வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார். தனது முன்னாள் கட்சி ஆதரவாளர்களே தன்னைக் கடத்தினார்கள் என அவர் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகரகம கொட்டாவ மத்தேகொடவிலுள்ள தனது வீட்டில் இவர் இருந்தபோதே நேற்று இரவு 9.45 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டினுள் நுழைந்த ஐவர் இவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசரப் பொலிஸ் சேவையான “119′ க்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப்பாடு செய்ததாகவும் ககாத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது பேராசிரியர் திஸாநாயக்க அவரது ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார்.