செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் !

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

இதேபோல் கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் 2020 ஆகஸ்டில் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ-கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2015-ல் போர்சுக்கல் பிரதமராக பொறுப்பேற்றவர் அன்டோனியா கோஸ்டா. இவர் 1961-ல் லிஸ்பனில் பிறந்தார். இவரது தாத்தா-பாட்டி கோவாவைச் சேர்ந்தவர்கள்.

மொரீஷியஸ் பிரதமராக 2017-ல் பொறுப்பேற்றவர் பிரவிந்த் ஜக்நாத். இவர் 1961-ல் மொரீஷியஸின் வாகோஸ்-பீனிக்ஸ் பகுதியில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். மொரீஷியஸ் அதிபராக 2019-ல்பொறுப்பேற்ற பிரித்விராஜ் சிங் ரூபன் 1959-ல் இந்திய ஆர்ய சமாஜி இந்து குடும்பத்தில் குவாட்ரே போர்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தார்.

சூரிநாம் நாட்டின் அதிரபராக 2020-ல்பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சன்டோகி,1959-ல் லெலிடார்ப் என்ற பகுதியில் இந்தோ-சூரிநாமிஸ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.

கயானாவின் துணை அதிபராக 1999 முதல் 2011 வரை பதவி வகித்த பாரத் ஜக்தேவ், முந்தைய பிரிட்டிஷ் கயானா பகுதியிலுள்ள டெமார்ரா-மஹாய்கா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா ராம் ஜியாவன், 1912-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்.

அயர்லாந்து அரசின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் லியா வராட்கர். 1979-ல் டப்ளினின் பிறந்த வராட்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். அதேபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 55 இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். மேலும் 63 இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், பெடரல் அவை உறுப்பினர்களாவும் உள்ளனர். 12 பேர் தூதர்களாக பணிபுரிகின்றனர்.

மொரீஷியஸ், ஃபிஜி, சிங்கப்பூர், சூரிநாம் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

ஃபிஜி, கயானா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பலர் மத்திய வங்கி நிர்வாக தலைவர்களாகவும் இருந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன் உள்ளிட்ட 112 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் உள்ளனர்.

பழுதுபார்க்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பாலம் இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி !

குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  இந்த பணியில் தேசிய பேரீடர் மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே  மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லட்சங்கள் சம்பளம் பெறும் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதில்லை – பௌசர் : கூட்டத்தின் பின்னணியில் மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

இலங்கையில் உள்ள பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் உழைக்கின்ற போதும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை வெளிக்கொணர்வதில்லை என லண்டன் புறநகர்ப் பகுதியான நியூமோல்டனில் நடைபெற்ற ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் பௌசர் தெரிவித்தார். வைத்திய கலாநிதி சி சிவச்சந்திரனின் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டின் போதே அவர் இக்கருத்தை முன்வைத்திருந்தார். சி சிவச்சந்திரன் ஒரு மருத்துவ கலாநிதியாக இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் ஆய்வுகளையும் தேடலையும் செய்து இந்நூலைக் கொண்டுவந்திருப்பதை பாராட்டிய பௌசர், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தைப் பெற்ற போதும் தங்கள் கடமைகளைச் செய்யாதிருப்பதையே பௌசர் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஓக்ரோபர் 30 காலை 11:00 மணிக்கு ஆரம்பமான நூல் வெளியீட்டில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வெளிவரும் ஆயிரக்கணக்காண நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த அ முத்துகிருஷ்ணனும் கலந்துகொள்டிருந்தார். அவருடைய மதுரை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்திய, “தூங்காநகர் நினைழவுகள் – மதுரையின் ழுழமையான வரலாறு” என்ற நூலும் இன்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் தொடர்பான கனதியானதொரு அறிமுகத்தை ஆய்வாளர் மு நித்தியானந்தன் பதிவு செய்திருந்தார்.

‘கிழக்கு மண்’ நூல் வெளியீட்டு மறுநிர்மாணம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வுக்கு மாதவி சிவலீலன் தலைமை தாங்கினார். ஆனால் இந்நூல் ஆய்வை மேற்கொள்ளச் சம்மதித்திருந்த மயூரன் அம்பலவாணர், கௌரி பரா, பால சுகுமார் ஆகிய மூவரும் நிகழ்ச்சியின் போது சமூகமளித்திருக்கவில்லை. இவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு குறும் அரசியல் காரணிகள் காரணமாக இருந்ததா என்று மறுநிர்மாணம் குழுவிடம் கேட்ட போது அது தங்களுக்கு தெரியாது என அவர்கள் பதிலளித்தன். புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது மிகச் சிறிய வட்டமாக இருந்தாலும் அதற்குள்ளும் பல்வேறு நுண் அரசியல் சதுரங்கங்களுக்கு குறைவிருப்பதில்லை.

வழமையாக தமிழ் புத்தக வெளியீடுகள் நிகழ்வுகள் மிகத் தாமதமாகவே நடைபெறுவது வழமை. ஆனால் மறுநிர்மாணம் குழுவினர் குறித்த நேரத்துக்கு நிகழ்வை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் ‘கிழக்கு மண்’ நூல்வெளியீட்டு நிகழ்வு வழமைக்கு மாறாக இருபது நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் வராத குறையை தலைமை தாங்கிய மாதவி சிவலீலன் மிகச் சிறப்புற நூலின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச்சென்று தலைமையுரையை ஒரு ஆய்வுரையாகவே மேற்கொண்டார். அவர் நூலை ஆழமாகவும் கவனமாகவும் வாசித்திருந்ததை அவரது தலைமையுரை ஆய்வுரை வெளிப்படுத்தியது. மட்டக்களப்பில் இருந்த கண்ணகி வழிபாடு பற்றி நூல் சொல்கின்ற விடயாத்தைக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கண்ணகி வழிபாடு இல்லாமல் போனது என்பதனையும் சுட்டிக்காட்டினார். கண்ணகி வழிபாடு தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து வன்னியூடாக மட்டக்களப்பிற்குச் சென்றதெனக் குறிப்பிட்ட அவர், ஆறுமுகநாவலர் ‘விதவைக்கு எதற்குக் கோயில்’, ‘வாணிபம் செய்தவளுக்கு என்ன கோயில்’ என்று சொல்லி கண்ணகி கோயில்களை மனோன்மனி அம்மன் என்றெல்லாம் அம்மண் கோயில்களாக்கினார் எனச் சுட்டிக்காட்னார்.

கோயில் திருவிழாவில் மேளக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் வரவில்லை என்றால் நித்திய மேளம் அடிப்பவரை வைத்துத்தான் விழாவைச் சமாளிக்க வேண்டும், நான் தான் இன்றைக்கு நித்திய மேளம் என்று பௌசர் நகைச்சுiவாயாக நிகழ்ச்சியை ஆரம்பித்து நூல்பற்றிய விபரங்களுக்குள் சென்று வந்தார். ‘கிழக்கு மண்’ மட்டக்களப்பின் வரலாற்றைச் சுரக்கமாகச் சொல்வதோடு மட்டக்களப்பு பற்றிய அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நூலாசிரியர் சி சிவச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் ஊர்ப்பெயர்களும் அதற்கான காரணங்களும், அங்குள்ள பேச்சுத் தமிழ், சமூக சாதிய அமைப்புகள், சடங்குகள், கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், சமய வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றுள்ளது.

மயூரன் அம்பலவாணர் அம்பலமாகினார்!

என்னதான் கூட்டம் நடைபெற்றாலும் கூட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் தான் மிகுந்த சுவாரசியமானதக இருக்கும். அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் மயூரன் அம்பலவாணர் கூட்டத்தின் முன்னும் பின்னுமான பேசுபொருளாகி இருந்தார். மயூரன் அம்பலவாணர் தலைமைச் செயலகத்தின் செயற்பாட்டாளராக முன்னர் அறியப்பட்டவர். தற்போது இந்தியாவுடன் பிஜேபியுடன் அவர்களின் தீவிர வலதுசாரிப் பிரிவான சிவசேனாவுடன் இவர்சார்ந்த குழுவினர் நெருக்கமாகிவிட்டனர். இதனால் இவரைச் சர்ச்சைக்குள்ளாக்க நாடுகடந்த அரசினரும் ரிசிசி என்கின்ற தமிழ் சமூக மையமும் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் புத்தக வெளியீட்டுச் சூழல் அவர்களுக்கு சாதகமில்லாததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் மயூரன் அம்பலவாணரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரேயே அங்கு வந்திருந்தார்.

மயூரன் அம்பலவாணர் வந்ததும் அவரும் அவருடைய நண்பரும் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவேற்றிய செய்திகள் தொடர்பாக மாதவி சிவலீலன் தம்பதிகள் கேள்வி எழுப்பினர். மயூரன் அம்பலவாணரிடம் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் இல்லை. பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக மாதவி சிவலீலன் தம்பதிகள் சரமாரியாக ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த ஆக்கிரோசத்துடன் கேட்டனர். மயூரன் அம்பலவாணர் மௌனமாகவே நின்றிருந்தார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பிரபா’ என்ற நபருக்கு எதிராக முகவலைத் தளத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அந்நபர் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே அவர் வெளியே வந்ததாகவும், வெளியே வந்தும் பெண் போராளிகளைக் காட்டிக்கொடுப்பேன் என மிரட்டி அவர்களை பாலியல் ரீதியில் சுரண்ட முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அனாமதேயமாக ஜேவிபி நியூசில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பதிவுகளில் ஒன்றில் மாதவி சிவலீலனுடன் அவர் வீட்டில் வைத்து மயூரனுடனும் அவருடைய நண்பர் ஒருவருடனும் உரையாடிய விடயமும் அச்சொட்டாக எழுதப்பட்டிருந்தது. அதை வைத்தே அப்பதிவை மயூரன் அம்பலவாணரே மேற்கொண்டார் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டது. மாதவி சிவலீலன் தம்பதியருக்கு பிரபா என்ற தூரத்து உறவுள்ள ஒருவர் இருந்தார். ஆனால் மயூரன் அம்பலவாணர் குறிப்பிட்ட பிரபாவும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்காரப் பிரபாவும் ஒருவர் அல்ல. அது முற்றிலும் இரு வேறு நபர்கள். ஆனால் மயூரனும் அவருடைய நண்பரும் மாதவி சிவலீலன் தம்பதியினரின் உறவுக்கார பிரபாவே தாங்கள் குற்றம்சாட்டும் நபர் என்று சொல்லி மாதவி சிவலீலனின் குடும்பத்தாரையும் அவர்களின் உறவான பிரபாவையும் அவருடைய தாயாரையும் பற்றி கீழ்த்தரமான பதிவுகளை ஜேவிபி நியூசில் வெளியிட்டனர். தன்னுடைய வீட்டில் வைத்து தான் நம்பிக்கையோடு தேநீர் உணவு பரிமாறிய பின் தங்களுக்கு தெரியாமலே தங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்தது நம்பிக்கைத் துரோகம் என மாதவி சிவலீலன் தம்பதியினர் மயூரன் அம்பலவாணரைச் சாடடினர்.

ஜேவிபி நியூஸ் இணையத்தளம் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் பா உ சிறிதரனுக்கு எதிரானவர்கள் அவ்விணையத்தளத்தில் பழிவாங்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் மயூரன் அம்பலவாணர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் பா உ சிறிதரனுடன் தேன்நிலவு கொண்டாடிய காலம். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசுவினால் எழுதப்பட்ட நூலை வெளியிட்ட நிகழ்வுகளும் அக்காலகட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கான அனுசரணையை மயூரன் அம்பலவாணரும் அவருடைய நண்பர்களும் வழங்கி இருந்தனர். நூல் வெளியீட்டு நிகழ்வை இவர்களுக்காக பா உ எஸ் சிறிதரன் மற்றும் முன்னாள் பா உ, மா உ பிரேமச்சந்திரனும் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பெரிய அரசியலும் சில்லறைத் தனங்களும் தமிழ் அரசியலுக்குள் கொட்டிக்கிடக்கின்றது.

 

ஹெலோவீன் கொண்டாட்டத்தில் 153 பேர் வரை உயிரிழப்பு – இலங்கையர் ஒருவரும் அடக்கம் !

தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள்.

கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர். இந்த சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது  ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலி !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் இராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பபைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு !

கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது.

மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்குப் பிறகு அடர்ந்த சேற்றில் இருந்து பல உடல்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.

மிண்டனாவ் தீவில் உள்ள மகுயின்டானாவ் மாகாணத்தில், ‘நல்கே’ புயல் மிகவும் அழிவை ஏற்படுத்தியது. கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயல், மணிக்கு அதிகபட்சமாக 95கிமீ (59 மைல்) வேகத்தில் காற்று வீசுவதுடன், மணிக்கு 160கிமீ (99.4 மைல்) வேகத்தில் காற்று வீசியது, இது சனிக்கிழமை அதிகாலை கிழக்கு கேடன்டுவான்ஸ் மாகாணத்தில் கரையை கடந்தது.

தினமும் பலர் படகில் பயணம் செய்யும் தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்படவும், பேருந்துகள் இயக்கப்படவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பொதுவாக ஆண்டுக்கு 20 சூறாவளி அல்லது வெப்பமண்டல புயல்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் வசமானது டுவிட்டர் நிறுவனம் – அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட டுவிட்டரின் உயர் அதிகாரிகள் !

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டுவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் திகதி அறிவித்தார்.

பின்னர், டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று எலான் மஸ்க் கூறினார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார்.

ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கோவை குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்களுக்கும் – இலங்கை ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு !

தமிழ்நாடு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் திகதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகளுடன் கோயம்புத்தூர் கார்க்குண்டு வெடிப்பு சந்தேகநபர்களுக்கு தொடர்பு

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும் கோவை கார்க்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

கோவை கார்க்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பெரோஸ்  இஸ்மாயில் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முகமது அசாருதீன் என்பவரை கேரள சிறையில் சந்தித்து உரையாடியுள்ளமை தொடர்பில்  வாக்குமூலம் அளித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கேரளாவின் வியூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள சர்வதேச  குற்றவாளியான முகமது அசாரூதீன் மற்றும் ரஷீத் அலியை தற்போது  கோவை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ்  சந்தித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில்  முகமது அசாருதீன்  2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதால்,  சந்திப்பின் நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ISIS அமைப்புடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அசாரூதீன் என்பவருடனும் விபத்தில் பலியான ஜமீஷா முபின் தொடர்புகளை பேணியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஜ்மத் அலி என்பவரை முபின் 2020 ஆம் ஆண்டு சந்தித்துள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை,  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய குழுவின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிமிற்கும் கார்க்குண்டு வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையினரை மேற்​கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பேஸ்புக் வாயிலாக இவர்கள் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக  இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் 11 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவருடன், தற்போது கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் தொடர்புகளை பேணியுள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 46 பேர் உயிரிழந்தனர்.

“கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன்.”- ரிஷி சுனக்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.

இதனால், 45 நாட்கள்பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன் பின் வாங்கினார். மற்றொருவர் பென்னி மோர்டார்ட்க்கு போதிய ஆதரவு இல்லை. இதனால், போட்டியின்றி ரிஷி சுனக் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அவர் பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரிஷி சுனக் மன்னர் சார்லசை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்கும்படி சார்லஸ் கேட்டு கொண்டார். இதனையடுத்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்று கொண்டார்.

இதன் பிறகு நிருபர்களிடம் ரிஷி சுனக் கூறுகையில்,

எனது பணி உடனடியாக துவங்குகிறது. கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். பிரிட்டனின் பொருளாதாரத்தை உயர்த்துவது தான் எனது இலக்கு. குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த லிஸ் டிரஸ் விரும்பியதில் தவறில்லை.

இது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சியை நான் பாராட்டினேன். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்தன. தவறுகள் இருந்தாலும் அதில் கெட்ட எண்ணங்கள் இல்லை. பிரெக்சிட் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரத்தை எனது அரசாங்கம் உருவாக்கும். ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றியதாக அரசு இருக்கும். மக்களின் நம்பிக்கையை பெறுவேன். சிறந்த எதிர்காலத்திற்கு நமது நாட்டை வழிநடத்தி செல்லவும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் தேவைகளை முன்வைக்கவும், கட்சியின் மிகச்சிறந்த மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை உருவாக்கவும் தயாராக உள்ளேன். ஒன்றாக நம் நம்ப முடியாத விஷயங்களை அடைய முடியும். பலர் செய்த தியாகங்களுக்கு தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளையும், அதன் பின் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுன் நிரப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அமரதாஸின் ஒளி ஓவிய நூல்: சொன்ன சேதியும், சொல்லாத சேதியும் விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பும்


நூல் வெளியீடு – சொன்ன சேதி:
கோவிட் பெரும் தொற்று பற்றிய பயம் விட்டுப்போக லண்டன் தமிழ் அரசியல் அரங்கும் விறுவிறுப்படைய ஆரம்பித்து இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் அளவுக்கு தமிழ் அரசியல் சூடாகாவிட்டாலும் அது தன்னுடைய அளவில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் திரள் கலை, இலக்கிய குழுமம் நடத்திய “Through the Fire Zones: Photographs of Amarathas in Sri Lanka’s War Zones” என்ற அமரதாஸின் இலங்கை யுத்தம் தொடர்பான புகைப்பட நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒக்ரோபர் 22இல் ஹரோ பப்ரிஸ்ற் சேர்ச்சில் மாலை ஐந்துமணிக்கு மேலாக நிகழ்வு ஆரம்பித்தது. பா நடேசன் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு நூலின் முதற்பிரதி அவருக்கே வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தளபதிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர் பிரான்ஸிஸ் ஹரிசன். இவர் “Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War” என்ற நூலை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ‘போர் வலயங்கள்’ பற்றிய படத்தை தந்தமைக்காக பிராஸிஸ் ஹரிசனுக்கு நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. லண்டன் புகைப்படப் படக் கலைஞரும் அரசியல் சமூக ஆர்வலருமான சுகுன சபேசன் தமிழில் இருந்த புகைப்படக் குறிப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக அவருக்கும் அந்நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் முறைப்படி கூட்டம் தாமதமாக ஆரம்பித்தாலும் பேச்சாளர்கள் நெருக்கமான நேரத்தை கவனத்தில் எடுத்து தங்கள் கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர். பிரான்ஸிஸ் ஹரிசன் இந்த யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அமரதாஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளைச் சொல்ல முன்வந்ததை பாராட்டியதோடு, இவ்வாறு தப்பித்து வந்தவர்களின் ஆக்கங்கள் பல வெளிவர வேண்டும் அவை பல தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா, புகைப்படக் கலைஞர் கெவின் காட்டரின் சூடானின் வறுமையை வெளிப்படுத்திய ஒரு ‘பெண் குழந்தையின் மரணத்திற்காகக் காத்திருந்த கழுகு’ புகைப்படம் பற்றிச் சுட்டிக்காட்டி அப்புகைப்படக் கலைஞர் அது ஏற்படுத்திய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டமையைச் சுட்டிக்காட்டினார். ஒளி ஓவியங்கள் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதே போல் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க நேபாம் குண்டினால் நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவினதும் உலகினதும் கண்களைத் திறக்க வைத்தது பற்றி அரசியல் கலை இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அவர் தனதுரையில் புகைப்படக் கலைஞரின் அறம் பற்றி பேசியதுடன் அமரதாஸ் அதனை கவனமாகக் கையாண்டிருப்பதாயும் குறிப்பிட்டார். புகைப்படம் என்பது ஒரு வரலாறல்ல என்று குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன் அது ஒரு வரலாற்றின் சாட்சியம் என்று குறிப்பிட்டார். ஒரு படம் ஒரு சம்பவத்தை, ஒரு காலத்தை சொல்லக்கூடியது என்பதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் அமரதாஸ் அந்த மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய இப்படங்கள் அந்த யுத்த காலத்தின் சாட்சியங்கள் என்றும் அதனை அமரதாஸ் திறம்பட பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமரதாஸின் ஒளி ஓவியங்கள் ஓடும் படத்தின் தன்மையைக் காட்டுவதாக சுகுன சபேசன் தெரிவித்தார். இப்படங்கள் கோர்வைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுகுன சபேசன் தெரிவித்தார்.

இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தரும் சமூக, கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சேனன் குறிப்பிட்டார். அமரதாஸ் ஏனைய சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் போலல்லாது அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களின் வாழ்வை தன் புகைப்படங்களினூடாகப் பதிவு செய்துள்ளார். என்ன தான் ஜனநாயம் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னாலும் உண்மையில் அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. பிபிசி போன்ற ஊடகங்கள் ஓடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. இந்தப் படங்கள் எமக்கு அவசியமான ஆவணங்கள். எம்முடைய பொக்கிஸங்கள் என்றும் அதனால் இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் சேனன் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு ஆவணக்காப்பாளர் என்ற ரீதியில் நீண்ட கால நோக்கில் நூலை விமர்சனப் பார்வையில் அணுகி இருந்தார். நூலிற்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் தலைப்பையும் வழங்கத் தவறியது பிற்காலத்தில் தமிழ் நூல் சேகரிப்பில் இந்நூல் தவறவிடப்பட்டுவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். அமரதாஸ் ஒரு கவிஞராக இருந்தும் புகைப்படங்களுக்கான குறிப்புகளை வழங்கத் தவறியிருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பேச்சாளர்களின் உரைகளின் முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு முன்னதாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பா நடேசன், நூலகவியலாளர் என் செல்வராஜா ஆகியோருக்கு இந்நூல் தொடர்பாக தொலைபேசியில் பல அதிருப்திகள், நெருக்கடிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்வின் கலந்துரையாடலின் போது காணக்கூடியதாக இருந்தது. நூலில் தொகுக்கப்பட்ட படங்கள அமரதாஸ்க்கு மட்டும் சொந்தமானவை அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது, எனப் பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்படங்களை கருப்பு வெள்ளையாக வெளியிட்டதன் மூலம் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரதாஸ் மழுங்கடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இவை பற்றி அமரதாஸ் குறிப்பிடுகின்ற போது 2019இல் வரவிருந்த இந்நூல் சில காரணங்களால் அப்போது வெளியிடப்படவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கத்துடன் சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். நியாயம் பேச வேண்டிய சிலர் மௌனம் காத்ததாகவும் சிலர் மட்டும் தனக்கு தகுந்த நேரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் விசமிகளுடைய சதிகளுக்கு தான் பணியப் போவதில்லை என்றும் அமரதாஸ் தெரிவிக்கின்றார். தான் பாதுகாத்து வைத்திருக்கும்படி வழங்கிய படங்கள் கைமாறி, திருடப்பட்டு சில நபர்களால் அநாமதேயமாக வெளியிடப்பட்டதாகவும் அப்படங்களை வேறவரது படங்கள் போலக் காண்பிக்க முற்படுவதாகவும் அமரதாஸ் குற்றம்சாட்டுகின்றார்.

விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பு:
அமரதாஸ் தன்னுடைய அல்லது தன்னிடமிருந்த புகைப்படங்களின் உரிமையை பொதுமைப்படுத்த முன்வராததால் புலம்பெயர் புலிகளின் வெவ்வேறு பிரிவினருக்கும் அமரதாஸ்க்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்தது. ஒளிப்படங்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பாலும் அமரதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை புலம்பெயர் புலி விசிலடிச்சான் குஞ்சுகள் வைக்கின்றன. ஒளிப்படங்களை இரத்தமும் சதையுமாக வெளியிட்டு இருந்தால் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தங்கள் அரசியலுக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களுடைய விருப்பம்.

மேலும் அமரதாஸ் இறுதி யுத்தத்தை ஒரு இனஒழிப்பு யுத்தமாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு அமரதாஸ் முன்வைக்கின்ற விளகம் புரிந்துகொள்ளக் கூடியதே. நானும் இலங்கை அரசாங்கம் தமிழினவொழிப்புச் செய்ததாக நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் சர்வதேச அமைப்புகள் இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ளாததால் நான் அதனை இனவொழிப்பு யுத்தமாக குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் அல்ல. அவருடைய செயற்பாடுகள், எழுத்துக்கள் அவரை ஒரு தேசியவாதியாகவே உருவகப்படுத்துகின்றது. ஆனால் அமரதாஸ் விசிலட்டிச்சான் குஞ்சுகள் போன்று புலிகளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டாடவில்லை. அமரதாஸ் அறிமுகவுரையில் “ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆகவே போராட்டத்திலும் போர்சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. போரும் போராட்டமும் எப்படி உருவாக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளாத அமரதாஸின் குறிப்புகள் விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பிவிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பு, மக்கள் தஞ்சமடையும் இடங்களில் இருந்து தாக்குதலை நடத்துவது, கூடுதலான அழிவை ஏற்படுத்தும் வகையிலான மூன்றாம்தர யுத்த தந்திரங்கள், மக்களை தங்கள் காவலரன்களாக பயன்படுத்தியமை போன்ற பல விடயங்களை இந்த ஒளி ஓவியங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்நூலில் அமரதாஸ் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஒருவரின் இறப்பே மிகக் கூடுதலானது. ஒரு லட்சம் பேர் இறந்திருக்க வேண்டும் அதற்கு ஆயிரம் ஆயிரம் படங்களின் சாட்சியம் தேவை என்று எண்ணத் தேவையில்லை. ஆதாரமற்ற கதையாடல்கள் இருக்கின்ற உண்மையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும். உண்மையை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வதே எமது நியாயங்களை முன்வைப்பதற்கான வழி. மிகைப்படுத்தல்கள் அவசியமற்றது.

சொல்லாத சேதி:
அமரதாஸ் சொல்லத் தவறிய விடயங்களே அவர் தொடர்பான பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம். அமரதாஸினுடைய முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்துக் கூட அவருடைய நூலில் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய வைட்விஸன் – wide vision இணையத்தில் அவரைப் பற்றிய பக்கத்தில் கூட அமரதாஸ் தன்னை அறிமுகம் செய்யத் தவறி இருக்கின்றார். அல்லது அறிமுகப்படுத்த விரும்பவில்லை. இப்புகைப்பட நூலை பிரான்ஸிஸ் ஹரிசன் முதல் எல்லோருமே மிக முக்கியமான ஆவணமாகவே கருதுகின்றனர். சேனன் ஒரு படி மேலே சென்று அதனை தமிழர்களின் பொக்கிசம் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த ஒளி ஒவியங்களைத் தாங்கிய இந்நூல் அது ஆவணமாவதற்கு வேண்டிய முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு இருக்கின்றது. அமரதாஸ் தன்னிடம் இன்னும் சில ஆயிரம் படங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அவற்றை மேலும் ஓரிரு நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார். அதனால் இதே போல் எதிர்காலத்தில் அந்நூல்களை வெளியிடாமல் இருக்க இதனைப் பதிவு செய்கின்றேன்.

அமரதாஸின் புகைப்பட நூல் ஒரு ஆவணமாக கருதப்பட வேண்டுமானால் அதற்கான அந்த அறத்தை அந்நூல் கொண்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யார் என்பதை வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இருக்கின்றார். இதன் மூலம் அவர் படைப்பின் நம்பகத் தன்மையையும் நேர்மைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார். இதன் மூலம் அமரதாஸ் மிகத் துரதிஸ்டமான நிலையை தனக்கு ஏற்படுத்தி உள்ளார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளில் போராளியாக இணைந்து போராடியவர் என்றும் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையா மற்றும் பதவி பறிக்கப்பட்ட யோகி தரப்பினருடன், யோகிக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அமரதாஸின் இயக்கப்பெயர் இளம்திரையன் என்றும், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றனர். இவர் யோகியின் மெய்ப் பாதுகாப்பாளராக இருந்ததாகவும் அவர் கூறுகின்றனர். ஆனால் சுயாதீனமாக அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மாத்தையா இந்திய அமைதிப் படையுடனான யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை என்றும் இந்திய உளவுத்துறையோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இத்தகவலை யோகி அறிந்திருந்தும் இயக்கத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் பதவியிறக்கப்பட்டார். இக்களையெடுப்பில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட சிலர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மாத்தையா மிகப்பெரும் படையணியை வைத்திருந்தமையும் அவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த அமரதாஸ் யுத்தகளத்தில் (ஜெயசுக்குரு) தாக்குதலில் காலில் காயம்பட்டு இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகயில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இவரோடு கூட இருந்த நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளில் காயம்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் புகைப்படக் கலைஞர்களை உருவாக்குவதும் ஒன்று என்றும் அவ்வாறான பல புகைப்படக் கலைஞர்கள் வன்னியில் உருவாக்கப்பட்டதாகவும் அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய நூலில் கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் புகைப்பட ஊடகத்துறையை கற்பித்ததாக அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் அங்கு அதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் தன்னுடைய நூலில் “சர்வதேச பொது நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், எந்த ஊடகங்களும் வெளியில் இருந்து போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே இறுதிப் போர் நடைபெற்ற வன்னிப் பகுதிக்குள் இயங்கிக் கொண்டிருந்தன” என்று குறிப்பிடும் அமரதாஸ் அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் “நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த இறுதிப் போர்க்களத்தில், எனது ஊடகவியல்சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன”. அமரதாஸின் இப்பதிவு அவர் தன்னை வலிந்து ஒரு சுயாதீனமான ஊடகவியலாளராகக் காட்ட முயல்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமரதாஸ் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இல்லாமல் புகைப்படப் பிடிப்பாளராகச் செயற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகாளல் பயிற்றுவிக்கப்பட்டு புலிகளுடைய நிதர்சனம் தொலைக்காட்சின் புகைப்படக் கலைஞராக செயற்பட்டதாக அக்காலத்தில் அமரதாஸ் உடன் நட்பாக இருந்த போராளிகள் தெரிவிக்கின்றனர். அமரதாஸினுடைய புகைப்படக் கருவியும் இயக்கத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகின்ற போது அவனது படைப்புகள் அவர்களுடைய ஒப்பந்தத்திற்கமைய அவை அந்நிறுவனத்திற்கே சொந்தமாகின்றது. இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் சார்ந்தது. ஆனால் அதனை உரிமை கோருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளோ, நிதர்சனம் தொலைக்காட்சியோ இன்றில்லை. அவ்வமைப்பில் இருந்தவர்களுக்கோ அதில் பணியாற்றியவர்களுக்கோ அதனை உரிமை கோருவதற்கான எந்தச் சட்ட உரிமையும் கிடையாது. ஆனால் அமரதாஸ் உணர்வு ரீதியாக அதனை பொறுப்புணர்வுடன் கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.

2019 இல் நோர்வே தமிழ் சங்கம் இந்நூலை வெளியிடுவதற்கு உடன்பட்டு நூலையும் பதிப்பித்து இருந்தது. ஆனால் அப்பதிப்பில் புகைப்படத்திற்கான உரிமையை அமரதாஸிற்கு அல்லாமல் போராளிகளின் வெளியீடாக நோர்வே தமிழ் சங்கம் குறிப்பிட்டு இருந்தது. இதற்குப் பின்னணியில் தமிழ் சமூகம் மையம் TCC – Tamil Community Centre இருந்ததாகக் கருதப்பட்டது. ஒளிப்படங்களுக்கான தன்னுடைய உரிமையை நோர்வே தமிழ் சங்கம் நூலின் பதிப்பில் நீக்கியதற்கு எதிராக அமரதாஸ்; நோர்வே தமிழ் சங்கத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்தில் வென்ற அமரதாஸினால் மக்கள் மன்றத்தை வெற்றிகொள்ள முடியுமா?

புலம்பெயர் தேசம் தன்னுடைய முதலாளித்துவ நோக்கில் தனிமனிதனின் நலன்களை முன்நிறுத்துகின்ற சட்டங்களையே கொண்டுள்ளது. உணர்வு ரீதியான, அறிவியல் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பலவீனமான தேசத்தில் அனைத்து விடயங்களுமே சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியதாகவே உள்ளது. அந்த வகையில் அமரதாஸின் ஒளிப்படங்கள் சட்டரீதியாக அவருடையதாகவே இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமானதா? என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்றே சொல்வேன். உணர்வு ரீதியாகவும் அறிவியல் ஒழுக்கம், சார்ந்து தார்மீகக் பண்புகள் – அறம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யாரென்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய இந்நூலுக்கு அது இன்னமும் வலுச்சேர்த்து இருக்கும் என்றே நம்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அதிலிருந்த போராளிகளின் அர்ப்பணிப்பை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தமிழீழ விடுதலை புலிகளில் உறுப்பினராக இருப்பதோ, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகைப்படப் பயிற்சி பெற்றதோ, நிதர்சனம் தொலைக்காட்சியில் பணியாற்றியதோ தவறோ குற்றமோ அல்ல. ஆனால் அவற்றை இருட்டடிப்புச் செய்வது அவணப் பதிவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால் ஒரு ஆவண ஒளிப்படத் தொகுப்பு எப்படி வெளியடப்படக்கூடாது என்பதற்கு அமரதாஸின் இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். அதற்காக இந்நூலின் ஒளிப்படச் சாட்சியங்களை நான் நிராகரிப்பதாகவோ அல்லது அமரதாஸின் அர்ப்பணிப்பை நிராகரிப்பதாகவோ அர்த்தமில்லை. ஒரு படம் ஆயிரம் வாரத்தைகளுக்குச் சமமானது என்று சொல்கின்ற போது அமரதாஸ் 450 படங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை எவ்வித ஒழுங்கமைப்பும் குறிப்பும் இன்றி ‘கும்பையாகக் கொட்டியுள்ளார்’ என்றே எண்ணத் தோண்றுகின்றது. இது அவர் தெரியாமல் விட்ட தவறு அல்ல. தெரிந்துகொண்டே செய்த தவறு அல்லது சோம்பேறித்தனம். “அனைத்து ஒளிப்படங்களுக்குமான விரிவான குறிப்புகள் அல்லது தலைப்புகள் அவசியமில்லை எனக் கருதுகிறேன்” என்று தன்னுடைய நூலில் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தம் 2006இல் மாவிலாறு அணை மூடியதில் இருந்து 2009 மே 19 பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டவரை நீண்டது. அக்காலத்தில் மக்கள் அணியணியாக இடம்பெயர்ந்த வண்ணமே இருந்தனர். ஒரு ஒளிப்படத்திற்கு அதன் அடிக்குறிப்பு மிக மிக அவசியமானது. ஒவ்வொரு ஒளிப்படமும் பலநூறு சிந்தனைகளை தூண்டக் கூடியவை. அடிக்குறிப்புகள் தான் அவ்வொளிப்படத்தை அந்தக் காலத்தோடும் அந்தச் சூழலோடும் அப்பதிவை பிணைத்துக் கொள்ளும் .

நூற்பது ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எந்த நாளில் எரிக்கப்பட்டது என்ற சர்ச்சை நூலகவியலாளர் என் செல்வராஜா மே 31 1981 இரவு என்று உறுதிப்படுத்தும் வரை சர்ச்சையாகவே இருந்தது. அதனை மறுப்பவர்களும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் படம் பற்றிய அடிக்குறிப்புகள், படம் எடுக்கப்பட்ட திகதி, படம் எடுக்கப்பட்ட இடம் என்பவற்றைக் குறிப்பிடாமல் எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இவ்வொளிப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் அமரதாஸே தனது நூலுக்கான மதிப்பை குறைமதிப்பீடு செய்துள்ளார்.

இந்நூலில் அமரதாஸ் தோண்றுகின்ற பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படங்கள் அமரதாஸ் எடுத்த படங்களுக்கு நிகராக கனதியானதாகவும் உள்ளது. அப்படங்களை நிச்சயமாக அமரதாஸ் எடுக்கவில்லை. அப்படங்களை அமரதாஸ் போன்ற ஒரு புகைப்படக் கலைஞரே எடுத்திருக்க வேண்டும். போர் வலயங்கள் கொண்ட ஒரு சாதாரண இலங்கையின் வடக்குப் பகுதியின் படத்தை (இதனை கூகிள் சேர்ச்சில் தேடியே எடுத்திருக்க முடியும். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நூலில் பதிவு செய்திருக்கலாம்.) தந்ததாக பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் அமரதாஸ். ஆனால் இப்படம் பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு உரிமையானதும் அல்ல. அப்படியிருந்தும் இந்நூலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யுத்த பிரதேசத்திற்குள் தன்னுடைய படத்தை எடுத்தவருக்கு அல்லது எடுத்தவர்களுக்கு அமரதாஸ் நன்றி தெரிவிக்கவிலை. அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மைகள் சில சமயங்களில் கசக்கும். ஆனால் அவை அடுத்த படிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும். அடுத்த ஒளி ஓவிய நூல்களை வெளியிடுவதற்கு முன் அமரதாஸ் புகைப்படக் கலை பற்றிய தனது புரிதலையும் ஆழத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். புகைப்படக் கலையின் நுட்பங்களைத் தெரிந்திராத எனக்கு இந்த ஒளி ஓவியங்களின் மதிப்பை அல்லது அதன் ஆழத்தை அமரதாஸ் உணரத்தவறிவிட்டாரோ என எண்ணத் தோண்றுகிறது. அமரதாஸினுடைய உழைப்பும் ஓவியங்களும் விலைமதிப்பிட முடியாதவை. அந்தக் காலத்தின் சாட்சியங்கள் அவற்றை அதன் பெறுமதி குன்றாது வெளிக்கொணர்வது மிக முக்கியமானது. அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற போது ஒவ்வொரு தடவையும் அவை வேறொரு கதையைச் சொல்வது போல் தோண்றுகின்றது. எந்த விடயமாக இருந்தாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம். அமரதாஸின் அடுத்த நூல்கள் தற்போது விடப்பட்ட தவறுகளைக் களைந்து நேர்த்தியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.