மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங்சுயி மீதான நீதிமன்றத் தீர்ப்பை அநீதியானதெனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ் வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.
மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளதுடன் ஐரோப்பியன் யூனியன் மியன்மார் மீது அவசரத் தடைகளைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சுயி (64) மேலும் 18 மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று முன் தினம் மியன்மார் நீதி மன்றம் உத்தரவிட்டது.
தடுப்புக் காவலில் இருந்த வேளை தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை வைத்திருந்ததாகக் கூறியே இந்தப் புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வெளியிட்டது. சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்களை ஆங் சாங் சுயி சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்றார்.
மியன்மாரில் 2010 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங் சாங்சுயியை போட்டியிடாமல் தடுக்கும் நோக்குடனே மியன்மார் இராணுவ அரசு இத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன. மியன்மார் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.
ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கரையும் விடுதலை செய்யும்படி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார். மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கைகளைக் கண்டித்து உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இத் தீர்ப்பு வெளியானதையடுத்து ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் மியன்மார் அதிகாரிகளுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு நீதி மன்றத் தீர்ப்பை நிராகரித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இத் தீர்ப்பைக் கேள்வியுற்றதும் தான் திடீரெனக் கோபமடைந்ததாகக் கூறினார். இவ்வாறான நிலைமையில் மியன்மார் மீது புதிய தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன. சீனா இவ்விடயத்தில் மியன்மாரின் பக்கம் சாய்ந்துள்ளமை அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.