உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கொரோனாத்தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் உடலை எரிப்பதை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள்” – சஜித்பிரேமதாஸவிற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி  பதிலடி !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று(03.11.2020) பாராளுமன்றம் கூடியிருந்தது. இன்றைய கலந்துரையாடல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போகும்  முஸ்லீம்களின் உடலை எரிப்பது தொடர்பான விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ “கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களை தமது மத சம்பிரதாயங்களின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை கொரோனா விடயத்திலும் காண்பிப்பதாகவும்”  முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பதிலை நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

இதன்போது பதில் கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி,

கொவிட் -19 என்பது மிகவும் அச்சுறுத்தலான நோயாகும். இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் இது அச்சுறுத்தலான நோயாகவே உள்ளது.

நாம் அனைவரும் இந்த நோய்க்கு முகம் கொடுத்து வருகின்றோம். கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்களிடையே சில முரண்பாடுகள் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். ஆனால் இதனை அரசியலாக்குவது தகுதியான செயற்பாடாக அமையாது.

முஸ்லிம் மக்களின் வேண்டுகோள் குறித்து வைத்தியர்களிடம் மீண்டும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். ஆறுமாத காலத்திற்கு முன்னரே நாம் இந்த வேண்டுகோளை விடுத்தோம்.

எனினும் விஞ்ஞான அல்லது மருத்துவ ரீதியில் இது தாக்கத்தை செலுத்தலாம் என வைத்தியர்களிடம் அச்சம் நிலவியது. அது  என்னவென்றால் தகனம் செய்வதில் முஸ்லிம் சமூகம் கேட்பதை போல நடவடிக்கை எடுத்தால் அது வைரஸ் பரவலுக்கு ஏதுவாக அமையலாம் என்ற அச்சம் நிலவியது.

எனினும் ஆறுமாத காலத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக வைத்தியர்கள் எமக்கு கூறினர். இப்போது மீண்டும் நாம் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

எனவே இதனை அரசியல் சுயநலன்களுக்காக கையாள வேண்டாம். மனிதாபிமான ரீதியில் இதனை கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவாதங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்குமு் போது “கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் எனவும், தான் உயிரிழந்தால்கூட தன்னையும் எரிக்கும் நிலை ஏற்படும் எனவும், ஆகவே இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

“இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்து அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுகிறது” – அரசின் மீது சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்து, அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கடந்த ஜனவரி மாதமே எச்சரித்திருந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறும் கோரினோம். ஆனால், அரசாங்கம் இவை அனைத்தையும் நிராகரித்தன.

இதனால், இன்று நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவை வைத்து நாட்டில் பிரிவினைவாதத்தையே அரசாங்கம் தூண்டுகிறது. இஸ்லாம் மக்களை இலக்கு வைத்தே தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாவை பரப்புவதே முஸ்லிம் மக்கள்தான் என ஒரு பிரசாரம் கூறப்பட்டது. அத்தோடு அவர்களின் மார்க்கத்துக்கு முரணாக, இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இது அடிப்படைவாத நடவடிக்கையாகும். உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு சடலங்களை எரிக்கவில்லை.

இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பரப்புவதில் தான் இந்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்திலிருந்து நாட்டுக்கு ஒரு வென்டிலேட்டரைக்கூட அரசாங்கம் வாங்கவில்லை. தரமான பி.சி.ஆர். இயந்திரங்களை கொள்வனவு செய்யவில்லை.

கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கைகள் இல்லை. ஐ.சி.யு. படுக்கைகள் இல்லை. இவற்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை மட்டும் உடனடியாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள். அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு செய்பாடு இன்று தோல்வியடைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனாவிலிருந்து விடுபட கிளிநொச்சியில் விசேட யாகம் !

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் நாளை (12.11.2020) விசேட யாகம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசேட யாகம் நாளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட  செயலகமும், வன்னி பிராந்திய  சைவகுருமார் ஒன்றியமும் இணைந்து குறித்த யாக வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது நாடு கொரோனா தொற்றிலிருந்த விடுபடும் வகையில் விசேட யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலையில் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை !

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இவ்வுத்தரவை நேற்று திங்கட்கிழமை (02.10.2020) பிறப்பித்துள்ளார்.

2015ம் ஆண்டு 4 மாதம் 14ம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பில் 2019ம் ஆண்டு 4ஆம் மாதம் 30ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் ஆகிய கணவன் கூட தனது மனைவியின் விருப்பம் இல்லாது பலாத்காரமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் என சட்டம் தெரிவிக்கின்ற நிலையில் தனது மனைவியை போதையை ஊட்டி சக நண்பர்களுக்கு கூட்டு வன்புணர்வுக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்காக மூதூர்- சிராஜியா நகர் பகுதியைச் சேர்ந்த கணவரான நஜீர் நாபிர் (28வயது) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்குமாறும் அரச செலவாக 5,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும், செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத கால கடூழிய சிறை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இதேவேளை மற்றைய எதிரியான மூதூர் சின்ன நகர் பகுதியைச் சேர்ந்த பைசர் பாசிம் (23 வயது) என்ற குறித்த எதிரிக்கு சம்பவம் நடைபெறும் போது 18 வயது 24 நாட்கள் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து இவருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில்,2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறும் 5,000 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

அத்துடன் மூன்றாம் எதிரியான மூதூர் ஆலிம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் தாரிக் (37 வயது) பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில்,15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் 10 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

“கொரோவை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சர் மோசமான மந்திரவாதி மருத்துவரின் ஆலோசனைக்கு அமைவாக  செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்” – மங்கள சமரவீர கண்டனம் !

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின்  செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது“ என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

தனது  மங்கள சமரவீர தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. ஆனால், சுகாதார அமைச்சர் மோசமான ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக  செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

விஞ்ஞானத்தை நம்புகின்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றும் வகையிலான தனது அமைச்சர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதி” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இதன் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி,  “இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை  சரியானதே என கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் , ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிர்ப்பலி – மேலும் இருவர் மரணம் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 68 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய உயிரிழப்புக்களுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளியின் மரணம் கொரோனாத்தொற்று வகை மரணத்துக்குள் உள்ளடங்காது என சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே’ – மட்டக்களப்பில் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் எனக்கோரி போராட்டம் !

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பபட்டது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் கே. வாஜித் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடைபெற்ற இப்போராட்டத்தில் குறைந்த தொகையினரே பங்கேற்றனர்.
‘பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே’ என்ற வாசகம் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாதையொன்றை கவனயீர்ப்புப் போராட்டக்காரர்கள் ஏந்திநின்றனர். இதையடுத்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஊடாக இலண்டன் உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கான மகஜர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாறா மௌஜுதிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது,
முழு மனித சமுதாயத்திற்கும் எதிராகச் செயற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகக்கருதி உலகிலுள்ள முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் தடைசெய்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இத்தடையை நீக்க மேற்கொள்ளும் முயற்சியானது சர்வதேச ரீதியில் பயங்கரவாத இயக்கம் மீதாக தடை வலுவிழந்துசெல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக நட்டஈடு இதுவரை கிடைக்காத நிலையில் அவ்வமைப்பு மீதான தடை நீக்கப்பட்டால் அவ்வியக்கம் சாதாரண ஓர் அமைப்பாகவே கருதப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பிரித்தானியா புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த மீள்பரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம் – பற்றி நீவ்ஸ்.கொம்

யாழ். பல்கலைகழகத்தின் இரண்டு துறைகளை பீடங்களாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதற்கான திட்ட முன்மொழிவுகள் நேற்று (01.11.2020)  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும்,  கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இப்பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தலைமையிலும், சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு. மோகனதாஸ் தலைமையிலும் பேரவையினால் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் துறையாக காணப்பட்ட இந்துநாகரிக கற்கைகள் துறையானது பீடமா தரமுயர்தத்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம்” – மேர்வின் சில்வா காட்டம் !

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத விடயம்” என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம்(02.11.2020) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தெருக்களில் நாய்கள் வெறிப்பிடித்தது போல முன்தீர்மானம் மற்றும் ஏற்பாடுகள் இன்றி அரசாங்கம் திடீரென 5 நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை மேல்மாகாணத்தில் அமுல்படுத்தியது. பின்னர் திடீரென அந்த ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. தினமும் தொழிலுக்குச் சென்று வருமானம் பெற்று உணவுகொண்டவர்கள் அநேகம்பேர் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொவிட்-19 தொற்றானது கடந்த வருட இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டதுடன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எமது நாட்டில் பரவத்தொடங்கியது.

அப்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தொற்றின் அபாயகரமான விடயங்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்தார். ஆனால் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, ஏற்ற ஏற்பாடுகளை செய்யவுமில்லை. இன்று அதன் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை அரசாங்கம் செய்தாலும் எத்தனையோ பேருக்கு இந்த உதவிகள் கிடைக்கவில்லை. முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நினைத்திருக்க வேண்டும் என்றார்.