செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முன்னணி பாடசாலை அதிபர் நாடு கடத்தப்பட்டார்

கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். விஸாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்ததால் அவர் நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிபர் காணாமல் போய்விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருக்கும் போது அவரின் அடையாளத்துவம் வெளியிடப்பட்டிருக்கவில்லையென்றும் 3 மாத விஸா பெற்று வந்திருந்ததாகவும் ஆகஸ்ட் 9 உடன் அவரின் விஸாக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி.அபேயக்கோன் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது? – சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும்.

election000.jpgஜனா திபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறே அது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், ஐ. ம. சு. முன்னணி எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளதென ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் நேற்று (12) தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டுமெனவும் ஊவா தேர்தல் முடிவு இதனை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது :-

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலையா பாராளுமன்றத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும். எந்தத் தேர்தல் நடத்தவும் நாம் தயாராகவே உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவோம்.

யுத்த வெற்றி காரணமாக மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்திகள் காரணமாகவுமே மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்களித்து வருகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களும் அரசாங்கத்துடனேயே உள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஆரம்ப முதல் ஐ. தே. க. வே தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கூட ஐ. தே. க. பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென கோரியது.

ஊவா மாகாண தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ. தே. க. செயலாளர், பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவதாக கூறியுள்ளார். ஐ. தே. க. கோரும் எந்தத் தேர்தலையும் முதலில் நடத்தத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன.

ஊவா மாகாண மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர். அரசியல் யாப்பின் பிரகாரம் எந்தக் கட்சிக்கும் 2/3 பெரும்பான்மை பெறமுடியாது என்ற கருத்தே இத்தனை காலமும் காணப்பட்டது. அந்த நிலைப்பாட்டை எமது அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் எமக்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தந்தது போல பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஐ. ம. சு. முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தருவது உறுதி. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குறித்து மக்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது என்றார். இங்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரும் உரையாற்றினர்.

ஆங் சாங் சுயியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஐ. நா., ஐரோப்பிய யூனியன் கடும் அழுத்தம்

miyanmar_s.pngமியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங்சுயி மீதான நீதிமன்றத் தீர்ப்பை அநீதியானதெனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ் வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளதுடன் ஐரோப்பியன் யூனியன் மியன்மார் மீது அவசரத் தடைகளைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சுயி (64) மேலும் 18 மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று முன் தினம் மியன்மார் நீதி மன்றம் உத்தரவிட்டது.

தடுப்புக் காவலில் இருந்த வேளை தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை வைத்திருந்ததாகக் கூறியே இந்தப் புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வெளியிட்டது. சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்களை ஆங் சாங் சுயி சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்றார்.

மியன்மாரில் 2010 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங் சாங்சுயியை போட்டியிடாமல் தடுக்கும் நோக்குடனே மியன்மார் இராணுவ அரசு இத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன.  மியன்மார் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கரையும் விடுதலை செய்யும்படி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.  மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கைகளைக் கண்டித்து உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இத் தீர்ப்பு வெளியானதையடுத்து ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் மியன்மார் அதிகாரிகளுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு நீதி மன்றத் தீர்ப்பை நிராகரித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இத் தீர்ப்பைக் கேள்வியுற்றதும் தான் திடீரெனக் கோபமடைந்ததாகக் கூறினார்.  இவ்வாறான நிலைமையில் மியன்மார் மீது புதிய தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன.  சீனா இவ்விடயத்தில் மியன்மாரின் பக்கம் சாய்ந்துள்ளமை அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

இலங்கையுடனான 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் வெற்றி

afridi.jpgபாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.

தொழிற் சங்கங்கள் அசமந்தம் அடுத்த வாரம் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் 261 வாகனங்கள் நேற்று மடு பிரதேசத்தினுள் பிரவேசம்

madu_church.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ரயில் சேவைகள் நேற்றுக் காலை முதல் ஆரம்பமாகின. முதலாவது ரயில் நேற்றுக் காலை 7.45க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதேவேளை நேற்று மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒருமணி நேரத்துள்ளேயே 261 வாகனங்கள் மடு தேவாலய பகுதிக்குள் சென்றதாக தேவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகள் அமைச்சர் சரத் குமார குணரட்ண அவரது பாரியார் சகிதம் மடு புறப்பட்டுச் செல்லும் முதலாவது ரயிலில் பயணித்தனர். நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை புறப்பட்டுச் செல்லும் யாத்திரிகர்களுக்கும், ரயிலுக்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன் மடு மாதா மீதான துதிப்பாடல்களும் பாடப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்தும் நேற்று விசேட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. நாளை காலை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45க்கும், 6.05க்கும், 8.45க்கும் பகல் 1.45க்கும் மாலை 4.20க்கும் இரவு 10.00 மணிக்கும் விசேட ரயில்கள் புறப்படுகின்றன.

குடாநாட்டிற்கு 6 மாதத்துக்கு தேவையான சீமெந்து தயாரிக்கக்கூடியளவுக்கு கிளிங்கர்

காங்கேசன்துறை லங்கா சீமெந்துத் தொழிற்சாலையில் தற்போது சுமார் 38 ஆயிரம் மெற்றிக்தொன் கிளிங்கர் இருப்பதாகவும் இதனை அரைக்கும் பட்சத்தில் சுமார் 6 மாத காலத்துக்கு யாழ்.மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமெனவும் லங்கா சீமெந்து நிறுவனப் பொறுப்பதிகாரி பி.விமலநாதன் தெரிவித்துள்ளார்.  சீமெந்துத் தொழிற்சாலையில் 19 வருடங்களுக்கு மேலாக இருப்பில் இருந்த கிளிங்கரின் மாதிரி பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டபோது அவை பாவிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கும் பட்சத்தில் சுமார் 7 1/2 லட்சம் சீமெந்துப் பைக்கற்றுகள் பொதி செய்யலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீமெந்து நிறுவனத்தை அடுத்த வருட முற் பகுதியில் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் இந்த கிளிங்கர் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணக் கிராமங்களில் 4500 அரசாங்க ஊழியர்கள் பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் மீளச் சேவையில் இணைக்க முடிவு -சரத் அமுனுகம

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடனேயே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

மேற்படி ஊழியர்களில் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறுமட்டத்தினர் உள்ளனர். அவர்கள் வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்தவர்கள் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் அவர்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் அங்கீகாரத்துடனேயே மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 4500 அரச ஊழியர்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை யின் கீழ் இவர்கள் மீள அவர்கள் வகித்த பதவியில் நியமிக்கப்படுவர். எனினும், அவர்கள் பாதுகாப்பமைச்சினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவ்வமைச்சின் சான்று ப்படுத்தலுடனேயே மீளச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவற்றுள் சிலர் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி காலமானார்

nalin.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜி. டி. ஜி. நளின் செனவிரத்ன தனது 78 வது வயதில் நேற்றுக்காலை காலமானார். இலங்கை இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமையாற்றிய இவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

1953 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம்திகதி இரண்டாவது லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் (1958) கெப்டன், (1963) மேஜர், (1971) லெப்டினன்ட் கேர்ணல், (1977) கேர்ணல், (1981) பிரிகேடியர், (1985) மேஜர் ஜெனரல் என்று தரமுயர்த்தப்பட்டார்.

இராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்த இவர் 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தின் 54 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருக்கும் காலத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 11ம் திகதி இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் செனவிரத்ன 1986 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

2007 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

“அகதிகளாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதிதிகளாகச் சென்று குடியேறவேண்டும்’

அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் செல்வதற்கான வாய்ப்பை யாழ்.மாநகர சபைக்கு ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளதாக யாழ்.மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது கூறினார். இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ்.முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டம் ஓய்வுபெற்ற ஆசிரியர் உமர்தீன் தலைமையில் பெரியமுல்லை றசாத் மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து சரியான முறையில் வியூகத்தை அமைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியதனால் வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்பட்டு ஐ.ம.சு.மு. வில் போட்டியிட்ட 4 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சைக் குழுவிலும் ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகர சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.

சிறிய சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி அமைக்க முடியும் என்ற செய்தியை தெரியப்படுத்தியுள்ளோம். தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் சொந்த மண்ணான யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளான்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் யாழ்.முஸ்லிம்களில் எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலருக்கும் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களிக்காவதர்களுடன் கோபிக்கமாட்டேன். அரசியலில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். இவற்றை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

“செடோ’ அமைப்பின் செயலாளர் அஜ்மல் பேசும்போது;

யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டும் என்றார்.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட் பரீஸ் உரையாற்றும் போது; யாழ்.மாநகர சபைக்கு இரண்டு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளவம மகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம்கள் அரசுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இதனை முஸ்லிம்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை யாழ்.முஸ்லிம்களுக்காகச் செய்து தருவேன் என்றார்.