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் தலைவர். அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவரே பொறுப்படையவர். இவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் உமாமகேஸ்வரனுடையதே. உமாமகேஸ்வரன் தனது தலைமைப் பதவியைக் காப்பாற்ற இந்தப் புலனாய்வுத்துறையினரைப் பயன்படுத்தி உள்ளார். புளொட்டில் நடந்த உட்படுகொலைகளுக்கு உமாமகேஸ்வரன் முழுப்பொறுப்புடையவர்.

ராம்ராஜ்: இல்லை. இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்த என்று உமாமகேஸ்வரன் தொடங்கியிருந்தால் உமாமகேஸ்வரன் ஆரம்ப காலத்திலேயே முடிந்திருப்பார். இயக்கத்தினுள்ளே மற்றவர்களுக்கு இருந்த பயம் உமா மகேஸ்வரனுக்கும் இருந்திருக்கும். இப்படித்தான் புளொட் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்தக் காலத்தில் மற்றைய இயக்கங்களுக்கு உள்ளேயும் இப்படியான தன்மைகள் இருந்தது. அதைவிட உமாகேஸ்வரனுக்கு சில பலவீனங்களும் இருந்ததது.

UmaMaheswaran_PLOTEபுளொட்டுக்கு ஆயுதங்கள் வந்து இந்தியாவில் இந்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. ராஜன் இந்த ஆயுதங்களை எடுப்பது சம்பந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் உமாமகேஸ்வரன் தனது மச்சான் துரையை இந்த பிரச்சினையை கையாழுவதற்க்கு பொறுப்பாக வைத்தார். இது ஒரு முரண்பாடாக அந்த நேரம் எழுந்தது. அப்போது ராஜன் இந்த அலுவலை மிகஇலகுவாக செய்திருக்க முடியும். இதை துரை கையாள ஆரம்பித்ததாலேயே மேலும் சிக்கலாகி இந்த ஆயுதங்களைப் பெறமுடியாமல் போனது. மேற்குறித்த ஆயுதங்களை வாங்குவதில் பல ஊழல்கள் நிகழ்ந்திருந்தன. இந்த ஆயுதங்கள் எல்லாமே மிக சாதாரணதர ஆயுதங்களாகவே இருந்ததாகவும் பேசப்பட்டது.

ஒபரேய் தேவனுக்கு பின்பு ரெலா இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனின் மச்சான் வந்தபடியால் ரெலா இயக்கம் புளொட்டுடன் இணைந்தது.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ராம்ராஜ்: நான் வெளியேறி போய்விட்டேன். இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் இலங்கைக்குப் போகும் போது நான் வெளிநாட்டில் இருந்தேன்.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்தகாலத்தில் ஈஎன்டிஎல்எப் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தது. ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, பலாத்காரமாக இளைஞர்களைப் பிடித்து பயிற்சி அளித்தது. குழந்தைப் போராளிகள். இவை பற்றி இன்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் உள்ள நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

ENDLF_Logoராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் இந்திய ராணுவத்துடன் இருப்பதால் ஈஎன்டிஎல்எப்க்கு அவதூறு உருவாக்க, கெட்ட பெயரை திட்டமிட்டு உருவாக்க இதில் பல வேலைகளை புலிகளே செய்துவிட்டு பழியை எம்மீது போட்டனர். புலிகள் வாகனங்களை மறித்தும் ஆட்களை இறக்கியும், கடத்தியும் பல கொடுமைகளை செய்துவிட்டு புலிகள் தாங்கள் தான் திறீ ஸ்ரார் என்றும் ஈஎன்டிஎல்எப் என்றும் சொல்லியே இந்த அலுவல்களைச் செய்தனர். இதைப் புலிகள் எல்லா இயக்கங்களுக்கும் செய்தது. தாங்கள் கொள்ளையடித்து விட்டு வேறு இயக்கங்களின் பெயரையே பாவித்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் புலிகள் பரவலாக இதனைச் செய்தனர். மற்ற இயக்கத்தவர்களிடம் கேட்டாலே இதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

தேசம்நெற்: ராம் நீங்கள் என்ன சுத்தமான சுவாமிப்பிள்ளை என்கிறீர்களா?

ராம்ராஜ்: நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் என் மீது – ராம்ராஜ் மீது, ராம் இது செய்தார், அது செய்தார், என்று கூறுபவர்கள் நேரடியாக என்னிடம் வந்து பேசுங்கள். நான் என்ன செய்தேன் என்று பதிலளிக்கத் தயார். எனது தொலைபேசி எனது விலாசம் தெரியாதவர்கள் யார்? ஏன் யாரும் என்னிடம் இப்படி பிரச்சினை இருக்கு என்பவர்கள் பேசவருவில்லை!

யாரும் தனது குடும்பமோ தானோ என்னால் பாதிக்கப்பட்டது என்றால் என்னிடம் நேரடியாக வந்து கேட்கட்டுமே. தேவைப்பட்டால் நீங்களும் பக்கத்தில் இருந்து கேட்டு தேசம்நெற்றில் பதிவிடுங்கள் பலரும் தனிப்படப் பேசலாம். தவறு என்றால் நேரடியாகப் பேச வேண்டும். நான் எத்தனையோ எழுதுகிறேன். எத்தனையோ பேசுகிறேன். எனக்கு புலிகளால் தனிப்பட்ட வகையில் பாதிப்பு இல்லை.

தேசம்நெற்: இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் ஈஎன்டிஎல்எப் குழந்தை இராணுவ அணியொன்றை உருவாக்கியது. இளைஞர்களைப் பலவந்தமாக கடத்திச் சென்று பயிற்சி அளித்தது?

ராம்ராஜ்: உண்மை தான். இது தவறுதான். இதனை உணர்ந்துகொண்டோம். இவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டும் உள்ளனர். அந்தத் தவறின் வலியை இப்போதும் உணர்கின்றோம். தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கக் காரணம் இந்தியப்படை வெளியேறப் போகிறது, அந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு இராணுவ கட்டமைப்பு வேண்டும். இதன் மூலம் நாட்டை பிரிக்க ஒருவழி ஏற்ப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் பெறப்பட்ட ஆலோசனைகளின் பெயரிலுமே இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. ஆனால் அது தவறிப்போய்விட்டது.

அதற்குப் பிராயச்சித்தமாகவே பெங்களுரில் இந்திராகாந்தி சர்வதேசப் பாடசாலையை உருவாக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பராமரிக்கின்றோம். ஆரம்பத்தில் இதனை எமது இயக்க குடும்பங்களுக்காகவே ஆரம்பித்தோம். ஆனால் தற்போது புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளில் இருந்த பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் நாட்டு முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்டவர்களது பிள்ளைகளும் அப்பள்ளியில் படிக்கின்றனர். அன்று இந்தியப் படைகளுடன் வந்த கப்பலை கருணாநிதி அரசு தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அக்கப்பல் ஒரிசாவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் காங்கிரஸின் ஆட்சியில் பெங்களுர் இருந்தபடியால் எமக்கு பாடசாலையை பெங்களுரில் அமைக்க முடிந்தது. இதுவரை 4000 மாணவர்கள் வரை கல்விகற்று வெளியேறி உள்ளனர். இவ்வாறான ஒரு சேவையை வேறு எந்த அமைப்பும் செய்திருக்கவில்லை.

அப்போது இந்த பிரச்சனைகள் நடைபெறும்போது பிள்ளைகளை கூட்டிப்போக 500 தாய்மார்கள் வந்தார்கள் என்றால் புலிகள் ஒரு ஆயிரம் பேரை கூட்டிவந்து எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராக சத்தம் போட்டனர். ஆனால் இப்படித்தான் புலிகள் தமது இறுதிக் கட்ட போராட்ட காலங்களிலும் தமது கடைசிக் காலத்திலும் செய்து புலிகள் மக்களால் தோற்கடிக்கப்படடனர்.

புலிகளின் தோல்விக்கும் காரணம் ஆட்கடத்தல்கள், இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்களைக் கடத்தி ஆயுதப் பயிற்ச்சி அளித்ததேயாகும். இதனால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தனர். இதனைத் தவறு என்று புலிகள் அன்று புரிந்து மக்களை எமக்கு எதிராக கூட்டி வந்தவர்கள். பிறகு தாங்களே இந்தத் தவறை மக்களுக்கு அப்படியே செய்தது பெரிய தவறாகிப் போயிருந்தது. இதனாலேயே புலிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்டனர்.

இதை எல்லா இயக்கங்களும் செய்தது. ரிஎன்ஏ (தமிழ் தேசிய இராணுவம்) இராணுவத்தை உருவாக்க இந்தியா எல்லா இயக்கங்களுக்கும் சொல்லியது. ‘நாட்டைப் பிரிக்க போகிறோம்! உடனடியாக படையை திரட்டுங்கள்!! இந்திய இராணுவத்தை வெளியேற்ற அரசு முயல்கிறது” அப்போது நாடு பிரியும் நிலை உருவானது. இந்தக் காலத்தில் புலிகள் பிரேமதாஸ அரசுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றினர். ஆனால் புலிகள் தமது இறுதிக் காலத்தில் இந்தியாவிடம் பேச முற்பட்டனர்.

அதைவிட இந்தக் காலத்தில் யார் பெரிய படையைத் திரட்டுவது என்ற நிலை இருந்தது. இதை எந்த மற்ற இயக்கத்தவர்களும் மறுக்க மாட்டார்கள். இந்தியப் படைகள் இருக்கும்போதே சிங்கள காடையர்களின் தொல்லைகள் நிறையவே கிழக்கு மாகாணத்தில் இருந்தது.

தேசம்நெற்: நீங்களும் ஈஎன்டிஎல்எப் உம் எப்போதும் இந்தியா மீது காதல் கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது அல்லவா?

ராம்ராஜ்: இராணுவம், ஆயுதப் போராட்டம் அல்லது எந்த வகையிலோ போராட்ட முடிவில் ஒரு நாட்டின் அங்கீகாரம் தேவை. இதற்கு இந்திய உதவி கட்டாயம் தேவை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் பல நல்ல நன்மைகள் உண்டு. இந்த ஒப்பந்தம் மூலம் மட்டும்தான் இந்திய அதரவை தமிழர் போராட்டத்திற்கு பாவிக்க முடியும். உரிமைகளைப் பெற முடியும். வட கிழக்கு தமிழர் தாயகம் என்ற சர்வதேச ஒப்பந்தம் அது தான். இதில் மேலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்படி செய்ய்பபட்டு இருந்தால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அது இருந்திருக்கும்.

இந்த ஒப்பந்தத்தை மேலும் செழுமைப்படுத்தி போயிருக்கலாம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்தா விட்டால் நாட்டைப் பிரிப்போம் என்று சொன்னதால் தான் நாம் இளைஞர்களை கட்டாய பயிற்ச்சிக்கு எடுத்துப் போனோம். ஓப்பந்த காலத்தில் 5 ஆயிரம் மக்களே இறந்திருந்தனர் ஆனால் அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் மக்கள், போராளிகள் இறந்து போயினர். அந்த ஒப்பந்தத்தை புலிகள் திட்டமிட்டு நிராகரித்தனர். யாரோ சொன்ன ஆலோசனையை கேட்டுத்தான் செய்துள்ளனர்.

தேசம்நெற்: இனப்பிரச்சினைக்கான தீர்வினை இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ராம்ராஜ்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஆரம்பிப்பது என்பது மகிழ்ச்சியான விடயம். ஆனால் அரசாங்கம் அதற்கும் வெகுவாக கீழே போய்த்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றல்லோ சொல்கிறது. 13வது திருத்த சட்ட மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஒன்று அதிலிருந்து கூட அரசு ஆரம்பிக்க மாட்டேன் என்கிறதே.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வு. ஜனாதிபதி கடைசியாக இந்தியாவிற்கு போனபோதும் இவைபற்றிப் பேசவில்லையே!

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் இந்தியாவுடன் இணைந்துதானே நம்பிக்கையுடன் செயற்படுகின்றீர்கள்?

ராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் யைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. அந்த விடயத்தில் ஈஎன்டிஎல்எப் மிகவும் தெளிவாக இருக்கின்றது.

தேசம்நெற்: ஈஎன்டிஎல்எப் தெளிவாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இன்று புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலைமையில், புலிகளை அழிக்கும் பணியில் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது. ஆயினும் ஏன் இந்தியா தமிழர்களின் அரசியல் விடயத்தில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வில்லை?

ராம்ராஜ்: நாங்கள் சர்வதேச நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரும்போது சீனாவின் அழுத்தம் இந்தப் பிரச்சினையில் இல்லை. அனால் இன்று இது மிகமுக்கிய பிரச்சனை. இதை நாம் மிக அவதானமாக கவனத்தில எடுக்க வேண்டும். இலங்கை இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் எழுதினால் அடுத்த நாள் சீனா இலங்கையுடன் ஆறு ஒப்பந்தம் எழுதும். இதிலிருந்து தான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நிலைமைகளை இன்று பார்க்க வேண்டும்.

இதேநேரம் இன்னுமொரு நிலைமையையும் அவதானிக்க வேண்டும். இந்தியா 50,000 வீடுகளை கட்ட வட – கிழக்கு மாகாண அரசக்கு நேரடியாக பணத்தினை கொடுக்கப் போகின்றது. இதற்கு அரசு எப்படி உடன்பட்டது. இப்படியாக நடைபெறும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். இந்தியா இலங்கை அரசை நம்ப முடியாமல்தான் இப்படி செய்கின்றது என்று கூறமுடியாதா?

Indo Lanka Cartoonதேசம்நெற்: ராம் ஆரம்பகால போராட்ட நிலைமைகளுக்கும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் மாறாத உண்மையாக இருப்பது இந்தியா தனது நலனிலிருந்து தான் இந்த தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றது.

ராம்ராஜ்: சிலர் சொல்லக் கூடும் இந்தியா தமிழர்களை அழிக்கவே செயற்படுகிறது என்று. ஒன்று மட்டும் உண்மை, இந்தியா கடைசி வரைக்கும் புலிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சித்தது. எங்களுடைய ஈஎன்டிஎல்எப் அமைப்பினூடாக முயற்சித்தது. நாங்கள் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்பாளராக இருந்தோம். இது கடைசிக் காலங்களிலும் இடம்பெற்றது.

இலங்கையில் இன்னமும் ஒரு ஜனநாயக சூழ்நிலை உருவாகவில்லை. எப்படி புலிகள் மற்றவர்கள் மீது அழுத்தத்தை பிரயோகித்தார்களோ அதே போன்றே அரசும் தமிழர்கள் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த இந்தியா அவசியம்.

Karuna Colதேசம்நெற்: கருணா மீது பிற்காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நீங்கள் கருணாவிற்கு மாவீரர் தின உரையை எழுதிக் கொடுத்ததுடன் ஆரம்பத்தில் கருணாவுடன் இணைந்து செயற்படவும் முன் வந்திருந்தீர்களல்லவா? கருணா புலிகளிலிருந்து வெளியேறி ஈஎன்டிஎல்எப் இடம்தான் இந்தியாவிற்கு வந்தார். இவ்வாறு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்த அரசியல் மாற்றம் சந்தர்ப்பவாதம் என்று கொள்ளலாமா?

ராம்ராஜ்: இல்லை. அப்படியல்ல. கருணா எங்களை அணுகியதால் நாம் கருணாவிற்கான பாதுகாப்பை கொடுத்திருந்தோம். நாங்களும் கருணாவும் ஒரு சரிசமமான ஏற்பாட்டுடன் சேர்ந்து இயங்க உடன்பட்டோம். அந்த அடிப்படையில் ஈஎன்டிஎல்எப் அங்கு ஆட்களை அனுப்பி வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் பின்னர் வேறு பாதையில் கருணாவின் அணுகுமுறைகள் இருந்ததால் நாம் வெளியேற வேண்டி இருந்தது.

கருணாவின் அண்ணர் குகநேசன் போன்றோர் கருணா இப்படி போயிருப்பார் என்று எதிர்பாக்கவில்லை. கருணாவிடம் சரியான அரசில் தெளிவு இருக்கவில்லை.

தேசம்நெற்: நீங்கள் ஒரு முழுநேர அரசியல் நடவடிக்கையாளராக இருந்து எப்படி ஒரு ஊடகவியலாளராக மாறினீர்கள்?

ராம்ராஜ்: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வருகிறேன். அப்போது பிரித்தானியாவில் ஜபிசி வானொலியை தாசீசியஸ் ஆரம்பித்தார். அதனை 1991ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது என்னை தன்னுடன் இணைந்து வேலை செய்ய அழைத்தார். அப்போது வெளியே இருந்துகொண்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.அதிலிருந்து ஒரு வருடத்துக்குள் அதிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரிபிசியில் 22 பங்குதாரர்கள் இருந்தனர். தலா 2500 பவுண்ஸ் போட்டு வானொலியை அரம்பித்து 4 இயக்குனர்களை கொண்டு இயங்கியது. 11 வருடங்களுக்கு முன் ரிபிசி யை ஆரம்பிக்கும் போது நான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆரம்பத்தில் சில பணிப்பாளர்கள் இதையும் ஒரு குற்றச்சாட்டாக வைத்தார்கள். ஆனால் பின்பு எல்லாவற்றையும் அவர்கள் விளங்கிக்கொண்டனர். ஆனால் வேறு சிலரால் இது தொடர்ந்தும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் கட்சியின் அலுவல்களை ரேடியோவிற்குள் கொண்டுவரவில்லை. ஈஎன்டிஎல்எப் க்கு முன்னுரிமை கொடுத்து வானொலியை நடாத்தவில்லை. ஈஎன்டிஎல்எப் செய்தியை நான் எழுதிப் போடவில்லை. ஆனால் ஈஎன்டிஎல்எப் அனுப்பிய செய்திகளை வெளியிட்டுள்ளேன். 10 வருடமாக வானோலியை கேட்பவர்கள் தான் இதற்கு சாட்சியம். பின்னர் ஒரு தனி நிர்வாகத்தில்தான் ரேடியோ இயங்கியது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் திசைமாறிய பெரும் அழிவுகளைச் சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் வன்முறை அரசியலாக இருந்த காலகட்டத்தில் 10 வருடமாக வானொலியை இயக்கியது ஒரு சாதாரண விடயமல்ல. அதில் நீங்கள் குறிப்பாக எதிர் நோக்கிய பிரச்சினைகள் என்ன?

Ramraj_V_TBCராம்ராஜ்: ஈஎன்டிஎல்எப் என்ற பிரச்சினை, புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினை. ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஜனநாயகம் பேசியவர்கள் சிலரும் பிரச்சினையை ஏற்படுத்தினர். நாம் ரேடியோவை தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க ஆரம்பிக்கவில்லை. நாம் ரேடியோவை ஆரம்பிக்கும் போது மக்கள் சுதந்திரமாக பேச வேண்டும், மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் கலாச்சாரம் வளர்க்கப்படல் வேண்டும், அதற்கு நாம் உதவிகள் எமது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்றே ஆரம்பித்தோம். இந்த கொள்கைகளிலிருந்து நாம் மாறவில்லை.

மக்கள் நான்கு சுவருக்குள் இருந்து சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லட்டும் நாங்கள் யார் வருகிறீர்கள் என்ன பெயரில் வருகிறீர்கள் என்றெல்லாம் அக்கறைப்படுவதில்லை. நாம் விரும்புவது அவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஊக்குவிப்பதேதான். அதில் நாங்கள் வெற்றிதான் கண்டுள்ளோம்.

Sivalingam Vஇன்று எல்லோரும் தங்கள் பெயரை சொல்லியே பேசுறாங்கள். இதை நாங்கள் வளர்த்துள்ளோம். இதை வளர்க்க நாம் பட்ட கஸ்டம் பாரியது. எமது அரசியல் ஆய்வார் திரு சிவலிங்கம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்த இங்கு கலந்து கொள்வதும் அடுத்தநாள் வேலைக்கு போவதும் அன்று ஒரு இலகுவான காரியமல்ல. இன்று திரு சிவலிங்கம் சொன்ன ஒவ்வொரு ஆய்வையும் எடுத்துப் பார்த்தால் அவை ஒவ்வொன்றும் அப்படியே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் நாங்கள் புலிகளுக்கு எதிராக விமர்சனம் வைக்கும்போது புலிகளின் ஆதரவாளர்கள எம்மை அரச உளவாளிகள் என்றும் பின்பு அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் போது இலங்கை அரச தரப்பினர் எம்மை புலிகள் என்றும் சாயம் பூசினார்கள். இது உண்மையல்ல அன்று நடக்கும் நிகழ்வுகளை மக்கள் முன்வைப்பது தான் எங்கள் கடமை. மக்களுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்துவதே எமது கடமை அதை நாம் சரிவர செய்துள்ளோம்.

தேசம்நெற்: ஜபிசி யின் ஆரம்பகாலத்தில் நீங்களும் அவ்வானொலியில் பங்கெடுத்து இருந்தீர்கள். ரிபிசியில் பணியாற்றியவர்கள் ஐபிசி இலும் பின்னர் இணைந்து கொண்டனர். ஆனால் பிற்காலத்தில் ரிபிசி வானொலியை மதிப்பிழக்கச் செய்யும் பரவலான குற்றச்சாட்டுகள் ஐபியில் வெளிவந்தது.

ராம்ராஜ்: அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாம் எப்பவுமே நேசக்கரம் நீட்டியபடியேதான் இருக்கிறோம். எமக்கு எதிராக சேறடித்தவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்தவர்கள் எம்மை திட்டி ரேடியோ பிரச்சாரம் நடாத்தியவர்கள் எல்லோரும் இன்று எம்முடன் நட்டபாகவே உள்ளனர். அவர்கள் இன்று என்னிடம் வரும்போது நாம் அவர்களை பழிவாங்கவில்லை. வணக்கம் வாங்கோ! என்ன உதவி தேவை! என்று தானே கேட்கிறேன். இது அவர்களுக்கு நாம் அன்றும் இன்றும் ஒரே மாதிரித்தான் உள்ளோம் என்பதை புரியவைத்துள்ளது அவர்களும் புரிந்துள்னர்.

TBC Break-inபுலிகளின் அதிதீவிரவாத ஆதரவாளர்கள் நேயர்கள் அவதூறுப் பேச்சுக்கள் எம்மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. நேரடியாக தனிப்பட்ட எந்த தாக்குதல்களும் புலிகளால் எனக்கு நடாத்தப்படவில்லை. எத்தனையோ இடங்களுக்கு, எத்னையோ நாடுகளுக்கு போயுள்ளேன் எங்கு போனாலும் வானொலியில் சொல்விட்டுத்தான் போகிறோம். யாரும் என்மீது தீண்டியதில்லை.

ரிபிசி வெளியிட்ட வான்முரசு பத்திரிகைக்கு அவதூறு ஏற்பட்டபோது அந்த அவதூறுக்கு எதிராக கண்டித்து தேசம் பத்திரிகை த ஜெயபாலன் மட்டுமே எழுதியுள்ளார். இன்று எத்தனையோ பேர் எமக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் அன்று எமது பத்திரிகைக்கு நடந்த அவதூறை கண்டித்தது ஜெயபாலனின் துணிவான செயலாகும். தேசம் அன்று செய்த உதவி மிகவும் முக்கியமானதாகும் அதற்கு நாம் என்றென்றும் நன்றியுடன் மதிப்புடனும் உள்ளோம்.

தேசம் ஜெயபாலனின் “ஆர்ட்டிகல் 19 கட்டுரையும் அதன் ஆசிரியர் தலையங்கமும்” என்ற கட்டுரையுடன் தான் தேசத்துடனும் ஜெயபாலனுடனும் தொடர்பு உருவானது. நாம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அன்று எமது ரிபிசி ரேடியோவை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரியான காலத்தில் தேசம் எமக்காக குரல் கொடுத்தது அந்தக்காலத்தில் எத்தனையோ பத்திரிகைகள் ரேடியோக்கள் ஜனநாயகம் பேசியவர்கள் இது பற்றி கதைக்கவில்லை இன்று இவர்களும் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு. ஆவேசம். அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள். இவற்றிக்கும் ஊடாக தமிழர்களின் அரசியலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது இந்தக் காலகட்டத்தை எப்படி வெற்றிகரமாக நகர்ந்து வந்தீர்கள்?

ராம்ராஜ்: இதனால் தான் நான் ஈஎன்டிஎல்எப் யை ரிபிசியில் சம்பந்தப்படுத்தவில்லை. காரணம் ஈஎன்டிஎல்எப் எப்பவுமே இந்திய உதவியுடன்தான் தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்க வேணும் என்ற கருத்துடையவர்கள்.

புலிகள் மக்களுக்காக போராட்டத்தை நடாத்துகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் பலமாக உள்ளது. இந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் புலிகளினால்த்தான் அரசுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. இது புலிகளின் தவறான போராட்டத்தின் பாதிப்பு. உள்ளதைத் தெரியப்படுத்த ஆரம்பித்தோம். தமிழ் மக்கள் பணத்தில் போராட்டம் நடக்கிறது. இந்தப் பணம் எங்கே போகிறது, எப்படி செலவிடப்படுகிறது போன்ற விடயங்களை கேட்க ஆரம்பித்தோம்.

இராணுவம் 50 பேர் கொல்லப்பட்டனர். சரி இந்த சம்பவத்தால் எப்படி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப் போகிறீர்கள்? இது பற்றிய ஆய்வு, தமிழர் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் இந்தியா பற்றிய நிலைப்பாடு என்ன? புலிகள் தொடர்ந்தும் இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பதா? புலிகளின் ஏகபோக பிரதிநிதித்துவம் பற்றி, புலிகளினால் செய்யப்பட்ட சகோதரப்படுகொலைகள் பற்றி, மற்ற இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தினோம், ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் புலிகள் தமிழர்களை கொல்கிறார்கள், இதை மக்களிடம் கேட்டுள்ளோம். மக்களிடம் கொண்டு போயுள்ளோம். மக்களை சிந்திக்க வைத்த நீலன் கொல்லப்பட்டார். கதிர்காமர் கொல்லப்பட்டார். இப்படி தலைவர்களை தமிழர்கள் கொலை செய்வது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருந்தோம்.

TBC_Logoஜரோப்பாவில் எத்தனையோ ரேடியோக்கள் இருந்தன. ஆனால் ரிபிசி ஒன்று மட்டும்தான் மாற்று கருத்துத் தளத்தை உயர்த்தியது என்பது உண்மை. எல்லோருமே புலிகளுக்கு வக்காளத்து வாங்கினார்களே தவிர மக்களைப் பற்றி மக்களுக்கான அரசியலைப் பேசவில்லையே. நாம் பேசினோம்.

மற்றவர்களால் உயர்த்த முடியாதா தளத்தையே நாம் உயர்த்தினோம். எமக்கு இருந்த குறைந்த அளவு வளங்களுடன் நாம் இதைச் செய்தோம். இதே காலத்தில் வேறு பல ஊடகங்களும் தாமும் மாற்று கருத்தாடல்கள் என்றும் பேசினார்கள்.

ஜந்து வருடத்திற்கு முன்பே பிரபாகரன் பேச்சையும் முதன் முதலாக ஒலிபரப்பினோம். அதே நேரத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையும் நேர்முகம் செய்து வெளியிடுகிறோம். இன்று யாரும் செய்யலாம் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டது. அன்று இதை செய்ய துணிவும் சிந்தனைத்திறனும் இல்லாது போன ஊடகங்களே அதிகம்.

ஆஸ்ரப் கொல்லப்பட்டபோது எமக்குத்தான் புலிகள் இந்த செய்திகளை உறுதிசெய்யக் கேட்டார்கள். புலிகள் எம்முடன் நேரடியாகவே தொடர்பில் இருந்தார்கள். எம்முடன் பேசினார்கள். முதல் முதல் மாவீரர் தினத்தை பிரபாகரன் பேச்சை ஒலிபரப்பியதே ரிபிசி தான். பின்பு தான் ஜபிசி கூட அன்று ஒலிபரப்பி இருந்தது இதுதான் உண்மை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடாக பிரபாகரனின் மாவீரர் தின உரையை மக்களுக்கு எடுத்துப்போனது ரிபிசியே தான் என்பதையும் மறக்க முடியாது.

அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசும் நாம் செய்வது தவறு என்று சொன்னது. புலிகளும் எங்களை தவறு என்றனர். இருவருமே அழுத்தத்தை கொடுத்தனர். புலிகள் நோர்வேயுடன் பேசி பேச்சுவார்த்தைக்கு போகும்போது அரசிடம் கேட்ட கோரிக்கைகளில் ஒன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ரிபிசி செய்யும் ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதாகும். இப்போதும் தமிழ்நெற்றில் இந்த செய்தி உள்ளதைப் பார்க்கலாம்.

ஆகவே நாம் சரியான பாதையிலே இருக்கிறோம் மக்களுடனேயே இருக்கிறோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எங்களை றோவுடன் தொடர்பு என்றும் இலங்கைப் புலனாய்வுடன் தொடர்பு என்றெல்லாம் சொல்லுவார்கள். நான் வெட்கப்படவில்லை. யாருடனும் நான் பேசுவேன். எமது விடயம் மீடியா மக்களுக்கு செய்தியை எடுத்துப்போவது தான். நாங்கள் விலை போகாமல் இலங்கை அரசு இந்திய அரசுடன் செயற்பட வேண்டும் ஆனால் இந்தியாவின் தயவு இல்லாமல் நாங்கள் நினைத்ததை செய்ய முடியுமா?

தேசம்நெற்: நீங்கள் ஊடகம் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியலை முதன்மைப்படுத்துகின்றீர்கள். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவையும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமைப்பையும் ஆதரித்து இருந்தீர்களே?

ராம்ராஜ்: நான் தேர்தல் காலத்தில் மகிந்தாவுக்கு பலமான எதிர்ப்பு. மகிந்தாவுக்கு எதிராக யார் நின்றாலும் சரி என்ற ரீதியில் மட்டும் தான் ஆதரவு அளித்தோம். அதற்காக மற்றவர்களின் கருத்தை தடுக்கவில்லையே.

ஜனாதிபதி மாவீரர்கள் கல்லறையை உடைப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதை உடைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் அரசு அதை உடைத்தது. அந்த இடத்தில் அரசு இராணுவ வீரர்களின் கல்லறைகளை உருவாக்குவது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விடயமாகவே உள்ளது. இராணுவத்திற்காக தூபிகள் கட்டலாம் ஆனால் அந்த மக்களை வேதனைப்படுத்தி அந்த இடத்திலேயே காட்டுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

முறிகண்டி புனிதப்பிரதேசம் அங்கே போய் 5 ஸ்ரார் கோட்டல்களை கட்டினால் அங்கே மாட்டிறைச்சிக் கடை வரத்தான் போகுது. இங்கே தான் இப்படித்தான் மக்களை புண்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிய பிறகும் அரசு அதையே செய்கிறது. ஆனால் பௌத்த புனித பிரதேசங்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றது. இப்படித்தான் இலங்கை அரசு செயற்ப்படும் என்றால் இன்னும் ஒரு 20 வருடங்களின் பின்னர் போராட்டம் வேறு வடிவில் உருவெடுக்கும்.

புலம்பெயர்ந்து பெரிய அளவிலான இளம்தலைமுறை வளத்துடன் படிப்புடன் உள்ளது. நாட்டில் 83ம்ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம்தலைமுறை தமக்கு அரசியல் உரிமையில்லை என்று கூறுகின்ற சந்ததி உண்டு. அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பதை அரச உணரத் தவறுகிறது.

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழர்க்கான அரசியல் தீர்வை முன்வைக்காது போனால் எதிர்காலத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்களும் உங்கள் அமைப்பும் இந்தியாவுடன் மிக அன்யோன்னியமான உறவைக் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமானால் அதனை இந்தியா ஆதரிக்குமா?

ராம்ராஜ்: திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் போராட்டம் நடைபெறும். அதன் இறுதியில் ஆயுதம் பாவிக்கப்படலாம். இலங்கையில் சீனாவின் நிலைப்பாடு எப்படி எதிர்காலத்தில் இருக்கும் என்பதைப் பொறுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.

தேசம்நெற்: கடந்த ரிபிசியின் வரலாற்றில் 2010 வரைக்கும் உள்ள வரலாற்றுக் காலத்தில் ரிபிசியின் பணிகள் பற்றி உங்கள் கருத்துக்கள்?

ராம்ராஜ்: இன்று வரைக்கும் ஆயுத கலாச்சாரம், ஆயுத வன்முறை பற்றித்தான் பேசினோம். இனிமேல் தான் அரசியல் பேசப்போகின்றோம். ரிபிசி கேட்கிற மக்களுக்கு அரசியலை வளர்ப்பதைத்தான் ரிபிசி இனிமேல் செய்யும். கடந்தகால வன்முறைக் கலாச்சாரத்தை விமர்சிப்பதை புலிகளின் வரலாற்றுத் தவறுகளை விமர்சிப்பதும் இதைவிட எல்லாதரப்பு தலைவர்கள் அரசியல் ஆய்வாரள்கள் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒன்று சேர இருந்து பேச ரிபிசி களத்திற்கு கொண்டுவந்து கலந்துரையாடுவதும், இனிமேல் நாம் எப்படி ஏமாற்றப்படப் போகிறோம் என்பதையும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காகவும், அரசியல்பேச வேண்டும். அதற்கான உந்து சக்தியாக இருக்க அரசியல் பேச வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க நாம் போராட வேண்டியுள்ளது.

மக்கள் அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், மக்கள் இந்தியாவிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், ரிபிசி யை எல்லோரும் கேட்கிறார்கள். இந்த ஊடகக் கடமையை ரிபிசி செய்யும். ரிபிசியை கேட்கும் அரசுகளும் இதில் வரும் கருத்துக்களை அவதானிக்கிறார்கள். இது தமிழ் மக்களின் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. இது இலங்கை அரசுக்கும் போய் சேருகின்றது.

இதைவிட மிக முக்கிய பணி உள்ளது. மக்களின் பணம், பெரும் பணம் இங்கு உள்ளது. அது சேர்த்தவருக்கோ அல்லது புலிகளின் பணமோ அல்ல. அது தமிழ் மக்களின் பணம். அது மக்களிடம் போய்ச்சேர வேண்டும். இந்த விடயத்தில் தேசம் ஆசிரியர்கள் நிறையவே செய்கிறார்கள். தேசம் உட்பட நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசை எமது நியாயத்தன்மையை உணரவைக்க வேண்டும்.

இன்று ஊடகங்களில் புலிகளின் பினாமிகள் பெரும் வியாபாரிகளாகிவிட்டனர். இதுவும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஜனநாயகம் பேசுபவர்கள் ஏன் கோவில் கட்டுகிறார்கள். அங்கே எது போலியானது என்பதும் அவர்கள் உள்நோக்கமும் என்ன என்பது தெளிவானது.

தேசம்நெற்: வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர். ஈஎன்டிஎல்எப் இன் உறுப்பினர். வி ராம்ராஜ் இன் உண்மையான அடையாளம் அல்லது அவரின் விருப்பமான அடையாளம் என்ன?

Ramraj_V_Sivalingam_V_TBCராம்ராஜ்: ராம்ராஜ் என்றால் ரிபிசி. ஈஎன்டிஎல்எப் என்றால் முஸ்தபா. இது இரண்டுமே எனது உண்மையான அடையாளங்கள் தான்.

தேசம்நெற்: இறுதியாக குறிப்பாக எதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

ராம்ராஜ்: பிரிட்டன், இந்தியா, இலங்கை அரசுகளுடன் தொடர்பில் உள்ளேன். எந்தத் தொடர்பையும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பாவிக்கவில்லை. எல்லாமே பொது தேவைக்காகவே பாவித்துள்ளேன். மக்களை, கருத்துச் சொல்ல விரும்புபவர்களை, அரசுக்குச் சொல்ல விரும்புபவர்களை, தலைவர்களுக்கு சொல்ல விரும்புபவர்களை, கருத்துச் சொல்ல இடம் கொடுப்போம். சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல சிந்தனை வளர இடமளிப்போம். இதை ரிபிசி எப்போதும் செய்யும்.

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

Erik_Solheim_Pirabaharan_Vதமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்தவரான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இலங்கை சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கூறினார்.

எல்ரிரிஈ தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை 2009 பெப்ரவரி முற்பகுதியிலேயே தேசம்நெற் இல் வைக்கப்பட்டது. எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை அப்போது வலியுறுத்தி வந்தோம். 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ”நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

”(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்” என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

”யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு” எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ”தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீய ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்” எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மெளனமாகவே உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.

அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்

Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.

நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.

நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு

Maithiripala_Sirisenaலிற்றில் எய்ட் க்கு அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகளை வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டது. யூன் 21 2010ல் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவில் இவ்வுடன்பாடு எட்டப்பட்டது. இந்நிகழ்வில் டொக்டர் நிமால் காரயவாசம் லிற்றில் எய்ட் யை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார். சுகாதார அமைச்சிரன் சார்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். சுகாதார அமைச்சின்  பொதுச்செயலாளர் டொக்டர் ருபேரு பொதுச் சுகாதார அமைச்சின் இயக்குநர் அஜித் மென்டிஸ் ஆகியோரும் சமூகமளித்து இருந்தனர்.

இப்பரிந்தணர்வுன்படி லிற்றில் எய்ட் ஆல் அன்பளிப்புச் செய்யப்படும் மருந்துவகைகளை விநியோகிக்கும் செலவீனத்தை சுகாதார அமைச்சே பொறுப்பேற்பது என்றும் மருந்துவகைகளின் விநியோகத்தின் போது அவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விநியோகிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த லிற்றில் எய்ட் பிரதிநிதிகள் உடன் இருப்பார்கள் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

கடந்தகாலங்களில் மருந்துவகைகளை விநியொகிப்பதற்கான பாரிய செலவை லிற்றில் எய்ட் பொறுப்பேற்க வேண்டி இருந்தது. இப்புரந்தணர்வு உடன்பாடானது அச்செலவுகளை முழுமையாக நீக்க உதவியுள்ளது.

இதுவரை தனிப்பட்ட பொது அமைப்புகளால் அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகள் தனியாக வைக்கப்படுவதே வழமை. இம்மருந்துவகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வழிமுறைகள் இருக்கவில்லை. (இது பற்றிய விரிவான கட்டுரையொன்று தேசம்நெற் இல் வெளிவர உள்ளது.) ஆனால் லிற்றில் எய்ட் ஆல் வழங்கப்படும் மருந்துவகைகள் மக்களை (நோயாளிகளை) சென்றடைவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த உறுதியளித்து உள்ளது.

லிற்றில் எய்ட் க்கு 2009 டிசம்பர் 31 வரை 1.52 மில்லியன் US $ பெறுமதியான மருந்துவகைககள் Medicine Without Borders அமைப்பினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இதன் முழுப் பட்டியலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Medicin_log_Sri_Lanka_09.pdf

MWB_in_Vavuniya_Hospitalஅதன் பின் மேலதிக மருந்துப் பொருட்களையும் Medicine Without Borders, லிற்றில் எய்ட் க்கு வழங்கி இருந்தது. இதுவரை இவ்வமைப்பு லிற்றில் எய்ட் க்கு வழங்கிய மருந்துவகைகளின் சந்தைப் பெறுமானம் 3 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்கள். Medicine Without Bordersயைச் சேர்ந்த Mr. Hans Frederik Dydensborg, Mr. Thomas Buck and Miss Sugi Thiruchelvam ஆகியோர் இம்மருந்து வகைகளை லிற்றில் எய்ட் க்கு பெற்றுத் தருவதில் முக்கிய பங்கெடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/meeting-with-the-health-minsiter

லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

Panangoda_Internet_Centreலிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான இணைய மையம் ஒன்றை லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்து வழங்கி உள்ளது. பனாங்கொட இராணுவ முகாமில் காயமடைந்துள்ள படைவீரர்களுக்கே இந்த இணைய மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

இதேநாள் காயப்பட்ட படைவீரர்களுக்கான பரா விளையாட்டப் போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு லிற்றில் எய்ட் பிரதிநிதிகளான ரி கொன்ஸ்ரன்ரைன் நிமால் காரயவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

Panangoda Internet Centre - formal Hand Overலிற்றில் எய்ட் ஆல் வழங்கப்பட்ட உதவிகளுக்கு லெப் கேணல் போகொல்லாகமா தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்ட படை வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களுக்கு இது தொடர்பான மேலதிக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் குழந்தைப் போராளிகள்லிற்றில் எய்ட் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இசைக் கருவிகளை வழங்கியும் வெவ்வேறு உதவிகளை மேற்கொண்டு இருந்தனர். அம்பேபுச தடுப்பு முகாமில் இருந்து அம்முன்னாள் போராளிகள் பின்னர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுரிக்கு மாற்றப்பட்டு இருந்தமை அறிந்ததே. http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்

Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன் அங்கு பொதுக் கிணறுகள் எதுவும் இல்லை. அதனால் எழுவை தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம் எழுவைதீவு கீராமசேவகர் ஆகியொருடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

தீவை மீள்மேம்படுத்தும் சமூகம் -Islands Restoration Society (IRS)  எழுவைதீவில் ஊசிக்கிணறு அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு லிற்றில் எய்ட் இடம் விண்ணப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊசிக் கிணறு அமைக்கும் திட்டத்துடன் எழுவை தீவு சென்று கிராமத் தலைவர்களுடன் உரையாடியதில் அவர்கள் பாரம்பரயமான கிணறும் கிணற்றடியும் தான் தம் ஊருக்கு பொருத்தமானது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊசிக்கிணற்றுத் திட்டம் கைவிடப்பட்டு பாரம்பரிய கிணறு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது.

Elluvaitheevu_Fishermen_Co-Operative_Societyயூன் 24 2010ல் எழுவைதீவு கடந்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் எழுவைதீவு கிராமசேவகர் வி வடிவழகன் எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகச் செயலாளர் அருள்நாதன் அமலநாதன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இக்கிணறு வெட்டும் வேலைத்திட்டத்திற்கு 130 000 ரூபாய்கள் மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நிபுணத்துவம் மிக்கவர்களை மேற்பார்வைக்கு நியமிக்குமிடத்து கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமூகம்  தங்கள் உழைப்பை வழங்கும் என தெரிவித்து உள்ளது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை கிராமசேவகரும் முன் வந்துள்ளார்.

எழுவைதீவு சுகாதார மையத்திற்கு மருத்துவ உதவி:

Elluvaitheevu_Medical_Centreமேலும் லிற்றில் எய்ட் மேற்கொண்ட இப்பயணத்தின் போது எழுவைதீவு சுகாதார மையத்திற்கு 1200 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. தீவின் மருத்துவ அலுவலர் ஈ ஞானச்செல்வி லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைனிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இம்மருந்துப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு டென்மார்க்கினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே.

ஊர்காவற்துறை பொது மருத்துவமனையில் லிற்றில் எய்ட்:

இந்த விஜயத்தின் போது ஊர்காவற்துறை பொது மருத்துவ மனைக்கு 20 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. பொது மக்கள் சார்பில் மருத்துவ மேலதிகாரி டொக்டர் அருணா புண்ணியமூர்த்தி லிற்றில் எயட் இடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.

ஊர்காவற்துறையில் 18 000 பேர் வாழ்கின்றனர். ஊர்காவற்துறை பொது மருத்துவமனை 58 000 பேருக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றது. அப்பகுதியில் உள்ள தீவுவாழ் மக்களுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை இதுவே.

Kayts_General_Hospitalலிற்றில் எய்ட் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து மருந்துவகைகளை விநியோகம் செய்திருந்தது. அந்த வகையில் ஊர்காவற்துறை மருத்துவமனை மிகவும் சுகாதாரத்துடன் பேணப்படுவதாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை மாதம் 15 அவசர பிரசவங்களைக் கையாள்கின்றது. ஆனால் அங்கு அல்ராசவுண்ட் ஸ்கான் போன்ற வசதிகள் இல்லை. மருத்துவ மேலதிகாரி டொக்டர் புண்ணியமூர்த்தி இது பற்றி லிற்றில் எய்ட் இடம் விணணப்பித்துள்ளார். இதுதொடர்பாக லிற்றில் எய்ட் ரஸ்டிகள் சந்தித்து ஆராய உள்ளனர்.

தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட லிற்றில் எய்ட் உதவித் திட்டங்களுக்கு தீவுப்பகுதிகளை மீளமேம்படுத்தும் சமூகம் – Islands Restoration Society (IRS) குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த சிறீபதி சிவனடியார் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தார்.

இவ்வுதவித் திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவலக்கு: http://littleaid.org.uk/report-on-island-projects-elluvaithivau-kayts

‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Kumaran_PathmanathanCharles_Antonythasபுலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று யூன் 15 முதல் யூன் 20 வரை இலங்கை சென்று திரும்பி இருந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுத்து வைக்கப்பட்டு உள்ள தலைவர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைச் சந்தித்து உரையாடியதுடன் அவருடன் வடமாகாணத்தில் உள்ள மீள்குடியேற்றம் வன்னி முகாம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஆகியோரையும் சந்தித்து வந்துள்ளனர். இது பற்றிய விபரங்கள் அருகில் இணைக்கப்பட்டுள்ள முன்னைய பதிவுகளில் உள்ளது.

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

தற்போது இந்த விஜயம் தொடர்பாக இக்குழுவில் பயணித்த சார்ஸ்ஸ் அந்தோனிதாஸ் அந்த ஐந்து நாட்களும் இலங்கையில் நடைபெற்ற விடயங்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். விரைவில் மீண்டும் இலங்கை சென்று அபிவிருத்தி நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிடும் சாள்ஸ் அன்தோனிதாஸ் தமிழ் மக்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே தற்போதுள்ள அவசிய தேவை என்கிறார். சார்ள்ஸ் அந்தோனிதாஸ் யூன் 29 2010ல் தேசம்நெற் ஆசிரியர்களுக்கு வழங்கிய நேர்காணல்.

கேபி யை சந்திக்கச் சென்றவர்களின் பயணம்

தேசம்நெற்: இந்தப் பயணத்தில் போனவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்?  கேபி க்கும் அவர்களுக்கும் என்ன உறவு?

சார்ள்ஸ்: எனக்கு கேபி யை போராட்ட ஆரம்பகாலத்திலேயே நன்கு தெரியும். பிரான்ஸில் இருந்து கலந்துகொண்ட கெங்காதரன் கேபி உடன் ஒன்றாகப் படித்தவர். கனாவில் இருந்து கலந்துகொண்ட பேரின்பநாயகம் கேபி க்கு கற்பித்த விரிவுரையாளர். மற்றையவர்கள் சிலர் உறவினர்கள். இன்னும் சிலர் புலிகளுடன் இருந்தபோது ஏற்பட்ட உறவு. அருட்குமார் பிரிஎப் உறுப்பினர் அவர் எப்படி இந்தப் பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை.

கேபி கைது செய்யப்பட்ட பின் முதன்முறையாக கேபியின் மனைவியுடன் மட்டும்பேச போன் கொடுத்திருந்தார்கள். அவரது மனைவி தாய்லாந்திலே தான் வசிக்கிறார். பின்பு உறவினர்களுடன் பேச அனுமதி கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து மேலும் விரிவடைந்து வேறு நண்பர்களிடமும் வேறு ஆட்களுடனும் பேச அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதுதான். அப்படி செய்கிற நன்மைகள் மக்களை போய் சேருகிறதா? என்பதுதான் முக்கியம். அப்படியாயின் இந்த தொடர்புகள் தேவையா? கைவிடுவதா? இதுதான் என்முன்னால் உள்ளது.

மற்றது அபிவிருத்தியுடன் சம்பந்தப்படாமல் எந்த நடவடிக்கையும் செய்து மாற்றங்களை கொண்டுவர முடியாது. அது கனவாகவே தான் இருக்கும்.

தேசம்நெற்: கேபி ஆல் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவாக நீங்களும் இன்னும் எண்மரும் இலங்கை சென்று திரும்பி இருக்கின்றீர்கள். நீங்கள் இக்குழுவில் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? அதாவது உங்களுக்கும் கேபி க்கும் உள்ள உறவு என்ன?

Kumaran_Pathmanathanசார்ள்ஸ்: கேபி சம்பந்தமாக எனக்கு நல் அபிப்பிராயம் கடந்த போராட்ட காலங்களில் இருந்தது, ரெலோவின் குட்டிமணி, தங்கத்துரை காலத்தில் ஆரம்பித்த உறவு. தாடி தங்கராசா என்பவரால் தங்கத்துரை சுட்டு காயப்படுத்தியபோது கேபி உடனடியாக வந்து வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தந்திருந்தார். அன்றிலிருந்து எனக்கு கேபி மீது நல்ல அபிப்பிராயம் உண்டு. யார் எவர் என்ற பேதம் பாராது மற்ற மனிதர்களுக்கு உதவ காப்பாற்றும் குணாம்சம் கொண்டவர்.

கேபி இயற்கையாகவே மற்றவர்களிடம் இணைந்து வேலை செய்யும் குணாம்சம் கொண்டவர். இந்த குணாம்சங்கள் அவர் புலி இயக்கம் என்பதற்காக அவரிடமிருந்து அகன்று விடவில்லை என்பதே எனது அபிப்பிராயம். இயக்க முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நான் பேசவிரும்பவில்லை. ஆனால் கேபி ஒரு ஜனநாயகவாதி. ஜனநாயகத்தை நிலைநிறுத்த விருப்புபவர் என்பதில் எனக்கு அன்று இருந்த அதே மாதிரியான உணர்வு இம்முறை அவரை சந்திக்கும் போதும் இருந்தது.

தேசம்நெற்: உங்களை இந்த சந்திப்புக்கு அழைத்தது யார்?

சார்ள்ஸ்: கேபி தான் ஒழுங்கு பண்ணி இருந்தார். கேபி தனது தொடர்புகளின் ஊடாகவே என்னிடம் தொடர்பு கொண்டார். நேரடியாக அவர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. என்னுடன் வந்த மற்றையவர்களுடன் எனக்கு இங்கே எந்தவித தொடர்புகளும் இருக்கவில்லை. லண்டனில் இருந்து புறப்பட்டவர்கள் விமான நிலையத்திலும் பின்னர் தங்கியிருந்த ஹொட்டலிலும் தான் சந்தித்து பேசினோம்.

குழுவினரில் விமலதாஸை எனக்கு முன்பே தெரியும். அவரும் நானும் ரமிழ் ஹெல்த் ஓர்கனைசேசனில் இருந்து சென்றோம். அருட்குமார் வருவது எனக்கு பின்புதான் தெரியும். சிவனடியானையோ மற்றவர்களையோ எனக்கு தெரியாது. ஹொட்டலில் கதைக்கும்போது என்ன நடக்கபோகுது என்றுதான் பேசினார்களே தவிர ஒரு திட்டமிட்டு  எதைப் பேசுவது. எதைச் சொல்லுவது என்று யாரும் பேசவில்லை.

தேசம்நெற்: கேபி ஜ சந்தித்த பின்பு நீங்கள் எல்லோரும் குழுவாக சந்தித்தீர்களா? என்ன  தீர்மானித்தீர்கள்?

சார்ள்ஸ்: சந்தித்தோம். அப்போது ஒரு கருத்து உருவாகிவிட்டது. மக்களை இப்படியே விடமுடியாது. அரசிடம் கையேந்தும் நிலைக்கு எம்மக்களை விடக்கூடாது. நாம் தான் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். ஆகவே கேபிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவே எல்லோராலும் ஒருமித்து முடிவு எடுக்கப்பட்டது.

பிறகு இங்கு வந்த அருட்குமார் ஏன் இப்படி அறிக்கை விடுகிறார் என்பது புரியவில்லை. அவருக்கு இங்கே புலிகளின் ஆட்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். இலங்கைக்குச் செல்லும்போதே அரசின் பிடியில் உள்ள ஒருவரைத்தான் சந்திக்கப் போகிறோம் என்றுதானே போனோம். அவர் இப்போது குறிப்பிடும் விடயங்கள் இலங்கைக்குச் செல்வதற்கு முன்னதாகவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் அவர் எதற்கு வந்தார் என்றும் தெரியவில்லை. சிலவேளை என்ன நிலைமை என்று அறிய இவர் அனுப்பப்பட்டு இருக்கலாம்.

தேசம்நெற்: இலங்கை போய்வந்த உங்கள் குழுவிற்கு என்ன செய்கின்ற நோக்கம்?

சார்ள்ஸ்: இன்னமும் குழுவாக பேசவில்லை. நான் ஒரு அறிக்கையை எழுதி கொடுத்துள்ளேன். எல்லோருமாக படித்துவிட்டு வெளிவரும் என நினைக்கிறேன்.

தேசம்நெற்: அது வெளிவருமா? டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நிலைப்பாடு உங்களை குழப்பாதா?

Arudkumar_Velayuthapillai_Drசார்ள்ஸ்: அருட்குமார் தவிர்ந்த மற்றவர்கள் ஒத்துவருவார்கள் என்றே கருதுகிறேன். அருட்குமார் நிலை என்பதைவிட இந்த மாதிரியான நிலை இன்னமும் புலம்பெயர் நாட்டிலுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை மாற்றியமைக்காது விட்டால் தமிழர்களின் பாடு பெரும்பாடாகி போய்விடும்.

தேசம்நெற்: வன்னி யுத்த காலத்துக்கு முன்பாக உங்களுக்கு கேபியுடன் தொடர்பு இருந்ததா?

சார்ள்ஸ்: இல்லை. கேபி ஒருமுறை லண்டன் வரும்போது என்னை விசாரித்துப் போனதாக அறிந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை, லண்டன் வந்து போனபின்பு கேபி எரித்தீரியாவில் கூடுதலாக இருந்திருந்தார். நீண்ட காலம் அவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக எரித்திரியாவிலே தங்கி இருந்தார்.

போராளிகள் கடமையில் எப்படி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது என்பது மிகமுக்கியமானது. இதை பலர் கவனத்தில் எடுப்பதில்லை. இதன் காரணமாக பலவித சீரழிவுகள். போராட்டம் முடிந்த நாடுகளில் நடந்துள்ள அனுபவங்களை இவர்கள் பெறுவதில்லை. பல போராட்டவாதிகளுக்கு இது பற்றிய சிந்தனை இல்லாமல் போராட்டத்தை தொடருவது என்ற எண்ணத்தில் தொடர்வார்கள்.

தேசம்நெற்: இந்த இலங்கைப் பயணத்திற்கு முதல் நீங்கள் கேபியை எப்போது சந்தித்தீர்கள்?

சார்ள்ஸ்: 2009ல் மே 18க்குப் பின்னதாக மலேசியாவில் சந்தித்து இருந்தேன்.

தேசம்நெற்: கேபியின் சொந்தங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது ஏதாவது?

சார்ள்ஸ்: கேபி யின் தாய் சகோதரிகளை வெளியே எடுக்க முயற்சித்ததாகவும் அதற்கு வெளியே கொண்டு போக வேண்டிய செலவுக்கு பணமில்லாமல் கஸ்டப்பட்டதாயும் தாயும் சகோதரியும் வேறு வேறாக கடலில் வரும்போது இலங்கைக் கடற்படையினால் கொல்லப்பட்டதாயும் கேள்விப்பட்டேன். இது கேபி இயக்கத்தை விட்டு விலத்தப்பட்ட காலத்தில் (1990களில்) நடந்தது என நான் லண்டனில் கேள்விப்பட்டேன். இதை கேபி சொல்லவுமில்லை நான் கேட்கவுமில்லை.

கேபி இனுடைய அரசியல்

தேசம்நெற்: கேபி யை ஒரு ஜனநாயகவாதி என்கிறீர்கள். புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை கொலைத் தாக்குதல்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பியவர் கேபி. அவர் எப்படி ஜனநாயகவாதியாக முடியும்?

சார்ள்ஸ்: கேபி என்றுமே எந்த விதமான கொலைகளிலும் பங்கு பற்றியது இல்லை. அது மட்டுமல்ல கேபி நேரடியாக எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை.

கேபி ஆரம்ப காலங்களிலேயே நாட்டைவிட்டு வெளியேறியவர். 1975 – 1985 களில் பலவிதமான நெருக்கடிகள் இயக்கத்தினுள்ளே வளர்ந்த காலம் இது. ரெலோவினுள் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார். பின்னர் வெளியேறுகிறார். இதன் காரணமாக பல பிரச்சினைகள் உருவாகின்றது. இதற்கு முகம் கொடுக்க முடியாமல் கேபி திண்டாடுகிறார். காரணம் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேபி மிக நெருக்கமாக உறவாடியவர். இதனால் கேபி வெளியேறி தனியாக இருக்க விரும்புகிறார்.

ராஜீவ்காந்தி கொலை:

தேசம்நெற்: கேபி கைது செய்யப்படுவதற்கு முன்பாக போராட்டம் பற்றிய கேபியின் நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது?

சார்ள்ஸ்: இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தே கேபி யிடம் இருந்தது.

தேசம்நெற்: கேபி இந்தியாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகக் கூறுகிறீர்கள். ரஜீவ்காந்தி கொலை தொடர்பான குற்றவாளி கேபி. அப்படி இருக்கையில் அவர் எப்படி இந்தியாவுடன் இணைந்து செயற்படுவது பற்றி பேசினார்?

Rajeev Gandhiசார்ள்ஸ்: தனக்கும் ரஜீவ்காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது இந்தியா இலங்கை எல்லோருக்கும் நன்றாக தெரிந்த விடயம் என்றும் இது பற்றி தான் பயப்பட ஒன்றுமில்லை என்றும் கேபி சொன்னார். தான் ரஜீவ் கொலை பற்றி பத்திரிகையில் பார்த்தே அறிந்தேன் என்றும் ரஜீவ்காந்தி கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற விடயமே தனக்கு பலகாலம் கழித்தே திட்டவட்டமாக தெரியவந்தது என்றும் கேபி சொல்கிறார். ஆனால் தன்னை புலிகளின் உறுப்பினராக கருதி எதுவும் நடக்கலாம் என்றார்.

இலங்கை அரசுடன் ஒத்துழைப்பும் பொருளாதார அபிவிருத்தியும்

தேசம்நெற்: இப்போது கேபி சொல்லுகின்ற அரசுடன் ஒத்துழைத்து பொருளாதார முன்னேற்றத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றியோ, போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது பற்றியோ, கேபி  பிரபாகரனுடன் பேசியுள்ளாரா?

சார்ள்ஸ்: இது பற்றி நான் கேபி உடன் பேசவில்லை. இறுதிக்காலத்தில் பிரபாகரன் தன்னை சுற்றியுள்ளவர்களின் போக்குகள் பற்றி விளங்கிக் கொண்டுள்ளார். அதனால்தான் பிரபாகரன் கேபியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். இந்தக் காலத்தில் தான் கேபி யை தனக்கு அடுத்ததாக வெளிநாட்டு தொடர்புகளுக்கு நியமித்திருந்தார்.

கேபிக்கு போராட்ட காலங்களில் பிரபாவுடன் இருந்த தொடர்பை இலங்கை அரசு ஒட்டுக்கேட்டிருந்தது. யார் யாருடன் யாருக்கு ஊடாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அரசுக்கும் தெரியும். ஒரு கட்டத்தில் கோதயபாய பிரபாகரன் இறந்தது பற்றியும் பிரபாகரனுக்கும் கேபி க்கும் இடையே தொடர்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டதைப் பற்றியும் கேபி க்குச் சொல்லியுள்ளார்.

தேசம்நெற்: கேபி யாரை இந்த அபிவிருத்தி மனிதநேயப் பணிகளைச் செய்யவில்லை என்கிறார் புலிகளையா? அரசையா? புலம்பெயர் மக்களையா?

சார்ள்ஸ்: சமுதாயம் என்றே சொல்லுகின்றார். காரணம் எப்பவுமே எமது மக்கள் இரந்து கொண்டு நிற்கின்றார்களே நாம் நாமாக எமக்காக என்று செயற்பட முடியாதா? என்று தான் கேட்கிறார்

மக்களை முகாமைவிட்டுப்போ என்றால் போகமாட்டேன் என்கிறார்கள். முகாமை விட்டுப் போனால் அவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதுதான் பிரச்சினை. இதைத்தான் நாம் சந்தித்த புலிகளின் முன்னாள் போராளிகளும் கேட்கிறார்கள்.

கேபி பெரிய அரசியல்வாதி அல்ல இடைத்தரகராக வேலை செய்ய்ககூடியவர். அன்று புலிகளுக்கு பிரேமதாஸாவுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியவர் இந்த கேபி தான்!

புலிகளை அடைத்துள்ள முகாமிற்கு போனபோது கேபி கண்ணீர்விட்டு அழுதார். அவ்வளவு மென்மையானவர். சரியாக பரிதாபப்படுகின்றார். சிலநேரம் பார்த்துவிட்டு வந்து பஸ்சில் இருந்து விடுகின்றார்.

தேசம்நெற்: அரசாங்கத்தின் பிடியிலுள்ள ஒரு கைதியுடன் எவ்வளவு தூரம் நீங்கள் இணைந்து வேலை செய்யலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான கேள்வி மிகவும் நியாயமானது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? இது பற்றிய விமர்சனம் கேபி தன்னுடைய வாழ்நாளைக் கொடுத்து உருவாக்கிய புலிகள் அமைப்பிலிருந்தே வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்ள்ஸ்: புலிகள் அமைப்பு பிரபாகரனின் பின்பு அரச எதிர்தரப்பு ஆட்களுடன் ஒன்றிணைந்தார்கள். சரத்தை ஆதரித்தார்கள். ஆனால் அரசு புனருத்தாருன வேலைகளில் கேபி க்கு ஒரு பங்கு உண்டா? செய்ய முடியமா? என்பதைப் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள். கேபி க்கு உள்ள பங்களிப்பை பொசிட்டிவ்வாக பாவிக்க யோசிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்த போது நான் கேட்டேன் ‘ஏன் கேபி’ என்று. உடனே இராணுவ பிரிகேடியர், ‘‘உங்களிடம் வளங்களைத் தந்தால்  நீங்கள் களியாட்டங்களிலும் சுயநல வேலைகளிலம் தான் ஈடுபடுவீர்களே” என்றும் ‘இன்னும் ஒருமுறை நாம் ஏமாற முடியாது’ என்றார். இது சிலவேளை கருணா போனறோர்களை நினைத்துக் கொண்டு இந்த இராணுவத்தளபதி சொன்னாரோ என நான் நினைத்துக்கொண்டேன்.

தேசம்நெற்: கேபி சொல்லுகின்ற பொருளாதார அபிவிருத்தி என்ற முன்னெடுப்புப் பற்றிய பலமான விமர்சனம் கேபி மீது எழுந்துள்ளது. இது இன்னும் வளரும். இதை எப்படிக் கையாளப் போகிறார்?

Suresh_Premachandranசார்ள்ஸ்: தான் பிடிபட்ட போது யாரும் கவலைப்படவில்லை எனக் கேபி மனவருத்தப்பட்டார். பிடிபட்டபோது எல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணியதாகத் தெரிவித்தார். ‘நான் இப்போது வெளியே வருகிறேன். இப்படி வெளியே வரும்போது சிலர் சங்கரி சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றோர் என்மீது சேறு பூசுகிறார்கள். நான் கைதியாக இருக்கிறேன். என்னுடன் போட்டி போடுகிறார்கள்.” என கேபி தனது மனக்கவலையைத் தெரிவித்தார்.

‘’நாங்கள் வட கிழக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தம் அமைப்பை வைத்திருக்கின்றோம். அதனூடாக நீங்கள் யாரும் எந்த அபிவிருத்தியைச் செய்யலாம். நாங்கள் என்ன செய்கின்றோம் எப்படிச் செய்கின்றோம் என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ளக் கூடியதாகத்தான் ஒழுங்குகள் செய்யப்படும். நீங்களே அபிவிருத்தியை எங்கே எப்படிச் செய்வது போன்ற விடயங்களையும் தெரிவு செய்ய முடியும். அதேபோல நிதி போன்ற விடயங்களிலும் நீங்களே முடிnவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார் கேபி. இதில் அரசும் உடன்பட்டு இருப்பதால் இதனால் சிக்கல்கள் எழாது என்பதே கேபியின் கருத்து.

ஈபிடிபி அரசுடன் இணைந்து அரசின் அங்கமாக செயற்படுகின்றது. கேபி அரசுடன் இணைந்து இன்னுமொரு அமைப்பை உருவாக்கி செயற்ப்பட முன்வருகிறார். அதேபோல எங்களையும் இன்னுமொரு அமைப்பினை உருவாக்கும்படி கேட்டார். நாங்கள் ஆர்ஆர்என் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளோம். நாம் எமது அமைப்பு ஆர்ஆர்என் பற்றி கூறினோம். கேபி அதனை வரவேற்றார். ‘எல்லோரும் மக்களுக்காகவே தான் வேலைசெய்ய முயற்சிக்கிறோம்’ என்றார்.

தேசம்நெற்: இலங்கை அரசு கேபியையும் அவரிடம் போய்வந்த குழுவினரையும் பயன்படுத்தி புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களைப் பிரித்தாள முற்படுகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றதே.

சார்ள்ஸ்: நாங்கள் அங்கு நின்றிருந்த போது ஒரு இராணுவத்தளபதி விளையாட்டாக சொன்னார், ‘உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை’ என்று. இதற்கு மேல் அதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தேசம்நெற்: பரந்துபட்ட மக்களிடம் போகும்போது இது அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை எப்படித் தவிப்பீர்கள்?

சார்ள்ஸ்: நாங்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை. அவர்கள் தமது பணத்தை பொதுப்பணத்தை கொண்டு போய் என்ன உதவிகளை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு ஒத்தாசைகள் உதவிகள் வழங்குவோம். அப்படி அவர்கள் பணம் முதலீடு செய்தால் அவர்களே மக்களுக்கு உதவி செய்வார்கள். தாமும் பணம் சம்பாதிப்பார்கள்.

இந்த அபிவிருத்தி என்பதில் சமூக தேவைகளை கவனத்தில் கொண்டு செய்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதில் அங்குள்ள அரசியல்வாதிகளும் நாட்டம் கொண்டு கவனமெடுக்க வேண்டும். எங்களுக்குரிய தார்மீக கடமைகளை உணர்ந்து உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் என்றால் நாங்கள் உங்களக்கு உதவி செய்ய தயார். அந்த மக்கள் பயன் பெறுவார்கள்.

தேசம்நெற்: புலிகளின் வெளிநாட்டிலுள்ள பணத்தை கேபி கொண்டுபோக உள்ளார் என்பதே முக்கிய பேச்சாக உள்ளது.

சார்ள்ஸ்: கேபி இதை எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை. எல்லாமே மக்களின் பணம். அந்தப் பணம் மக்களிடம் போய்ச்சேர வேண்டும். அல்லது பணத்தை தந்த மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சை கேபிக்கு முன்பு வைத்தார்கள். கேபி சொன்னார், ‘எங்களுக்கு வேண்டாம். பிரச்சினைகள் இருப்பதை  மக்களிடம் கொண்டு போவோம். மக்கள் விருப்பம் என்றால் ஆதரிக்கட்டும் இல்லாவிட்டால் போகட்டும்.’

நாங்கள் காசை கையில் எடுக்க மாட்டோம். அங்கு ஒரு செயற்திட்டம் உருவாக்கப்பட்டு அந்த திட்டத்திற்கு நீங்கள் நேரடியாகவே பணத்தை கொடுக்கலாம். அது மட்டுமல்ல அது எப்படிச் செலவு செய்யப்படுகின்றது என்பதையும் பணத்தை வழங்கியவரும் பொதுமக்களும் எந்த நேரத்திலும் பார்வையிடலாம்.

தேசம்நெற்: புலிகளின் வெளிநாடுகளில் உள்ள பணம், சொத்துக்கள் பற்றி அங்கு பேசப்பட்டதா?

சார்ள்ஸ்: இல்லை. ஆனால் ஒருகட்டத்தில் இராணுவ அதிகாரிகளுடன் பரீட்ச்சைக்காலம் வருகின்றது மாணவர்களை படிக்க சோதனை எடுக்க அனுமதிக்கலாம் தானே என்று கேட்க, அவர் ‘நீங்கள் இதை இப்படி பிரபாகரனிடம் கேடடீர்களா’, என்று திருப்பிக் கேட்டார். ‘இல்லையே’, என்று தானே பதிலளித்துவிட்டு ‘’ஏன் இப்படி எங்களிடம் கேட்கிறிர்கள்”, என்று மற்றுமொரு கேள்வி கேட்டார்.

புலிகளின் இறுதிக் காலத்தில் தமிழரின் பலகோடி சொத்துக்களை எடுத்தீர்கள் தானே என்று கேட்க, ‘எந்தக் காசு? அதைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்?”, என்றெல்லாம் அவர்கள் திருப்பி கேட்கும்போது எம்மிடம் பதிலும் இல்லை.

ஒருமுறை இராணுவ அதிகாரி கூறும்போது, ‘வெளிநாட்டில் உள்ளவர்களில் யார், யார் எவ்வளவு பணம் புலிகளுக்கு கொடுத்தார்கள் என்ற விபரம், நீங்கள் புலிகளுக்கு கொடுத்த விண்ணப்ப பத்திரங்கள் உங்கள் கையெழுத்துடன் உள்ளது. இவற்றை நீங்களே எமக்கு தந்துள்ளீர்கள். இவையாவும் காஸ்ரோவின் அலுவலகம் முழுவதுமாக முழுமையாக எம்மிடம் உள்ளது’ என்றும் ‘அந்த அலுவலகம் சேதப்படுத்தப்படாமலே எம்மிடம் உள்ளது’ என்றும் கூறினார். இந்த விடயங்கள் யாவும் அனைவருக்கும் முன்பாகவே சொல்லப்பட்டது.

தேசம்நெற்: மக்கள் சுயமாக கை ஏந்தாத வாழ்வு வேணும் என்கிறார் இதற்கான வளங்களை எங்கிருந்து எதிர்பார்க்கிறார்?

சார்ள்ஸ்: அதை வெளிநாட்டிலுள்ள புலிகளிடமிருந்தும் பல பொது நிறுவனங்களிடமிருந்தம் எதிர்பார்க்கிறார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு

தேசம்நெற்: நீங்கள் கேபி யைச் சந்தித்து வந்த பின்பு தமிழர்கள் அரசியல் தீர்வை நோக்கிப் போகக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

சார்ள்ஸ்: அரசியல் தீர்வுக்கான சிறு அசைவைக்கூட முன்னெடுக்க நாட்டில் யாரும் இல்லை. ஒரு உண்ணாவிரத்ததை கூட முன்னெடுக்க முடியவில்லை. முன்னெடுக்க ஆளில்லை. இதற்காக கூட்டிணைவாக வேலை செய்தல் அமைப்புக்களையும் மக்களையும் இணைத்த அரசியல் தீர்வுக்காக செயற்ப்படவில்லை, யாரும் செய்ய தயாரில்லை, எம்மிடம் சக்தியுமில்லை என்ற உணர்வு வளர்ந்துள்ளது. சரி ஒரு பொதுக்கூட்டத்தை இந்த தமிழரின் உரிமைப் பிரச்சினை பற்றிப் பேச ஒரு முன்னெடுப்புக்கூட இல்லையே!

நாங்கள் ஒரு ஜனநாயக கலாச்சாரத்தை இனிமேல்த்தான் உருவாக்க வேண்டும். எமது உரிமைப் போராட்டத்திற்காக செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய கலாச்சாரத்தை தொடக்க வேண்டும். எமது தரப்பினர் எப்போதும் தம்மை இரண்டாம் தர பிரஜைகளாகவே நினைக்கிறார்கள். அதனை நினைத்தே மற்றவர்களிடமும் பேசவும் செய்கிறார்கள்.

நாம் அங்கு இருக்கும்போது யாரும் விட்டுக்கொடுத்து பேசவில்லை. எமது பங்கிற்கு நாமும் பேசுகிறோம். ஆனால் எல்லாவற்றிக்கும் அவர்களிடம் பதில் உண்டு. எல்லா இராணுவ அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள். பதில் அளிக்கிறார்கள். அவர்களிடம் பலமான கருத்து ஒருமிப்பு உண்டு.

நாங்கள் பேசும்போது நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன்தான் பேச வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.

தேசம்நெற்: 2004ல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சென்றிருந்தீர்கள் பின்னர் இப்போது போயுள்ளீர்கள். புலம்பெயர்நாடுகளில் உள்ள ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பற்றியும் உங்களுக்கு தெரியும். இப்போதுள்ள நிலை பற்றி உங்கள் கருத்து என்ன? அன்றும் இன்றும் உள்ள அரசியல், சமூக மாற்றங்கள் என்ன?

One_Nation_One_Countryசார்ள்ஸ்: இலங்கையில் நாங்கள் இப்போது போய் வேலை செய்யலாம். வேலை செய்ய வேணும் என்ற விருப்பத்தை வளர்த்துள்ளது. ஜனநாயகம் மீண்டும் உருவாகியள்ளது. புனரமைப்பு, reconciliation தமிழர்களிடையே நடைபெற வேண்டும். தமிழர்க்குள்ளேயே அதிகமான பிரிவுகள், பிளவுகள், ஒற்றுமையின்மை உள்ளது. இப்போதுள்ள அவல நிலையில் நாம் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கதைக்க முடியாத நிலையே உள்ளது. மனித உரிமைகள் விடயத்தில் சேர்ந்து வேலை செய்தாலேயே சமூகப் புனருத்தாருணம், reconciliation எம்மிடையே வளரும்.

ஓற்றுமை வேணும், ஒற்றுமை வேணும் என்று சொல்லிக்கொண்டே இருக்காமல் reconciliation, தமிழருக்கான புனருத்தாருண வேலைகளை செய்வதாலேயே இந்த ஒற்றுமையை வளர்க்க முடியும்.

தேசம்நெற்: இலங்கையில் வேலை செய்யலாம் என்பது தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் சுயமாகவா? அல்லது அரசுடன் இணைந்து இயங்குவதையா குறிப்பிடுகின்றீர்கள்?

சார்ள்ஸ்: சிவில் சொஸைட்டி சுயமாக வேலை செய்ய வேணும். அது தன்பாட்டில் இயங்குவது அவசியம். இந்த சிவில் சமூகம் வெறுமனையாக இருப்பது தெரிகிறது. சுயமாக இயங்க ஒத்தாசைகள் வழங்கப்படல் வேண்டும். அப்படி வழங்கும்போது அது அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தொடர்பை ஏற்ப்படுத்தும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காகவே உள்ளனர். அவர்களும் இணைந்து வேலை செய்ய முடியும்.

அதைவிட தமக்கு என்று ஒன்றுமே இல்லை என்று சொல்லுகின்ற மக்களுக்கு நாம் உதவிகளும் வேலைகளும் செய்யாவிட்டால் அது நாம் அந்த மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும். இப்படி உதவி இந்த மக்களுக்கு செய்யாவிட்டால் சமூகநீதி என்பதே இல்லாமல் போய்விடும்.

முன்னாள் போராளிகளுடன் மக்களுடன் சந்திப்பு

தேசம்நெற்: ‘கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மக்களையும் சந்திக்க நடவடிக்கை எடுத்தோம்’ என்று நீங்கள் பிபிசி தமிழோசையில் சொல்லுகிறீர்கள். ஆனால் அருட்குமார் மக்களை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்.

சார்ள்ஸ்: எமக்கு ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திவிட வேண்டும். அவர்கள் எங்களுடன் வந்தாலும் அவர்களையும் மீறி தனிப்பட மக்களுடன் போராளிகளுடன் பேசினோம். அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்துகொண்டோம்.

முகாம்களுக்கு போகும்போது அவர்களின் நிகழ்ச்சிகள் நோக்கங்கள் வேறு. களியாட்டங்கள் காட்ட வேணும் என்றதும் அதனுடன் ஒரு கூட்டம் நின்றுவிடும். நான் அதைவிட்டு விலகிப்போய் எமது மக்களுடன் பேசியுள்ளேன். அங்கிருந்த புலிகளின் போராளிகளும் தோளில் கைபோட்டுக் கூட்டிச்சென்றனர். என்னுடன் பேசினார்கள்.

அவர்களுடைய கதைகளைக் கேட்கும் போது இதயத்தில் வலித்தது. ‘நாங்கள் இங்கே சிரிக்கிறோம் ஆனால் மனதுக்குள்ளே அழுகின்றோம். எங்கள் குடும்பங்களை போராட்ட காலத்திலும் கைவிட்டுவிட்டோம். இப்பவும் அவர்கள் எங்களால் கஸ்டப்படுகிறார்கள்.’ என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். ‘தாய், சகோதரம், மனைவி பிள்ளைகள் எங்களைப் பார்க்க வரமுடியும். அப்படி வந்து பார்க்க பணம் இல்லாமல் இருக்கிறார்கள்’ என்றும் அவர்கள் தங்கள் கஸ்ட நிலையை எடுத்துக் கூறினர்.

சிவில் அமைப்புகள் இல்லை. இப்படியான பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகள் இல்லை. யாரும் செயற்பட முன்வருவதும் இல்லை.

தேசம்நெற்: முகாமில் இருந்த போராளிகளுக்கு கேபி ஜ தெரியுமா?

சார்ள்ஸ்: அரசாங்கம் எதிர்பார்த்தது பொடியன்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று. ஆனால் போராளிகளுக்கு யார் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. வந்தவர்களைக் கூட தனிப்பட யார் யார் என்றும் தெரியும். கேபி ஜ நன்றாகவே தெரிந்துள்ளார்கள்.

தேசம்நெற்: புலிப் போராளிகள் வேறு என்ன பற்றிப் பேசுகிறார்கள்?

சார்ள்ஸ்: தங்கள் குடும்பம் தங்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதே அவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு தொடர்பு கொள்ள வசதிகள் இல்லை.

நாம் இதுபற்றி இராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களின் வேண்டுகோளை எழுத்தில் கேட்டார்கள். அதை உடனடியாக மேலிடத்திற்கு அனுப்பினார்கள். உடனேயே தொலைபேசி இணைப்புக் கொடுக்க அனுமதி கிடைத்தது. இந்த தொலைபேசி இணைப்பு இரு நாட்களுக்குள் வழங்கப்பட்டது. இப்படி இந்த போனை போட ஏன் ஒரு வருடம் எடுத்தது. இந்த போராளிகளைப் போய் பார்த்து அவர்களின் குறைகளை கேட்டறிய அவர்களது பிரச்சினைகளை கேட்க ஆளில்லை. இராணுவத்திடம் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ள முடியாமலுள்ளது.

இன்னும் இந்த போராளிகள் இயக்கத்தில் இருந்தது போல் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போல் இருக்கின்றார்கள். ஒரு அமைப்பாக ஒன்றுமில்லை. எல்லாமே யாரோ சொல்லுவார்கள், செய்வார்கள் என்ற மனப்பான்மையுடனும் உள்ளனர். அமைப்பாக செயற்பட அவர்களுக்கு தெரியாது. புலிகள் இப்படியாக செயற்பட அவர்களை பழக்கிக் கொள்ளவில்லை

தேசம்நெற்: வரணியில் மக்களை சந்தித்ததாக சொன்னீர்களே?

சார்ள்ஸ்: இராணுவம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் மக்களிடம் சுய முயற்சியில்லை. கோழி வளர்த்தல், ஆடு, மாடுகள் வளர்த்தல் போன்ற சிறு விடயங்கள் கூட இல்லை. தோட்டம் செய்யக் கூடிய இடங்களில் கூட வீட்டில் சிறு தோட்டங்கள் கூட போடுவதை இவர்களிடம் அவதானிக்க முடியவில்லை. அவர்களிடம் பேசியதில் நான் அவதானித்தது எல்லாம் அவர்கள் எல்லாமே யாரோ கொண்டுவந்து தருவார்கள் அல்லது வரும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் நிறையவே உண்டு. இதில் பாரிய தவறு இருக்கிறது என்றே தெரிகிறது. காரணம் காலப்போக்கில் இவர்கள் தமக்கு என எதையும் செய்து கொள்ளமாட்டார்கள் என்றே கருதுகிறேன். இது ஆபத்தானது. பின்னர் இவர்கள் வெறுமையையே காண்பர்கள். இதனால் விரக்தியடையும் நிலைவரலாம்.

இராணுவம் மக்களை வென்றெடுத்தல் என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதற்காக நிறைய பணம் செலவிடுகிறார்கள். இராணுவத்தினர் அரச அலுவலர்கள் அதிகாரிகள் எல்லோரும் ஒரேமாதிரியாகவே பேசுகிறார்கள். எம்முடன் பேசுவதிலிருந்து இவர்கள் எல்லோரும் பெரிய திட்டத்துடன் இணைந்தே செயற்படுகிறார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

தமிழ் அமைப்புகள் தொடர்பாக

தேசம்நெற்: பிற்காலத்தில் ரெலோ – புலிகள் ஒன்று சேர உங்களுக்கும் கேபி க்கும் அல்லது ரெலோவுக்கும் கேபிக்கும் இருந்த உறவுகள் காரணமாக இருந்ததா?

சார்ள்ஸ்: இது நீங்கள் ரிஎன்ஏ உருவாகும் காலங்களைப் பற்றி பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். ரெலோ புலிகளின் இணைவுக்கு அதிகமாக சாதிரீதியான உறவுகளே காரணமாக இருந்ததே தவிர வேறு ஏதும் கொள்கை அடிப்படையல்ல.

தேசம்நெற்: ரிஎன்ஏ, ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய அமைப்புகள் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அறிந்தீர்கள்?

Charles_Antonythasசார்ள்ஸ்: நான் நினைக்கிறேன் அவர்கள் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவில்லை போலும். தற்போதுள்ள காலகட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை பல எம்பிக்கள் விளங்கிக் கொள்ளவில்லைப் போல் தெரிகிறது.

சம்பந்தர் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பங்கு கொள்ளாதவர். செல்வநாயகத்தையும் அவரது முடிவையும் பலமுறை எதிர்த்து சவால்விட்டவர், சமஸ்டி ஆட்சி பற்றி பேச சம்பந்தருக்கு ஒரு தகுதி உண்டு. இதற்கான பேச்சை தொடரும் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதற்கான முன்னெடுப்பை அவதானிக்க முடியவில்லை. ஆனால் இந்த தலைமையை வைத்துதான் செயற்பட வேண்டும்.

தேசிய விடுதலையும் பொருளாதார விடுதலையேதான். அந்த பொருளாதார விடுதலையைப் பற்றி அறிவு இல்லாமலே தான் எமது போராட்டவாதிகள் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

தேசம்நெற்: மற்றைய அமைப்புக்கள், குறிப்பாக ரிஎன்ஏ யின் வேலைப்பாடுகள் இந்த மக்களை நோக்கி என்ன செய்கிறார்கள்?

சார்ள்ஸ்: கேபி யாரையும் எதையும் விட்டுவிட்டு வந்து செயற்படும்படி கேட்கவில்லை. அபிவிருத்தி மனிதநேயப் பணிகள் என்பன தமிழர்களிடையே செய்யப்படவில்லை. இதைச்செய்ய எல்லோரும் முன்வர வேண்டும் என்பதும் இந்த வேலைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதையே கேபி கூறிக்கொண்டார்.

கேபி ஒருமுறை சொன்னார் தேசியம் தேசியம் என்று சொல்பவர்கள் மற்றவனிடம் போய் பிச்சை கேட்பதையே தேசியம் என்கிறார்கள் என்றார்.

தேசம்நெற்: நாட்டிலுள்ள ரிஎன்ஏ என்ன சொல்கிறார்கள்?

சார்ள்ஸ்: இரண்டு பக்க விமர்சனம் உண்டு. ரிஎன்ஏ தங்களை பார்க்க வருவதில்லை என்பது போராளிகளின் கருத்து. அரசு அனுமதிப்பதில்லை என்பதற்காக ரிஎன்ஏ என்ன முயற்சிகளை போராட்டத்தை எடுத்தது என்பது அவர்களின் கேள்வியாகவும் உள்ளது. உண்மையிலேயே  ரிஎன்எ யும் ஏதும் செய்ததாக இல்லை. ஆனால் ரிஎன்ஏ தங்களை அரசு அனுமதிப்பதில்லை என்று கூறிவிட்டு இருந்து விடுகிறார்கள்.

ஆனால் முகாம்களிலும் சரி நாட்டின் தமிழர் பகுதியிலும்சரி தாங்கள் தருவதை எடுக்க வேண்டியது என்பது போன்ற நிலையையே அரசும் வைத்திருக்கிறது.

தேசம்நெற்: டக்ளஸ் செய்யும் முயற்சி பற்றி கேபியின் கருத்து என்ன? அரசியல் தீர்வு பற்றி கேபியின் கருத்து என்ன?

சார்ள்ஸ்: மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து வேலை செய்வதே அவசியம் என்கிறார். ரிஎன்ஏ ஜ பலவீனப்படுத்தக் கூடாது என்பது கேபி யின் கருத்து.

தேசம்நெற்: ரிஎன்ஏ மற்றும் இந்திய தமிழக அரசியல் தலைவர்களை கேபி கேவலமாக விமர்சித்துள்ளதாக, டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார், குற்றம்சாட்டி உள்ளார்.

சாள்ஸ்: இது  வாழ்வா சாவா நிலைப்பாடு. இதில் முட்டாள்தனமான அரசியல் செய்ய முடியாது.

கேபி க்கும் அரசுக்கும் உள்ள உறவு

தேசம்நெற்: 2006 இல் இருந்தே கேபி க்கு அரசுடன் தொடர்பு உண்டென்று கூறப்படுகின்றதே?

சார்ள்ஸ்: இவ்விடயம் கதைக்கப்பட்டபோது அருட்குமார் அங்கு இருக்கவில்லை. பின்னேரம் விமல் இவருக்கு  இந்தக் கதையைச் சொல்லியுள்ளார். அன்று பின்னேரம் கேபி யை சந்திக்கும் போதும் இதை கேபியிடம் கேட்டு விசாரித்த அறிந்து கொள்ளவில்லை. ஆனால் பிறகு அதை தனது கருத்தாக பேட்டியில் சொல்லுகிறார் அருட்குமார்.

இதுதான் அங்கு பேசப்பட்டது.’ தாய்லாந்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட கபில ஹெந்தவிதாரண 2006ல் தாய்லாந்து போயிருக்கிறார். கேபி இன் விலாசங்களைத் தேடி எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். ஆனால் கேபியை பிடிக்க முடியவில்லை. கேபி இதை கபில ஹெந்தவிதாரணவுக்கு பகிடியாக உங்களால் என்னை பிடிக்க முடியவில்லைத்தானே என்று சொன்னார்!’

தேசம்நெற்: 2007ல் கேபி பிடிபட்டதாக பத்திரகை செய்தி வெளிவந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதே?

சார்ள்ஸ்: தாய்லாந்தில் கேபி யை கைது செய்ய கோட் ஒடருக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். இந்தச் செய்தியை பத்திரிகையில் போட்டிருந்தனர். இதை கேட்டு நோர்வேயிலுள்ள கேபியின் உறவினர் கேபி உடன் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் கேபிக்கு விடயம் தெரியவந்தது. அந்த இடத்தில் கேபி இருக்கவில்லையானாலும் கேபி உடனேயே இடம் மாறிவிட்டார். பின்னர் தாய்லாந்து பொலீசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியதை பத்திரிகைகள் கேபி பிடிபட்டார் என்று செய்திகளை வெளியிட்டிருந்தது. காரணம் ஏற்கனவே கோட் ஓடர் வந்துவிட்டது எல்லாம் ஒன்றாக தவறாக செய்திகள் பத்திரிகைகளில் கேபி பிடிபட்டார் என செய்தியாகியது. இதை நான் கேபியுடன் பஸ்சில் வரும்போது பக்கத்திலிருந்து கேட்டு வந்தேன்.

தேசம்நெற்: விடுதலைப் புலிகளின் வரலாற்றை கேபி இல்லாமல் எழுத முடியாது. இயக்கத்தில் இரத்தமும் சதையுமாக இருந்தவர். எப்படி மிகக் குறுகிய காலத்தில் இப்படியான மாற்றத்தை மிகச்சடுதியாக மேற்கொண்டார்?

சார்ள்ஸ்: கேபி அரசாங்கத்துடன் வேலை செய்ய வேணும் என்பதை எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் போர் முடிந்தபிறகு அவருடைய கருத்து ‘மக்களுக்கு மக்களிடம் பெற்ற பணத்தினால் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்கள் கை ஏந்தும் நிலையை மாற்ற வேண்டும்’ என்ற நிலைப்பாடாகவே இருந்தது. ‘மக்களை கைதிகளாக விடமுடியாது என்றும் அரசுடன் தொடர்புபட்டு வேலை செய்தாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற கருத்தும் கேபி யிடம் யுத்தம் முடிந்த கையோடு இருந்தது.

அரசியல் தீர்வு முக்கியம். ஆனால் மக்கள் மிகவும் கஸ்டப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்வு முக்கியம் என்ற கருத்து இருந்தது. அரசியலுக்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.

தேசம்நெற்: கேபி யை மிகுந்த வசதிகளுடன் கூடிய ‘விசும்பாயா’ மாளிகையில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் கேபி ஒரு கைதியல்ல இலங்கை அரசின் விருந்தினர் என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதாகவே உள்ளது?

சார்ள்ஸ்: எனக்கு எங்கே கேபியை வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. ஆனால் சந்திக்க வரும்போது வேறு இடத்திற்கு கூட்டி வருகிறார்கள்.

பேசிக்கொண்டு இருக்கும் போது ஓரிடத்தில் கேபி சொன்னார், “எனக்கு காலைத் தொங்கப்போட்டு படுத்துப்படுத்து கால் சரியான உழைவும் வீக்கமும்’ என்று. ஒரு காவலாளியைக்காட்டி ‘இவர் எதோ ஒரு வளையம் ஒன்றை போட்டுவிட்டார். காலை உயர்த்தி வைத்து நிம்மதியாக படுக்கக் கூடியதாக இருந்தது’ என்றார். அந்தக் கதைகளைப் பார்த்தால் கட்டில் கூட ஒழுங்காக இல்லை என்று தான் நான் எதிர்பார்க்கிறேன்.

தேசம்நெற்: கேபி க்கும் அரசுக்கும் முன்னரே உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் கேபி யே பிரபாகரனையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தார் என்றும் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Pirabakaran Vசார்ள்ஸ்: இன்று வரையில் கேபி பிரபாகரனை விமர்சித்ததை நான் காணமுடியவில்லை. பிரபாகரனில் தவறு கண்டதாகவும் நான் பார்க்கவில்லை. பிரபாகரன் பற்றி பக்தி மதிப்பு எப்பவும் உள்ளது. தான் படும் வேதனை மற்றவர்களுக்கு புரியாது என்பதை அடிக்கடி கூறுவார்.

கேபி சொன்னார், ‘பிரபாகரன் ஒரு சிறு சந்தேகம் இருந்தாலே அவர்களுடன் பழகமாட்டார். அவர்களைக் கிட்டவும் வைத்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒருவர் என்னை தூக்கி வைக்கிறார் என்றால் அதற்கு ஒருகாரணம் இருக்க வேண்டும். அவர் தூக்கிவைக்காமல் நான் இந்த இடத்தில் இருக்கவில்லை” என்றும் சொன்னார்.

கேபி பற்றி சார்ள்ஸ் அந்தோனிதாஸ்

Pirabaharan_Weddingதேசம்நெற்: கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சார்ள்ஸ்: அவர் பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ மட்டுமல்ல யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார் என்ற அபிப்பிராயமே எனக்கு உள்ளது.

தேசம்நெற்: கேபியினுடைய தற்போதைய நிலைப்பாடு சண்டையின் முடிவின் காரணமாக எழுந்த நிலைப்பாடா? அல்லது தான் கைது செய்யப்பட்டதனால் ஏற்பட்ட நிலைப்பாடா? அதாவது அரசுடன் ஒரு உள்நாட்டு யுத்தத்தை மேற்கொள்ள ஆயுத விநியோகத்தை மேற்கொண்டவர் அரசுடன் சேர்ந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு எப்போது வந்தார்?

சார்ள்ஸ்: அவர் மலேசியாவில் கைது செய்யப்பட முன்பே இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார். போராட்டம் முடிந்து புலிகளின் அழிவின் பின்பு உள்ள சூழலே அவரை அதற்கு நிர்ப்பந்தித்து இருக்கலாம். அவர் பொருளாதார விடுதலையை நோக்குகிறார்.

தேசம்நெற்: கேபி தனது சுயநல நோக்கில் செயற்ப்படவில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?

சார்ள்ஸ்: கேபி சுயநலம் அற்றவர். நாங்கள் மலேசியாவில் ஒரு சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது மிகவும் குறைந்த விலையான உணவையே எடுப்பார். நாங்கள் கொண்டுபோய் கொடுத்த நல்ல சேட் உடுப்புகளை தனக்கு தெரிந்தவர்களுக்கே கொடுத்தார். இம்முறை நான் என்ன கொண்டுவர என்று கேட்க பென்சில், பென், பேப்பர் கொண்டுவாங்கோ பிள்ளைகளுக்கு கொடுக்க என்றார்.

தேசம்நெற்: கேபியின் இன்றைய இந்த முயற்சி அரசியல் நோக்கம் அற்றது என்று நம்புகிறீர்களா?

சார்ள்ஸ்: கேபிக்கு தனிப்பட்ட திட்டங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. மக்களுக்குள்ளே வேலை செய்ய வேணும் மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனபதைவிட வேறு இருப்பதாக நான் நம்பவில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசு

தேசம்நெற்: கேபி புலிகளுக்கு இன்றும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்றோ அல்லது தாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தால் மக்கள் ஆதரவளிப்பர் என்றோ நம்புகிறாரா?

சார்ள்ஸ்: ‘இதை விட்டுவிடுங்கோ. இது எல்லாம் முடிந்த கதை’, என்பார்.

தேசம்நெற்: நாடுகடந்த தமிழீழத்தை முன்மொழிந்த அதன் உருவாக்கத்திற்கு வித்திட்ட கேபி யின் இன்றைய நிலைப்பாடு என்ன?

சார்ள்ஸ்: அது பற்றிக் கேட்கவில்லை. எந்த முயற்சியும் நாட்டுடன் சம்பந்தப்படாமல் செய்வதால் பிரயோசனம் இல்லை என்று கருதுகிறார். நாடுகடந்த அரசு நாட்டில் நடந்த அவலங்களுக்கு என்ன செய்தது என்பது என்பது அவரின் கேள்வியாகும்.

இறுதியாக …..

தேசம்நெற்: இந்த பயணத்தின் பின்பு உங்கள் நண்பர்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதாவது வந்ததா?

சார்ள்ஸ்: நாங்கள் விட்ட தவறு இனிமேல் விடக்கூடாது. தேசியவாதிகள் என்று என்னைச் சொன்னவர்கள் இப்போது தெரிந்து கொள்ளட்டும் நான் எதைச் சொல்ல விரும்புகிறேன் என்று. யாரும் என்னுடன் பகைக்கவில்லை!

தேசம்நெற்: கடந்த காலங்களில் நீங்கள் பேசிய அரசியலுக்கும் இன்றுள்ள உங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கும் முரண்பாடுகள் உள்ளதா? நீங்கள் தவறு விட்டுள்ளதாக நினைப்பது உண்டா?

சார்ள்ஸ்: பெரிய தவறுகள் விடப்பட்டு உள்ளது. ஒன்று சிங்கள மக்களுக்கு எதிராக திசைதிருப்பியது (ஆரம்பத்தில் அல்ல பின்னர்). அநுராதபுரம் படுகொலைகள் போன்றவற்றிக்கு நாங்கள் எதிராக பிரச்சாரம் செய்ய எங்களுக்கு விசரங்கள் பட்டம் சூட்டினார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நேரம் மிகவும் முனைப்பாக பலமாக எதிர்த்திருக்க வேண்டும். அந்த மக்களுக்காக குரல் கொடுத்தது போதாது இவைகளே தவறுகள் என நான் பார்க்கிறேன்.

Rajeev_J R_Indo_lanka_Accordஇலங்கை இந்திய ஒப்பந்தம் – 1987, சந்திரிகாவின் அரசியல் தீர்வு, 2002 ஒஸ்லோ உடன்படிக்கை போன்றவைகள் எல்லாம் பாரிய தவறுகள். 1987 ல் நாங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் நாம் என்ன நிலையில் இன்று இருந்திருப்போம். இது பற்றி கேபி உடன் பேச முடியவில்லை. கேபி எங்களுடன் தங்கவோ சேர்ந்து சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக கைதிகளாக இருக்கும் புலிகளில் 2000 பேர்களை நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாக அரசு விடுதலை செய்ய உடன்பட்டிருந்தது.

தவறுகளை விமர்சிக்க வேண்டும். சிலவேளை இந்த வழியால் போயிருந்திருக்க வேண்டியதில்லை என்று யோசிக்கிறேன். நாங்கள் திரும்பி பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!

Bermingham_TGTE_Incidentயூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Bermingham_TGTE_Incidentவெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும்  இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.

Bermingham_TGTE_Incidentஇத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்கு சொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.