செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சமாதானப் பணியாளராக இலங்கைக்கு வருகை தர ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் திட்டம்

இலங்கையில் யுத்தநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் பேச்சு நடத்தப் போவதாக வாழும் கலை மன்றத்தின் ஆன்மீகக் குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ள சுவாமி ரவிசங்கர் அங்கு வைத்து இதனைக் கூறியுள்ளதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்தது. அத்துடன், விரைவில் பாகிஸ்தானுக்கும் தான் செல்லப்போவதாக ரவிசங்கர் கூறியுள்ளார்.

சமாதான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வேன். விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளேன். இருதரப்பு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கை, இந்திய அரசாங்கங்களிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அங்கு செல்வேன். ஜனாதிபதி ராஜபக்ஷவையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தனித்தனியாகச் சந்தித்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆன்மீகக் கல்வியானது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை அகதிகள் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்று கௌரவத்துடன் வாழ்வதற்கான சகல முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். இலங்கை அகதிகளின் தொழில், வீடுகள், நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் பாதுகாப்புடன் வெளியேற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

வன்னியில் மோதலில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பொன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பகுதியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட கால வரையறைக்குள் உடனடியாக ஒருதலைப்பட்சமாக மோதல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் கேட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.

அத்துடன், பலவந்தமாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக அவர்களை வைத்திருக்கக்கூடும். ஆனால், இது தொடர்பான சர்வதேசத்தின் அபிப்பிராயம் தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்று சமாதானத்திற்கான தமிழர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சகல பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். அத்துடன், அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தார்மீக உரிமை இந்த நிலையில் உண்டு. தங்களின் தரப்பில் அந்த நடவடிக்கையானது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். நீங்கள் புலிகளுடனேயே போரிடுகிறீர்கள். தமிழ் சமூகத்திற்கு எதிராக அல்ல என்பது குறித்தும் தமிழ் மக்களின் துன்பம் தொடர்பாக மனிதாபிமான ரீதியான கரிசனையை மனதில் அதிகளவுக்கு கொண்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து- எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K
இலங்கைக்கு நான் திரும்பிச் சென்றால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார் என இந்தியாவிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அந்த இணையத்தளம் மேலும் தகவல் தருகையில் மதுரைக்கு வந்த சிவாஜிலிங்கம், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விடயங்களை பின்வருமாறு தொகுத்துத்தந்துள்ளது.

‘வன்னி பகுதியில் தமிழர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இலங்கையில் ஏற்கனவே 3 தமிழ் எம்.பி.க்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நான் நாடு திரும்பினால் தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் தள்ளி கொன்றுவிடுவார்கள். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் இந்தியா வந்தேன். இங்கிருந்தபடியே தமிழ் மக்களுக்காக போராடுகிறேன் என்றார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் இன்று

election-commissioner.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் இன்று (17) தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளது. கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், வாக்குச் சாவடிகள் அமைத்தல் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளது. மேல்மாகாண சபை கடந்த மாதம் கலைக்கப் பட்டதோடு வேட்பு மனுக்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன. தேர்தல் ஏப்ரல் மாதம் முதற் பகுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி:தமிழக பட்ஜெட்

tamilnadu-ass.jpgதமிழகத்தின் நடப்பு (2009-10) ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. நிதி அமைச்சர் அன்பழகன்  9.30மணிக்கு  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இன்று மனிதச்சங்கிலி

1102-vaiko.jpgஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.

நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.

இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
 
 

யாழ்.பல்கலை மாணவர்க்கு விமான டிக்கட்

risard.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ். பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டிய மாணவர் ஆறு பேருக்கு விமான பயணச் சீட்டுக்களும் கைச்செலவிற்கு பத்தாயிரம் ரூபா பணமும் மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்று வழங்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவற்றை வைபவ ரீதியாக மாணவர்களிடம் நேற்று வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கினார். வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் நலன்புரி நிலையங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சுகாதாரம், சமைத்த உணவு விநியோகம், குடிநீர், மின்சார வசதிகள் பற்றியவை மீளாய்வு செய்யப்பட்டது.

வவுனியா பிரதேசத்திற்குள் வந்தவர்கள் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை குடியமர்த்த செட்டிகுளத்தில் நான்கு மாதிரி நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. அது தொடர்பான வேலைத் திட்டங்கள் துரிதமாகவே நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர், அந்த பிரதேசத்திற்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்து வேலைத் திட்டங்களை அவதானித்தார்.

பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எவருக்கும் அனுமதி கிடையாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

election_.jpgஇனிமேல் நடைபெறும் தேர்தல்களின் போது பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது அமைச்சர் டி. எம். ஜயரத்னவுக்கு பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.  இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கலான எட்டு வகையான ஆவணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே இந்த எட்டு வகையான ஆவணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்குவதற்கு இடமளியேன் – ஜனாதிபதி

mahinda1402.jpgஇலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர்களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தாலும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனப்பது உறுதி.

இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிககவனம் செலுத்திவருகிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலாவதியான உணவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும்வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது.  மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவு – ஆலோக் பிரசாத்

alokprasad-pillaiyanbatticalo.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்திய தூதுவர் தனது விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரசஅதிபர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளோம். அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமென மேலுமவர் தெரிவித்தார்.

அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார் அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார். இந்திய அரசாங்கம் அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திசெய்ய பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கூறினார்.