விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முன்னணி தளபதிகள் அனைவரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
இது உலகம் முழுவதும் தமிழர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். அவர்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து பாராளுமன்றம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
சுவிட்சர்லாந்தில் ஐ.நா. சபை அலுவலகம் எதிரே ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் காவலை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம் நடந்தது. இதில் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இதேபோல பிரான்சு, கனடா, ஜெர்மனி, ஆஸ்தி ரேலியா, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் தமிழர்கள் தெருக்களில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தோடு கூடி இருந்தனர். அவர்களில் பலர் கதறி அழுதனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து நாடுகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பையேற்றே ஐ.நா. செயலர் 22 ஆம் திகதி கொழும்பு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜே நம்பியாரை நேற்று திங்கட்கிழமை போகொல்லாகம சந்தித்த போதே விஜே நம்பியார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த படையினரின் வெற்றி நாளாக 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பான் கீ மூன் இலங்கை வரவுள்ளார்.
இதற்கிடையில், வன்னியில் அண்மைக்காலமாக படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையானது மனிதாபிமான நடவடிக்கையெனவும் இந்த மனித நேயப் பணியின் வெற்றியை அங்கீகரிக்குமாறும் ஐ.நா. சபையிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது.
விஜே நம்பியாருடனான சந்திப்பிலேயே அமைச்சர் போகொல்லாகம இதனைக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையான தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடுவதே ஊடகவியலாளர்களின் கடமையென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த தெரிவித்தார்.
வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கானப் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான வதிவிடக் கருத்தரங்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மக்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையாகும்.
மேலும்,தகவல்களினைப் பெறும் போது முழுமையானதும் உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமானவற்றை திரட்டி செய்திகளை வெளியிட வேண்டியது எமது கடமையாகும் என்றார்.
அந்நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சி ஹேவா உரையாற்றுகையில்;ஒரு நாட்டில் அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகள் அத்தியாவசியம். அப்பத்திரிகைகளினூடாக நாட்டின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
இதன்மூலம் நாட்டில் இடம்பெறும் அநீதியான செயல்களை வெளிக்கொணர்ந்து நாட்டைப் பாதுகாக்கவும் முடியும்.ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இருக்கும் வரை நாட்டையும் நாட்டில் இடம்பெறும் நல்லது, கெட்டது போன்ற தகவல்களை வெளியிட்டு நாட்டைப் பாதுகாக்க முடியும்.
மேலும், 14 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஒருவருக்குத் தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் கருத்தை வெளியிடுவதற்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அத்துடன் உண்மையான தகவல்களை எழுதுவதன் மூலம் நாட்டின் ஆட்சியை மாற்றமுடியும் என்றார்.
இந்த வதிவிடக் கருத்தரங்கில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இலத்திரனியலுக்கு எவ்வாறு செய்திகள் எழுதுவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.
தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.
மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.
பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.
புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.
அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறினாலும் கூட போர் இன்னும் முடியவில்லை என்று நோர்வே அமைச்சரும், முன்னாள் அமைதி முயற்சிக்கான தூதுவருமான எரிக் சொல்ஹீம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் மூன்றாவது தரப்பிடம் ஆயுதங்களைக் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இலங்கை அரசை மூன்றாவது தரப்பினரை போர்ப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
தற்பொழுது போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவு பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி இவ்வாறு கோரியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பிரதான எதிரிகளாக பிரபாகரனும் பொட்டம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மரணித்து விட்டமைக்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நாம் இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமிழ் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தமிழர் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு மேலும் விஸ்தரிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கூறியுள்ளார். புலிகளின் அச்சுறுத்தல் இருந்த காலத்திலிருந்த விடயங்களைவிட புதிய விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு விஸ்தரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டகேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணை பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஆனால், அவரின் அரசாங்கம் மீளத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் மீண்டும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனத் தெளிவாகிறது. இலங்கை இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இனி அந்தத் தொடர்புகள் பல்வேறு புதிய விடயங்களிலும் விஸ்தரிக்கப்படும்” என்றார் அவர்