உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,  இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் சந்திப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்தது. இருப்பினும் அது இறுதி நேரத்தில் அந்த முடிவுகாலவரையறையின்றி  ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பில் முகாமிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக்கூட்டமும் வழமை போன்றதான வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்  பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் போது “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,  இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று நேரில் உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.

வழமை போல இந்தியா தன்னுடைய சுயநலத்துக்காக இலங்கை தமிழரை பயன்படுத்தவுள்ளேன் என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. நம்மவர்களும் இந்தியா – சர்வதேசம் என வழமையான அதே கதைகளை சற்று புதிய வடிவத்தில் எமக்கு தெரிக்கப்போகிகின்றனர். அவ்வளவே தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை.

சிங்களத்தரப்பு சீனாவை ஆதரிக்கின்றது. நாம் இந்தியாவை ஆதரித்தால் இந்தியா தமிழருக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பது தான் தமிழ்தலைமைகளின் நிலைப்பாடு. பாவம் அவ்வளவு தூரம் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவால் மாகாணசபை தேர்தலை கூட நடத்த  அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இதை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்தியா – சர்வதேசம் – தமிழ்தேசியம் இவை இல்லாவிட்டால் எமது அரசியல் தலைவர்களுக்கு அரசியல் செய்ய முடியாது என்பதே என்பது தான் இன்றைய தேதியின் ஆகக்கொடுமையான உண்மை.

“கடலில் காவியம் படைப்போம் என்று கூறி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான் என்னுடைய செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் ” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“கடலில் காவியம் படைப்போம் என்று கூறி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான் என்னுடைய செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் ” – என கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பேருந்துகளையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்றிட்டம் தொடர்பில் சிலரினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையான முறையில் உருவாக்கும் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேருந்துகள் கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமுறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த 2017 ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கர் உடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேருந்துகளை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் ” என்று தெரிவித்தார்.

இலங்கையிலும் ஒன்லைன் ஊடாக மதுபான விற்பனை – நிதியமைச்சு அனுமதி !

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

 

நியமனம் கோரி 1300 ஆசிரியர்கள் facebook மூலமாக கவனயீர்ப்பு போராட்டம் !

இரண்டாம் மொழி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின் நியமனம் கோரி இன்று 16.06.2021 காலை 09 மணி முதல் சமூகவலைத்தளமான முகநூலின் ஊடாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

thumb protest5

நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்ட 1300 ஆசிரியர்களால் குறித்த விழிப்புணர்வு போராட்டம் சமூகவளைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரிய நியமனம் வேண்டி இதற்கு முன்பும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தொடர்பில் எந்தப் பலனும் கிடைக்கப்பெறாத நிலையில் இவ்வாறு ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் ஒன்றிணைந்து இன்று சமூக வலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் குறித்து பல தரப்புகளிலும் சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந் நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகள் தகுந்த தீர்மானங்களை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

“கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்தியுங்கள்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் !

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அலரி மாளிகையில் வைத்து மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

எனவே கடன்களை மீளப்பெறும் போது கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார்.

இந்தியாவிடமிருந்து நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்வசதி !

இந்தியாவிடமிருந்து நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதிகளை பெறுவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய தரப்புக்களால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரியக்கல மின்சக்தி துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த வருடத்தில் மேல்மாகாண பாடசாலை மாணவர்கள் 9 நாட்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.” – கல்வி அமைச்சு !

“உயர்தரத்துக்கு தோற்றவுள்ள 202,000 மாணவர்களுக்கு தடுப்பூசியேற்றுவதற்கு சுகாதார சேவை பிரிவினருடனான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகின்றது.” என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஏனைய மாகாணங்களில், ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளிலும், ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளிலும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மேல்மாகாண மாணவர்கள் மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆகிய 9 நாட்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸை தடுப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு 279,000 தடுப்பூசிகளும் கல்வி அமைச்சு , பரீட்சைகள் திணைக்களம், இராஜாங்க கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊழியர்களுக்கு 2000 தடுப்பூசிகளும் வழங்குவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். இதன் முதற்கட்டமாக உயர்தரத்துக்கு தோற்றவுள்ள 202,000 மாணவர்களுக்கு தடுப்பூசியேற்றுவதற்கு சுகாதார சேவை பிரிவினருடனான பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தற்போது ஒன்லைன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தொடர்புப்படுத்தும் வசதிகள் (சிக்னல்) இல்லாது தவித்து வருகின்றனர். இந்த தொடர்புப்படுத்தும் வசதிகள் இல்லாத பிரதேசங்களை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நேரடியாக தலையிட்டு, முறையான திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவொரு தொலைப்பேசி வலையமைப்பின் ஒன்றின் மூலம் 100 ரூபாவை செலுத்தி 30 ஜிகா பயிட் இணையத்தள வசதிகளை மாணவர்களுக்கு பெற்றக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்” என்றார்.

“சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும்.” – மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை !

“சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும். சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும்.

அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.

சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீன நாடு பல் சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.

அது மட்டுமல்லாமல், விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடாக சீனா பார்க்கப்படுகிறது.அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன். சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது.

சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை. ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது.

எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது. கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது.

தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும்.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசிய நாடொன்றின் சுதந்திரத்திற்கு இது மாபெரும் பங்களிப்பாகும். இந்நேரத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான பிணைப்பை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது 78 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர் டாக்டர் திரு. எஸ்.ஏ.விக்ரமசிங்க தெற்கிலிருந்து வந்தவர். டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்கவுடன் எனது பெரிய தந்தை டி.எம்.ராஜபக்ஷ மற்றும் எனது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ ஆகியோர் மிக நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்தவர்களாவர்.

அதேபோன்று நானும் எனது பெரிய தந்தை, தந்தை போன்றே திரு.எஸ்.ஏ.விக்ரமசிங்கவின் அரசியல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் என்பதை இந்நேரத்தில் நான் கூற வேண்டும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் திரு. விக்ரமசிங்க என் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி என்றும் சொல்ல வேண்டும்.

பீட்டர் கேதமன், ராஜா கொள்ளுரே சரத் முத்தெட்டுவேகம, இன்று தலைமை வகிக்கும் வீரசிங்க அவர்கள் எமக்கு நெருக்கமான அரசியல் களத்தில் இருந்தவர்கள். உலகம் மாறியுள்ளது. எமது நாடும் மாறியுள்ளது. தொழில்துறை புரட்சி மற்றும் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர், இன்று இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் உள்ளனர்.

இன்று நம்மிடம் இருப்பது அப்போது இருந்த அரசியல் கருத்துக்கள் அல்ல. ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க, கடந்த கால முற்போக்கான அரசியல் சக்திகளின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக போராடின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் எவ்வளவு மாறினாலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றது. சமத்துவம் என்ற கருத்து இன்றும் உலகில் செல்லுபடியாகும். அதற்காக மிகப்பெரிய தியாகம் செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக சமத்துவத்திற்காக எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றேன் என பிரதமர் குறிப்பிட்டார்.

“மக்களுக்கு உண்மை நிலையை கூறியே ஆக வேண்டும். எம்மிடத்தில் பணம் இல்லை. திறைசேரியிலும் பணம் இல்லை.” – அமைச்சர் உதய கம்மன்பில

“மக்களுக்கு உண்மை நிலையை கூறியே ஆக வேண்டும். எம்மிடத்தில் பணம் இல்லை. திறைசேரியிலும் பணம் இல்லை.”  என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருட்களின் விலை சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு கூட மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

மூன்று ராஜபக்சக்களே காரணம்:சீற்றத்துடன் கம்மன்பில! - www.pathivu.com

இந்நிலையில் இது தொடர்பில்  கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்ட

வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

எரிபொருள் கொள்வனவு என்பது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய கொள்வனவாகும். இதில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட மாட்டார். விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஜனாதிபதியே நியமிப்பார். மத்திய வங்கி மற்றும் திறைசேரி உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் எடுக்கும் தீர்மானமே இறுதியானது.

மேலும் நாட்டின் தற்போதுள்ள வாழ்வாதார நெருக்கடியில் எரிபொருள் விலை உயர்வு தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே. வாழ்வாதார குழுவின் போது ஆழமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

டொலருக்கான பெறுமதி அதிகரித்தால் அது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தாக்கும். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டால் அது முழுமையான வாழ்வாதாரத்தை பாதிக்காது மாறாக சிறிய அளவிலான நெருக்கடி நிலைமை மட்டுமே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தோம்.

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என விமர்சிக்கும் நபர்கள் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். வெறுமனே விமர்சனத்தை மாத்திரம் முன்வைக்க முடியாது. மக்கள் முடிந்தளவு தமது வாகனங்களை அனாவசியமாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள், அத்தியாவசிய சேவைகள் இயங்கட்டும், ஆனால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்தளவு குறையுங்கள்.

பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியில் நாம் உள்ளோம். ஆகவே நேரடியாக மக்களுக்கு உண்மையை நான் கூறி நிலைமையை தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். அதுமட்டுமல்ல கச்சாய் எண்ணெய் வாங்க எம்மிடத்தில் பணம் இல்லை, தவனைக் கொடுப்பனவுகளில் நாம் இன்றும் பெற்றுக்கொண்டுள்ளோம். திறைசேரியிலும் பணம் இல்லை. இதுவே எமது உண்மையான நிலைமையாகும் என்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து எதிரொலி – பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டும் மீனவர்கள் !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது. குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் விலங்குகளின் சடலங்கள் கரையொதுங்கி இருந்தமையை அவதானிக்க கூடியதாய் இருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.