எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ்பாணத்தில் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றம் அபராதம்.

mos.jpgசுற் றாடலைத் தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருந்ததாக யாழ்ப்பாணம் கூட்டுறவுச்சங்கம் (யாழ்கோ) கல்வியங்காடு பகுதியிலுள்ள ஓர் உணவகம், ‘ஜவ்னா றெஸ்ட்’ என்கிற மதுபானச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொண்டாவில் டிப்போ ஆகியவற்றிற்கு எதிராகவே வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் இவர்களின் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியிருந்தனர். ஆனால். இக்கால அவகாசத்திற்குள் அவர்கள் அதனைச் செய்யத் தவறியதால் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் தலா பத்தாயிரம் ருபா அபரத்தையும் விதித்தது.

Oct 14 2010 இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் யாழ். மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அதி கூடிய அபாராதம் எனபது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கல்முனையில் சட்டவிரோத ஆயுங்களை ஒப்படைக்க கால அவகாசம்.

Arms_Amnestyகிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பாதகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத அயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்போர் கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியற்றினூடாக அவற்றை ஒப்படைக்குமாறு பொலிஸாhரால் கோரப்பட்டுள்ளது.

Arms_Amnestyமுன்னர் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக சட்விரோத ஆயுத்ங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இதனால், இதன் கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கிளிநொச்சி கிராமப்புற மக்களே அதிகம் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்!

Psychologyகிளி நொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் உளநலன் பாதிக்கப்பட்ட மக்களில் 60 சதவீதமானவர்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என கிளிநொச்சி பொது மருத்துவமனை உளநல பொறுப்பதிகாரி மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட மனநோயாளிகளில் 40 வீதமானோர் கிளிநொச்சி நகரையண்டியுள்ள கிளிநொச்சி, கனகபுரம் பாரதிபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் முதலான இடங்களில் வாழ்கின்றனர். 60 வீதமானோர் வசதி குறைந்த கிராமங்களான பூனகரி, முழங்காவில், தருமபுரம், வட்டக்கச்சி, பளை ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள 200 பேருக்கும் மேல் கிளிநொச்சி மருத்தவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles:

அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு

ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லை முகவரகமும் வெளிநாட்டு மாணவர்களும் : நிஸ்தார் மொகமட்

UKBAமாணவர் என்ற போர்வையில் இங்கிலாந்துக்குள் நுழைபவர்களின் தொகை வருடாவருடம் கூடிச் செல்வதுடன் 2004ம் ஆண்டில் அது என்றும் இல்லாதவாறு 186,000 என்ற எண்ணை எட்டியது. இதில் படிப்பபை வெற்றிகரமாக முடித்தோர், முடியாமல் பாதியில் முறித்தோர் எல்லாரையும் சேர்த்து பார்த்தல் அவர்களில் 1/5 பங்கினரே தம் நாட்டுக்கு திரும்பி போகிறார்களாம். மற்றவர் கதி என்ன? குடிவரவுத் திணைக்களத்தைப் பொறுத்தவரை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் திரும்பவில்லை, இங்கேயே உள்ளார்கள், அதுவும் தலைமறைவாக (Underground) என்பது குடிவரவு திணைக்களத்துக்கு எதிரான மற்றோர்களின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் துணிச்சலாக underground (சுரங்கப்பாதை)யிலும் வெளிப்படையாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை இரகசியம். இதில் பலர் குடிவரவு சட்டத்தின் ஓட்டையை பாவித்தும், இங்கிலாந்து அரசாங்கம் வேண்டுமென்றே சட்டத்தை ஓட்டையாக்கி வைத்து அதனுள் புகுந்து விளையாடுங்கள் என்று அனுமதித்துள்ளதாலும் அதைபாவித்து தம்மை இங்கேயே நிரந்தர வதிவிடக்காரர்களாக்கி விடுகின்றனர் (indefinite leave to remain holders). ஆனால் எல்லாருக்கும் இந்த விளையாட்டில் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்ய விரும்பமில்லை.

இப்படி மாணவர்கள் வருவதும், போவதுமாய் இருந்தாலும் இங்கிலாந்து அரசாங்கம் இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான (Points Based System) குடிவரவு முறையொன்றை 2008ல் அறிமுகப்படுத்தி, அதை 1, 2, 3, 4, 5 என்று தட்டுகளாக(Tier) பிரித்து பொதுவாக இங்கிலாந்துக்குள் உள் நுழைவோரை கட்டுப்படுத்த முயற்சித்தது.

இந்த அடிப்படையில் இந்த மாணவர்களை கட்டுப்படுத்தும் முகமாக PBSசின் தட்டு 4 (Tier 4) என்ற புள்ளிகள் அடிப்படையிலான முறையை 31.03.2009ல் அரசாங்கம் அமுல்படுத்தியது. இந்த தட்டு 4 தொடர்பாக, இது திறமைமிக்க மாணவரை மாத்திரம் உள்வாங்கும் முறை, சரியான வடிகட்டல் முறை, நீதியான கட்டுப்படுத்தல் முறை, புதிய அறிமுகம் என்ற முன்னுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாணவர் தொகை சத்தம் சந்தடி இன்றி கூடிச் சென்று விட்டதாம். 2010 ஜுன்னுக்கு முன்னான 12 மாத காலத்தில் மாத்திரம் இந்த மாணவர் தொகை 288,000தை எட்டியதாம். கற்பதில் என்னே ஆர்வம், புல்லரிக்கிறது. இந்த மாணவருடன் கூடவே வந்து தொல்லை கொடுப்போராக ஐக்கிய இராச்சிய எல்லை முகவர் நிலைய (United Kingdom Border Agency)த்தால் கருதப்படும் அவர்களில் தங்கி இருப்போரையும் சேர்த்தால் அதே காலப்பகுதியில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,000.

அட 60மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் இந்த மூன்று இலட்சத்தி இருபதினாயிரம் என்பது ஒரு சிறு தொகைதானே என்றால், அது சரி இதில் இரண்டு மடங்கு என்றாலும் எமக்கு பரவாயில்லை, ஆனால் இங்கு வந்தால் படித்தோமா, இல்லை படித்து கிழித்தோமா அலுவல் முடிய நடையை கட்டிவிட வேண்டும், அதுதான் எமது எதிர்பார்ப்பு என்று ஆளும் அரசாங்கம் முதல், சாதாரண பிரசைவரை எல்லாரும் ஒருமித்து குரல் எழுப்புகிறார்கள். அவுஸ்திரேலிய PSB முறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அங்கு நடந்த வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவரை தீயிட்டும், வெட்டியும், அடித்தும் கொன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொள்ளாதவரை சந்தோசம்.

ஒப்பிட்டு ரீதியில் இங்கிலாந்தில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்கள், அதாவது வெளிநாட்டாரின், அதிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கரின் நிறுவாகங்களில் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சிறந்த(?) கல்வி வழங்களை விட ஒரு வகையில் குடிவரவை ஊக்குவிக்கும் நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டில் கல்விசேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை சிந்தனை/கண்டுபிடிப்புக்கள், பல்கலைக் கழகங்கள், திறமைகளுக்கான திணைக்கள (Department for Innovation, Universities and Skils) சுருக்கமாக DIUS, த்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த திணைக்களம் இந்த நிறுவனங்களை A,B என்ற தரவரிசைபடுத்தி, காலத்துக்கு காலம் அவர்களின் தரத்தையும், நற் போக்குகளையும் கணக்கிட்டு(Appraisal) ஒரு கல்வி நிறுவனம் தொடந்தும் இந்த DIUS சின் பதிவில் இருப்பது நிச்சயிக்கப்படும். இப்படி இதில் இருந்து நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தெரியாமல் காசை கட்டி, விஸாவும் இல்லாமல், கட்டிய காசும் இல்லாமல் அல்லலுறும் மாணவர் ஆயிரமாயிரம். இப்படிபட்டோரில் கோயில்களின் அன்னதானம் விடயம் அறிந்தவர்கள் ஒரு நேரபசியை போக்கிக் கொள்வதற்கு அங்கே தஞ்சமடைவதையும் அனேகர் கண்டிருப்பீர்கள்.

சில வேளைகளில் சரியான கல்வி நிறுவனத்தில்தான் சேர்ந்துள்ளோம் எமக்கு பயமில்லை என்றிருக்கும் மாணவர்களும் வேறுவிதமாக மாட்டிக்கொள்வதும் கண்கூடு. இந்த தட்டு 4 முறையின் கீழ், மேலதிக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மீதமாக இருக்கும் கற்கைநெறி பணம் (Course fee), மற்றும் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான பணமாக லண்டனும், லண்டனை சூழவுள்ள பகுதிகளில் கற்போராயின் மாதமொன்றுக்கு 800 பவுண்டுகளும், லண்டனுக்கு வெளியேயாயின் 600 பவுண்டுகளுமாக ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பணம் தொடர்சியாக UK வங்கிக் கணக்கில் வைப்பில் இருக்க வேண்டும் என இந்த விடயத்தை கையாளும் உள்நாட்டு விவகார அமைச்சின் (Department for Home Affairs) குடிவரவு விதிகள் (Immigration Rules) கூறுகிறது. இந்த இடத்தில்தான் பங்கீனாவின் பார்வை உள்நாட்டு திணைக்களத்தின் மேல் மெல்ல படத்தொடங்கியது.

UK யின் குடிவரவு விவகாரமானது எப்போதுமே ஒரு சூடான பேசு பொருளா(hot topic)கவே காணப்படுகின்றது. உதாரணமாக, UK வெளிநாட்டவரால் நிறைந்து விட்டது, இனி வழிவதுதான் தாமதம் அதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், இந்த வெளிநாட்டார் உள்நாட்டாரின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் அபகரித்து விடுகின்றனர் எனவே மக்கள் வெகுண்டெழுந்து எசக்கு பிசகாக ஏதாவது நடந்தேற முன் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கடும் போக்காளர் கூக்குரலிடுகின்றனர். இல்லை வெளி நாட்டாரின், குறிப்பாக வெளிநாட்டு மாணவரின் வருகை குறைந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரும் என்று கல்வி(விற்பனை) நிலையங்கள் எச்சரிக்கின்றன. வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இங்கிலாந்து வருடமொன்றுக்கு சுமார் 3.5 முதல் 8 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதிக்கிறது எனவே அவர்களின் வருகையை கவனமாக கையாள வேண்டும் என்ற பொருளாதர ரீதியிலான நியாயங்கள் வேறு. இப்படி மாணவர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் 2007ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம்(Labour government) சட்டவிரோதமாக இங்கு இருப்போரில் சுமார் 500,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Indefinite leave to remain)கொடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான(?) முற்பட்டது. இந்த முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டாலும், கடந்த பொது தேர்தலின்போது இது தொடர்பாக, முன்னை நாள் பிரதமர் Gordon Brown னும், இன்றைய பிரதமர் David Cameron னும், இன்றைய உதவி பிரதமர் Nick Clegg கும் வெளிப்படையாக ஆடிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இன்றைய உதவி பிரதமர் UKயில் சட்டவிரோதமாக அதிககாலம் இருப்போருக்கு அனுமதி வழங்கி அவர்களை சட்டரீதியானவர்களாகுவதன் மூலம் அவர்களை இன் நாட்டின் பொருளாதரத்துக்கு தோள் கொடுக்க செய்யலாம் ஆகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து (public amnesty) வெளியே கொண்டு வாருங்கள் என கடந்த பொது தேர்தலின் கட்சி தலைவர்களுக்கான மூன்று கட்ட விவாதத்திலும் தம் Liberal Democratic கட்சி சார்பாக அதை மீண்டும் மீண்டும் வழியுறுத்தினார். அதேநேரம் எமது முன்னை நாள் பிரதமர் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உமது பிந்திய ஞானம் எமக்கு தேவையில்லை என்று சொல்லாமல் அந்த கதையை மழுப்பிக் கொண்டே சென்றார். ஆனால் இன்றைய பிரதமர் அப்படி அனுமதிப்பது கூடாது. அது மற்றோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும், எனவே உள்வந்தவர் வெளியேறவே மாட்டார்கள். ஆகவே இவர்களை கட்டுப்படுத்த ஒரு கடினமான முறை தேவை என்றார். இப்படி தேர்தல் விவாதம் நடக்கும்போதே 250,000 வதிவிட அனுமதி வழங்கப்பட்டது (அதில் பலன்பெற்ற நம்ம ஆட்கள் நாடு சென்று, விடுமுறையையும் கழித்து, பலதும் பத்தும் அறிந்து, வெள்ளை வேனின் கண்பட்டாமல் வெற்றிகரமாக நாடு(UK) திரும்பியுள்ள விவகாரம் வேறு) மிகுதி 250,000 பேருக்கான வதிவிட அனுமதி கொடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2011 ஜூலையுடன் இதன் காலஎல்லை முற்றுப் பெறுகிறது.

இப்படி இந்த குடிவரவு விவகாரம் பிரச்சினைக்குறிய விடயம் என்பதாலும், இதற்கெதிரான கடும்போக்கை எடுக்காவிட்டால் BNP(British National Party), EDF( English Defence Front) போன்ற இனவாத கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், அதே நேரம் வெளிநாட்டு மாணவர்களுக்கான எதிர்பை வெளிப்படையாக காட்டினால், வெளிநாட்டாரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இங்கிலாந்தின் பெயர் சர்வதேச ரீதியில் கெட்டுப் போகும் என்பதாலும் செய்வதறியாது தவிக்கும் இன்றைய Con-Dem கூட்டு அரசாங்கம் மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மேலதிக வதிவிட அனுமதி கோரும் மாணவர்களுகான குடிவரவு விதிகளுடன் சேர்ந்து UKBAயின் குடிவரவு கொள்கை(Immigration policy) காலத்துக்கு காலம் மாற்றம் பெறுகிறது. இந்த அடிப்படையில் மாணவர் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் கற்கை நெறிக்கான அனுமதி உறுதிபத்திரம்(Confirmation of Acceptance of Study), சுருக்கமாக CAS உடன், (இது குறிப்பிட்ட மாணவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும்) இரண்டு மாதங்களுக்கான பராபரிப்பு பணம் வைப்பில் உள்ளது என்பதற்கான வங்கி கணக்கு அறிக்கையும்(bank statement) அனுப்ப வேண்டும். CAS க்கு 30 புள்ளிகளும், வங்கி அறிக்கைக்கு 10 புள்ளிகளுமாக ஒரு மாணவர் 40 மொத்த புள்ளிகள் UKBA மூலம் பெற வேண்டும். இது கிடைத்தால் மேலதிக அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால், UKBA கழுத்தை பிடித்து தள்ள முன் குறிபிட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது, … அது அந்த சம்பந்தப்பட்டவர் விருப்பம். நாம் புத்தி சொல்ல முடியாது. அது எமது தலைக்கு ஆபத்தாக முடியும்.

இப்படி இந்த பராமரிப்பு பணம் தொடர்பான இறுக்கமான கட்டுப்பாட்டால் ஆயிரக் கணக்கான மாணவர் பாதிக்கபட, யார் செய்த புண்ணியமோ, இந்த பராமரிப்பு பணம் இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்ட அதேநேரம் அந்த பணம் விண்ணப்ப நாளுக்கு 28 நாட்களுக்கு முன்பிருந்து வங்கிக் கணக்கில் இருந்து வருகிறது என்று ஆதாரத்துடன் காட்டினால் போதும் என்று சென்று கொள்கை சற்று தளர்த்தப்பட்டது. அப்பாடா இந்த இரண்டு மாத தொல்லை தொலைந்தது என்று மாணவர் பலர் சந்தோசப்பட்டனர். பல மாணவர்களும் தெய்வம் நின்று கொள்ளும் என்று சும்மாவா சொன்னார்கள் என்ற திருப்தியில் தமது வதிவிட அனுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

அட சரி 28 நாட்களுக்கு பணம் வைப்பில் உள்ள மாணவர் தப்பிக் கொள்வர். அப்படி இல்லாத மாணவர் என்ன செய்வர்? ஒருவன் விரும்பிய இடத்தில் படிக்க வேண்டுமென்பது அவனது அடிப்படை உரிமையல்லவா? படிப்பை தொடர பணம் இருந்தால் சரிதானே அதற்கென்ன 28, 82 நாள் என்ற கணக்கு. நாங்கள் வெளி நாட்டார் எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி காரியத்தில் இறங்கும் பழக்கமெல்லாம் எம்மிடமில்லை. படிக்க பணம் கட்டினால் சரிதானே, மற்றும்படி நான் சாப்பிட்டல் என்ன, சாப்பிடாவிட்டால் உனக்கென்ன? எனக்கு அனுமதியை தா என்பது மாணவரின் கோசம்.

இந்த நேரத்தில்தான் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து ஒரு பிரேசில் நாட்டு மாணவியும் தனது மேலதிக வதிவிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்தாள். வழமை போலவே தொடர்சியாக 28 நாட்களுக்கு பணவைப்பை உறுதிபடுத்தாத மாணவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நாட்டு சட்டத்தின்படி அரச நிறுவனங்கள் ஏதாவது விண்ணப்பமொன்றை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் சொல்ல வேண்டுமென்பது சட்டம். அப்படியே உள்நாட்டு அமைச்சு சார்பாக இந்த UKBA தமது நிராகரிப்பு காரணமாக “மாணவர்களே நீங்கள் குடிவரவு விதிகளுக்கமைய பராமரிப்பு தொகையொன்றை குறிப்பிட்ட கால அளவுக்கு வைப்பில் வைத்திருப்பதற்கான ஆதாரங்களை காட்டவிலை, ஆகவே நீங்கள் பொது நிதியத்தின் உதவியின்றி (recourse to public funds) உங்களால் உங்களை பராமரிக்க முடியாது. எனவே நீங்கள் என்மை உங்கள் பணம் சம்பந்தமாக விடயத்தில் திருப்திபடுத்தவில்லை. எனவே உங்கள் விண்ணப்பம் பிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது முடிவை மேன்முறையீடு செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு என்று அறிவித்துவிட்டார்கள்.

என்ன ஆட்கள் அப்பா இந்த UKBA உத்தியோகத்தர்கள். இந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர் எப்படி பொது நிதியத்தின் உதவி பெறமுடியும்? அரசாங்க உதவி பெற முதல் தகைமை நிரந்தர வதிவிட உரிமை அல்லவா? இந்த அடிப்படை விடயம் தெரியாமல் ஏன் அங்கு வேலை செய்கிறிர்கள் என்று கேட்டால் பதிலா தரப்போகிறார்கள்? தொடர்ந்தும் தங்கள் பழைய புராணத்தையே பாடுவார்கள், அதாவது இது நேர்மையான ஒரு முறை, அது, இதுவென்று கூக்குரல் செய்வர். எனவே இந்த பாதிக்கபட்ட மாணவர்களில் ஒருவர் தமது மேல் முறை ஈட்டு உரிமையை சரியாக பாவித்து முதல்நிலை குடிவரவு நீதி மன்றில் (First-tier Tribunal) மேன் முறை ஈடு செய்து வெற்றி கிட்டியது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தோல்வியை தழுவிக் கொண்டது. பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதை நம் எல்லாருக்கும் பழக்கப்பட்டதுதானே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தீர்ப்புக்கெதிராக இரண்டாம் நிலை குடிவரவு நீதிமன்றில் (Upper Tribunal) மேன் முறை ஈடு செய்ய அனுமதி கோரி அந்த அனுமதி வழங்கப்பட்டு இறுதியில் வெற்றியும் கண்டனர். மாணவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

தோல்வியடைந்த மாணவி இந்த தீர்ப்பினால் சளைத்து விடவில்லை. அவர் எல்லா வழக்குகளுக்குமான மேல் நீதிமன்றில் (Court of Appeal) மேன் முறைஈடு செய்தார். இந்த மேன் முறைஈட்டு காரணங்களோடு சம்பந்தப்ப்ட்ட (Like cases) மேலும் 5 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க மேன் முறைஈட்டு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையும் என்றாலும், அரசாங்கம், அதன் நிறுவனங்கள் சார்பாக வழக்காடும் திறைசோரி வக்கீல்கள்(Treasury solicitors) சும்மா இருப்பார்களா? அரசாங்க பணம் தானே கொஞ்சம் கை, கால் நீட்டி உழைத்தால் என்ன என்ற “உழைப்பு கோட்பாடு”க் கேற்ப சமாதானதுக் கொல்லாம் தயாரில்லை, நீதிமன்றம் வாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். இதில் என்ன பரிதாபம் என்றால் ஒரு மாதகாலத்துக்கு மாணவர் ஒருவரின் பராமரிப்புக்கு போதுமானதாக கருதப்படும் 800 பவுண்ட்ஸ் இந்த திறைசோரி வழக்கறிஞரின் சுமார் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம். என்ன விதமான சுரண்டல். இது மூளையால் செய்யும் வேலை, மூளையின் களைப்படையும் தன்மைக் கேற்ப கூலி அமையவேண்டும் ஆகவே இது சரி என்று வாதாடுவோரும் நம்மில் இருக்கத்தான் செய்வர். என்ன செய்ய நாம் மாடாய் உழைத்து கட்டிய வரிப்பணம் தேவையில்லாத வழக்கிற்காக தேவையில்லாதவன் கையில் போய் கிடைக்கிறது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் வழக்கின் முடிவு வெளியாகிவிட்டது.

மேலுள்ளது Pankina v. Secretary of State for Home Department என்ற Court of Appeal வழக்கு. இதை விசாரித்த நீதிபதி பிரபு செட்லீ (Lord Justice Sedley), நீதிபதி பிரபு ரிமெர்(Lord Justice Rimer), நீதிபதி பிரபு சலிவன் (Lord Justice Sullivan) கீழ்வரும் தீர்ப்பை வழங்கினர், ” குடிவரவு கொள்கை (policy) என்பது, நிச்சயமாக குடிவரவு விதி(Rules)யாகாது. கொள்கை என்பது சட்டங்கள் அல்லது சட்டங்களின் பகுதியான விதிகளின் கடும்போக்கை கொண்டிருக்க முடியாது. கொள்கைகள் சட்ட அந்தஸ்து பெற வேண்டின் அது பாராளுமன்றத்தின் முன் சமர்பித்து அது ஒன்றில் சட்டமொன்றின் விதியாக அல்லது முழு சடமாக வந்த பின்பே அதை நடைமுறைபடுத்த வேண்டியது அரச நிறுவனங்களின் கடமை. அதை நிலை நிறுத்துவது நீதிமன்றங்களின் கடமை. தேவையான அளவு பணம் வைப்பில் இருக்க வேண்டும் என்பது விதியின் பால்பட்டது. அது இரண்டு மாதம் என்பது கொள்கையாக பின்னால் புகுத்தப்பட்டது. எனவே இந்த கொள்கை விதியின், அல்லது சட்டத்தின் உறுதி தன்மையில் இருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் ஒருவரை பராமரிக்க தேவையான இரண்டு மாதப் பணம் 28 நாட்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவு பணம் 28 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இருந்தால் போதுமானது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த நாளில் இருந்ததற்கான அத்தாட்சி காட்டினாலே போதும்.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களே உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கொள்கையை பாராளுமன்றில் சமர்பித்து இதற்கு விதி(Rule)வடிவம் கொடுத்தால் எல்லாரும் மீண்டும் மாட்டிக் கொள்வீர்கள். எனவே குடிவரவு முறையில் புதிய விதிகள் புகுத்தப்படமுன் அல்லது புதிய சட்டங்கள் மீண்டும் கடினமாக வரமுன் உங்கள் சட்டத்தரணிகளை பாருங்கள். மேலே சொன்னவை ஒரு சுருக்கமே, இதில் இன்னும் சட்டசிக்கல்கள் வர நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் DIY( do it yourself) முறையை கைவிட்டு விட்டு துறைசார்ந்தோரை நாடுங்கள். என்ன இருந்தலும் படிக்க வேண்டும் அதிலும் London னில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். இலங்கை படிப்பு UK படிப்புக்கு குறைந்தல்ல என்பதையும், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாட்டின் படிப்புகளும் UK படிப்பைவிட மிக சிறந்தது என்பதையும் எனது தனிப்பட்ட அனுபவத்தின் முலம் உறுதி கூறலாம் அதையும் சற்று கவனத்தில் கொள்ளுதல் நலம்.

Related News & Articles:

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக் கூறி யாழில் மோசடி!

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

மக்கள் வழங்கிய பெயர்ப்பட்டியல் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிப்பு

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வாரகாலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடியதையும் தெரிவித்தார். இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்க மறியல்

ranjan1.jpgஇரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ள ஐ. தே. க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டை விட்டு செல்வதற்கு தடை விதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் வேண்டினர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பத்து இலட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப் பாடு செய்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு

சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு,  சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

சிலி சுரங்கத்தினுள் சிக்கிய 33 பேரும் வெற்றிகரமாக மீட்பு – 33 எண் அதிர்ஷ்டமென அறிவிப்பு

13.jpgசிலியில் 69 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றுக்காலை ஆறுமணிக்கு சுரங்கத்திலிருந்து 33 வது நபரும் வெளியே மீட்கப்பட்டார். சுரங்க வேலைகளிலீடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டதையடுத்து இந்த 33 பேரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். எழுநூறு மீற்றர் ஆழத்தில் 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்துக்குள் கிடந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய துளையிட்டு உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ஒளி ஒலி கருவிகள் அனுப்பப்பட்டு உறவினர்கள் தொடர்பினை ஏற்படுத்தினர். இந்த முயற்சியும் வெற்றி பெறவே இவர்களை வெளியே எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மணித்தியாலத்திற்கு ஒருவரென ஒருவர் பின் ஒருவராக 33 பேரும் மீட்கப்பட்டனர். இந்த 33 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண் என சிலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 33 பேரையும் மீட்க 33 நாட்கள் கடுமையான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. வெளியே எடுப்பதற்கென துளையிடப்பட்டவிட்டம் 66 செ. மீற்றர். இது 33ன் இருமடங்கு. வெளியேற்றும் நடவடிக்கை முடிந்த திகதி 2010.10.13. இதன் கூட்டுத்தொகையும் 33. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வயதும் 33. எனவே 33 ஒரு அதிஷ்ட எண் என மீட்புப் பணியிலீடுபட்ட கம்பனியின் அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் 33 பேரும் உயிருடன் உள்ளோம் என எழுதி அனுப்பப்பட்ட இலத்தீன் எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் 33 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். 33 என்ற இலக்கத்தை சிலி அரசாங்கம் அதிஷ்ட எண்ணாக அறிவித்துள்ளது.

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது

haturusinha.jpgயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார். 1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு

ranjan1.jpgஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.