செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் மோசமாக அதிகரிக்கும் அபாயம் – பவ்ரல்

எதிரணி அரசியல் கட்சிகளுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதகாரிகள் உடனடியாக மேற்கொள்ளாதுவிட்டால் எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான வன்முறைகள் இடம்பெறும் சூழ்நிலை ஏற்படுமென தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் எச்சரித்துள்ளது.

அத்துடன் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இல்லாத நிலையில் மேல்மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை நீதியானதும் நேர்மையானதாகவும் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு கலாசார, சமய உறவுகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த பவ்ரல் அமைப்பின் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறியதாவது;

எமது அமைப்பு வேட்பு மனு கையளிப்பு ஆரம்பித்த நாள் முதலே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது. நாம் முதல் கட்டமாக தேர்தல் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் முக்கிய பொறிமுறையான நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம்.

இரண்டாம் கட்டமாக அக்குழுவில் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதுடன், அவரையும் உள்ளடக்கும் தேர்தல் குழுவொன்றை பவ்ரல் தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஏற்படுத்துவதாகும். தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளையும் தகவல்களையும் ஆராய்வதற்கான அலுவலகத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக் குழு தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை இணைத்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன. இந்நிலையில், இவற்றுக்கென மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பாளருக்கு உதவும் பொருட்டு தொகுதிவாரியாக பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள 2,299 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒருவர் வீதம் எமது கண்காணிப்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களுக்கான செயலமர்வுகளையும் மாவட்டம் தோறும் நடத்தவுள்ளோம்.

இதற்கு மேலதிகமாக தேர்தல் தினத்தன்று 40 நடமாடும் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தி 200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பதற்காக சேவையில் ஈடுபடுத்துவதும் எமது திட்டங்களாகும்.

மேலும், எமது ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெறும் சர்வகட்சி நடவடிக்கை கூடம் தேர்தல் செயலகத்தில் இயங்கும். அதேவேளை, பிரதேச ரீதியாக நிறுவப்படும் பிரதேச சர்வகட்சி நடவடிக்கை கூடத்திலும் எமது பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள் சார்ந்த சில சம்பவங்கள் தவிர்ந்த ஏனைய பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாது அமைதியான முறையில் இடம்பெற்றது. நாம் அவதானித்ததன் பிரகாரம் 70% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது அதிகரிக்கலாம்.

இதேவேளை, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக சட்ட முறையற்றவிதத்திலான சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுத்ததுடன், வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போட், சாரதி அனுமதிப்பத்திரம், ரயில்வே பருவகாலச் சீட்டு, தற்காலிக அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை என்பவற்றுக்கு அனுமதியளித்துள்ளார்.

இத்தேர்தலில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் அநேகர் மத்தியில் இவை இரண்டுமற்ற வேட்பாளர்கள் கவனிக்கப்படாமல் போவது ஜனநாயக பண்பல்ல. இந்த பண அரசியல் பலம் உள்ளவர்களால் 500 மில்லியன் ரூபா சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு உள்ள நிலையில், இதனை அகற்றுவதற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இட்ட முறையற்ற பிரசாரத்தை அகற்றும் போது மீண்டும் அவை ஒட்டப்படுகின்றன. இதனை நிறுத்த கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒத்துழைப்பு அவசியம்

அத்துடன் பிரச்சினை ஏற்படும்போது சர்வகட்சி மூலம் உடனடியாக தீர்வு காண்பது போல் இதற்கும் தீர்வைக் காணவேண்டும். குறிப்பாக எவ்வித அரசியல் அடிப்படையும் அற்ற கட்சிகளும் குழுக்களும் பெயரளவில் மாத்திரம் தேர்தலில் களமிறங்குவதை மட்டுப்படுத்தாத யாதேனும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்டதோர் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடைய ஆவணத்தை இல்லாமல் செய்யமுடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.2,378 வேட்பாளர்களில் 19 பேரே பெண்களாவர், இது கவலைக்குரியது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் குறைந்தது 30 பெண்களை தெரிவு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். பெண்கள் நிலைமை தொடர்பில் இந்த குறைவான எண்ணிக்கையான வேட்பாளர்கள் மூலம் பாரதூரமான பலவீனமுள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எமது கண்காணிப்பின்போது கொலைச்சம்பவம் ஒன்றுடன் 13 தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ளோம். மொத்தமாக 38 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். ஜே.வி.பி. ஆதரவாளர் கொல்லப்பட்டமை, அவர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளமையை நாம் பதிவுசெய்துள்ள நிலையில், எதிரணி அரசியல் கட்சிகளுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் வருடப்பிறப்புக்கு பின்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் நிலைமை இன்னும் மோசமாகும்.

17 ஆவது அரசியலமைப்பு இல்லாத நிலையில் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இல்லாது முன்னர் போன்று தேர்தல் இடம்பெறுவதால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்காளர் அட்டைகளை மேலதிகமாக விநியோகித்து தேர்தலில் வெற்றிபெற ஆளும் கட்சி புதிய தந்திரம் – ஐ.தே.க. குற்றச்சாட்டு

unp-members.jpg1,33,000 அட்டைகள் சட்ட விரோதமானவை ‘அரசாங்கம் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்ற நிலையில், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் “சட்ட விரோத வாக்காளர் அட்டை’யெனும் புதிய முறையொன்றை அரசு கையாண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி இவ்வட்டைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாதென்ற வகையில் இதற்கு பதிலளிக்க அவர் கடப்பாடுடையவர் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மகாநாட்டில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதுபானக் கடைகள் 13, 14 இல் மூடப்படும்

புத்தாண்டு காலப் பகுதியில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கலால் அத்தியட்சகர் பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களில் மேற்கொள்ளப்பட்ட 1179 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1208 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகளில் சகல மதுபானக் கடைகளும் மூடப்படும். அந்தக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்த கலால் திணைக்கள அத்தியட்சகர், நாடு முழுவதும் திணைக்கள அதிகாரிகள் விசேட கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபானத்தையும், மதுபாவனையையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இது மக்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படுவதால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள், கசிப்பு உற்பத்தி செய்வோர் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் புத்தாண்டு தினங்களில் மதுபோதையில் நடமாடுபவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை புல்மோட்டைக்கு வந்தவர்களில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு புல்மோட்டைக் களவைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட 537 காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட களநிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை27 ஆக அதிகரித்துள்ளது.  கூட்டிவரப்பட்ட காயமடைந்தவர்களில் புல்மோட்டை கள வைத்தியசாலையில் 169 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 90 ஆண்கள், 55 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவர், 147 பேர் (ஆண்கள் 80, பெண்கள் 49, குழந்தைகள் 18) பதவியா அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய். இவர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று 386 பேரும் பதவியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது புல்மோட்டைக் களவைத்தியசாலையில் 22 காயமடைந்தவர்களும் (10 ஆண்கள், 6 பெண்கள், குழந்தைகள் 6) 22 உறவினர்களுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு 98 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

16.3.2009 இலிருந்து 8.4.2009 வரை முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் கூட்டிவரப்பட்டு ஆஸ்பத்திரிகள், நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,468 ஆகும். இவர்களில் 1,164 பேருக்கு புல்மோட்டையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டியபிறகே ஜெய்ஸ்ரீராம் சொல்வேன்: அத்வானி

advanil000.jpgஅயோத்தி யில் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னரே பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்வேன் என பா.ஜ.பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அத்வானி, ராமர் பிறந்த அயோத்தியில் எப்போது கோயில் கட்டி முடிக்கப்படுகிறதோ அப்போது தான் என்னால் மன திருப்தியுடன் பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல முடியும். வரும் தேர்தலில் பா.ஜ.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக தன்னம்பிக்கை காரணமாக 2004 ல் கோட்டை விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ. உதவி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என 3 வது அணியினர் கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளின் வங்கிகளில் மறைந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களில் அவை முதலீடு செய்யப்படும்.

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது பொடா போன்ற தீவிரவாத தடுப்பு சட்டங்களால் தீவிரவாத குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குவங்கி அரசியலுக்காக பொடாவை ரத்து செய்துவிட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. அப்சலை தூக்கிலிடக்கூடாது என எந்த முஸ்லிமும் கோரிக்கை வைக்கவில்லை. அப்சலை தூக்கு தண்டனையை தள்ளிப்போட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அரசு நினைக்கிறது. உண்மையில் இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ

10-naveen.jpgஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில்  காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமங்கள்

rain-wanne.jpgவடக்கில் பெய்யும் மழை காரணமாக  காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும்,  ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேனனுடன் பேச தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு. தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்வதில்லை -கூட்டமைப்பு

tna-mp-22.jpgஇலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

இந்த அழைப்புத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாடு சென்றிருப்பதால் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சோனியாகாந்திக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை நடேசன் மறுப்பு

p_nadesan.jpgஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் பான் கீ மூன் உரையாடல்

mahinda-banki.jpgஇலங்கையில் யுத்தம் காரணமாக நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்பாக இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்