உண்மையான தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடுவதே ஊடகவியலாளர்களின் முக்கிய கடமை

உண்மையான தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடுவதே ஊடகவியலாளர்களின் கடமையென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கானப் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான வதிவிடக் கருத்தரங்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மக்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையாகும்.

மேலும்,தகவல்களினைப் பெறும் போது முழுமையானதும் உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமானவற்றை திரட்டி செய்திகளை வெளியிட வேண்டியது எமது கடமையாகும் என்றார்.

அந்நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சி ஹேவா உரையாற்றுகையில்;ஒரு நாட்டில் அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகள் அத்தியாவசியம். அப்பத்திரிகைகளினூடாக நாட்டின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இதன்மூலம் நாட்டில் இடம்பெறும் அநீதியான செயல்களை வெளிக்கொணர்ந்து நாட்டைப் பாதுகாக்கவும் முடியும்.ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இருக்கும் வரை நாட்டையும் நாட்டில் இடம்பெறும் நல்லது, கெட்டது போன்ற தகவல்களை வெளியிட்டு நாட்டைப் பாதுகாக்க முடியும்.

மேலும், 14 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஒருவருக்குத் தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் கருத்தை வெளியிடுவதற்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அத்துடன் உண்மையான தகவல்களை எழுதுவதன் மூலம் நாட்டின் ஆட்சியை மாற்றமுடியும் என்றார்.

இந்த வதிவிடக் கருத்தரங்கில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இலத்திரனியலுக்கு எவ்வாறு செய்திகள் எழுதுவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *