பாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கான் முகமது தமது 81 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சார்பில் முதல் இந்திய விக்கெட்டை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாட 1952 ஆம் ஆண்டு சென்றது.
1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சார்பில் முதலில் பந்து வீசியவர் கான் முகமது. அதாவது பாகிஸ்தான் அணியின் சார்பில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.
முதலில் இந்தியா ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களாக பன்கஜ் ராயும், வினூ மன்கட்டும் களம் இறங்கினர். இந்திய அணி தனது முதன் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.
கான் முகமது வீசிய பந்தில், பன்கஜ் ராய் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற புகழ் கான் முகமதுக்கு கிடைத்தது.
தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.