எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; – சீமான்

semaan.jpg
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
 
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர்  சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே!  யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்.  புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தாலி சோனியாவை “பாரதத்தின் அன்னை” என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன். தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து.  என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

இடம்பெயர்ந்தோர் நலன் குறித்து பிரித்தானிய எம்.பி. க்களுக்கு ஜனாதிபதி விளக்கம்

uk_delegation-2009-05-05.pngஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

 இச்சந்திப்பில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம,  மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

4வது கட்டத் தேர்தல்-இன்று பிரச்சாரம் முடிகிறது

iindias-election.jpg மக்களவை தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 85 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்தத் தொகுதிகளில் நாளை மறுநாளான 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நான்காவது கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 85 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கும்.

இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.

பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலேயே ஒழிந்துள்ளார் – சபையில் பிரதமர் விளக்கம்

pm-srilanka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலேயே ஒழிந்திருக்கிறார். இதனை புலணாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதால் புலிகளின் தலைவர் தப்பி ஓடுவதற்கு வழியெதுவுமில்லை என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளுடன் எத்தகைய யுத்தநிறுத்தத்தையும் மேற்கொள்வதில்லை எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாகவே உள்ளது. மரணப்படுக்கையில் உள்ள புலிகளுடன் யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்வதற்கு எத்தகைய அவசியமும் இல்லை. கடந்த காலங்களில் யுத்தநிறுத்தம் அமுலில் இருந்தபோது புலிகள் தங்களை எவ்வாறு பலப்படுத்திக்கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் புலிகளின் தலைவரை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்தப் பிரேரணைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் அத்தகைய சக்திகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. புலிகளின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே உள்ளனர். இவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்

j-j-j.jpgமுன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.

கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மாணவி தினுஷிக்கா கொலை: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் பலி

thinu.jpgமட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு,கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இம்மாணவியின் சடலம் கடத்தப்பட்டு 5 நாட்களின் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இந்நபர்களைக் கைது செய்திருந்தனர் .

மாணவியின் பாடசாலை புத்தகப்பை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டித் தருவதாகக் கூறி இன்று அதிகாலை பாரதிபுரத்திலுள்ள முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் அவர்கள் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாவும் சம்பவம் தொடர்பான பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் 4 ஆவது நாளாக மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டம்

uk-stu.jpg
பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாணவர்கள் 4 வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. பிரித்தானியா தமிழ் மக்களின் 29 நாள் தொடர் போராட்டத்தாலும், பரமேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் பிரித்தானியா சிறப்பு பிரதிநிதி உட்பட ஜந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீலங்காவிற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று நாடாளுமன்ற சதுக்கதில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவப்பு மஞ்சள் ஆடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்- ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

sri_sri_ravi_shanka.jpg இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தா பகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

பிரித்தானிய பாராளுமன்றக் குழு இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

browne_.jpgநலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் போன்றவர்களுடனும் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் வவுனியாவிலுள்ள, இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற இந்த குழுவில் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஷ் பிரவுணும் இடம்பெறுகிறார்.

இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக இவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை முன்னதாகவே ஏற்க மறுத்து விட்டது. தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரந்தான் அவர் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.

‘அடங்காப்பற்று’ மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

adangappattu-2.jpg கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.

‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது