செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு

சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு,  சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

சிலி சுரங்கத்தினுள் சிக்கிய 33 பேரும் வெற்றிகரமாக மீட்பு – 33 எண் அதிர்ஷ்டமென அறிவிப்பு

13.jpgசிலியில் 69 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றுக்காலை ஆறுமணிக்கு சுரங்கத்திலிருந்து 33 வது நபரும் வெளியே மீட்கப்பட்டார். சுரங்க வேலைகளிலீடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டதையடுத்து இந்த 33 பேரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். எழுநூறு மீற்றர் ஆழத்தில் 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்துக்குள் கிடந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய துளையிட்டு உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ஒளி ஒலி கருவிகள் அனுப்பப்பட்டு உறவினர்கள் தொடர்பினை ஏற்படுத்தினர். இந்த முயற்சியும் வெற்றி பெறவே இவர்களை வெளியே எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மணித்தியாலத்திற்கு ஒருவரென ஒருவர் பின் ஒருவராக 33 பேரும் மீட்கப்பட்டனர். இந்த 33 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண் என சிலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 33 பேரையும் மீட்க 33 நாட்கள் கடுமையான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. வெளியே எடுப்பதற்கென துளையிடப்பட்டவிட்டம் 66 செ. மீற்றர். இது 33ன் இருமடங்கு. வெளியேற்றும் நடவடிக்கை முடிந்த திகதி 2010.10.13. இதன் கூட்டுத்தொகையும் 33. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வயதும் 33. எனவே 33 ஒரு அதிஷ்ட எண் என மீட்புப் பணியிலீடுபட்ட கம்பனியின் அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் 33 பேரும் உயிருடன் உள்ளோம் என எழுதி அனுப்பப்பட்ட இலத்தீன் எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் 33 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். 33 என்ற இலக்கத்தை சிலி அரசாங்கம் அதிஷ்ட எண்ணாக அறிவித்துள்ளது.

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது

haturusinha.jpgயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார். 1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு

ranjan1.jpgஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஏரிஎன் இல் நகைச்சீட்டு: பணம் இன்னமும் வழங்கப்படவில்லை!

ATN_Jewelersகட்டப்பட்ட நகைச்சீட்டு முடிவடைந்து பல மாதங்களாகிய நிலையிலும் சீட்டுப் பிடித்தவர்கள் தங்கள் பணத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றனர். பலருக்கு சில ஆயிரம் பவுண்கள் வரை இன்னமும் கொடுக்கப்படாமல் உள்ளதாகத் லண்டன் குரலுக்குத் தெரியவருகிறது. சிலருக்கு தவணையிடப்பட்டு வழங்கிய காசோலைகளும் அவர்களது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி உள்ளது. பாதிக்கப்பட்ட சிலருக்கு சில நூறு பவுண்கள் வழங்கப்பட்டும் உள்ளது.

2008 ஓகஸ்ட்டில் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்த சீட்டுக்களின் கொடுப்பனவுகளும் அதற்கு முன்னான கொடுப்பனவுகளும் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே நகைச்சீட்டைப் பிடித்த ஏரிஎன் ஜீவலர்ஸ் மூடப்பட்டு ஏரிஎன் சொப் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதுவும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இச்செய்தி லண்டன் குரல் இதழ் 34ல் வெளியாகியது. ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!! இதனையடுத்து இத்தகவல் வழங்கியதாக தாங்கள் சந்தேகப்பட்ட சிலரை ஏரிஎன் ஜீவலர்ஸ் மிரட்டியதுடன் லண்டன் குரல் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக அநாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இம்மிரட்டல்கள் தொடர்பாக சிங்போட் பொலிஸ் நிலையத்தில் குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

‘தமிழ் கட்சிகளின் புரிந்தணர்வை நோக்கிய நகர்வை வரவேற்கின்றோம்!!!’ அறிக்கை – ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்)

Paul_and_Sangareeஆவணி 02 புரிந்தணர்வுக் குழு (லண்டன்) இலங்கையில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டு வருகின்ற உடனபாட்டை வரவேற்று செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளது.

‘‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கின்றோம். இந்த முன்னெடுப்பு தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுடைய பொதுப் பிரச்சினையில் இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது புலம்பெயர்ந்த வாழ்கின்ற எமது எதிர்பார்ப்பு.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டது. மாறாக அவலங்களும் அழிவுகளுமே மிஞ்சியுள்ளன. இப்போது தமிழ் மக்கள் மிகவும் கீழான நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் சிதறுண்டு இருப்பது தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தொடர்ந்தும் இழப்பதற்கே வழிகோலும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழ் கட்சிகளிடையே ஒரு புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உணர்வுபூர்வமாக ஏற்பட்டுள்ளதாகவே நாம் நம்புகின்றோம்.

கட்சிகளிடையே உள்ள அரசியல் வேற்றுமைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தங்கள் தேர்தல் முரண்பாடுகள் வேற்றுமைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இழக்கப்படுவதைத் தடுக்கவும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் வரவேண்டும்’’ என்று அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் மக்களிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கு, ஆவணி 02 புரிந்தணர்வுக் குழு வினால் உருவாக்கப்பட்ட ‘குறைந்தபட்ச புரிந்தணர்விற்கான முன்மொழிவுகள்’ ஈபிடிபி தலைவர் தேவானந்தா, தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருக்கு இலங்கை சென்றிருந்த நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனால் நேரடியாக கையளிக்கப்பட்டது.

ஆவணி 02 புரிந்துணர்வுக் குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட கட்சித் தலைவர்கள் தாம் பொதுவேலைத திட்டத்தில் உறுதியாக இருப்பதாக கவுன்சிலர் போல் சத்தியநேசனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ள தமிழரங்கத்திற்கு மூத்தகட்சித் தலைவரான வி ஆனந்தசங்கரி அவர்களே தலைமை தாங்கலாம் என்றும் தலைமை விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் தெரிவித்ததாக கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார். த சிர்த்தார்த்தன், வி ஆனந்தசங்கரி ஆகியோரும் தமிழரங்கம் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டதாகவும் கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

UK_Student_Visa_Advertலண்டன் கல்லூரிகளில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டி வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் லண்டன் வந்திறங்கியதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் படிக்க வந்த கல்லூரிகள் உள்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையாததால் மூடப்பட்ட நிலையில் கட்டிய பணம் இழக்கப்படுகிறது.

2006ல் London Reading Collegeக்கு 3 ஆண்டுகள் பட்டப்படிப்பான Business Managment படிப்பதற்கு 3000 பவுண்வரை கட்டி விசா பெற்றுவந்த எஸ் கணேஸ்வரன் 2007ல் இரண்டாவது ஆண்டுக்கு வந்த போது அக்கல்லூரி உள்துறை அமைச்சின் தரப்பட்டியலில் இருந்த நீக்கப்பட்டது. அதனால் அம்மாணவன் London School of Business and Computing என்ற மற்றுமொரு கலலூரியில் மேலும் ஒரு 3000 பவுணைக் கட்டித் தன் படிப்பைத் தொடர்ந்தார். அதுவும் நீடிக்கவில்லை. 2008ல் அக்கல்லூரியும் தரப்படிட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்னுமொரு கல்லூரிக்குப் இன்னுமொரு 3000 பவுண் கட்டி விசாவைப் புதுப்பிக்க முடியாத மாணவன் ஊரில் பட்டுவந்த கடனை அடைக்க முடியாது உள்துறை அமைச்சுக்கு ஒழித்து சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.

இவர் படிக்க வந்த இரு கல்லூரிகளில் மட்டும் 200 இலங்கை இந்திய மாணவர்கள் வரை கற்றுக்கொண்டிருந்தனர். உள்துறை அமைச்சின்  தரப்பட்டியல் இறக்கத்தினால் 50ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்க வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 1000 பவுண் கட்டி CECOS College க்கு கணணித் தொழில்நுட்பம் கற்க ஓகஸ்ட் 31 09ல் லண்டன் வந்தார் எஸ் ஹரிகரன். வந்து 7 நாட்களில் செப்ரம்பர் 7 09ல் அவர் படிக்க வந்த கல்லூரி உள்துறை அமைச்சால் மூடப்பட்டது. கட்டிய பணத்தை இழந்தார். இதே கல்லூரிக்கு வர 3500 பவுண்களை கட்டிய ஹரியின் மூன்று நண்பர்களுக்கு கல்லூரி மூடப்பட்டது, தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதால் விசா  வழங்கப்படவில்லை. ஆனால் பயண ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் அவர்கள் கட்டிய தொகையின் 50 வீதத்தையே பலத்த போராட்டத்தின் பின் மீளக்கையளித்தார்.

மாணவருக்கான விசா உத்தியைப் பயன்படுத்தி பல கல்லூரிகள் லண்டனிலும் புறநகர்ப் பகுதிகளிலும் முளைத்துள்ளன. குறைந்த கட்டணத்தை காட்டி மாணவர்களைக் கவரும் இக்கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

மேலும் மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும் போது 350 பவுண்களை உள்துறை அமைச்சு அறவிடுகிறது. குறிப்பிட்ட கல்லூரிக்கு விசா மறுக்கப்பட்டால் கட்டணத்தையும் இழக்கின்றனர். இன்னொரு கல்லூரிக்கு விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்க மீண்டும் 350 பவுண்கள் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளின் மத்திய தர உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் பலர் தங்கள் இளமைக் கல்வி வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசு அனுமதிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

கனடாவில் வெயிடப்படும் ஐ. தி. சம்பந்தனின் “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா

itsampanthan-book.jpgஉலக நாடுகளையே உலுக்கிய ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றிய தமிழர் படுகொலைகள் பற்றிய தரவுகள் அடங்கிய “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா ஸ்காபரோவில் இடம்பெற இருக்கிறது.

அப்பாவித் தமிழர்கள் உயிரோடு பெட்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டதும் கத்தி, வாள், கோடரி போன்றவற்றால் வெட்டிக் கொலை செய்ப்பட்டதும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டதும் ஆகிய தரவுகளுடன் “சுடரொளி” ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன் அவர்களால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோகமான தரவுகளை இந்நூல் பதிவுசெய்துள்ளது.

பேரினவாத அரசின் பக்க பலத்துடன் பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழர்கள்மீது காலத்திற்கு காலம் நிகழ்த்திவரும் இனப் படுகொலைகளை அம்பலப் படுத்தும் வரலாற்றுப் பதிவாக வெளிவந்திருக்கும் “கறுப்பு யூலை – 83” நூலின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் மேற்கொண்டுள்ளது.

500 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

தேசியத்தை நேசிக்கும் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இடம்: 733 Birchmount Road, Scarborough (Birchmount/Eglinton)

காலம் – ஒக்தோபர் 17 (ஞாயிறறுக்கிழமை) 2010

நேரம் – மாலை 6.00 மணி

வடமாகாணத்தில் 30 தொழிற்சாலைகளை அமைக்க அமெரிக்க நிறுவனங்கள் தயார்:

இலங்கையின் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை அமைக்க 30 அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வருவதாக அமெரிக்க தெற்காசிய பிராந்திய வர்த்தக கட்டமைப்பின் பிரதிநிதி மைக்கல் டெலணி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களின் தொகை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வடமாகாணத்தின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று செவ்வாய் கிழமை அமெரிக்க முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடனும் யாழ்ப்பாண பொதுமக்களுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது. அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கும் இலங்கையின் வெற்றிக்காக அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்கும் போது பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் காணாமல் போன சிறுவர் சிறுமிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 639 சிறுவர் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பெற்றோரை விட்டுப் பிரிந்தும் பெற்றோரை இழந்தும் உள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெற்றோர், உறவினர்களின் முறைப்பாடுகளை அடுத்து 13 சிறுவர்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது