எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி பெற்ற யுத்த வெற்றியை நிரந்தரமானதென்று கருதமுடியாது’

flee0009.jpgஅரசாங்கம் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி வடக்கின் யுத்தத்தின் மூலம் பெற்றுள்ள வெற்றியை நிரந்தர வெற்றியாகக் கருதிவிட முடியாது. அம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சம உரிமைகளையும் சம அந்தஸ்தையும் வழங்கி அவர்களின் மனதை ஆட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வெற்றியே நிரந்தரமானது, உண்மையுமான வெற்றியாகும். எனவே அரசும் யுத்தத்தில் ஆர்வம் காட்டிவரும் பெரும்பான்மை சமூகத்தினரும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுப்பது அவசியமானதாகும் என மாத்தளை மாநகர சபை உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.

கடந்த மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் நகரபிதா முகம்மது ஹில்மி கரீம் தலைமையில் மாத்தளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தெடார்ந்து பேசும் போது குறிப்பிட்டதாவது;

கடந்த 3 தசாப்தங்களாக நிலவிவந்த யுத்தத்திற்கு முடிவுகட்டி வடக்கிலும் நாட்டிலும் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும்.  இருப்பினும் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் அப்பகுதியை மீட்டெடுத்து அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சியினால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன, எத்தனை மில்லியன் ரூபா சொத்துக்கள்? அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை குடும்பப் பெண்கள் விதவையாகியுள்ளனர்? எத்தனை பேர் அங்கவீனர்களாயுள்ளனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாகி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

இதனைப் போரை விரும்பி ரசிக்கும் பெரும்பான்மை சமூகத்தினரும், அரசாங்கமும் உணரவேண்டும். எனவே இந்த யுத்தத்தினால், நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிரந்தர வசிப்பிடம், அடிப்படைத் தேவை, தொழில் வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான வழிவகுப்பும், சம உரிமை, சம அந்தஸ்து என்பவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் மோதல் பகுதிக்கு போதுமான உணவு அனுப்பப்பட்டதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது

menikfarm.gifஇலங் கையில் வடகிழக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அப் பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் சீரான முறையில் இல்லையென்றும், இதன் காரணமாக அங்கு மக்கள் பட்டினியால் அவதியுறுவதாகவும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசு அங்கு உணவுப் பொருட்கள் செல்வதை தடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு அவ்வாறான தடை எதையும் விதிக்கவில்லை என்று அதன் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான துணை இயக்குநர் அசேப் அஸ்ரத் அம்மையார், கடந்த பிப்ரவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் மாத இறுது வரை மூவாயிரம் மெட்ரிக் டண்களுக்கும் மேலான உணவுப் பொருட்கள் மோதலற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அந்தப் பகுதிக்கு உணவு எடுத்துச் செல்வதில் தாங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். அங்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சேமித்து வைப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது சிறிய கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் நடுக்கடலில் சிறிய மீன்பிடி படகுகளில் மாற்றப்பட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

திங்கட்கிழமை இரவுகூட 30 மெட்ரிக் டண்கள் அளவுக்கு உணவுப் பொருட்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறும் அசேப் அஸ்ரத், தமது களஞ்சியத்தில் வடபகுதியிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசு நூல்கள் அன்பளிப்பு

books.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றும் வகையில் இந்திய தூதரகம் பெறுமதிமிக்க நூல்களை பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கென அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அரசியல், பொருளாதாரம், வரலாறு, சர்வதேச உறவாடல், உலகமயமாதல், இலக்கியம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, கலாசாரம் மற்றும் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆகியோர்கள் தொடர்பிலான நூல்கள் உட்பட பொதுத்துறை அறிவுசார் நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண உயர் கல்வி அபிவிருத்திக்காகவும், அதன் ஆளணி விருத்திக்காகவும், இந்தியக் குடியரசு வழங்கி வரும் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரி நூல்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் தீசன் ஜெயராஜிடம் கையளித்தார். நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார நிலையப் பணிப்பாளர் டிங்கர் அஸ்தனா, உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன நூலகத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

முதியோர்கள் 58 பேர் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு

20090424063601srilanka4.jpgவன்னி யில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 58 பேர் சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 66 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வயோதிபம் காரணமாக மரணமடைந்ததாகவும், இருவர் உறவினர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 58 பேர் இந்த முதியோர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லையென்றும் பலர் தாமாக இயங்க முடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினர் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவையும் வழங்கி பராமரித்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தொண்டர்கள் இவர்களைப் பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியோர் இல்லத்திற்கு எம்.எஸ்.எப். மற்றும் இன்ரநஷனல் ஹன்டிகப்ட் எனப்படும் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் ஆகியன தேவையான மெத்தைகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளன. இந்த இல்லத்திற்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒக்ஸ்பாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போலி நோட்டுக்களுடன் மூவர் பொலிஸாரால் கைது

இரண்டாயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் மூவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர் பயன்படுத்திய கார், 33 போலி நோட்டுக்கள் மற்றும் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபா பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். p/6 -285572 என்ற இலக்கமே 33 போலி நோட்டுக்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் போலி நோட்டுக்கள் எவ்வாறு, எங்கு அச்சிடப்பட்டது. இவற்றுக்கு எந்த அச்சகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வில்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலித ஜயரத்ன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

கல்முனை ஐஸ்வாடியில் ஆயுதங்கள் மீட்பு

gun00.jpgகல்முனை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட ஐஸ்வாடியொன்றிலிருந்து சனிக்கிழமை இரவு ஆயுதங்கள் சில விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே கடற்கரையிலுள்ள பழைய ஐஸ்வாடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்ற படையினர் அங்கிருந்த சில ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பிஸ்ரல்1, கைக்குண்டு2, ரி.56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள்60, ரவைக்கூடுகள்2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதியில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

திருகோணமலை – கொழும்பு ரயில்சேவை நேரத்தில் மாற்றம்

29-train.jpgதிரு கோணமலை கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன்படி திருகோணமலையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 10 மணிக்கும் இரவு 7 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.30 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கொழும்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட ரயில் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 9 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம் திருகோணமலையிலிருந்து இரவு ரயிலில் கொழும்பு செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் காலை 6 மணிக்கு கொழும்பை சென்றடைந்த இந்த ரயில் தற்போது பெரும்பாலும் காலை 8.30 மணிக்கு கொழும்பை சென்றடைவதால் அலுவலகங்களில் கடமையாற்றுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இந்தப் பாதிப்புக்குப் பரிகாரம் காண ரயில்வே பகுதியினர் முன்வரவேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பசில் ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் புல்மோட்டை அகதிகளை பார்வை

Wanni_War_IDPsஜனாதி பதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ. இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்தனர்.

புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் வன்னி அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சஹணகம (நிவாரணக்கிராமம்) இடைத்தங்கல் முகாம் வேலைகளையும் பார்வையிட்டனர்.

இந்த முகாமில் இருபதாயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேரை குடியமர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நலன்புரி நிலையத்தின் வேலைகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் முதலில் 10 ஆயிரம் பேரை இங்கு குடியமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களை வேறுஇடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசகர், ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் புல்மோட்டையில் இயங்கும் இந்திய தளவைத்தியசாலைக்கும் சென்று அங்கு சிகிச்சை பெறும் வன்னிமக்களையும் பார்வையிட்டனர்.  இதேவேளை, இந்திய டாக்டர்கள் ஐவர் இங்கிருந்து செல்வதால் புதிய டாக்டர்கள் பொறுப்பேற்றனர்.

டெங்கு பரவுவதைத் தடுக்க தவறியோருக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவுவதனை தடுக்கத் தவறிய ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாத்ததும்பறை சுகாதார உத்தியோகஸ்தர் திருமதி எச். எம். சல்வத்துர ஆராச்சி வத்துகாமம் பகுதியில் இவ்வாறு டெங்கு பரவுவதை தடுக்க தவறியவர்களை அடையாளம் கண்டுள்ளார். பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அண்மைக்காலமாக 21 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடி க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இவர்கள் உதாசீனமாக இருந்துள்ளனர்.

பன்றி இறைச்சி விற்பனை பல பகுதிகளிலும் நிறுத்தம்

mexican.jpgபன்றிக் காய்ச்சல் உலகில் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கையிலும் பன்றி இறைச்சியை உண்பது தவிர்க்கப்பட்டுள்ளது. புத்தளம் கொழும்பு வீதியில் பல இடங்களில் பன்றி இறைச்சி விற்பனையாளர்களை ஞாயிற்றுக்கிழமை காண முடியவில்லை.

சந்தைகளில் பன்றி இறைச்சி விற்பனை நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகளில் பன்றி இறைச்சி வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வந்தது.  இங்குள்ள உல்லாசப்பயணிகள் ஹோட்டல்களிலும் பன்றி இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இப்பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு சுகாதார பகுதி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.  பன்றிகள் நோய்களுக்கு உள்ளானவையா எனவும் பரிசோதிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதா என பரிசோதிக்கப்படுகின்றனர். பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.