செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தென் கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா இன்று

logo1.gifதென் கிழக்கு பல்லைக் கழகத்தின் 5 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு விழாவில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சூழல் கற்கை நெறியில் முதுநிலை பட்டத்தை நிறைவு செய்து கொண்ட 5 பட்டதாரிகளுடன் 75 விஞ்ஞான பட்டதாரிகளும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 70 பட்டாரிகளும், கலை கலாசார பீடத்தில் 138 பட்டதாரிகளும் அரபு மொழி பீடத்தில் 2 பட்டதாரிகளுமாக மொத்தம் 285 பேர் பட்டமளித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.

அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath-finseka.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும். கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார். இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு போர் நிலவரத்தால் மாகாணசபைத் தேர்தல் களையிழப்பு. மக்கள் அக்கறைப்படவில்லை; பவ்ரல்

paffre.jpgமத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் மக்களுக்கு அக்கறை இல்லையெனத் தெரிவித்த பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ வடபோர்முனை நிலவரத்தால் தேர்தல் களையிழந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சமூக, சமய மத்திய நிலையத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 937 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 50 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதேவேளை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களாக 56 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு நிலையான கண்காணிப்பாளர் வீதம் 2,600 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், தேர்தல் தொகுதி ஒன்றிற்கு இரு வாகனங்கள் வீதம் 40 தேர்தல் தொகுதிகளிலும் 80 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களில் 400 கண்காணிப்பாளர்கள் தேர்தல் தினத்தன்று தமது சேவையை வழங்கவுள்ளனர்.

அத்துடன், இத்தேர்தல் கண்காணிப்பிலும் சர்வோதயம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் பலவும் எம்முடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் பொருட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியுடனும் நாம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஐ.தே.க.வுடன் நடைபெற்ற பேச்சுகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய கட்சிகளுடனான பேச்சுகளும் நடத்தப்படவுள்ளது. இதேபோல் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்துடனும் நாம் பேச்சுகளில் ஈடுபடவுள்ளோம்.

தேர்தல் கண்காணிப்பு குறித்த நடைமுறைகளை விளக்குவதற்காக பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் பாரதூரமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இடம்பெறவில்லை. ஆனாலும், இரு மாகாணங்களிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனினும், அவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வேட்பு மனுத்தாக்கல் செய்தது முதல் இதுவரை தேர்தல் உஷார் நிலை அடைந்ததை அவதானிக்க முடியவில்லை. வடக்கில் நடைபெறும் படை நகர்வுகள் மீது சகலரும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையே இவ்வாறான உற்சாகமற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகும். இதேவேளை, இந்தத் தேர்தல் அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், மக்களுக்கு இத்தேர்தலில் அக்கறை இல்லை. மக்கள் தேர்தலை நடத்துமாறு கேட்கவில்லை அரசியல்வாதிகளிற்காகவே இத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கருத்துகளை உள்வாங்கியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.

ஜனநாயக முகமூடியுடன் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதாக ரணில் விசனம்

ranil-2912.jpg“நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜனநாயக சக்திகள் பலம் கொண்டதாக அமையவேண்டும்’ என வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எமது நாட்டில் அண்மைக்காலமாக ஜனநாயக முகமூடி அணிந்து கொண்ட சர்வாதிகாரமே தலைவிரித்தாடுவதாக விசனம் தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தையும் அடிப்படை மனித உரிமை மறுப்பு, ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளிலிருந்தும் நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து ஜனநாயக சக்திகளும் தம்மைப்பலப்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும்’ ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; “எம்மோடுள்ள மக்கள் நாம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம்” என்றே கேள்வியை எழுப்பி வருகின்றனர். எம்மோடு இணைந்துள்ளவர்களும் அடுத்த கட்டம் எவ்வாறுள்ளதாக இருக்கவேண்டுமென கேட்கின்றனர். எமது அடுத்த பணி ஜனநாயகத்தை பாதுகாத்து அரச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாகவே இருக்கவேண்டும். இந்தப்பணி அவ்வளவு  இலகுவானதாக இருக்கமுடியாது. ஏனெனில் வன்முறை அரசியல் கலாசாரத்தை எவராலும் தனித்து நின்று போராடி வெல்லமுடியாது. எனவே நாம் முதலில் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். ஜனநாயகசக்திகள் பலமடைந்தால் மட்டுமே அடக்குமுறைகளை தோற்கடிக்கும் வலிமையையும் பெறமுடியும்.

முதலில் எமது கட்சியைப் பலப்படுத்தவேண்டும். அடுத்து எம்மோடு இணையக்கூடிய ஜனநாயக சக்திகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் 2009 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் நாடளாவியரீதியில் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை மேலும் பலமடையச் செய்யும் பொறுப்பு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமே தங்கியுள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். மூன்று மாதங்களுக்கிடையில் இந்தப் பலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த மக்கள் சக்தியை கட்டியெழுப்பியதும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அரவணைத்துக் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் திட்டத்தை மேற்கொள்ள விருக்கிறோம்.

அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரபோக்கு அடக்கு முறைகளுக்குப் பதிலடி கொடுக்கக்கூடிய மக்கள் சக்தியை அணி திரட்டுவதே எமது தற்போதைய பிரதான பணியாகும்.  வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம். அங்கு தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, உபதலைவர் ருக்மன் சேனாநாயக்கா ஆகியோரடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலான பொது வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா , விஜித அபேவர்தன ஆகியோருடன் சேர்ந்து ஏனைய ஜனநாயக சக்திகளை இணைத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் வெற்றிகளோடு நாட்டின் இறைமை, ஜனநாயகம் என்பவற்றை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுயகௌரவத்துடன் செயற்பட விரும்புவதாலேயே அரசுடன் இணைந்து செயலாற்ற முடியவில்லை – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgமுஸ்லிம் சமூகத்தின் சுயகௌரவத்திற்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கெலிஓயா கலுகமுனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றால் தாராளமாக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், சமூகத்தின் கௌரவம் பாதிக்கப்படும் போது எப்படி அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க முடியும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சுயகௌரவத்துடன் செயற்பட வேண்டியுள்ளதாலேயே அரசுடன் இணைந்து செயற்படமுடியவில்லை. அரசிலிருந்து வெளியேறியமையாலேயே தற்போது என்னால் முஸ்லிம் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து செல்ல முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எமது சுயகௌரவத்தை மதித்து நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதனுடன் கூட்டுச்சேர தீர்மானித்தோம். இதனால் நன்மை கிடைக்கும் என்பதும் எமது நம்பிக்கை. மேலும், மாகாண சபைகளில் ஏற்கனவே இருந்த ஆசனங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு. மக்கள் வேட்பாளர்களை நன்கு எடை போட்டு சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முல்லையில் புலிகளின் மோட்டார் தளம், முன்னரங்குகள் மீது விமான தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புலிகளின் மோட்டார் தளம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 24 ரக விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் 59வது படைப் பிரிவுகளுக்கு உதவியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்கு வைத்து நேற்றுக் காலை 10.55 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரணைமடு குளத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த மோட்டார் தளத்திலிருந்தே படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இந்தத் தாக்குதலில் அந்த தளம் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொலை அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக மங்கள சமரவீர எம்.பி. தெரிவிப்பு

mangala_2.jpgகொலை அச்சுறுத்தல் தனக்கு அதிகரித்திருப்பதாகவும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  இது தொடர்பில் கொழும்பில் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையானது உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகங்களை மௌனிக்கச் செய்யுமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு தாக்குதலையும் நான் கண்டிக்கின்றேன். தற்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு கொலை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் என்னை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்துக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் உள்ளது.எனவே என பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவுக்கு கடிதம் எழுதவுள்ளேன். நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு அமெரிக்காவில் பிரஜாவுரிமை மற்றும் கிரின்காட் உள்ளவர்களே காரணமாகவுள்ளனர். எனவே இதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மனுவொன்றை கையளித்துள்ளோம். இதனை அமெரிக்க அரசின் புதிய இராஜாங்க செயலாளரிடம் 20 ஆம் திகதி கையளிக்கவுள்ளோம். இதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தாம் அவரிடம் கேட்கவுள்ளதாகவும் தெரிவித்தார

பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

flag_uk.jpgபிரிட்டனிலுள்ள குடியேற்றவாசிகள் அந்நாட்டுப் பிரஜாவுரிமை பெற விண்ணப்பிக்க 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும். புதிய பரீட்சைகள் மற்றும் நீண்ட நன்னடத்தைக் காலம் என்பவை தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளால் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க குடியேற்றவாசியொருவருக்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசாங்கத்தின் இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் (2009) இறுதிப்பகுதியில் இவை அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யோசனைகளில் “குடிவரவு வரி’ யும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வித்துறை சேவைகளுடன் இந்த வரி மேலதிகமான அழுத்தத்தை குடியேற்றவாசிகளுக்கு ஏற்படுத்தும். தற்போது பிரிட்டனின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதாயின் 6 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும். ஆனால், புதிய யோசனைகளின் பிரகாரம் 10 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.

ஆங்கிலமொழி ஆற்றல், வரிசெலுத்திய பதிவுகள், சமூகத் தொடர்பாடல் பதிவுகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை நிரூபிப்பதை உறுதிப்படுத்துவதாக இந்த நன்னடத்தைக் காலம் உள்ளது. சிறிய குற்றங்கள் மற்றும் பரீட்சைகளில் சித்தியடையாவிடின் நன்னடத்தைக்காலம் மேலும் நீடிக்கப்படும். பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சோதனைகளில் சித்தியடையும் வரை பிரிட்டிஷ் பிரஜையாக வரும் வரை வெளிநாட்டவர்கள் சில அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

சபரிமலையில் கைதான இலங்கை ஐயப்ப பக்தர்களை விடுவிக்க துரித நடவடிக்கை

handcuff.jpgஇந்தியாவின் சபரிமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 20 ஐயப்பபக்தர் களையும் விடுவிப்பதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா நேற்றுத் தெரிவித்தார்.

சபரிமலைக்கு திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கேரள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தார். இதற்கமைய தூதரகத்தின் அதிகாரியொருவர் நேற்றுக் காலை விமானம் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி சென்றிருப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சபரிமலை செல்வதற்காக இந்தியா சென்றிருந்த 28 இலங்கைத் தமிழர்களை கொண்ட குழு திருச்சியிலுள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து கடந்த வியாழக்கிழமை சபரிமலையில் ஏறினர். இக்குழுவினர் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மலையிருந்து இறங்கிக் கொண்டிருக்கும்போதே கேரள பொலிஸாரால் சோதனைக்குள்ளாகியுள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த 08 பேரிடமே கடவுச்சீட்டு உள்ளிட்ட தகுந்த ஆவணங்கள் இருந்துள்ளன. ஆவணங்கள் எதுவுமில்லாத ஏனைய 20 பேரும் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுள் 18 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.

இவர்கள் தமது கடவுச்சீட்டுக்களை திருச்சியில் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளனர். கேரள பொலிஸார் தமிழக பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியதையடுத்து அவர்களது கடவுச் சீட்டுக்களை அனுப்பி வைப்பதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா தெரிவித்தார்.