செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களில் 30 ஆயிரம் பேர் மன்னாருக்கு அனுப்பப்படுவர்

Wanni_War_Boat_Refugeesவன்னி யிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் முப்பதாயிரம் பேரை மன்னாருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளனர்.

இவர்களை தங்கவைத்து பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சுமார் 30,000 பேரை மன்னாருக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் இவர்களைத் தங்க வைக்க 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு இவர்கள் அனுப்பப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி, தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் தீவுக்குள் உள்ள 20 பாடசாலைகளில் மக்களை தங்கவைக்க வசதிகள் உள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தேசநிர்மாணத்துறை அமைச்சர் எவ்.எம்.சந்திரசேனா, வடமாகாண ஆளுநர், வவுனியா மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓமந்தைக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை முதல் இடம்பெயர்ந்த மக்களை பஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.

இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.

இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்தேவி சேவை வவுனியா வரையுமே

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் வவுனியா வரையுமே தற்போது நடைபெறுகிறது. வியாழக்கிழமையில் இருந்து யாழ்தேவி ரயில் வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரையும் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் வவுனியாவுக்கு அப்பால் இச்சேவையை நீடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையமும் ரயில் பாதையும் புனரமைக்கப்பட்டது.

யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி நடத்துவதற்கு தொடர்பான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடபகுதி நோக்கிய ரயில் சேவையின் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 100 கைதிகள் இடமாற்றம்

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சுமார் 100 கைதிகள் நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணைகளை அடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் ஆண், பெண் கைதி மற்றும் விளக்கமறியல் கைதிகள் 1600 பேரும், 162 காவலர்களும் உள்ளனர். இக் கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நீதிவான் அநுர செனவிரத்ன மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச சமூகம் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: யாழ் பல்கலைக்கழக ஒன்றியம்

civiling_flee_vanni_02.pngதமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுத்த பிரதேசத்தில் அழிவு, மறுபக்கத்தில் அகதி முகாம்களில் வாடிய வாழ்க்கை, இந்த நிலையில் உள்ள மக்களைக் காப்பாற்றி, நிரந்தரமான அமைதிக்கும், இயல்பான ஒரு வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இனவாத போக்கைக் கண்டித்து, போருக்கு முடிவு கட்ட சர்வதேசம் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் போர் வலயத்திற்குள் பலியாகியிருந்தும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பது பெரும் வேதனையளிப்பதாக இருக்கின்றது என கவலை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வன்னிமக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களினால் தமது மாணவர்கள் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

germany.jpgஇலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.

மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரபாகரன் கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக ‘சப்மறின்’ மூலம் தப்பி ஓடலாம் : கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா

brig_shavendra.jpg
கிளிநொச்சிக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த தயா மாஸ்ரர் தெரிவித்த தகவல்களின் அடைப்படையில் தான் இந்தக் கருத்தை தெரிவிப்பதாக 58வது படையணியின் கட்டளைத் தளபதி சவிந்திர டி சில்வா சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு கூறியுள்ளார். வெள்ளாம் முள்ளி வாய்க்கால் பகுதியில்  சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், சூசை ஆகியோரோடு தங்கியிருக்கும் பிரபாகரன் இறுதி நேரத்தில் தப்பிச் செல்லும் நோக்கத்தோடு கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக `சப்மறின்` வைத்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் முரளிதரன் சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக நியமனம்

karuna_amman.jpgதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெற்ற போது விநாயகமூர்த்தி முரளிதரனை உப தலைவர்களில் ஒருவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சி யாப்பின்படி 5 உப தலைவர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய உயர்ஸ்தானிகர் டில்லிக்கு அழைக்கப்பட்டார்

india.jpgஇலங்கையின் பிந்திய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தை நேற்று வியாழக்கிழமை இந்திய மத்திய அரசாங்கம் புதுடில்லிக்கு அழைத்திருக்கிறது. புதுடில்லியில் ஆலோக் பிரசாத் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து இலங்கையின் வடபகுதியின் பிந்திய நிலைவரம் தொடர்பாக விபரித்ததாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

தமிழ் நாட்டில் இலங்கை விவகாரம் உணர்வலைகளை தீவிரமாக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ள தற்போதைய கள நிலைவரத்தை அறிந்து கொள்ளுதல் உதவும் என்ற எதிர்பார்ப்புடன் உயர்ஸ்தானிகர் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வடபகுதி மோதல் நிலைவரம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்புகளை மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மன்னார் வைத்தியசாலைக்கு மேலும் 225 நோயாளர் வருகை

srilanka_idp.jpgபுல்மோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொகுதி நோயாளர்கள் நேற்று மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு 20 அம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்களில 255 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இதுவரையில் 3000 நோயாளர்கள் வரை மன்னார் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களில் நன்கு குணமடைந்த சுமார் 300 நோயாளர்கள் வரை வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானோர் சிறுவர்களும் பெண்களுமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.