* 156 ஏக்கர் நிலப்பரப்பு * றகர், உதைபந்தாட்ட மைதானத்தில் 3000 பேர் அமரும் வசதி * மெய்வல்லுனர் போட்டிகளை 10,000 பேர் கண்டுகளிக்கலாம் * முதற்கட்டப்பணி ஏப்ரலில் பூர்த்தி
ஹோமாகம, தியகம பகுதியில் 156 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
சூழலுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை நிர்மாணிக் குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் கூடியதாக அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு மெய் வல்லுநர் போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல், ரகர் மைதானம் உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், குறிபார்த்துச் சுடும் பிரிவு என்பனவும் நிர்மாணிக்கப் பட்டு வருகின்றன.
இது தவிர விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கான உடற் பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது. சூழலுக்கு உகந்த வகையில் இயற்கையான சூழலுடன் கூடியதாக இந்த நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு தென்னை, இளநீர், மாங்காய், நாக மரம் என்பனவும் நடப்படவுள்ளன. இங்கு பசுமை வலயமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரகர் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் கண்காணிக்கக் கூடியவாறு பார்வையாளர் அரங்கும் நிர்மாணிக்கப்படும். இத்தோடு மெய்வல்லுநர் போட்டிகளை 10 ஆயிரம் பேர் கண்டு களிக்கக் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளன.
முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நிர்மாணப் பணிகளை இராணுவத்தின் 7ஆவது பொறியியல் சேவைப்படையணி முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய முதலாவது சர்வதேச விளையாட்டு மைதானம் இதுவாகும்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், விளையாட்டு அமைச்சின் செயலாளர் எஸ். லியனகம, கடற்படை உப லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் விளையாட்டு மைதானத்தை பார்வையிடச் சென்றனர். இதே வேளை பிலியந்தலை மடபாத பகுதியில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி நேற்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.