எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆற்றல் மிகு சமூகத்தை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க முடியும் – பிரதமர் மகளிர் தின செய்தி

International_Women_Dayஅறிவு, ஆற்றல்மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றி னை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன் முறைகளை ஒழிக்க முடியுமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“பெண்களுக்கு எதிரான இம்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அணி திரளுவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெளத்த விழுமியங்களை பாதுகாத்துவந்த தாய்மார்களை புத்தர் நிலையில் வைத்து மதிக்கப் பழகியுள்ள எமது பண்டைய சமூக முறையை மீண்டும் உயிர்ப்பிக்க காலம் பிறந்துள்ளது என்பதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எழுந்துள்ள தற்கான காரணம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையாகும்.

பெண்களுக்கு எதிரான இம்சைகளை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் திட்டங்கள் என்பவற்றை மேற்கொண்ட போதிலும், இதுவரையில் பெண்களுக்கு எதிரான அசாதாரணங்களை கட்டு ப்படுத்துவதற் கோ அல்லது பூண்டோடு இல்லாதொழிப்பதற்கோ இயலாது போயுள்ளது.

சட்ட திட்டங்கள், ஒழுங்கு விதிகள் என்பவற்றினூடாக மாத்திரம் இப்பணியினை நிறைவேற்ற முடியாது. அதற்காக மனிதர்களை ஆன் மீக உணர்வுகளின் மூலம் போசித்து அறிவு, ஆற்றல் மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றினை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இங்கு இலங்கைப் பெண்களும் சமூக விழுமியங்களை கடைபிடித்து தமது வாழ்க்கை முறையை சீரமைத்துக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுதல் வேண்டும். மொத்த சனத்தொகையில் சுமார் 52% வீதமான பெண்கள் நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெற்றுத்தருகின்ற பாரிய பங்களிப்பினை இங்கு நினைவுகூருவதுடன் பெண்களுக்கு இம்சைகளின்றி உயிர்வாழ்வதற்கான சூழல் ஒன்றினை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சர்வதேச மகளிர் தின நினைவு விழாவின் நடவடிக்கைகள் சகல வழிகளிலும் வெற்றியளிக்க வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் கெளரவத்துடன் வாழும் சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மகளிர் தின செய்தி

International_Women_Dayபெண்கள் கெளரவமாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிப்பதற்கு அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் என்ற வகையில் புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்கும் இந்த வேளையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை விடுக்கக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“பெண் சமூகத்தின் கெளரவத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பெண்கள் மீதான இம்சைகளை ஒழிப்பதற்கு ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானதெனக் கருதுகிறேன்.

சமூக கட்டமைப்புக்கு வலுவூட்டும் குடும்பம் என்ற அங்கத்தின் முதன்மையான இடம் தாய்க்கு உரியதாகும். மஹிந்த சிந்தனையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தாலும், வறுமையினாலும், மதுபானத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அரசாங் கம் இதனைப் புரிந்துகொண்டுள்ளது. “மதுவுக்கு முற்றுப் புள்ளி” வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நிம்மதி அடையும் பெண்கள் அநேகர்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான இராணுவ கட்டமைப்பு புலிகளை வெற்றிகொள்ள உதவியது – ஜனாதிபதி

mahi-trnco.jpgமரபுவழி இராணுவத்துக்கு கெரில்லாயுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைப் படையினரை மரபுவழி இராணுவமாகவன்றி மனிதாபிமானப் படையினராகக் கட்டியெழுப்பிய தன் மூலமே வடபகுதி நடவடிக்கையில் வெற்றிவாகை சூட முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விமானப் படையினருக்கு வர்ணவிருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை சீனன் குடாவில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். விமானப் படையின் நான்கு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் 30 உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

தாய்நாட்டின் ஐக்கியத்தையும், கெளரவத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறார்களென்று பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் உலகப் படையினருக்கு ஒரு முன்மாதிரியாக இலங்கை விமானப்படையினர் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எதிரியின் இலக்கை மாத்திரம் துல்லியமாக இலக்கு வைக்கும் நமது விமானப் படையினர் ஒரு போதும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுக் கட்டடங்களை இலக்கு வைத்தது கிடையாது. அந்தளவுக்கு எமது படையினர் ஒழுக்கமுடையவர்களாக உள்ளனர். உலகின் முதலாந்தர பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தை எமது படையினர் இன்று மண்டியிட வைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்களிப்பை விமானப்படையினர் ஆற்றியிருக்கிறார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைத்தளபதிகள் அவர்களின் பாரியார்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- வடக்கில் எமது இராணுவ முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது விமானப் படையினர் பாரிய சேவையை வழங்கியிருக்கிறார்கள். படையினர் போக்குவரத்து, கடல் கண்காணிப்பு போன்ற விடயங்களில் அளப்பரிய சேவைகளைப் புரிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்புகளை மீட்பதில் தரைப்படையினருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தரை, கடல் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், தற்கொலைப் படகுகள் போன்றவற்றை அழிப்பதில் பாரிய பணியாற்றியிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வன் போன்ற தலைவர்கள் மெளனமாக்கப்பட்டபோது எமது விமானப்படையினரின் திறமைக்கே பாராட்டு கிடைத்தது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அமெரிக்க வேலையில்லாதோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது

worker.jpgஅமெரிக் காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

புதுமாத்தளனில் பட்டினிச்சாவு என்ற செய்தி முல்லை மருத்துவரின் அடிப்படையற்ற கருத்து – சுகாதார அமைச்சின் செயலர் விளக்கம்

logo_health.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.

எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.

எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.

எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.

இறையாண்மைக்கு எதிரான கருத்து: நாஞ்சில் சம்பத் கைது

nanjilsampath.jpgமதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை சென்னையில் கைதுசெய்யப்பட்டார்.  இம்மாதம் முதல் தேதியன்று திருப்பூரில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு உருவாகவேண்டும் என்றும், டெல்லியில் அதன் தூதரகம் அமைய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதற்குப் போராட வேண்டும் என்றும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்கு 500 மெ. தொன் உணவு – இன்று தரையிறக்கம்

ship.jpgபுதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.

இன்று (08.03.09) அகில உலக பெண்கள் தினம்! : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

International_Women_Dayஇன்னும் இரு வருடங்களில் ‘அகில உலக பெண்கள் தினம் நூற்றாண்டு விழா’ எடுக்கவிருக்கிறது. 98 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினமான இன்று கிட்டத்தட்ட 61 நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள், ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் நிறையப் பயன் பெற்றவர்கள் பெண்கள் எனபது மறுக்க முடியாத உண்மை. கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களும் (முதலாம் உலக யுத்தம்1914-1919, இரண்டாம் உலக யுத்தம் 1939-1945) பெண்களின் வாழ்க்கை மாற்றமடைய முக்கிய காரணிகளாகவிருந்தன. ஆண்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற போருக்குச் சென்றார்கள். அதே நேரம் பெண்கள், இதுவரையும் ஆண்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் செய்த அரசியல், தொழிற்சாலை வேலைகளையும், போருக்கான ஆயுத உற்பத்தி வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டார்கள்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இதுவரை பெண்களின் நிலையில் பல முன்னேற்றங்கள் பெரும்பாலான ரீதியில் மேற்கு நாடுகளில்  ஏற்பட்டாலும் வளர்ச்சியடையாத, வளர்ச்சியடையும் பல நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையில் பெரிய விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று உலகில் அதி தீவிரமாக வளர்ந்து வரும் ‘அடிப்படைவாதக் கொள்ளைகள்’ (பெரும்பாலும் சமய ரீதியானது சில கொள்கைகள் இன ரீதியானவை) பெண்களை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிது.

ஓரு சமுதாயத்தின் கலாச்சார, சமயப் பாதுகாவலாளார்களாகப் பெண்கள் கணிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடைகள், வாழ்க்கை முறை என்பன கலாச்சாரப் பிணைப்பு, கலாச்சாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற பெயரில் ஆண்களால் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் பெண்ணினம், இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆணினம் பொறாமைப்படுமளவுக்குக் கல்விப் படிப்பில் மட்டுமல்லாது, பல தொழிற்துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றததைக் கண்டிருக்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட சிறு தொகையினர் அரசியற் தலைவிகளாக வந்திருக்கிறார்கள்.படை வீரர்களாகப் பணி புரிகிறார்கள். விஞ்ஞானிகளாக விண்ணில் பறக்கிறார்கள்.

ஆனாலும் இன்று, ”பெண்ணியம்” என்ற கோட்பாடு ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாது ஒடுக்கபட்ட அத்தனை மக்களுக்கும் போராடும் ஒரு தத்துவ நியதியைக் கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் மட்டும் தாங்கள் சரியென நினைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தப் பெண்ணிய வாதத்தையும் பெண்ணிய தத்துவங்களையும் கையாடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பல திசைகளிலுமிருந்தும் வருகின்றன.

என்னதான் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பெண்ணிய சிந்தனைகள் பல மாற்றங்களை முன்னெடுக்க முனைகிறது. பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் உண்டாக்கவும் தொழில் நிலையங்களில் சம உரிமை, சம ஊதியம் பெறவும் இப்போராட்டஙகள் உதவுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் ஆண்களின் ‘உடமைகள்’ என்ற சட்டம் இருந்தது. இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டு, மனைவியின் சம்மதம் இன்றி அவளை அவளின் கணவர் தொடுவதும் இன்று சட்ட விரோதமாகியிருக்கிது.

இப்படி எத்தயையோ மாற்றங்களைக் கண்டாலும், பெண்கள் உண்மையாகவே தாங்கள் போராடும் ‘சமத்துவத்தை’ அடைந்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் அந்தப் பெண்களின் கணவர் அல்லது காதலனாற் கொலை செய்யப்படுகிறாள். ஓவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியற் கொடுமைக்காளாகிறார்கள். சமய. குடும்ப கவுரவம் என்ற பெயரில் பல பெண்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்களாற் கொலை செய்யப்படுகிறார்கள்.

வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களாகப் பெண்கள் விலை பேசப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள்.

வளர்ச்சியடையாத நாடுகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களால் அவதிப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். வசதி படைத்த நாடான அமெரிக்காவிலேயே மிகவும் கொடிய வறுமையை அனுபவிப்பவர்கள் கறுப்பு இனப் பெண்களாகும். ஆனாலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பெண்கள் எப்போதும் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள்.கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் பெண்களின் பங்கு எப்படி முன்னிலை வகித்தது என்பது சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும்

1861-65  வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னால் நடந்த சமுதாய, பொருளாதார மாற்றங்கள் அமெரிக்காவில் பல மாற்றங்களை உண்டாக்கின. பெண்களும் சொத்துடமை வைத்திருக்கலாம் (கோன் வித் த விண்ட் என்ற படம் இதற்கு ஒரு உதாரணம்) என்பது போன்ற அடிப்படைச் சட்டங்கள் பெண்களின் வாழ்க்கை மாற்ற மடையவும் பொருளாதாரத்தில் உயர்நிலை காணவும் உதவின.

அத்துடன் 19ம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் இரஷ்யாவில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய மார்க்சியப் புரட்சிக் கருத்துக்கள் மேற்கத்திய பெண்களின் போராட்டத்திற்கும் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கம் வித்திட்டதா என்பது பற்றியும் பல ஆய்வுகள் செய்யலாம்.

பெண்கள் தங்கள் சம உரிமைக்கான போராட்டத்தை தொடங்க முதல் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் (1869) ஜோன் ஸ்ருவார்ட் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆண் பாராளுமன்றவாதியாகும்.

1893ல் பிரித்தானியக் காலனியாகவிருந்த நியுசீலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமையளிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பல போராட்டங்களுக்குப் பின்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரவேசம் மிகவும் குறைந்த நிலையியே இருக்கிறது. இவவருடம், சவுதி அரேபியாவில் முதற்தடவையாக ஒரு பெண் பிரதி நிதித்துவம் பெற்றிருக்கிறார்.

இன்று நடைமுறையிலிருக்கம் பெண்ணிய சிந்தனைகளுக்க வித்திட்டவர்கள் அமெரிக்கப் பெண்கள் என்றால் அது மிகையாகாது.

1909ம் ஆண்டு, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்த உடுப்புத் தொழிற் சாலையிலிருந்த பெண்களின் ஞாபகார்த்தக்கூட்ட அணிவகுப்பாக சோசலிசப் பார்டடியைச் சேர்ந்த பெண்களாற் தொடங்கிய (28.2.1909) இந்த நிகழ்ச்சி அகில உலகப்பெண்கள் தினம் என்று உருவாகியது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த முதலாவது பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்காக ஒரு தினத்தை விசேடமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஜேர்மனிய நாடடைச் சேர்ந்த சோசலிஸ்ட் பார்ட்டி அங்கத்தவரான கிலாரா ஷெட்கின் என்ற பெண்மணியாற் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த அகில உலகப் பெண்கள தின விழாக்களும் அதன் வளர்ச்சியும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் பெண்கள் தின விழாவை ‘அகில உலக மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.  உலகம் பரந்த விதத்தில் பார்த்தால் பெண்களின் அரசியற் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. ஆண்கள் தந்கள் அதிகாரத்தை நிலை நிறுததப் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

இன்று, பெண்கள் தினத்தன்று, தென்னிந்திய வியாபாரிகள் இவ்வினத்தை ‘மலிவு சேலை வியாபார’ தினமாக நடத்துகிறார்கள். மலிவான சேலைக்குள் பெண்ணிய சிந்தனைகளைச் சுருட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தியப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்னும் 33 விகிததிற்கு வரவில்லை. மத வெறி பிடித்த – (பெண்ணைத் தெய்வமென மதிக்கும்)  இந்து தீவிரவாதிகளன் கொடிய பாலியல் வெறிக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றக்கணக்கான தலித் பெண்கள் பலியாகிறார்கள்.

பாலஸ்தினியாவின் காஷாப் பகுதியிலும் சூடானின் டாவோர் அகதி முகாமிலும் ஆயரக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் படும் துயர் சொல்ல முடியாதவை.

இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழப் பெண்களும் குழந்தைகளும் போர் சூழ்நிலைக்குள் அகப்பட்டு சொல்லவொண்ணாத் துயரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கிழக்கிலங்கைப் பெண்கள் பலர் பாதுகாப்புப் படையின் பாலியற் கொடுமைக்காளாகித் துன்பப்படுகிறார்கள். இவை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியவை. இவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்பட அரசியல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படப் பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.