மிஹிந் தலை பிரதேசத்தில் காணாமல் போன ஆறு வயது சிறுமி நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்ஷனிகா லக்ஷானி குணரட்ன என்ற பெயருடைய இந்தச் சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே நேற்றுக் காலை 9.00 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 06ம் திகதி சனிக்கிழமை இந்தச் சிறுமி மிஹிந்தலை கசமடாவ பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாகவும் இரண்டு தினங்களுக்குப் பின்னர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்டுள்ள சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல்வேறு பாலியல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் இராணுவ வீரரொருவரான இச்சிறுமியின் தந்தை இராணுவத்திலிருந்தபோது விடுமுறையில் வந்து மீண்டும் சேவைக்குத் திரும்பாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டதுடன் கடந்த பொஸன் போயா தினத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்று வந்துள்ளார். இச்சம்பவத்துடன் சிறுமியின் தாய்க்கும் தொடர்பிருக்கலாம் என சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் பற்றிய விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோனின் ஆலோசனைக்கிணங்க மிஹிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.