செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் உடனுக்குடன் மீள்குடியமர்வு – அமைச்சர் அமீர் அலி

ameerali.jpgநிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் உடனுக்குடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ். எஸ். அமீர் அலி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

எதிரணியினர் குறிப்பிடுவது போல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதிருப்பதற்காக மல்வத்து ஓயாவிலிருந்து 50 லட்சம் லீட்டர் நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறுவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.  இது வழக்கமானது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் எமது ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். இது தெளிவானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இனியாவது இனவாதம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் எவருமே அங்கம் வகிக்கவில்லை என்பது அபத்தமானது. அச்செயலணியில் இரண்டு தமிழ் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இதனைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லையெனக் கூறுவது எமக்கு கவலை அளிக்கிறது.
 

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கான் முகமது மரணம்

_khan_muhammed_cricket.jpgபாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கான் முகமது தமது 81 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சார்பில் முதல் இந்திய விக்கெட்டை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாட 1952 ஆம் ஆண்டு சென்றது.

1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சார்பில் முதலில் பந்து வீசியவர் கான் முகமது. அதாவது பாகிஸ்தான் அணியின் சார்பில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

முதலில் இந்தியா ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களாக பன்கஜ் ராயும், வினூ மன்கட்டும் களம் இறங்கினர். இந்திய அணி தனது முதன் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

கான் முகமது வீசிய பந்தில், பன்கஜ் ராய் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற புகழ் கான் முகமதுக்கு கிடைத்தது.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன முரண்பாட்டுக்கு அடிப்படையான மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை – அமைச்சர் டியூ குணசேகர

duegunasekara.jpgஇன முரண்பாட்டுக்கு அடிப் படையான மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, என அரசியலமைப்பு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூகுணசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் சகல அரச நிறுவனப் பிரிவுகளிலும் மொழி செயற்படுத்தல் அதிகாரி களை நியமிக்கத் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஓரிரு தினங்களில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது;

33 வருட பயங்கரவாதம் 27 வருட யுத்தம் இவை முழு மையான முடிவுக்கு வரும்வரை அவசரகால சட்டத்திற் கான தேவை இருக்கும். நாம் என்றும் யுத்தத்தை விரும்புபவர்களல்ல. யுத்தத் தைத் தவிர்க்கக்கூடியவற்றை நாம் பலமுறை மேற் கொண்டுள்ளோம்.

யுத்தம் முடிவுக்கு வரவேண்டும், தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதற்கு அன்றே 13வது திருத்தச் சட்டத் திற்குச் சபையில் ஆதரவு வழங்கியவன் நான். 13வது திருத்தத்தில் மொழிப் பிரச்சினையும் அடங்குகிறது. இதற்கான அடிப்படைகளை நாம் இனங்கண்டுள்ளதுடன், அதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச நிறுவனங்களின் சகல பிரிவுகளிலும் மொழி செயலாற்றலை நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை இரண்டொரு தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளேன். இதன்படி தமிழில் அனுப்பப்படும் கடிதமொன்றுக்கு இனி சிங்களத்தில் பதில் அனுப்புவது நடைபெறாது. அவ்வாறு செயற்படும் அதிகாரிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள பத்துக்குமேற்பட்ட கட்சிகளும் ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். ஜே. வி.பி. யே இன்று சிங்கள இன வாதத்திற்கு இடமளிக்கக்கூடாதென சபையில் கூறுகிறது. இதனை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். யுத்தம் வட, கிழக்கை மட்டுமல்ல இதர சகல பிரதேசங்களையும் பாதித்துள்ளது. சகல மக்களையும் பாதித்துள்ளது என்பதை சகலரும் உணரவேண்டும்.

எமது தொடர்புகளெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளுடன் மட்டும்தான் என ஐ. தே. க எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கூறினார். இதை நான் மறுக்கிறேன். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

நாம் சகல நாடுகளுடனும் ஒப்புரவுடன் செயற்பட்டு வருகிறோம். எனினும் எமது நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் விடயங்களில் நாம் கவனமாகச் செயற்படுவது அவசியம். இதனால் தான் அரசாங்கம் நாட்டுக்குச் சாதகமான தீர்மானத்தை இது விடயத்தில் மேற்கொண்டது. இந்தியா போன்ற அயல்நாடுகளை எமக்கு ஆதரவாக திருப்புவ தற்கும் இத்தகைய தீர்மானங்களே முக்கியமானதாக அமைந்தன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

images-snakes.jpgஇலங் கையில் பாம்புக் கடியினால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாள?விய ரீதியில் 33 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்குள்ளாகியதாக அடிப்படைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவில் பின் தங்கிய கிராமவாசிகளே பாம்புக்கடியினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்தாவிடின் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், பாம்பு கடித்தவர்கள் நவீன சிகிச்சை வசதிகளை உடைய வைத்தியசாலைகளை அணுகாது அபாயகரமான பாரம்பரிய சிகிச்சைகளையே மேற்கொண்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாம்புக் கடியால் உயிரிழந்தவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாதோர் தொகை குறிப்பாக கிராமிய மட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.  மின்சார வசதியற்ற கிராம மக்களே அதிகளவில் அரையிருள் வேளைகளில் பாம்புக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். – விஜித ஹேரத்

06arliament.jpgநாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே பயங்கரவாதத்தை ஒழித்து தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். அதற்கான முதற்படியை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கான விதவைகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பிள்ளை களை இழந்த பெற்றோர்கள் உள்ளனர். அவர்களுக்கான எதிர்கால வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் நாட்டின் பிரதான பிரச்சினையை இனங்கண்டு அதனைத் தீர்க்க அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி வழங்கிய ஆதரவினைப் போலவே மிஞ்சியுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தெறியும் வரை அவசரகால சட்டத்துக்கும் பூரண ஆதரவினை வழங்கும். அதற்குப் பின்னரும் அவசரகாலச் சட்டம் தொடருவதை ஜே. வி.பி. அனுமதிக்காது. ஏனெனில் அது மக்களைப் பாதிப்பதாகவே அமையும். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத்: (ஜே. வி. பி. எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்புக்கு விசேட வேலைத் திட்டம்

tsunami.jpgநாடெங் கிலுமுள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாக்க விசேட வேலைத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. நீதி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜகத் வெல்லவத்த தெரிவித்தார். இத்திட்டம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று பிற்பகல் அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இத்திட்டத்தின்படி சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளதுடன் அச்சிறுவர்களுக்கு உரித்துடைய சொத்துக்களின் விபரங்கள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தினர் தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 5700 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 754 பேர் தமது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாவர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பு எதிர்வரும் 13ஆம் திகதி ஹம்பந்தொட்டையிலும் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஹிக்கடுவயிலும் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும்.

இக்கணக்கெடுப்பின் பின்னர் இச்சிறுவர்களின் பேரில் இலங்கை வங்கியூடாக வங்கிக் கணக்கொன்றும் ஆரம்பித்துக் கொடுக்கப்படவுள்ளது. இதேவேளை,  சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சட்டத்துக்கு முரணாக பராமரித்து வருவோர் இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

cricket.jpgஅவுஸ் திரேலியா – இங்கிலாந்து ஆணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி அறிவிப்பு:

கார்டிஃப் மைதானத்தில் இன்று துவங்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹார்மிசன் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கிரகம் ஆனியன்ஸ் இடம் பெற்றுள்ளார்.

மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அதேபோல் ரவி பொபாரா அணியில் இடம் பெற்றிருந்தாலும் இயன் பெல்லும் ஒரு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொன்ட்டி பனேசர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (கப்டன்), அலைஸ்டர் குக், ரவி பொபாரா, கெவின் பீட்டர்சன், போல் கொலிங்வுட், இயன்பெல், மேட் ப்ரையர், பிளின்டாஃப், ஸ்டூவார்ட் பிராட், கிரேம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர் சன், கிரகம் ஆனியன்ஸ் மொன்ட்டி பனேசர்.

அவுஸ்திரேலிய விபரம் வருமாறு:- பிலிப் கூச், சைமன் கடிச், ரிக்கி பொண்டிங் (கப்டன்), மைக்கல் கிளார்க், மைக்கல் ஹஸி, மார்ஷல் நேகர்தி, பிராட் ஹடின், மிச்சல் ஜோன்சன், நாதன் ஹரிட்டஸ், பீட்டர் சிடில், ஸ்டுவர்ட் கிளார்க், பென் ஹில்பென்ஹஸ் .

தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது இத்தருணத்திலாவது அவசியம் – கடற்றொழில் அமைச்சர்

felixperera.jpgதமிழ் மக்களைப் பிரதிநிதி த்துவப்படுத்தும் 22 தமிழரசுக் கட்சி எம்.பிக்களும் தமிழ் மக்களின் சுகதுக்கங்கள் பற்றி சபையில் பேசாமல் யுத்த வெற்றி பற்றி பேசியமையே தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். இன்று பத்மினி சிதம்பரநாதன் எம்.பி- சபையில் வேதனையுடன் கூறும் விடயங்கள் எமக்கும் கவலையையே தருகிறது. எனினும் இதற்குக் காரணமானவர்கள் யார்?

இன்றைய நாளிலும் அகதிமுகாம்களில் மக்கள் அவதிப்படும்போது வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் செளகரியமாக வாழ்கின்றனர். லண்டனிலும் மலேசியாவிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நான் முழுமையாக நம்புகின்றேன் தமிழ், மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்ச அளவிலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பார். இத்தருணத்திலாவது தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இனவாதம் இனியும் தலைதூக்க இடமளிக்க முடியாது.

எமது நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அகதி முகாம்கள் உள்ளன. எனினும் எமது அகதி முகாம்கள் போன்று சிறப்பாக எதுவும் பராமரிக்கப்படவில்லை. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா: மேற்கண்டவாறு கூறினார்.

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தில் வன்முறை தொடருகிறது

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் தொடரும் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள் அங்கே இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீண்டும் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உய்குரிகளுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் இந்த மோதல்கள் நடந்துவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரும்கியின் தெருக்கள் தற்போது அமைதியாக காணப்படுவதாக, அங்கே இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முன்னதாக, நீண்ட கத்திகள், கம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தாங்கிய ஹன் சீன இனமக்கள் தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.  முஸ்லிம் உய்குரி இனமக்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முகமாகவே தாங்கள் இப்படி ஊர்வலமாக சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில்!

election.gifஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தபால்மூல வாக்குப் பதிவு எதிர்வரும் 27ஆம்,  28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஊவா மாகாணத்துக்கு மொத்தம் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 21 பேர் பதுளை மாவட்டத்திலிருந்தும் 11 பேர் மொனராகல மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்.