இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் நேற்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. தற்போதைய இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும், அதனால் மழை பெய்யும் வேளைகளில் திறந்த வெளிகளில் நடமாடுவது, விளையாடுவது, வீட்டில் மின்பாவனைப் பொருட்களை பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது போன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கம் காரணமாக இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா குறிப்பிடுகையில், இடி, மின்னலுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சிலவாரங்களுக்கு நீடிக்கும் அதனால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொது மக்கள் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுவது மிகவும் அவசியம்.
பிற்பகலிலும், மாலையிலும் இடி, மின்னலுடன் நாட்டில் பரவலாக மழைபெய்யும் இதேவேளை தெற்கு, தென்மேற்கு கடற்பரப்பிலும் இடைக்கிடையே மழை பெய்யும். காற்று வடகிழக்காக வீசும், கடலும் சிறிய கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என்றார்.