செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தரம்-1 முதல் 5 வரையான மாணவருக்கு கல்வியமைச்சினால் லப்ரொப்

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு கணனி மையங்களை பெற்றுத்தரும் திட்டத்தின்கீழ் ஹோமாகம கல்வி வலயத்தில் உள்ள 6 பாடசாலைகளுக்கு கணனி மையங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஹோமாகம ஜலதர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2009ஆம் வருடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப வருடமாக அறிவித்ததையடுத்து கல்வி அமைச்சு செயற்படுத்தும் வேலைத் திட்டங்களும் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்றன. ஆரம்ப வகுப்புகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணனி ஒன்றை பெற்றுத்தரும் திட்டமும் இதில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தில் கஷ்டப் பிரதேசத்தில் உள்ள 13 பாடசாலைகளில் உள்ள 1500 மாணவருக்கு அடுத்த மாதம் முதல் கணனிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

வவுனியா முகாம்வாசிகளுக்கு நடமாட்ட சுதந்திரம்

lankaidsleavingcamp.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தால் 6 மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் அதிகாரிகளிடம் அவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலாம் திகதி மாத்திரம் சுமார் பத்து ஆயிரம் பேர் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்றதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தவர்கள் நேற்றுக் காலை 6 மணி முதல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமது பெயர், விவரங்களை உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்ட பின்னர் விசேட அனுமதிப் பத்திரத்துடன் இவர்கள் சுதந்திரமாக வெளியேறியதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

சுதந்திரமாக வெளியேறியவர்கள் தமக்கு வேண்டிய இடங்களுக்கு சென்று வருவதற்காக நிவாரணக் கிராம வளாகத்திலேயே நேற்று 14 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று சுதந்திரமாக வெளியேறியோருள் பலர் நண்பகல் 12 மணிக்குள் நிவாரணக் கிராமத்துக்கு மீண்டும் வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கைந்து நாட்கள் கழித்தே வருவதாகக் கூறிச் சென்றிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இவர்கள் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி யாழ்ப்பாணம் உள்ளிட்ட தூர இடங்களுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் நேற்று வரை மீளக் குடியமர்த்தப்படாத நிலையில் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 பேர் வரை நேற்று சுதந்திரமாக தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றதாகவும் அவர் கூறினார். வெளியேறியவர்கள் மீண்டும் நிவாரணக் கிராமத்துக்கு வரும்போது தமக்கு வழங்கப்பட்ட நுழைவுப் பத்திரத்தை தம்முடனே எடுத்து வருவது அவசியமெனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மார் மீனவர் 12 பேர் கடற்படையினரால் மீட்பு

கிழக்கு ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் நாட்டு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு மீட்டெடுத்துள்ளனர்.

மியன்மார் மீனவர்கள் 12 பேர் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகளும் ஆழ்கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான நிலையில் இலங்கை கிழக்கு கடற்பரப்பிலிருந்து 300 மீற்றர் ஆழ்கடலை நோக்கி வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இங்கு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு இவர்களை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட 12 மீனவர்களும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு

mu-siva.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.

3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.

200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.

பொன்சேகா ஆதரிப்பு எதிரொலி! ஜே.வி.பிக்குள் பிளவு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதையடுத்து அக்கட்சிக்குள் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடம் எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்துள்ளதுடன் கடந்த 30ம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பங்கேற்கவில்லை.

அவர் திடீரென வெளிநாட்டுக்கு பயணமாகியதன் காரணமாகவே இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் பிரசார நடவடிக்கைகளை கூடிய வரை தவிர்த்துக் கொள்ளவே இவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து ராஜினாமா செய்துள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திருமதி பிரியங்கா கொதலாவல கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளதையடுத்து மத்திய செயற்குழுவின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரட்நாயக்க, சுனில் ஹந்துங்ஹெட்டி ஆகியோரும் வெளிநாடு செல்ல தயாராகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ரணிலிடம் தீர்வில்லை – ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கலாம் என்கிறார் அசாத் சாலி

sali.jpgசிறுபான்மை மக்களுக்கான எந்தத் தீர்வும் ஐக்கிய தேசிய கட்சியிடம் கிடையாதென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண முடியமென்றும்  ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ஆசாத் சாலி தெரிவித்தார். ‘தினகரன்’க்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே ஆசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1994ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஜே.ஆர், ஆர். பிரேமதாச ஆகியோர் மாத்திரமே சிறுபான்மையினருக்குச் சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார்” என்று தெரிவித்த ஆசாத் சாலி, ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அங்கத்தினர்களை மதிக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார். ஜனாதிபதிக்கும், சரத் பொன்சேகாவுக்குமிடயில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. என்றும் கூறினார்.

சிறுபான்மை மக்களுக்குத் தீர்வொன்றை முன்வைப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலம் கூறி வருகிறார். எந்தத் தீர்வும் நடைபெறவில்லை. அவரிடம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை!

ஜனவரி 26ம் திகதி; நன்றிக் கடன் செலுத்தும் தினம்

நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற தினமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருதவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் நன்றியுள்ள சமூகம் என்பதை இத் தேர்தல் மூலம் வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனை – மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஹிதாயத் நகர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத் தொழில் முயற்சிக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எம். எஸ். சுபைர் மேலும் பேசுகையில்: கடந்த காலங்களில் முஸ்லிம் சமூக்தைச் சேர்ந்த பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும் கப்பம் கொடுத்து வாழ்ந்த சூழ்நிலையினையும் எம்மால் மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான நிலைமையினை மாற்றியமைத்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

தற்போது எங்கும் சுதந்திரமாக அச்சமின்றி பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. முஸ்லிம் சமூகம் நன்றியுள்ளதொரு சமூகம் என்பதை வெளிக்காட்டவும் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் செலுத்தும் சந்தர்ப்பமாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் இன்று முதல் சுதந்திர நடமாட்டம்

srilanka_displaced.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ்வனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.  அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமி ருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலு முள்ளவர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை யொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை சிறுவர் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட ராதிகா

மியன்மார் அரசாங்கம் தனது பாரிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் சிறுவர்களை சேர்த்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ள சிறுவர் போராளிகள் தொடர்பான விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா.நிபுணர் ராதிகா குமாரசாமி, அதேசமயம்  இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ. நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மியன்மாரில் தான் ஸ்வேயின் அரசாங்கம் தொடர்ந்தும் படைக்கு சிறுவர்களைத் திரட்டி வருவது தொடர்பாகவும் இலங்கை முகாம்களிலிருந்து சிறுவர்கள் உட்பட இடம்பெயர்ந்த மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ராதிகா குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மியன்மாரில் பிராந்திய மட்டத்தில் ஆட்திரட்டல் இடம்பெறுவதாக தென்படுவதை ராதிகா குறிப்பிட்டிருப்பதாக இணையத்தள செய்தி சேவை தெரிவித்தது.  இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் டிசம்பர் இல் இலங்கைக்கு செல்வதற்கு பற்றிக் கம்மெயார்ட்டை தான் நியமித்திருப்பதாகவும் அதன்பின் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்தி இலங்கை தொடர்பான சகல கேள்விகளுக்கும் பதிலளிப்பாரெனவும் கூறியுள்ளார்.

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வேளை வந்துவிட்டது. மகாநாயக்கர்களை சந்தித்த பின் ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இப்போது வழிபிறந்துள்ளது என்று தெரிவித்த எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா வட, கிழக்கு மக்களின் உரிமைகளை கவனிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று தலதாமாளிகையில் வழிபட்டபின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற சரத்பொன்சேகா பின்னர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண இப்பொழுது வழி ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்றதால் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றாலும் அகதி முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தாமதம் காட்டப்படுகிறது. அவர்கள் சொந்த இடத்திற்கு உடனே அனுப்பப்படவேண்டும்.

வட,கிழக்கு யுத்தம் முடிவுற்று மக்கள் அமைதியாக வாழும் வேளையில் அவர்களது உரிமை பற்றி நாம் கவனிக்கவேண்டும்.கவனிக்க வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளோம். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தச்சட்டம் இருந்தபோதும் இன்று நிலைமை வேறாக உள்ளது. அதற்கு மேலாக உரிமைகள் உள்ள சரத்துகள் அடங்கிய தீர்வை பாராளுமன்றில் பெறப்படும் அதிகாரம் மூலம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.சிங்களவர்,முஸ்லிம்கள்,தமிழர்கள் எல்லோரும் இந்த நாட்டு பிரஜைகள்,அவர்கள் மத்தியில் ஒற்றுமை ,புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது இன்றைய தேவையாகும். 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை ஜே. வி.பி. எதிர்த்தபோதிலும் இப்பொழுது எம்முடன் இணைந்துள்ள அவர்கள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இதற்காக அதிகாரத்தை பரவலாக்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படும். என்றார்.