செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மிஹிந்தலையில் காணாமல்போன சிறுமி நேற்று சடலமாக மீட்பு – 42 வயது நபர் கைது; தாய்க்குத் தொடர்பு?

மிஹிந் தலை பிரதேசத்தில் காணாமல் போன ஆறு வயது சிறுமி நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்ஷனிகா லக்ஷானி குணரட்ன என்ற பெயருடைய இந்தச் சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே நேற்றுக் காலை 9.00 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 06ம் திகதி சனிக்கிழமை இந்தச் சிறுமி மிஹிந்தலை கசமடாவ பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாகவும் இரண்டு தினங்களுக்குப் பின்னர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்டுள்ள சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல்வேறு பாலியல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவ வீரரொருவரான இச்சிறுமியின் தந்தை இராணுவத்திலிருந்தபோது விடுமுறையில் வந்து மீண்டும் சேவைக்குத் திரும்பாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டதுடன் கடந்த பொஸன் போயா தினத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்று வந்துள்ளார். இச்சம்பவத்துடன் சிறுமியின் தாய்க்கும் தொடர்பிருக்கலாம் என சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோனின் ஆலோசனைக்கிணங்க மிஹிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வடக்கில் தற்காலிக அடையாள அட்டை

election_ballot_.jpgவடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை இல்லை என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது. சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு,  சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் 25 இடங்களில் நாளை மின்வெட்டு

மட்டக் களப்பு மாவட்டத்தில் 25 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு நாளை வியாழக்கிழமை அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.00 மணி முதல் 5 மணி வரை சத்துருக்கொண்டான், மைலம்பாவெளி, ஏறாவூர் நகரம், மீராங்கேணி, சதாம்ஹுசைன் கிராமம், மிச்நகர், செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச் சேனை, கரடியனாறு, ஆயித்திய மலை, உன்னிச்சை, கித்துள், மரப்பாலம், உறுகாமம், கொம்மாதுறை, கழுவங்கேணி, மாவடிவேம்பு, சித் தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கிண்ணையடி ஆகிய 25 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

உலக கிண்ண போட்டிக்கான புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

new-stadium.pngதென்னா பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்  போட்டிக்காக அமைக்கப்பட்ட புதிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கு நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு ஐந்து புதிய கால்பந்தாட்ட விளையாட்டு  அரங்குகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட புதிய கால்பந்து அரங்கு போர்ட் எலிஸபத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. “நெல்ஸன் மண்டெலா பே” என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கு 48,000 ஆசனங்களை கொண்டுள்ளது.

இங்கு 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் காலிறுதி மற்றும் மூன்று, நான்காம் இடங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் உட்பட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் இங்கு முதல் விளையாட்டாக பிரித்தானிய அயர்லாந்து லயன்ஸ் அணிகள் மோதும் ரக்பி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய கொடி எரிப்பு-வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன்

தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை  உயர்நீதிமன்றம்  வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.

இந்த அமைப்புகளின் சார்பில், மே 24ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தமிழரசன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் எட்டு பேருக்கும் உள்ளூர் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை நீதிபதி ரகுபதி  விசாரித்தார். பின்னர் வித்தியாசமான நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்தார். அந்த வித்தியாசமான நிபந்தனை என்னவென்றால், எட்டு பேரும் ஒரு மாதத்திற்கு தங்களது வீடுகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

ஒரு வாரத்திற்கு, தினமும் 3 மணி நேரம் அனாதை இல்லத்திற்கு சென்று பொது சேவை செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு அந்தக் கொடியை ஏற்றி வர வேண்டும் என வித்தியாசமான தண்டனை கொடுத்தது நீதிமன்றத்தில் பலரையும் வியப்படைய வைத்தது.

சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா

07sivageetha.jpgமட்டக் களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மத்திய குழு தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது.

அக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

லெபனான் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி அபார வெற்றி

election_ballot_.jpgலெப னானில் நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் சாத் ஹரிரி தலைமையிலான  கூட்டணி அபார வெற்றியைப்  பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் தமது கூட்டணியான 14 மார்ச் முன்னணி தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்குமென அதன் ஹரிரி தெரிவித்துள்ளார். வேளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஹரிரி தலைமையிலான கூட்டணி 128 மொத்த ஆசனங்களில் 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஹிஸபுல்லா அமைப்பு 57 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன் அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 128 ஆசனங்களில் ஹரிரியின் கூட்டணி 70 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாஹ் முன்னணி 58 ஆசனங்களையும் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும்; வெற்றிபெற்ற அணி எதிர்பார்த்ததைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாக பெற்றுள்ளது.

இங்கு வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் என எவருமில்லை. லெபனானும் ஜனநாயகமுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதெனத் ஹரிரி தெரிவித்துள்ளார். 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த அதேவேளை, 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் அதிகாரப்பகிர்வு அரசியல் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தின் 128 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்: ஆனந்தசங்கரி

007anandasangaree.jpg“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் முதல் எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே” என ஜனநாயக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்குத் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒருநாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர். புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து கொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொள்ள எவ்வித அருகதையும் கிடையாது. அவ்வாறு இணைந்தால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ்க் கூட்டமைப்பைப் போல் விலைபோக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்” என்றார். 

வடமாகாண முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் ரவூப் ஹக்கீம் பின்னால் ஒருபோதும் செல்லமாட்டார்கள்

rizad_baduradeen1.jpgவட மாகாண முஸ்லிம்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ள அவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையும் தன்மானமுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லமாட்டார்களென தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன், எதிர்க் கட்சியில் இருந்து நாம் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் எமது சமூகம் எங்கு சென்றிருக்கும் எனவும் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்படைகளினதும் பொலிஸாரினதும் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு கூறினார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விழா, கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாது என்று வெளிநாட்டு சக்திகளின் தயவை நாடி சில கட்சிகளும் அமைப்புகளும் செயற்பட்ட போது அதற்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்று செயற்பட்டதன் பிரதிபலனை எமது மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.  மூதூரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், கந்தளாய் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். இம் மக்கள் வெளியேறி வந்த போது பட்ட துன்ப, துயரங்களை நான் நேரடியாகக் கண்டவன்.

இம் முஸ்லிம் மக்களின் நிலையை நான் ஜனாதிபதிக்கு நேரடியாக எடுத்துக் கூறியதையடுத்து அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட போது இவர்களைக் குடியமர்த்த வேண்டாம். முதலில் சாம்பூர் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் பேசினார். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை உணர்ந்து கொள்ள முடியாத தலைமைத்துவமான ஸ்ரீ.ல.மு.கா. எப்படி வடமாகாண முஸ்லிம்களினதும் விடிவுக்கு செயற்படப் போகின்றது? தமது பதவியையும் அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கும் சுயநலப் போக்குக் கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் நாம் சென்றிருப்போமெனில் வடமாகாண முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றப்பட்டிருப்பார்கள்.

பிரதேசவாதமும், ஊர்வாதமும், தெளிவற்ற கொள்கையும், பேசி மக்களை ஏமாற்றி, ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலம் சுய நலத்தைத் தக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பைப் பேணி அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது தனிப்பட்ட சுயநலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சமூகத்தின் விடிவுக்காக பாடுபடுவதைப் போன்று முகம் காட்டுபவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும் மதிப்பிடப்படமுடியாதவை அவற்றுக்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாக மாறிவிடாது. எவ்வித அரசியல் அதிகாரமுமின்றி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்துக்கென சாதித்தவை பெற்றுக் கொடுத்தவை, எதுவும் இல்லை.

மறைந்த தலைவர் அஷ்ரப் தமது ஆளுமையினால், இலங்கை அரசியலில் முக்கியமான நிலையில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகள் பல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோரம் போகும் தற்போதைய ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவம் தவறான பாதையில் செல்கின்றது என்பதை அறிந்தும் அதன் பின்னால் செல்வதில் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

வவுனியா இராணுவ முகாம் ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

007vauniya.jpgவவுனி யாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இராணுவத்தின் 211 ஆவது படை தலைமையகத்தின் ஆயுத களஞ்சிய சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தலைமையகம் இராணுவ முகாமிற்கும் விமான படை முகாமிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டமையினால் நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது. நகரத்திற்கு வருகைதந்திருந்தவர்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளை நோக்கி விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது

புகைப்படம்: லங்காதீப