எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாட தமிழ்தேசியக்கூட்டமைப்பு தயராகவுள்ளதாகவும் ஆனால், ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் ஆராய இருதரப்பும் இரு குழுக்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர், விபரங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசதரப்பு குழு அமைக்கப்படவில்லை. இதேபோல, இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய அரசாங்கத்தின் தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை இன்னமும் நியமிக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதியுடனான மீண்டும் ஒரு சந்திப்பை கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி விரைவில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு முன்பதாக கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனர்வாழ்வு முகாம்களில் இன்னமும் 5100 முன்னாள் விடுதலைப்புலிகள் மட்டுமே உள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 5100 பேர் மட்டும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்புனர்வாழ்வு நிலையங்களில் 93 பெண் போராளிகளே மீதமுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் க.பொ.த. சாதாரண பரீடசைக்குத் தோற்றிய பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள பெண்களும் கட்டம் கட்டமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையம் நூல்கள் அன்பளிப்பு.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையத்தினால் 2000 யூரோ பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜேர்மன் கலாசார அமையத்தின் பணிப்பாளர் பிஜோன் கொரில்ஸ், யாழ்.பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் கலாசார அமையம் வருடந்தோறும் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு 2000 யூரோ பெறுமதியான நூல்களை வழங்கி வருகின்றது. அவ்வகையில் இம்முறை யாழ்.நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொது நூலகத்தை தமிழ்மக்களே பயன்படுத்துகின்றனர் ஆகவே தமிழ் மொழியிலான நூல்களை அதிகம் வழங்குவது பொருத்தமானது என தெரிவித்தார்.

அனுமதியின்றி மீள்குடியமர்ந்துள்ள வசந்தபுரம் மக்களை வெளியேறுமாறு படையினர் கோரிக்கை.

கொழும்புத்துறை வசந்தபுரம் என்ற இடத்திலிருந்து முன்னர் வெளியேறிய மக்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் அனுமதியின்றி மீள் குடியமர்ந்துள்ளதால் அவர்களை வெளியேறுமாறு படைனயினர் அவர்களிடம் கோரியுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வெளியேறிய அப்பகுதி மக்களில் 88 குடும்பங்கள் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தறப்பாள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு அப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் தெரிவித்து வருவதாகவும் ஆனால், அம்மக்கள் வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும், இதேவேளை, அவர்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கான மேலிட அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இவ்வளவு காலமும் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், தொடர்ச்சியாக அவ்வாறு தங்கியிருக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் தங்களின் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக படையினர் கோரி வருகின்றனர்.

தெல்லிப்பழையில் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதம்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழை கிராமசேவகர் பிரிவுகளில் மக்களை மீன்குடியேற்றுவதற்கு வசதியாக வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவில் காங்கேசன் வீதியின் மேற்குப் புறமாகவுள்ள மாவிட்டபுரம் வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் வகையில் துரிதமாக வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம்

யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். பிரதேச செயலாளர், மிதிவெடிகளை அகற் றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு; 300 பேர் இன்று பயணம்

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ள முதலாவது இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது. இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார். பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

முதற் தடவையாகவே இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாதவர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதேசத்திற்கு வந்து உங்களது கஷ்டங்களையும் குறைகளையும் கேட்டறிகின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.