எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எஞ்சிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைய வேண்டும் – ஜனாதிபதி

mahinda.jpgஎஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரிடம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.தங்களது பிடியிலுள்ள அப்பாவி பொதுமக்கள் சகலரையும் உடனடியாக விடுவிக்குமாறும், பொது மக்கள் அச்சம் பீதியின்றி வாழ இடமளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

ஐ. ம. சு. முன்னணியின் தெஹிவளை, இரத்மலானை, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கொலன்னாவை ஆகிய தொகுதிகளின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.  இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நாட்டை ஐக்கியப்படுத்தும் பணியில் எமது படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.  இதன் மூலம் பாரிய வெற்றிகளை அடைய முடிந்திருக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்தும் மனிதாபிமானப் பணிகள் அடுத்துவரும் சில தினங்களுக்குள் பூர்த்தியாகும்.

பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள அப்பாவி மக்களைக்கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத் தலைவர் செயற்படுகிறார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து, வழி தவறி ஆயுதம் ஏந்தியுள்ள எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் சகலரும் ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவத்தினரிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். தங்களது பிடியிலுள்ள பொது மக்களை விடுவிக்க வேண்டும். பிரபாகரனும் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பொது மக்கள் அச்சம், பீதியின்றி வாழ இடமளிக்கப்பட வேண்டும்.

மாவிலாற்றைத் திறப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. வட பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டது. பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்ற மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

புலிகளின் பிடியிலிருந்து வடக்கு, கிழக்கையும் அங்கு வாழும் மக்களையும் விடுவிக்கவென நாம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டோம். இருப்பினும் அந்த அழுத்தங்களைக் கண்டு எமது நடவடிக்கைகளை நாம் இடைநிறுத்திவிடவில்லை. எமது தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் அடைகின்ற வெற்றிகளைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் புலிகள் இயக்கத்தினருக்கு நாட்டை எழுதிக் கொடுத்தவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ரி. 56 ரகத் துப்பாக்கிகள் 5000 ஐயும், ரிசேர்ட், தொப்பிகள் மற்றும் பெனியன்களையும் வழங்கினார். அவர்கள் பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தனர். அவர்களது ஆட்சிக்காலங்களில்தான் புலிகள் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். வடக்கு, கிழக்கை விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவுமே இடை நிறுத்தப்படவில்லை என்றார்.

புலிகளின் ஏழு சிரேஷ்ட தலைவர்கள் 3 தினங்களில் 420 புலிகளின் சடலங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpg
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல் களில் புலிகளின் முக்கிய தலைவர்களான தீபன், விதுஷா, துர்கா, நாகேஷ், கடாபி மற்றும் மணி வண்ணன் உட்பட 250ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பானு படையினரின் இந்தத் தாக்குதல்களில் படுகாய மடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த மூன்று தினங்கள் மாத்திரம் நடத்திய தாக்குதல்களில் 420 ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப் பட்டுள்ளதுடன் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, கனரக ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து முக்கிய தலைவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் அடங்குவர், நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர்.

கடாபி, பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார். புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களின் போது புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மான், தீபன் மற்றும் பானு ஆகியோர் களமுனையில் படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக் கையில் பங்கு கொண்டுள்ளனர்.

இவர்களில் பானு நேற்றைய தினம் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்து ள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள் ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது மற்றும் 58வது படைப்பிரி வினர்களும், எட்டாவது அதிரடிப் படையினரும் இணைந்து புலிகளை பலமுனைகளில் முற்றாக சுற்றிவளைத்து கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 120 புலிகளின் சடலங்களை 53 வது படைப் பிரிவினரும், 140 சடலங்களை 58வது படைப்பிரிவினரும் கண்டெடுத்துள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்தப் பிரதேசத்திலிருந்து 130 மி.மீ.ரக பீரங்கிகள்-03, 85 மி. மீ. ரக பீரங்கிகள்-01, 30 மி. மீ. ரக பெடல் துப்பாக்கி -01, சுமார் 600 தொடக்கம் 700 வரையான சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான 12.7 மி. மீ. ரக ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு முதன் முதலில் முழுமையாக படையினர் வசம் – 420 புலிகள் பலி

puthukku-05-04.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் நேற்று தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளுடனான கடந்தகால யுத்த வரலாற்றில் புதுக்குடியிருப்பு முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை இதுவே முதற் தடவையாகும் என்று தெரிவித்த அவர், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53வது, 58 வது படைப்பிரிவினரும், இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக நடத்திய கடும் தாக்குதல்களுக்கு பின்னர் படையினர் நேற்றுக்காலை இந்தப் பிரதேசம் முழுவதையும் முற்றாக விடுவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினர் பல முனைகள் ஊடாக முன்னெடுத்த வெற்றிகரமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்தது. இவற்றில் 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அறிவித்திருந்த பாதுகாப்பு வலயமாகும்.

பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டி இருந்தது. நேற்றைய தினம் நடத்திய இறுதிக் கட்ட கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் தற்பொழுது புதுக்குடியிருப்பு முழுவதும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, எட்டாவது அதிரடிப்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப் பிரிய ஆகியோர் தலைமையிலான படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் புலிகளின் இதயமாக புதுக்குடியிருப்புப் பிரதேசமே கருதப்பட்டது. புலிகளின் பிடியிலிருந்த ஒவ்வொரு கோட்டைகளையும், தலைநகர்களையும் பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் இழந்த புலிகள் தற்பொழுது தங்களது பிரதான கோட்டையையும் இழந்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பிரதேசத்திற்குள் தற்பொழுது ஊடுருவியுள்ள புலிகள் அங்குள்ள பொது மக்களை கேடயங்களாக பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை விடுவி க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

எஸ். பி. ஜமால்தீன் நேற்று சுட்டுக்கொலை

jamaldeen.jpgமட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எச். எல். ஜமால்தீன் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது சொந்த ஊரான மருதமுனையில் வைத்து இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே காலமானாரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கருகில் மறைந்திருந்த சிலர் இவர் மீது சரமாரியாகச் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சடலம் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் நேற்றிரவு வைக்கப்பட்டிருந்தது. 1955ம் ஆண்டு பிறந்த இவர், கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின் பழைய மாணவராவார்.சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான இவர், தற்போது அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராவார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

1,14,000 பேருக்கு தே. அடையாள அட்டை

மேல்மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள் ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்தது.

மேல்மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள சகல விண்ணப்பதாரி களுக்கும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ. பி. தர்மதாச தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் கூடுதலானவர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இருந்து 51 ஆயிரம் பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 39 ஆயிரம் பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 23ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 50 ஆயிரம் பேருக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார். தேர்தலை முன்னிட்டு மேல் மாகாண விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

இடி, மின்னல் தாக்கம் மோசமடையும் ஆபத்து. இதுவரை ஐவர் பலி; மக்களுக்கு எச்சரிக்கை

lighting.jpgஇடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் நேற்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. தற்போதைய இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும், அதனால் மழை பெய்யும் வேளைகளில் திறந்த வெளிகளில் நடமாடுவது, விளையாடுவது, வீட்டில் மின்பாவனைப் பொருட்களை பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது போன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கம் காரணமாக இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா குறிப்பிடுகையில், இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சிலவாரங்களுக்கு நீடிக்கும் அதனால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொது மக்கள் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

பிற்பகலிலும், மாலையிலும் இடி, மின்னலுடன் நாட்டில் பரவலாக மழைபெய்யும் இதேவேளை தெற்கு, தென்மேற்கு கடற்பரப்பிலும் இடைக்கிடையே மழை பெய்யும். காற்று வடகிழக்காக வீசும், கடலும் சிறிய கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என்றார்.

பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷியா மசூதி ஒன்றின் அருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

சக்வால் நகரத்தில் இடம்பெற்ற மத வைபவத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியின் முன்பாக ஒரு சிறுவனே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் எதிராக கோஷமிட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்

நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கப்படும்:அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிப்பு

karuna.jpgநாட்டில் அனைத்து இனமக்களும் எப்போதும் எங்கும் சுதந்திமாக நடமாட வழிவகுப்பதே எனது நோக்கமாகும் என புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான தமது அமைச்சின் செயலகத்தை o4 பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைத்து கடமைகளைப் பொறுப்பேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

“கடந்த இருபத்தைந்து வருட காலமாக இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வில்லாத ஒரு நிலை நிலவி வருகிறது. அந்த நிலையை இந்த அமைச்சின் ஊடாக மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கோள்வேன். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்பாக இது அமையும்.

கடந்த காலங்களில் நெருக்கடியான யுத்த சூழ்நிலையில் சிக்கியிருந்த நான் உண்மையான சமாதானம் சுதந்திரம் என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டேன். நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறந்த ஒரு சேவையை ஆற்றுவதற்கு நல்ல கொள்கையுடைய பெரிய ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதனால்தான் நாட்டு மக்களின் நலனுக்காக சிறந்த கொள்கையுடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துள்ளேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். தமிழ் மக்களும் மஹிந்த சிந்தனையை பெரிதும் வரவேற்கின்றார்கள். எனது சேவையை மக்கள் நலனுக்காக மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் முரளீதரன் மேலும் கூறினார்.

இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன்

சூரியன் இன்று 6ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையும் இலங்கைக்கு நேர் உச்சத்தில் (சமீபமாக) தென்படும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இதன்படி இன்று நண்பகல் 12.13 மணிக்கு காலி- ஹிக்கடுவ, நாக்கியாதெனியா, மகாலேவாய மற்றும் ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ ஆகிய இடங்களில் சூரியன் நேர் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூரியன் வருடா வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது வழமையானதே.

அமரர் ஜெயராஜின் நினைவு தினம் இன்று

jayaraj.jpgபுலிகள் இயக்கத்தினரின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் முதலாவது நினைவு தினம் இன்றாகும்.

இத்தினத்தின் நிமித்தம் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.வெலிவேரிய காந்தி ஆரியரட்ன விளையாட்டரங்குக்கு அருகில் மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் நினைவு தூபி இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை அன்னாரின் நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.