செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஒலிவாங்கியில் கூறப்படாதவற்றை ஊடகங்களில் வெளியிடத் தடை-சபாநாயகர் எச்சரிக்கை

parliament.jpgஉத்தியோக பூர்வமாக ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத வேளையில் உறுப்பினர் ஒருவர் பேசிய விடயத்தையோ, பிரசுரிக்க வேண்டாம் என கூறப்பட்ட விடயத்தையோ பிரசுரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஊடக நிறுவனத்திற்காக வழங்கப்படும் பாராளுமன்ற அனுமதியும் ரத்துச் செய்யப்படும் என சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கபண்டார நேற்று அறிவித்தார்.

அத்துடன் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ பாராளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமை யில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் குளறுபடிகள் நடந்ததாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன என்று கூறியதுடன், வேண்டுமென்றே தவறான தகவல்கள் வழங்கப்பட்ட தாகவும், நடக்காத ஒரு விடயம் நடந்துவிட்டதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து ஊடகங் களூடாக பிரசாரம் செய்யப்பட்டது என்று குற்றம் சுமத்தினார்.

எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதுடன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஐ.தே.க குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றை திரிவுபடுத்தி சபையில் நடந்த விடயத்தை எடிப் செய்யப்படாத இறுவெட்டுக்களை அனுப்பி ரூபவாஹினியூடாக ஒலிபரப்பினார்கள் என குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஜகத் புஷ்ப குமார எம்.பியே பாராளுமன்றத்தில் தவறான செய்தியை பரப்பிவிட்டார் என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.பி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நான் ஒருபோதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அடித்து விட்டார்கள் என கூறவில்லை. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐ.தே.க. எம்.பி ஒருவர் அவரது தொலைபேசியினூடாக எனக்கு தகவலைத் தந்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர் எந்நேரத்திலும் தாக்கப்படலாம். இங்கு நிலமை மோசமடைந்து கொண்டு வருகிறது” என்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கடமையாக கருதி இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சபாநாயகருக்கு அறிய த்தந்தேன் அவ்வளவுதான் என்றார்.

கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஏன் எமது கட்சிக்குள் இப்படி உட்பூசல்கள் இருப்பதாக ஊடகங்கள் வெளி யிடவில்லையா? ஏன் அரச ஊடகம் மட்டும்தானா இந்த விடயத்தை வெளிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவின் பத்திரிகை கூடத்தானே இதற்கு முக்கிய த்துவம் கொடுத்திருக்கிறது. என சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.“நடக்காத விடயம் ஒன்றை பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் கூறி அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பது தான் தவறு என்கிறேன்” என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு தரப்பினருமே செய்திருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார். ‘இல்லை’ ‘இல்லை’ என ஜோசப் மைக்கில் கூறியபோது “நானும் எதிர்க் கட்சி பிரதம கொரடாவாக இருந்திருக்கிறேன்” என சபாநாயகர் தெரிவித்ததுடன் ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசினார். அவருக்கு ஒலி வாங்கி வழங்கப்படவில்லை. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதால் அவருக்கே ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜகத் புஷ்ப குமாரவுக்கும், தயாசிறி ஜயசேக்கரவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் வழங்கப் பட்டிருக்கவில்லை.

சபாநாயகர் லொக்குபண்டார சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவக சட்ட மூலத்தை சமர்ப்பித்து பேசுமாறு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவாங்கி அமைச்சர் பந்துலவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பேசமுடியாதவாறு சபையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இந்த சந்தர்ப்பத்திலேயே சபாநாயகர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடனும் படைத் தளபதிகளுடனும் சந்திப்பு!

gotabhaya_fonseka_met.png இலங்கை வந்துள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா,  மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரை  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சிலும், இராணுவத் தளபதியுடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்திலும் கடற்படைத் தளபதியுடனான சந்திப்பு கடற்படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.
 
இலங்கை – மாலைதீவின் உறவு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் படிப்படியாக அடைந்து வரும் வெற்றிகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களின் நிலைமைகள், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் இராணுவத் தளபதி மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்ததாக சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத் தளபதி வழங்கி வருவதற்காகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதவியா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் நோயாளர் குறைகளை கேட்டறிந்தார்

padaviya-hospital.jpgவன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் காயமடைந்த பொதுமக்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பதவியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து மேற்படி காயமடைந்த பொதுமக்கள் கடல் மார்க்கமாக புல் மோட்டைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பதவியா நகருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக சுமார் 70 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாசர் மகா வித்தியாலயத்திலுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய வட மாகாண விசேட செயலணியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அம்மக்க ளின் கோரிக்கைகளை ஆராயும் முகமாக தனது பிரதி நிதிகளை அங்கு நியமித்துவிட்டு உடினடியாக பதவியா நகருக்குச் சென்றார்.

பதவியாவில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையத்திற்கு முதலில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ மத குருமார்களுடன் தற்போதைய வன்னி நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் இம்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் பதவியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் வருகையால் பெரிதும் ஆறுதலடைந்த நோயாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

மன்னாரில் இன்று நடமாடும் சேவை

mannar.jpgமன்னார் பொலிஸ் நிலையத்தில் இயங்கும் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவும் மன்னார் சர்வோதயம் ஆகியன இணைந்து இன்று வியாழக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளன..

இந்நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இன்று காலை 9 மணிமுதல் மாலை 05 மணிவரை இடம் பெறவுள்ளது இந்த நடமாடும் சேவையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் ஜெயமஹா பொலிஸ் அத்தியட்சர்கள் வசந்த விக்ரமசிங்க,உதவி பொலிஸ் அத்தியட்சகர் T.D.L.R ஹசன் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பதிகாரி கருணா திலக்க மற்றும் திணைக்கள்கங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 

கிழக்கில் முதற்தடவையாக எட்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் -கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

bandula_gunawardenasss.jpgகிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டரில் இம்முறை நெல் பயிரிடப்பட்டதன் பயனாக 8 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படடுள்ளதாக வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை நுகர்வோர் கூட்டுறவு முறை தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவு நெல் அறுவடை செய்யப்பட்டள்ளது. கடந்த வருடத்தை விட 2 மடங்கு கூடுதலாக இம்முறை கிழக்கில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பாக இழுபறி ரணிலுடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ranil-wickramasinghe.jpgகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் பொருட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது தடவையாகவும் கூடுவதாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

எனினும் நேற்று முன்தினம் மாலை ஐ.தே.க.தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலின்றி கூட்டமொன்று நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட இடமொன்றில் சந்தித்து பேசியுமிருக்கின்றனர்.

முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம்  காலை 9 மணிதொடக்கம் சுமார் 2 மணித்தியாலங்களாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைமைத்துவத்திற்கு எதிராக ஒரு தரப்பால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக காரசாரமான வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையிலேயே அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட முடிவாகியிருந்தது.

நேற்று  முன்தினம் காலை நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் அவ்வாறானதொரு யோசனை செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்தக் கூட்டத்தை நடத்துவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம்  காலை கூட்டமொன்று நடைபெற்றதை உறுதிப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, அதில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்தே பேசப்பட்டதுடன், நேற்று முன்தினம்  காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட எந்தவொரு விடயம் பற்றியும் பேசவில்லையென்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் கூறப்பட்டது.

இதேநேரம், இந்தக் கூட்டத்தின் நிறைவில், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமான இடமொன்றில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இதை எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவர் உறுதிப்படுத்தியதுடன், சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டம் பற்றி கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க, அதன் பின்னரான கட்சித்தலைவருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் கட்சித் தலைமைத்துவம் குறித்து மீண்டும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படக்கூடுமென்பது மட்டுமன்றி, ஏதேனும் தீர்மானங்களும் எட்டப்படக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாளர், திருமதிக்கு இனிமேல் தடை

eu_flag.jpgஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு; திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை முழுப் பெயரையும் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

மேலும், , ‘sportsmen’ என்ற வார்த்தைக்குப் பதில் இனிமேல், ”athletes’ ‘என்று அழைக்க வேண்டும். அதேபோல அரசியல்வாதிகளை குறிப்பிடுவதாக இருந்தால், ”statesmen’ என்ற வார்த்தைக்குப் பதில் ‘political leaders’ எனக் கூப்பிட வேண்டுமாம். அதேபோல ‘man-made’ என்ற பதத்திற்குப் பதில் sportsmen அல்லது ‘synthetic’ என்று கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், fireman, airhostess, headmaster, policeman, salesman, manageress, cinema usherette, male nurse ஆகிய பதங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் waiter’, ‘waitress’ ஆகிய பதங்களுக்கு பொதுவான வார்த்தை இந்த கையேட்டில் பரிந்துரைக்கப்படவில்லை. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்டிராஸ்பர்க் நகரங்களில் நடந்த நிகழ்ச்சியி?ல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 785 உறுப்பினர்களுக்கும் இந்த கையேட்டை, நாடாளுமன்ற செயலாளர் ஹரோல்ட் ரோமர் வழங்கினார்.

இந்த புதிய உத்தரவுக்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. ஸ்டுருவான் ஸ்டீவன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களது பாஷை ஆங்கிலம். அதில் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கே கற்றுத் தருகிறார்கள். இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றார்.

அதேபோல பிலிப் பிராட்பார்ன் என்ற எம்.பி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விட்டனர். எனது பாஷைய எனது இஷ்டப்படிதான் நான் பேசுவேன். இதில் உள்ள ஒரு மாற்றத்தைக் கூட நான் பின்பற்ற மாட்டேன். எனது பாஷையை எப்படி பேச வேண்டும் என எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல முடியாது என்றார் காட்டமாக.

இதை விட முக்கியமாக மேடம் என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இந்த கையேடு தடை செய்கிறது.

சிவிலியன்களின் வருகை மீண்டும் அதிகரிப்பு

navy_civilians.jpgபுலிகள் சிறியதொரு பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதால் அவர்களின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கிச் சூடுகளை மேற் கொண்டும் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களைநோக்கி வருவதைத் தடுத்து வருகின்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 619 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் 478 பொது மக்கள் இராணுவத்தினரிடமும் 139 சிவிலியன்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

478 பொது மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளனர். இவர்களில் 190 சிறுவர்களும் அடங்குவர்.இதேவேளை, பளமாத்தளன் பிரதேசத்திலிருந்து படகுகள் மூலம் 139 பொதுமக்கள் தப்பி பருத்தித்துறை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டபடி வந்த இந்த பொது மக்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். 47 ஆண்கள், 38 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகள் இவர்களில் அடங்குவர்.இதேவேளை ஐயம்பெருமாள் பிரதேசத்தை நோக்கி மேலும் இருவர் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1704 சிவிலியன்கள் கட்டுப்பாட்டு பகுதி வருகை

Wanni_Warமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து 1704 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கி நேற்று மாத்திரம் 1565 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாக படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து 139 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுள் 47 ஆண்களும், 38 பெண்களும், 27 இளைஞர்களும் 27 யுவதிகளும் அடங்குவதாகவும் படையினர் தெரிவித்தனர். இவர்கள் பாதுகாப்பான முறையில் பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப் பட்டதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஸ்ரீகொத்தா கூட்டத்திற்கு செல்லாது ரணில் பகிஷ்கரிப்பு

ranil-wickramasinghe.jpgஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்குவதற்கென ஸ்ரீகொத்தாவில் நேற்று மாலை நடத்தப்படவிருந்த இரகசிய வாக்கெடுப்புக்கு ரணில் விக்கிரமசிங்க சமுகமளிக்கவில்லை.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது கூட்டத்தை ஒத்தி வைத்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக இன்று (18) நடைபெறவுள்ள அரசியல் அதியுயர்பீட கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று மாலை ஸ்ரீகொத்தாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்தும் கூட அவர் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 ஸ்ரீகொத்தாவுக்கு சமுகமளித்த ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை கட்சி உறுப்பினர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவிக்குமிடத்து தலைமைத்துவப் பதவியிலிருந்து தாம் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் தெரிவித்தி ருப்பதாகவும் தெரிய வருகிறது.