உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

09 மாதக்கைக்குழந்தையை மிருகத்தனமாக தாக்கிய தாய் – விரைந்து செயற்பட்ட யாழ்.பொலிஸார்! 

தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூர மாகத் தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 9 மாத ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 24 வயதான பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பொலிஸார் குழந்தையைப் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த பெண் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் இந்தியா – அமைச்சரவை அனுமதி !

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – சுகாதார அமைச்சு 

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைவு !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இனைந்து கொண்டுள்ள நிலையில் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இனைந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்,  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை பாடசாலை மாணவியின் கோரிக்கையை உடனே தீர்த்து வைத்த ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ச! 

திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு கிட்டியுள்ளது.

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் (கிவுலேகடவல வித்தியாலயத்தில் ) இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது

“கிழக்கு மாகாண சபையை பொதுஜனபெரமுன கைப்பற்றும். சாணக்கியன் முதலமைச்சர் ஆவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்” – பரமசிவம் சந்திரகுமார்

“கிழக்கு மாகாண சபையை பொதுஜனபெரமுன கைப்பற்றும். சாணக்கியன் முதலமைச்சர் ஆவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(28.02.2021) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும், அது நடைபெறாது. கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றது.
கொவிட் -19 கொரோனோ தொற்றுக்காலத்தில் மக்களுக்கு அரிசி வழங்கியும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு அங்கிகள் வழங்கியும், மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியும், நாடாளுமன்றம் சென்றது போல் இம்முறை சாணாக்கியனால் முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டல்கள், ஆலோசனையின் மூலம் கிழக்கு மாகாணசபையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றும்.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும், அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிஸ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக்கொண்டது. இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். எமது ஆளும்கட்சியில் இரண்டுபேரை நாடாளுமன்றம் அனுப்பியும், அமைச்சராக்கியும் தமிழர்களின் கைகளுக்கு இழந்த அபிவிருத்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தை தமிழர்களுக்கான பல பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என நம்பிய தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையோ, அபிவிருத்தியையோ இதுவரையும் தீர்த்துக் கொடுக்கப்படவில்லை. மாறாக பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டத்தினால் மீண்டும் சிறுபான்மையின முஸ்ஸிம் மக்கள் நன்மை அடைந்தார்களே தவிர தமிழ் மக்கள் இதுவரையும் நன்மையடையவில்லை. இப்போராட்டத்தில் ஈடுபட்டு தான் வெற்றியடைந்துள்ளதாக நம்பிக்கை கொண்டுள்ள சாணாக்கியனால் இம்முறை மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முதலமைச்சராக வரமுடியாது. காலம் காலமாக தமிழ்மக்களின் பிரச்சனையை பிச்சைக்காரனின் புண்ணாக பார்த்தைதவிர தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் வாக்குவங்கிகளை தமிழ்த்தலைமைகளால் சூறையாடி தாங்கள் மட்டும் வாழனும் எனும் நோக்கில் செயற்படுகின்றது. எமது அரசாங்கத்தினால் சுபீட்சம்மிக்க எதிர்கால அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.
மாகாணசபைக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தின் சகல அதிகாரங்களையும் வழங்கி மாகாணசபை முறைமை சிறப்பாக கொண்டு செல்வதற்கு எமது அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டதோடு தென்னிலங்கை சிங்கள மக்களும் சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தினால் மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிளவுபடும் என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் போராட்டத்தினால் தென்னிலங்கை மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தால் தீர்த்து வைக்க முடியுமேதவிர ஜெனிவால் ஒன்று நடக்காது. ஜெனிவாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் விதைத்த நெல்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

17 வயது சிறுவன் தாக்கி 07 வயது சிறுவன் பலி – தாக்கிய சிறுவன் தலைமறைவு – கிளிநொச்சியில் சம்பவம்! 

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்துவந்த குடும்பத்தில், சில நாட்களுக்கு முன்னர் தந்தை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

தன்னுடைய சகோதரனின் வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு தந்தையார் வெளியேறியதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், குறித்த வீட்டில் மூத்த மற்றும் இளைய பிள்ளை ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நான்கு வயதுடைய இளைய மகன் படுகாயமடைந்ததுடன், கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த 17 வயதுடைய சிறுவன், குறித்த சிறார்களில் இரண்டாவது பிள்ளையாகிய ஏழு வயதுச் சிறுவனான அப்துல் ரஹ்மான் தயா என்பவரை குறித்த சிறுவர்களின் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், 17 வயதுச் சிறுவன் மட்டும் திரும்பிவந்த நிலையில், ஏழு வயதுச் சிறுவனைத் தேடிச் சென்றபோது, அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இந்நிலையில், உடனடியாக சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார், சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியதுடன், இரத்தம் உறைந்தே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட 17 வயதுச் சிறுவன் தலைமறைவாகியுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் தேடி வருவதாகத் தெரியவருகிறது.

“யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது” – சிவஞானம் ஸ்ரீதரன்

“யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில் நேற்று (28.02.2021) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“இன்றைய காலகட்டம் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு அஞ்சவில்லை எனக்கூறிய அரசாங்கம் சர்வதேச அழுத்தத்திற்கு அச்சமடைந்துள்ளதை நாம் இப்போது உணரக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கத் தயாரென்கிறார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தற்போது இந்தியாவிடம் மன்றாடுவதுடன் நடுநிலை வகிப்பது முறையல்ல என்று கூறுகிறார்.

முஸ்லிம்களின் ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்துவந்த அரசாங்கம் தற்போது அனுமதித்திருக்கிறது. இவையெல்லாம் எப்படி, எதனால் நடக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்த அரசாங்கம் இவ்வாறு தனது சுருதியை மாற்றத் தொடங்கியிருப்பதற்கான பிரதான காரணம் இலங்கை அரசாங்கம்,  அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தவர்கள் தமிழர்கள். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர்கூட இலங்கை அரசாங்கமானது, அரச இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனவழிப்பையே மேற்கொள்கிறது. சட்டங்கள் மூலம் தமிழர்களின் பேச்சுச் சுதந்திரத்தைக்கூட கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்நிலையில், இவ்வாறான இலக்கியங்கள் வெளிவருவது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாக கவிதைகள் உள்ளடங்கிய இந்தச் சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சஞ்சிகையின் கவிதைகளில் ஜெனீவா விடயங்கள் தொடர்பாகவும் இருக்கிறது.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு கவிஞர்களின் பங்கும் மிக அளப்பரியது. ஈழத்தின் கவிச்சக்கரவர்த்தி புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பல கவிஞர்களும் தங்களின் கவி வரிகள் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தை வெகுஜனப் போராட்டமாக மாற்றி வலுச்சேர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரித்தானிய காலணித்துவத்தின் கீழ் இந்தியா இருந்தபோது மகாகவி பாரதியார் கவிதைகள் ஊடாக விடுதலை வேட்கையை உணர்த்தியவர். பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி மற்றும் கும்மிப்பாடல் போன்றவை அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய நாடுகள் சபையானது தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்கும்” – இரா.துரைரெத்தினம் நம்பிிக்கை !

இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்குமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தீவினுள் தமிழ் பேசும் மக்கள் பரந்துபட்டளவில் வாழ்ந்தாலும் வடகிழக்கிலேயே பெரும்பான்மையாக தமிழர்கள் வரலாற்று அடிச்சுவடுகளுடனும், ஒரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்துடனும் வாழ்ந்து வருவது வரலாறாகும்.

மாறிமாறி ஆட்சி புரிகின்ற சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளுகின்ற விரோதமான செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை. கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விரோதமான செயற்பாடுகள் ஊடாக ஓரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்தை இல்லாமலாக்குகின்ற செயல் திட்டமே.

இனவாத அரசால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கும், அபிவிருத்தி தொடர்பான புறக்கணிப்புக்களுக்கும், மனித உரிமை மீறல்கள்,உயிருக்கு உத்தர வாதமில்லாத சம்பவங்கள் அனைத்திற்கும் இலங்கை அரசு எந்தத் பதில்களும் கூறாத நிலையில் தமிழர்களாகிய நாங்கள் கடந்த காலச் சம்பவங்களுக்கும், எதிர் காலத்தில் ஒரு சம்பவமும் நிகழாமல் இருப்பதற்கும்,

குறிப்பாக, அதிகாரப்பங்கீடு மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, காணாமல் போனோர் விடயம், கைதிகளின்விடுதலை, பௌத்த மயமாக்கல், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், காணி சுவீகரிப்பு போன்ற மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சமாதானமாக வாழ்வதற்கும்,

சர்வதேசத்தை நாட வைத்தது இலங்கை இனவாத அரசே. சர்வதேசம் தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு ஜெனிவாவின் கூட்டத்தொடர் ஒரு நியாயமான முடிவுகளை எடுக்கும் என்னும் நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு செயற்படுவது மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும், அயல் நாடான இந்தியாவையும், இலங்கையிலுள்ள தமிழர்களையும் வெறுத்துக் கொண்டு எந்தளவிற்கு நியாயமான ஆட்சியைப் கொண்டு செல்ல முடியுமென உலகத்தில் வாழ்கின்ற ஓட்டுமொத்த தமிழர்களும் கேள்வி கேட்குமளவிற்கு அரசை சந்தேகிக்கின்றனர்.

அருகிலுள்ள இந்தியாவையும் வெறுத்து இராஜதந்திரமான செயற்பாடுகளையும் வெறுக்குமளளவிற்கு நடந்து கொள்கின்றன.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நியாயமின்றி வாழமுடியாது என்னும் முடிவிற்கே வந்துள்ளனர்.

சமூகம் விழிப்படைந்து உள்நாடுகளிலும், வெளி நாடுகளிலும் நடாத்தப்படுகின்ற வெகுஜன ரீதியான போராட்டங்களுக்கு ஒவ்வொரு தமிழனும் உடந்தையாகவே இருக்க வேண்டும், இருப்பார்கள்.

உயிரைக் கூட விடுதலைக்காக துச்சமாக மதித்த எமது சமூகம் ஒரு படி இறங்கி அகிம்சை ரீதியான ஒரு வெகுஜன போராட்டத்தை தமிழ் மக்களின் எழுச்சியுடன் அணி திரள்வது அனைவரினதும் ஆரோக்கியமானதே. இதில் நாங்கள் பார்வையாளர்களாக இருந்து விடாமல் பங்காளர்களாக மாற வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

“யாழ்.உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை” – பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு !

“யாழ்ப்பாண மாவட்ட  உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை” என பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுடன், இணைபங்குதாரராக “சேர்ச் போர் கொமன் கிறவுண்ட்”  நிறுவனம் ஆகியன இணைந்து “கற்றல் மற்றும் தலைமத்துவத்தில் பெண்கள்” எனும் நிகழ்ச்சி திட்டம் மற்றும் “அரசியலில் பெண்களை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்சி திட்டங்களின் கீழ் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான கழகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
அதன் போதே பெருமளவான பெண் உறுப்பினர்கள் தமக்கு சபைகளில் உரிய அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,  “உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களான தமக்கு சபைகளில் கருத்துக்களை முன்வைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுவது போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சபையின் வேலை திட்டங்களின் போது , தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் , வட்டாரத்தில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தாம் நேரடி உறுப்பினர்கள் என கூறி தம்மை புறக்கணித்து வட்டாரங்களில் வேலை திட்டங்களை முன்னெடுப்பதாகவும், பல சமயங்களில் வட்டாரங்களில் தாம் முன்மொழிந்த வேலை திட்டங்களை கூட இவர்கள் நேரடியாக சென்று எம்மை
புறக்கணித்து வேலை திட்டங்களை முன்னெடுத்து அதற்கு உரிமை கோருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இவை தொடர்பில் தவிசாளர்களுக்கோ , எமது கட்சி தலைமைகளுக்கோ தெரியப்படுத்தினால் , அவர்கள் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதில்லை” எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.